Wednesday, December 28, 2011

பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன்


டத்தோ அவர்களுக்கு இம்மாதம்(23-11-11) 23 ஆம் நாள் 75 நிறைவடைகிறது என்றார்கள். பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன் அவரகட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் இந்த அவையின் கர ஒலிகளுக்கிடையே போர்ர்தி வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியடைகிறேன்.

மலெசியா காலேசு அஞ்சோங் செலட்டான் மண்டபத்தில் டத்தோ வி.க.செல்லப்பன் தலைமையில் கவிமுரசு வா,மு.சே. திருவள்ளுவரின் சொற்பொழிவு


(1-11-2011 அன்று மலெசியா காலேசு அஞ்சோங் செலட்டான் மண்டபத்தில் கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா,மு.சே. திருவள்ளுவரின் உரை)
நிகழ்விற்கு தலைமைதாங்கும் மலேசியா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வி.க.செல்லப்பன் அவர்களே இப்பகுதி கல்வி அதிகாரி சந்திரன் அவர்களே, நீண்ட கால நண்பர் ஆசிரியமணி ஆறுமுகம் அவர்களே நூல் அறிமுக விழாவிற்கு வருகைதந்துள்ள மலேசியத் திருநாட்டின் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் டத்தோ வி.க.செல்லப்பன் அவர்களின் தீப ஒளி வாழ்த்து எனக்கும் தந்தைக்கும் அனுப்பிக் கொண்டு வருகிறார். இவ்வாண்டும் நான் சிங்கப்பூர் உலக எழுத்தாளர் மாநாட்டிற்காக பயணத்திற்காகப் புறப்படும்போது ஐயா அவர்களின் வாழ்த்து அட்டையைப் பெற்றேன். மலேசியா வந்தவுடன் ஐயா அவர்களிடம் நன்றியை தொலைபேசியில் தெருவித்தேன். அதன் பயனே இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

எப்போது மலேசியா வந்தாலும் செப்பாங்க் பகுதியில் ஒரு கலந்தரையாடல் முடித்துத்தான் செல்வேன். அதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் மின்மினி இதழ் ஆசிரியரும், மூவிகு அச்சக உரிமையாளரும், சாதனைத் தலைவர் சாமிவேலர் போன்ற எண்ணற்ற நூல்களின் ஆசிரியரும், இப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை பல்லாண்டுகளாக மிகச்சிறப்பாக நடத்தியவருமான அமரர் வி.கு. சந்திரசேகர். அவர்களின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழ்ந்து பல் வகையிலும் துன்புறும் உங்கள் அனைவரின் துன்பத்திலும் பங்கேற்கிறேன்.

ஐயா டத்தோ அவர்களிடம் பேசியபோது நான் இங்கு வரும்போது ஒருகலந்துரையாடல் வைப்பதாகக் கூறி ஆசிரியமணி ஆறுமுகம் அவர்களிடம் தொடர்புகொள்ளப் பணித்தார். ஆசியமணி ஆறுமுகம் பேரார்வத்தோடு இந்நிகழ்வை மிகச் சிறப்பாக் ஏற்பாடு செய்துள்ளார்கள். பெருமகனாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன், எம்மோடு பல்லாண்டு தொடர்புடைய புலவர் முனியாண்டி அவர்கள் சந்திரசேகரோடு மதுரையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஐந்தாம் மாநாட்டில் பங்கேற்ற பெருமகன் இங்கு வருகை தந்துள்ளார்.

கல்வி அதிகாரி சந்திரன் அவர்கள் தமிழுணர்வுடன் ஆற்றிய உரை நெஞ்சை நெகிழவைத்தது. டத்தோ அவர்கள் குறிப்பிட்டபோது தந்தையார் அவர்களின் அயராப் பணியையும் தொய்வின்றி நடைபெறும் தமிழ்ப்பணி இதழின் சிறப்பையும் குறிப்பிட்டார்கள். மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மாநாட்டு மலரை பெற்று சிறப்பித்த புரவலர் பெருமகன் டத்தோ.

பெருமக்களே யான் மலேசியா வரும்போதெல்லாம் முழுமையாக தமிழ்ப்பணி இதழ் உறுப்பினர் கூழாத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பேன். அவ்வகையில் இவ்விதழ் மலேசியாவில் மாநாடு நடத்துவற்கு பெருந்துணையாக இருந்தது.

யான் உலக நாடுகள் பலவற்றிர்க்கும் தந்தையார் அடிச்சுவட்டில் பயணித்திருக்கிறேன். உலக நாடுகள் முழுமையும் தமிழ் உறவை உருவாக்கிய பெருமை பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்திற்கு உண்டு. அம் மன்றத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறேன்.

டத்தோ அவர்களுக்கு இம்மாதம் 23 ஆம் நாள் 75 நிறைவடைகிறது என்றார்கள். பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன் அவரகட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் இந்த அவையின் கர ஒலிகளுக்கிடையே போர்ர்தி வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியடைகிறேன்.

கற்றனைத்து ஊறும் நூலில் மலேசிய, சிங்கை, பர்மா, பொன்ற நாட்டிலுள்ள தமிழர்களைப் பற்றி என் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளேன். ம.இ..க. தேசியத் தலைவர் டத்தோசிறி சாமிவேலு அவர்கள் உருவாக்கியுள்ள எய்ம்சு பல்கலைக்கழகம், இராசேந்திர சோழன் வென்றா கடாரம் பகுதியைப் பற்றியும் இன்நூலில் விளக்கியுள்ளேன்.

அண்மையில் நடந்த ஈழப் போரில் வீரத் தமிழர்கள் நயவஞ்சகத்தால் அடக்கப்பட்டார்கள். அடக்கிவிட்டதாக சிங்கள ஏகாதிபத்தியம் எண்ணிக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல இன்று தமிழர்கள் உலகம் முழுமையும் பரவியுள்ளார்கள். தமிழரகள் உலக இனமாக வலம் வருகிறது. ஐ.நா. மன்றம் சிங்கள போர்க்கொடுமையை வண்மையாக கண்டித்துள்ளது.

யாங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அறிஞர்களைத் திரட்டி டெல்லியில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் உண்ணாவிரதம் இருந்து தலமையமைச்சர் மண்மோகன் சிங்கைச் சந்தித்து போர்க் குற்றவாளி இரசபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா வை நிர்பந்திக்க இந்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.தமிழ்ப்பணியில் வெளியான செய்தி அனைவரையும் அடைந்திருக்கிறது. டத்தோ அவர்களும் படித்ததாக கூறினார்கள்.

ஈழமக்கள் ஏற்ற துன்பங்கள் எண்ணிலாடங்காதவை. அடக்கிவிட்டதாக யாரும் எண்ணக்கூடாது உறுதியாக ஈழம் பிறக்கும். உணர்வுகள் தனலாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

தமிழ் உணர்வோடும் சிந்தனையோடும் இந்நிகழ்சியை நடத்திய அனைவருக்கும் நன்றியை கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் நடத்தும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு



(31-10-11 அன்று மாலை 3 அளவில் மலேசியாவில் சிலாங்கூர் பத்துகுகை பகுதியில் உள்ள தமிழர் தன்மான இயக்க அலுவலகத்தில் நடந்த மாநாட்டு குழுக் கூட்டத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் வரும் சனவரி மாதம் பகுத்தறிவு மாநாடு நடத்த திட்டமிட்டு தன்மானச்செம்மல் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் தலைமையில் பணியாற்றிவரும் தங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உலகத் தமிழ்மறை மாநாடு ஒப்பற்ற முறையில் ஐயா தமிழ்மணி அவர்கள் நடத்தி திருவள்ளுவர் பெருமானை தோட்ட மாளிகையில் நிறுவிய பெருமைக்குரியவர். தமிழகத்தின் அனைத்துத் தலைவர்களையும் மாநாட்டில் ஒருகுடைக்கீழ் கூட்டிய பெருமகன் தன்மானச் செம்மல். இந்திய ஏற்பாட்டுக் குழுவிற்கு யான் செயலாளராகவும், இலக்கியச்சுடர் மூவேந்தர் முத்து தலைவராகவும் செயல்பட்டு மாநாட்டு வெற்றிக்கு பாடுபட்டோம்.

தமிழர்கள் தன்நிலை மறந்த இக் காலகட்டத்தில் தம் வாழ்நாள் காலம் தந்தை பெரியாரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதே எம் பணி என்று தமிழ்மணி அவர்கள் பகுத்தறிவு அனல் பறக்கக் கூறினார்கள். அதற்காகவே இங்கு பகுத்தறிவு மாநாடு நடத்துகிறேன் என்று உணர்ச்சிப் பெருக்கானார்கள்.

தந்தைபெரியாரின் ஈகத்தை தந்தை பெரியாரின் வேகத்தை தந்தை பெரியாரின் கருத்துக்களைப் நிலைநாட்டும் அனைவரையும் அழைத்து இங்கு மாபெரும் உணர்ச்சி மாநாட்டை நடத்த உள்ளார்கள். அதற்கு என்னையும் இந்திய ஒருங்கிணைப்பாளராக பணித்துள்ளார்கள். யான் தமிழகத்தின் பெருமக்களோடு கலந்து மாநாட்டின் வெற்றிக்கு துணைநிற்பேன் என்பதை உங்களிடம் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கப்பலில் தமிழகத்திலிருந்து மாலேசியாவிற்கு வருகைதந்தபோது பினாங்கு துறைமுகத்தில் காலடி பதித்தார்கள். அவர் காலடி பதித்த பினாங்குத் தீவில் பெரியாரின் திரூஉருவச் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளீர்கள். பெரியாரின் சொற்பொழிவுகளும், பெரியாரின் பகுத்தறிவுப் பயணம் நடந்த மலேசிய மண்ணில் மாநாட்டோடு அவரது சிலையும் நிறுவப்போவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வாகும். அதற்கு துணைநிற்கும் அத்துனை பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

தந்தைபெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பயணம் நமக்கெல்லாம் அஞ்சாமையை தரும் வாழ்க்கைப் பயணமாகும். யான் பர்மா சென்றிருந்தபோது அங்கிருக்கும் பெருமக்கள் பெரியார் வருகையைப் பற்றிக் குறிப்பிட்டபோது. கோயில்களிலேயே பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தார்கள் என்றுகூறினர். அவரது பேச்சுக்கு தடை விதித்தவுடன் யாரும் பெருமகனை வழிஅனுப்ப வரவில்லை. தந்தை அவர்கள் அங்கு இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சாவில் பயணித்து வானூர்திநிலையம் சென்ற அஞ்சா நெஞ்சர் என்றனர்.

யான் மலேசியா வரும்போதெல்லாம் சந்திக்கும் பெருமக்கள் ரெ.சு.முத்தையா ,மா.தனபாலன், விந்தைக்குமரன், வா.அமுதவாணன், த.சி.முருகன், பொன்.சண்முகம் மற்றும் பெருமக்கள் அனைவரையும் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாநாட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் என்னுடைய கற்றனைத்து ஊறும் நூலை அறிமுகம் செய்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ் தமிழர் நலனுக்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து ஈகம் செய்யும் பெருமகன் தன்மானத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்களை அருமைத் தந்தையார் அவர்களின் சார்பாகவும்,உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

திருவள்ளுவர் ஆண்டு 2043 தைத்திங்கள் நடைபெறும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டிற்கு தமிழகப் பேராளப் பெருமக்களோடும், தலைவர்களோடும் வருவேன் என உறுதி கூறி விடைபெறுகிறேன்.

Tuesday, December 27, 2011

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் நண்பர்களுடன் கலந்துரையாடல்


(மலெசியாவில் கோலாலம்பூர் நகரில் 31/4 ஈப்போ சலையில் உள்ள பிரைமா அரங்கில் 31-10-2011 அன்று மாலை 6மணிக்கு நடந்த கலந்துரையாடலில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்)

மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூர் நகரில் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டை நடத்திய அண்ணன் தர்மலிங்கம் அவர்களுக்கும்,அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய இராசரட்னம் அவர்கட்கும் நன்றியை தெருவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். திருக்குறள் சான்றோன் பெருமாள் அவர்கள் வருகை தந்து சிற்ப்பித்துள்ளார்கள் அவர்கட்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, போன்ற நாளிதழ்களிலிருந்து இதழாளப் பெருமக்களெல்லாம் இங்கெ வருகை தந்து நான் எழுதிய கற்றனைத்து ஊறும் நூலைப்பற்றி வினாக்களை தொடுத்து எம் கருத்தை பதிவு செய்கிறீர்கள் தங்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்நூலில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் சிறப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். யாங்கள் நடத்திய மாநாடுகள் பற்றியும் பதிவு செய்துள்ளேன்.

நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆற்றிய உரைகளையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளேன்.

மலேசிய நாட்டில் தமிழர் உயர்வுக்கு வித்திட்ட சாதனைத்தலைவர் சாமிவேலு, டான்சிறீ சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பெருமக்களின் சிறப்புக்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

நண்பர் அவர்கள் திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேட்டார்கள். அவரது வயது 55 அவருக்கே தமிழர் வரலாறு தெரியவில்லையென்றால் .அவர்தம் வழியினர் எப்படி அறிவார்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே.

தந்தைபெரியார் இல்லையென்றால் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அறிவாசான் பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தமிழகத்தை தம் ஆளுகைக்கு கொணர்ந்த பெருமை பேரறிஞர் அண்ணாவைச்சாரும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானவுடன் பெரியாரின் சுயமையாதைத் திருமணத்தை சட்டமாக்கி சுயமரியாதைச் சுடரொளி பரவச் செய்தார். சென்னை இராச்தனி என்றிருந்த தமிழகத்தை தமிழ்நாடு பேராயக் கட்சியினரையும் அரவனைத்து தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்தார். அண்ணா தமிழ்நாடு என்று கூற அனைவரும் வாழ்க என்று கூறி தமிழ் நாட்டின் பெருமையை நிலைநாட்டினர்.

அந்தத் திராவிட இயக்கத்தின் கோட்டையாக முத்தமிழறிஞர் கலைஞரும், பேராசிரியர் க. அன்பழனார் அவர்களும் செம்மாந்து செயலாற்றுகின்றனர். திராவிட இயக்கத்தின் அரணாகவும் பகுத்தறிவுக் கொள்கையின் தூணாகவும் இந்தத் தலைமுறையை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.89 அகவை கலைஞரும் 90 அகவை பேராசிரியரும் வாழ்ந்துவரும் காலத்தில் நாம் வாழ்கிறோம் எனபதே நாம்பெற்ற பேறாகும்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் சிந்தனைகளை சிந்தாமல் சிதறாமல் இந்தத் தலைமுறைக்கு இந்தியா,ஏன் உலகம் முழுமையும் நிலைநாட்டி வருகிறார்.

மலேசிய மண்ணில் பெரியாரின் சிந்தனைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அக் கருத்துகள் மேலும் மக்களின் சிந்த்னையைத் தூண்டும் வண்ணம் செயல் படுவது நம் ஒவ்வொருவரின் கடமையகும்.

Sunday, December 25, 2011

உலகத்தமிழர்களுக்கு உணர்ச்சித் தொண்டாற்றும் மகளிர்மாமணி பேராசிரியர் இந்திராணி மணியன்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

[சென்னையில் 25-12-2005 அன்று சி.ஆர்.டி உணவகத்தில் பேராசிரியர் இந்திராணி மணியன் 5 நூல்கள் வெளியீட்டு வீழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பேராசிரியர் இந்திராணி மணியன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல ஒரு இனப் பற்றாளர். தமிழர்களின் அறியாமையையும் தமிழர்களின் ஒற்றுமை இன்றி வாழ்வதையும் கண்டு உள்ளம் கொதிப்பவர். தம் உணர்வுகளை அவ்வப்போது எம் தமிழ்ப்பணியில் எழுதியுள்ளார்.

வடஆற்காடு மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்து சென்னையில் உயர்கல்வி பயின்று இந்தியத் தலைநகராம் தில்லியில் 35 ஆண்டுகள் பணியாற்றிய பெருமைக்குரிய பெருந்தகை. தலைமைப் பண்புமிக்க சான்றோன் மணியன் அவர்களைப் கணவனாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த பெருமாட்டி. இணையர்களின் உழைப்பை தில்லித் தமிழ்ச்சங்கம் என்றும் செப்பும்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி தமிழர்களுக்கு தில்லியில் அரும்பாடுபட்ட இணயர்கள்.

1990ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டில் இணையர்கள் இருவரும் பங்கேற்று தமிழர் நலக் கருத்துக்களை வழங்கிய பெருமக்கள்.
1999ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டை நடத்தினோம். அம்மாநாட்டிற்கு இணயர் இருவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.அம்மையார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் தமிழும் தமிழரும் எனும் தலைப்பில் உலகளாவிய மொழிகளுள் தமிழுக்குரிய சிறப்பையும் தமிழர்களின் மேன்மையும் பற்றி சிறப்பாக உரையாற்றியது நெஞ்சில் நிழழாடுகிறது.

மாநாட்டில் பாவேந்தரின் சங்கே முழங்கு பாடலுக்கு மலேசியா ஆசிரியமணி மாணிக்கம் அழைத்துவந்த நாட்டிய ராணி உமாவை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தன்நூலிலும் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்துள்ளார்கள்.

தனது பேராசிரியப் பணியை முடித்து சென்னைக்கு வந்து இணையர்கள் குடியேறிவிட்டனர். அவர்களது வருகை சென்னைக்கு ஒரு சிறப்பான வரவாகும். அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்புடைய இணையர்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் வழிகாட்டும் பண்புடைய ஈர நெஞ்சர்கள். யார் அழைத்தாலும் தமிழ் தமிழர் மேன்மைக்கு சென்று உரையாற்றி தாம் பெற்ற அறிவையும் பொருளையும் சமுதாயத்திற்கு வழங்கும் மேன்மக்கள்.

2009ஆம் ஆண்டு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டிற்கு அழைத்தபோது மணியன் அவர்கட்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பேராசிரியை மட்டு அனுப்பிவைத்தார். மலேசிய பல்கலைக்கழகத்திலும், ஈப்போ மகளிர் மாநாட்டிலும் அம்மையாரின் உரை மலேசிய தமிழ் மக்களுக்கு தமிழ் விருந்தாக இருந்தது. தம்முடைய முதுமையைப் பொருட்படுத்தாது மாநாட்டி;ல் மகிழ்ச்சியோடும் தமிழ் உணர்வோடும் பயணித்த காட்சி என் மனக்கண்முன் தோன்றுகிறது.

அவ்வாண்டே சென்னையில் பேராசிரியப் பெருமகானார் க. அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற என்னுடைய பொன் விழாவிற்கு இணையர்கள் வருகைதந்து வாழ்த்திய வாழ்த்தை பெரும் பேறாகாவே கருதுகிறேன்.

அம்மையாரின் கட்டுரைகள் பலவற்றை தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளேன். ஈழத்த் தமிழரகட்கு அம்மையார் எழுதிய உணர்ச்சிமிக்க கட்டுரைகள் காலத்தால் அழிக்கமுடியாக் காவியம். ஈழத்தமிழரகட்கு நாமெல்லாம் ஒன்று சேர்ந்துவிடுதலையை வாங்கித் தரவில்லையே என்ற ஏக்கம் இன்னும் அவருள் தனலாக உள்ளது.

தமிழகத்திற்கு வெளியே பல்லாண்டு காலம் வாழ்ந்ததால் நம்மவர்களின் தாழ்வு அம்மையாருக்கு நன்றாக அறிந்தவர்கள் அந்தத் தாழ்ச்சியைப் போக்க தமிழகத்தில் அயராமல் எழுதிக்கொண்டும், உரையாற்றியும் நூல்கள் வெளியிட்டும் தம்அயரா உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் இன்று வெளியிடப் பெறும் ஐந்து நூல்கள்.
அண்மையில் அம்மையாருக்கு உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலும் அருகோ அவர்களின் பவழ விழவிற்கு வருகை தந்தபோது உணர்ச்சி உரையாற்றினார்கள்.உரையாற்றி முடியும் தருவாயில் மயக்க நிலையடைந்து தள்ளாடினார்கள். தம் உடல் பலமற்றுப் போனாலும் உணர்ச்சி குன்றாப் பேச்சு வந்திருந்தோர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

செந்தாமரை எழிலுடைய அம்மையார் அவர்களின் உள்ளம் அந்த உள்ளத்திற்கேற்ற உயர்ந்த எண்ணமுடைய அம்மா அழகாக கொஞ்சு தமிழில் அத்தான் என்று அழைக்கும் கணவர் மணியன். தம் தாயின் நூல்கள் வெளியீட்டு விழாவை ஐந்து நட்சித்திர உணவகத்தில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து வெளியிடும் மகன்- செம்மல்- அமெரிக்காவிலிருந்து வருகை தந்து அன்னையின் புகழ்பாடும் மகள் நன்மதி-. ஆகியோரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
பேராசிரியர் அவர்கள் உடல் நலத்தைப் பேணி பல்லாண்டு காலம் என்றும்போல் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்ற உலகத் தமிழர்களின் சார்பில் வணங்கி வாழ்த்திகிறேன்.

Thursday, December 15, 2011

வாழ்க்கை வழிகாட்டி திருக்குறள்

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்
(டிஎம்சி கலை அ/றிவியல் கல்லூரி விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க குணராசா அவர்களும் பத்மினி குணராசா அவர்களும் இணந்து நடத்தும் டிஎம்சி கலை அ/றிவியல் கல்லூரி நடத்தும் விழாவில் மாணவச் செல்வங்களே உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருமதி பத்மினிகுணராசா அவர்கள் சிலநாட்களுக்கு முன்பு மாணவர்கள் தம் வாழ்நாளில் திருக்குறளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண தங்களின் உரை வேண்டும் என்று கூறினார். நான் பத்மினி அவர்களின் நோக்கத்தை புரிந்து இங்கு வந்துள்ளேன். பத்மினி அவர்களின் உரையைக் கேட்டபோது நான் மகிழ்ந்தேன் கலை அறிவியல் கலூரியை நடத்தும் அவரே தன் மாணவச் செல்வங்கட்காக திருக்குறளின் அருமை பெருமைகளை அறிந்து அவற்றை தங்கட்கு வழங்கிய வருகிறார் வாழ்க குணராசா பத்மினி தொண்டு.

மாண்புமிகு நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தம் வரவேற்பரையில் திருவள்ளுவர் சிலையும் கணினியில் திருக்குறளும் இருக்கும். வருவோர் திருக்குறள் தெளிவுரை ஆங்கில மொழிபெயர்ப்பு அனைத்தையும் காணலாம். தமிழகத்தில் கடைக்கோடி இராமேசுவரத்தில் பிறந்த அவர் அனுவிஞ்ஞானியாகி குடியரசுத்தலைவர்வரை உயர்ந்து இன்றும் மாணவச் செல்வங்களுக்கு தொண்டு செய்கிறார் என்றால் அது திருக்குறளின் தாக்கம்தான்.

அன்பு இளைய சமுதாயமே கல்வி கற்கும் தங்கட்கு பொய்ய்யாமொழியார் கூறுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)

இருப்பவனிடம் இல்லாதவன் எப்படித் தன் தேவைகளைக் பெற்றுக் கொள்வானோ அதைப்போன்றே பணிந்து கனிந்து அறிவுடையவர்களிடம் தமது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)

அறிவுச் செலவங்களே கிணற்றை தோண்ட தோண்டத்தான் தண்ணீர் பெருக்கெடுக்கும். அதைப்போன்றே தாங்கள் நூல்களைப் படிக்க படிக்கத்தான் நுண்ணறிவு பெருகும். இன்று வாழும் மாணவர்களுக்கு இடியூறுகள் ஏரளாமாக உள்ளன. திரைப்படம் தொலைக்காட்சி இணையதளம், கைபேசி. இவையெல்லாம் தேவையான ஒன்றுதான் ஆனால் நமது பயண்பாடு திசைமாறிச் செல்லும்போது நமக்குத் துண்பத்தை தருகின்றது. நூல்களைப் படிப்பதை தாங்கள் அனைவரும் பயிற்சியாகக் கொள்ளவேண்டும்.தோண்டத் தோண்ட பெருகும் நீரைப் போல் படிக்க படிக்க தங்கள் அறிவும் பெருகும்.

செயலாற்றலுக்கு ஐயன் திருவள்ளுவர் கருத்துக்கள் நம்மை மெய்சிலிர்க்கவைக்கின்றன.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே பன்முறை நிறைகுறைகளை ஆய்ந்து முடிவு செய்யவேண்டும். முடிவு செய்தபின் அதை வெற்றிகரமாக முடிக்கப் பாடுபடவேண்டும்.மாணவச் செல்வங்களே தாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருகிறீர்கள் அதில் வள்ளுவர் வழி ஓர்மையாகக் கற்று வெற்றிபெற்று மேலும் மேலும் உயர்வு பெறவேண்டும்.

அஞ்ச வேண்டியவற்றிற்கெல்லாம் அஞ்ச வேண்டும் என்பதை குறளாசான் சிறப்பாகக் கூறுகிறார்.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)

வாழ்க்கை நீண்ட நெடிய பெருமையுடையது. பெருமையை நிலைநாட்ட பேராசான் கூறும் அஞ்ச வேண்டிவற்றிற்கு அஞ்ச வேண்டும். கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சிக் காலம். இன்றும் என்னுடைய கல்லூரிக்காலத்தை எண்ணினாலே மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். ஆனால் நாம் ஒழுக்கமாக் வாழ்கிறோமா முறையாக நடக்கிறோமா என்பதை எண்ணி தீயவைகள் நம்மை நாடும்போது அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சாமல் அதை தொடர்ந்தோமானால் அதைவிட துன்பம் தருவது ஏதுமில்லை.அந்த மடத்தனமான செயலைச் செய்யக்கூடாது அதற்கு அஞ்ச வேண்டும் எனக் கூறுகிறார்.

சோம்பலைப் வள்ளுவப் பேராசான் கடுமையாகக் கண்டிக்கிறார்,

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர் (602)

இன்று கல்வி என்பது பொருள் சார்ந்ததாக உள்ளது. அதற்கான பொருளை தங்கள் பெற்றோர்கள் ஈட்டியது சோம்பேரித்தனமற்ற உழைப்பாகும். அந்த ஈகமான பெற்றோர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் பயக்க மாண்வர்களே சோம்பேரித்தனம் என்பது கூடவேகூடாது. உங்கள் குடியை உயர்த்த சோம்பேரித்தனமற்ற முயற்சி தேவை என பேராசான் வலியுறுத்துகிறார்.

உயர்வைத் தவிர மற்றவற்றை நம் மனம் எண்ணக்கூடாது என் கட்டளையிடுகிறார் வள்ளுவப்பேராசான்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (596)

நமது எண்ணங்கள் உயர்ந்த சிந்தனைகளாக இருக்கவேண்டும். நாம் எதை சிந்திக்கிறோமோ அனைத்தும் மேலானவற்றையே சிந்திக்க வேண்டும். இன்று கல்வி பயிலும் நீங்கள்ஒருதலைவராக வரலாம், ஒரு ஆட்சியராக வரலாம், அதிகாரியாக வரலாம், தொழில் அதிபராக வரலாம், தங்கள் கல்லுரித் தாளாளர் குணராசா போன்று கல்வியாளராக வரலாம், அனைத்திற்கும் தாங்கள் உயர்ந்த இலட்சியங்ளைக் கொள்ள வேண்டும். இலட்சியத்தில் தோல்வியே ஏற்பட்டாலும் மீண்டும் அதில் உயர்வாகவே சிந்தித்து வெற்றிகாண வேண்டும் எனப் பேராசான் வழிகாட்டுகிறார்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் (623)

துன்பத்திற்கு துன்பம் தரக்கூடிய வல்லமையை நாம் பெறவேண்டும் எனப் வள்ளுவப் பேராசான் ஊக்கமளிக்கிறார். நான் தற்பொது பேசிக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டது. அனைவரும் கண்டீர்கள் அது ஒரு தடையல்ல அதையும் மீறித் தங்களிடம் பேசிக் கொண்டிருகிறேன். பேசுவது நான் கேட்பதுநீங்கள் எந்தத் தடை வந்தாலும் யான் பேசுவதையோ நீங்கள் கேட்பதையோ தடை செய்யமுடியாது. நமது தளராத ஊக்க்கம்தான் எந்தத் தடையையும் நீங்கச் செய்யும். இதோ மின்சாரம் வந்துவிட்டது துன்பமும் அப்படித்தான் துன்பத்திற்கு துன்பம் தரக்கூடிய வல்லமையைப் பெறவேண்டும் என்று பேராசான் தெளியவைக்கிறார்.

மாணவச் செல்வங்களே திருக்குறள் வாழ்க்கையின் வழிகாட்டி. திருக்குறள் மானிட சமுதாயத்திற்கு தழிழர்கள் வழங்கிய மறை. திருக்குறள் சாதி மதம் இனம் அனைத்தையும் கடந்த மறைநூல். தினமும் குறளைப் படித்து அதன்படி வாழ்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

Friday, December 2, 2011

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ்

கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார் திடலில் 28-11-11 அன்று புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய தொடக்க உரை)

தந்தை பெரியார் நடமாடி மறைந்து நிலையாக அவரது சிந்தனைகள் நிலையாக உள்ள இம் மண்ணில் பேசுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியார் கருத்தான பெண்விடுதலைக்கு வீரமர்த்தினி அம்மையார் அவர்கள் பெருஞ்சான்றாக உள்ளார்கள். கூட்டம் அதிகம் இல்லையெ என்ற கவலை தேவையில்லை. தந்தை பெரியார் கூறியது போன்று யார் தம் இதழை யார் வாங்குகிறார்களோ இல்லையோ நானே எழுதி அச்சடித்து இதழில் படிப்பேன் என்ற என்ற நெஞ்சுரம் வேண்டும்.

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்ற இன்றைய தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்துள்ள கவிஞானி கலைமாமணி மறைமலையான் தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவோடு தொண்டாற்றிய பெருமகன். அவரது பேச்சை கேட்க வராதவர்களே வருந்த வேண்டும் கூட்டம் நடத்துபவர்கள் அல்ல. பேரறிஞரின் பெருவாழ்வு என்ற அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழகத்திற்கு வழ்ங்கிய பெருமைக்குரியவர். தம் வாழ்நாளையே திராவிட இயக்கக் கொள்கைக்காக ஈகம் செய்யும் திராவிடத் திருமகன். ஆங்கிலத்திலும் தமிழிலும் மரபு வழிப் பாடல் இயற்றும் திறம் பெற்ற கவிஞானி. கடந்த தி.மு.க ஆட்சியில் அண்ணாவிருது கலைமாமணி விருதுகளைப் பெற்ற விருதாளர். என்னுடைய கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டிற்கு ஐயாவை அழைத்திருந்தேன். முன்தினம் மெய்ப்பு படிவத்தினைக் ஐயா பேசுவதற்காக கொடுத்துவிட்டு வந்தேன். இரவு படித்து மறுநாள் ஒரு அணிந்துரையே வழங்கி் வாழ்த்திய பண்பாளர் . இவ் விழாவில் தொடக்கவுரையாற்றுவது மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்பது அருமையான தலைப்பாகும். தந்தை பெரியார் இல்லையேல் தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி தட்டி எழுப்பப்பட்டிருக்காது. தமிழர்கள் உணர்ச்சியற்று இருந்திருந்தால் தமிழின் தனித்துவம் மேலும் அழிக்கப்பட்டிருக்கும். தலைவர் அண்ணா உருவாக்கிய தளபதிதான் அண்ணா. அண்ணா உருவாக்கிய தளபதிகள்தான் கலைஞர்,நாவலர்,பேராசிரியர்,அரங்கண்ணல், மதியழகன், போன்ற திராவிடத் தலைவர்கள். அவவழியில்தான் இன்று திராவிட இயக்கத்திற்கு பெருந்தூணாக இருந்து அவர்கள் கண்ட கனவையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் நிலைக்கச் செய்துள்ளார். இன்றும் போராடி வருகிறார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தந்தை வழியே தம்வழி என்று எப் பதவியும் விரும்பாமல் உலகம் எங்கும் பெரியார் சிந்தனையைப் பர்ப்பிவருகிறார்.

நமசுக்காரம் வணக்கமாகவும், சேமம் நலமாகவும், நாசுட்டா சிற்றுண்டியாகவும், சுபம்கூர்த்தம் திருமணமாகவும், இப்படி வழங்கிவந்த சமற்கிருத சொற்களையெல்லாம் தமிழில் வழக்கில் கொண்டுவந்த பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும். குறிப்பாக தந்தை பெரியாரையும் தளபதி அண்ணாவுமே தளகர்த்தர்கள். பட்டி தொட்டிகளிளெல்லாம் செந்தமிழ் உரைகளை நிகழ்த்தி ஆட்சியையே பிடித்த இயக்ககம் திராவிட இயக்கம்.

பெரியார் அவர்களின் இதழ்கள் அனைத்தும் தமிழ் தமிழர்தம் உயர்விற்காகவே நடத்தப்பட்டவை. அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களுக்கெல்லாம் பயிற்சிப்பட்டறையாக இருந்தது. தந்தை பெரியார் அவர்கள் சமற்கிருதத்திற்குப் பதிலாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பேச்சிலும் எழுத்திலும் வலியுறுதியவர். அவர்வழி அண்ணா அவர்களின் தமிழ்நடை தமிழ் நாட்டையே தம் கைக்குள் கொணர்ந்த செந்தமிழ்ப் பேச்சாளர் இதழாளர்..

அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானி என்று இருந்த பெயரை தமிழ் நாடு என எதிர்க்கட்சிகளையும் இணைத்து பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு என மூன்றுமுறை முழங்க வாழ்க என என அனைவரும் சட்டமன்றத்தில் வாழ்த்தியது வரலாறு.
பேரறிஞர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அசெம்லியை சட்டமன்றம், சபாநாயகரை பேரவைத் தலைவர் என்றும் அவைமுன்னவர், சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற சொற்களும்,அனைவரையும் தமிழிலேயே உறுதிமொழி எடுக்கவைத்த பெருமையும் தளபதி அண்ணாவையே சாரும்
.
மூத்த முதல் மொழியான தமிழை நிலைநிறுத்திய பெருமை காலகாலம் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களையும் அறிஞர்களையும் வேந்தர்களையும் சாரும். கல்வெட்டுகள் வழியும் ஓலைச்சுவடிகள், நூல்கள் வழி நமக்கு சான்றாக உள்ளன. இடையிலே வந்த ஆரியர்கள் நம் மொழிமீது சமற்கிருதத்தை தினித்தும், மூடபழக்கங்களைத் தினித்தும் நம்மை அடிமையாக்கினர்.

கிறித்துவத்தைப் பரப்ப வந்த ரேனியசு, கிரால், சி.யு.போப், பெசுக்கி, ஆர்டன் போன்ற பெருமக்கள் தமிழின் பெருமையை உணர்ந்து உலகிற்கு உணரவைத்தனர். உச்சமாக பெசுக்கி பெருமகன் தம் பெயரை வீரமாமுனிவர் என தனித்மிழிலேயே மாற்றிக்கொண்டார்.

பின் தலைவர் பெரியார்வழியும் தளபதி அண்ணா வழியும் தூய தமிழ் திராவிட இயக்கத்தலைவர்களால் நிலைநாட்டப்பட்டது. இந்த அரிய விழாவில் தொடக்க உரையாற்ற வாய்ப்பளித்த வழக்கறிஞர் வீரமர்த்தினிக்கும், கவிஞானி மறைமலையானுக்கும் மீண்டும் நன்றியைக் கூறி மகிழ்கிறேன். வாழ்க தந்தை பெரியாரின் தூய தமிழ் வளர்க தளபதி அண்ணாவின் தூய தமிழ் என்று கூறி அமைகிறேன். நன்றி. வணக்கம்.

Monday, November 21, 2011

ஆவேசப் பேராசான் முனைவர் அருகோ


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(முனைவர் அருகோ அவர்களின் பவழவிழா மலருக்கு ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய கட்டுரை)

பவழவிழாக் காணும் நாயகர் கவிச்செம்மல் முனைவர் அரு.கோபாலன் சங்கரன்கோவிலில் தமிழ்குடியில் பிறந்து நாம்தமிழர் இயக்கத் தந்தை சி.பா. ஆதித்தனாரால் அருகோ என விளம்பப்பட்டவர். தமிழிற்காகவும் தழிழர்கட்காகவும் தம் வாழ்நாளை ஒப்படைத்த பெருமகன். எம் இளம் வயதிலிருந்தே முனைவரின் பெருமையை உணர்ந்தவன். தந்தையாரின் நாற்பது ஆண்டுகால நண்பர். அன்றைய காலங்களில் வில்லிவாக்கத்திலிருந்து மிதிவண்டியில் சுற்றி சுற்றிச் தமிழ் தமிழர் சிந்தனையைக் காத்த இன்றும் காக்கும் செயல் மறவர்.

நாம்தமிழர் இயக்கத்தின் தளபதியாக வாழ்ந்து தலைமையே கொள்கை மறந்தாலும் இன்றும் அந்தக் கொள்கையையே தம் வாழ்வுப் பணியாக உரமேற்றிகொண்டிருப்பவர்.
உலகநாடுகளைப்பற்றியும், விடுதலை பெற்ற நாடுகளைப்பற்றியும் தலைவர்கள் பற்றியும் இன்றைய தமிழ் உணர்வாளர்களுக்கு உரைவீச்சாலும் எழுத்தாலும் அறிவூட்டிய பேராசான்.
அருகோவின் எழுத்து உலகம் போற்றும் எழுத்து.பல்வேறு இதழ்களை உருவாக்கிய பெருமகன். எம்தந்தையார் வெளிநாடு சென்றபோதெல்லாம் தமிழ்ப்பணிக்கும் பெருமகன் வழங்கிய பங்களிப்பை நன்றியோடு எண்ணுகிறேன். தற்போது முப்பது ஆண்டுகளாக வெளிவரும் எழுகதிர் இதழ் தமிழர்களின் கலைக்களஞ்சியம். தமிழகம் ஈழம் தமிழ்த்தேசியம், பார்ப்பன ஆதிக்கம், அயலார் ஆதிக்கம், திராவிட திசைமாற்றம், புலம்பெயர் தமிழர் என அனைத்துத் தளங்களிலும் தம் கருத்தை அஞ்சாமல் பதிவு செய்து அதற்காகப் போராடும் போராளி.

1982 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அருமைத் தந்தையார், அருகோ, தணிகைக்கோ இரசீது மூவரும் அன்று ஓடிய போட்மெயில் தொடர்வண்டியில் இராமேசுவரம் சென்று ஈழத்திற்குச் சென்றனர். யான் பெருமக்களை வழியணுப்பி வைத்தேன். காந்தியத்தின் தலைவர் இராசசுந்தரமும் பெரியவர் டேவிட் அவர்களும் ஈழத்தின் முக்கு முடுக்கெல்லாம் கூட்டிச் சென்று மக்களைக் கண்டு தொண்டாற்றித் திரும்பினர்.இராசசுந்தரம் அவர்கள் வெளிக்கடை சிறையில் கோடூரமாக தாக்கப்பபட்டு சிங்களக் கயவர்களால் கொலைசெய்யப்பட்டார். டேவிட் அவர்கள் தமிழகத்தில் வந்து பணிகளைத் தொடர்ந்தார். தூப்பாக்கிச் சூட்டினூடே ஈழத்தை வலம் வந்த மூவரின் துணிவு அவர்களது நெஞ்சுரத்தை புலப்படுத்தும். இந்தப் பயணத்தை வழிவகுத்தவர் அருகோ.

அருமைத் தந்தையார் அவர்களின் உலகத் தொடர்பால் கிடைத்த நன்முத்து மருத்தவர் பஞ்சாட்சரம். அபெருமகன் நீயூயார்க்கில் தந்தையார் தலைமையில் நடைபெற்ற ஈழமாநட்டில் தமிழகத்தின் முன்னணித் தலைவர்களோடு அருகோவும் பங்கேற்று தொடர்ந்து நிலைகொண்டு சீரிய தொண்டாற்றி வருபவர்.

அருகோ ஈழத்து காந்தி தந்தை செல்வா அவர்களோடும் தற்போது அவரது திருமகன் வழக்கறிஞர் சந்திரகாசன் அவர்களோடும் நீக்கமற நிறைந்து செயலாற்றுபவர். இந்த அமைப்பின் வழி புலம் பெயர்ந்து தமிழகதில் வாழும் மக்கட்கு உற்றுழி உதவி செய்யும் பெருமகன்.

அருகோ ஒரு சிறந்த மரபு வழிக் கவிஞர். எழுகதிரில் அவரது கவிதைகள் தமிழ் உணர்வை கிளர்ந்தெழச் செய்யும் வலிமையுடையவை. பாட்டுக்கொருபுலவன் பாரதியும் புரட்சிக்கவிஞர் பாவேந்தரும் தமது இரு கண்கள் என முழக்கமிடுபவர்.

பவழவிழாக் காணும் நாயகர் முனைவர் அருகோவின் சிந்தனைகளை பதிவு செயவதில் பெருமிதமடைகின்றேன்.

”ஒற்றுமையில்லையே என்ற ஒப்பாரியை யூதர்களைப் பார்த்தேனும்,சுண்டக்காய் இசுரேலைக் கண்டேனும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டுத் கைவிட முன்வரவேண்டும்”

’திருக்குறள் தமிழில் இருப்பதால் அது தமிழ் மறையுமாகும். அம் முறையில் அதைத் தமிழ்த்தேசிய நூலாக முதலில் ஆக்கிவிட்டு அடுத்து சர்வதேசிய நூலாக ஆக்க முயற்சிப்பதே அறிவுடைமையாகும்”

”ஆங்கிலமென்ன உலகத்திலுள்ள அனைத்து மொழிகளையும் விரும்புவோர் படிக்கட்டும் அரசு அதற்கு வழிவகை செய்து கொடுக்கட்டும் ஆனால் பயிற்றுமொழியாகத் தமிழ் நாட்டில் தமிழ்மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் மாறுபடுப்வர்கள் தமிழுக்கு நன்மை செய்வோர் ஆகமாட்டார்கள் தமிழுக்கு இரண்டகம் செய்பவர்களே ஆவார்கள்.”

”இன்று தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமென்று சொல்லி இராணுவத்திவிட்டு அழித்த சிங்கள ஆட்சியாளர்கள் அன்று தமிழ் அற்ப்போராளிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்தார்களா இல்லை. ஒருதலைப்பட்சமாக காலால் போட்டு மிதித்தார்கள்.ஆகவே, தமிழீழத்தைத் தவிர அங்கு தமிழர் பிரச்சனைக்கு வேறு தீர்வே கிடையாது”

”இன்றைய தமிழகம் வடக்கு தெற்கு என்று பிரிக்கப்படுமானால் தங்களுக்கிடையிலான போட்டியில் சாதித் தமிழர்களே அதற்குத் துணைபோவார்கள். தமிழகம் ஒன்றாக இருக்கிறபோதே காட்டிக்கொடுப்புகளும், கூட்டிக் கொடுப்புகளும் தமிழின ஒற்றுமைக்கும் உரிமைக்கும் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன என்னும்போது இரண்டுபட்டால் கேட்க வேண்டியதே இல்லை.”

”இன்றைக்கு தமிழகத்தில் இல்லாத எப்பகுதியும் அயலாருடையது. அதில் உரிமை கோரத் தமிழர்க்கு ஞாயமிலலை என்று நினைப்பது ஒன்று. இரண்டு மொழிவழி மாநிலம் அமைவதற்கு முன்பிருந்த அகண்ட தமிழகம் பற்றி அறியாமலிருப்பது.”

”பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் தமிழரல்லாதார் தமிழன் தலையில் மிளகாய் அறைப்பதை எதிர்ப்பதால் பார்ப்பனர் தொடர்ந்தும் தமிழன் தலையில் மிளகாய் அறைக்க என்று ஒப்புக்கொள்வதால் நீங்கள் பொருள் கொள்வதுதான் முறையற்றது.”

எழுபத்தைந்து ஆண்டுகள் தமிழினத்திற்கு தம் அயர்விலா உழைப்பை வழங்கிய மூதிளைஞர் முனைவர் அருகோ அவர்களை அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சார வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

Saturday, November 19, 2011

அண்ணா நூற்றாண்டுக் கோயில்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

அறிவுக் களஞ்சியத் தேராம்
அண்ணா நூற்றாண்டுக் கோயில்
செறிவுத் திறனைத் தூக்கல்
செந்தமிழ் மக்களைச் சாய்த்தல்
பரிவுப் பொருளைத் தந்தே
பாதகம் விளைத்தல் நன்றா
உரிமை நூலகம் காத்தல்
உலகுள கருத்தைப் போற்றல்!

குழந்தைகள் மருத்துவம் பேணக்
குறையிலா இடத்தைத் தேர்க
கழனியை மாற்றவே சாடும்
கற்றவர் வாழும் நாட்டில்
தலமுயர் நூலகம் மாற்றல்
தமிழர்கள் புதைத்தல் அன்றோ
பலமதாம் அறிவுத் தேரை
பந்தமாய்க் காப்போம் இன்றே

கண்ணிலா மக்கள் காண
கருத்து ப்ரய்லி உண்டு
மண்ணுல நூல்கள் எல்லாம்
மகத்துவ நூலகம் உண்டு
எண்ணிலாக் கருத்தைக் காண
இணையதள வாய்ப்பு உண்டு
தன்னேரில் அரங்கம் எல்லாம்
தகுதியை அரசே மாய்த்த(லா)?

ஆசியா முதன்மைக் கண்ட
அருமை நூலகம் ஈதே
மாசிலாச் செயலச் செய்த
மாண்பமை கலைஞர் சிந்தை
தூசியைத் துடைத்தல் விட்டு
துன்பத்தைத் தருதல் நன்றோ?
காசிலா எழ்மை மக்கள்
கதறல் உம்மைச் சாய்க்கும்!

Friday, November 18, 2011

கொலைக்குக் கொலையா

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

மரணம் என்பது தீர்வா
மனங்கள் எண்ணுதல் முன்னே
சரணம் பாடும் கூட்டம்
சட்டம் போடுதல் நன்றா!
புராணம் பாடும் நாட்டில்
புண்ணியம் எனபது பொய்யா
தருணம் உயிரைக் காக்க
தக்கவர் இருந்து சாய்ப்போம்!

தண்டனை இருபத்தும் மேலே
தக்கோர் துன்பம் கண்டும்
கொண்டிடும் அவலம் சாய்க்கா
கொடுமை மரணம் ஏனோ?
எண்டிசை உள்ள நாட்டுள்
ஏற்கா மரண ஓலம்
அன்புள காந்தி மண்ணில்
அகிம்சை தவிர்த்தல் ஏனோ?

தாயின் கதறலைப் பாரீர்!
தந்தையார் பிள்ளை எங்கோ
சேயின் உறவைக் காணா
சோதனை மரணத்தின் மேலே
பாயிரம் பாடும் நாட்டில்
பண்புதான் கொலைக்குத் தூக்கா?
தாயினும் கார்த்தி கேயர்
தண்டனை நெறியைச் சொன்னார்!

இராசிவ் உன்னதத் தலைவர்
இறப்பில் துன்பியல் கண்டோம்
இறவாப் புகழைப் பெற்ற
இராசிவ் காந்தி பேரால்
துறவிக் கோலம் பூண்ட
தூய்மை அனனை சோனியா
கரையும் தமிழர் உள்ளம்
கனிந்தே தண்டனை போக்கும்!

Thursday, November 17, 2011

பரமக்குடி சோகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

சாதிப்பேயை தொடராய் நாட்டும்
சாத்தான் மாய்வது எந்நாள் ?
ஊதிஊதி மனிதம் சாய்த்து
மாண்பை வீழ்த்துதல் ஏனோ ?
நாதியற்ற தமிழன் இங்கும்
நசுக்குதல் வீழ்ச்சி அன்றோ
மாதிமிர் துப்பாக்கிச் சூடு
மமதை சாய்வது எந்நாள்?

கூடிய உணர்வின் மாட்சி
குதறித் தள்ளுதல் ஏனோ?
தேடியே துரத்தி மண்ணில்
தேகம் சாய்த்தல் நன்றோ?
நாடிடும் தலைவர் வேட்கை
நாடுள அனைவர்க்கும் ஒன்றே
சாடியே ஒருதலை வேசம்
சாமான்யரை நசுக்கும் மோசம்

கொன்றே சாய்த்த பின்பும்
குலை நடுங்காதது ஏன்/ஏன்
நன்றே பரிவுக் காசும்
நயம்பட வழங்காமை ஏன்?ஏன்?
கொன்ற உயிர்கள் காண
கொலைக்களம் சொல்லமை ஏன்?ஏன்?
மன்றம் தமிழன் ஆட்சி
மறந்த சோகம் அன்றோ!

பரமக்குடியின் தென்னகச் சோகம்
பரவாது காக்க வேண்டும்
வீறுள தமிழர் செர்ந்தே
வியத்தகு எழுச்சி வேண்டும்
சோரமாம் சாதி சாய்த்து
சமத்துவம் பேண வேண்டும்
வீரம்வீவேகம் நமக்குள் வேண்டாம்
வீணரை சாய்போம் சேர்ந்தே!

Wednesday, November 16, 2011

புலவர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல்

கவிமுரசு. வா.முசே. திருவள்ளுவர்

(சென்னையில் 13-11-11 அன்று பல்கலைத் திலகம் பேராசிரியர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல் நூலை தலைமைதாங்கி வெளியிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பல்கலைத் திலகம் பேராசிரியர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல் நூல் நூலில் அவரே குறிப்பிட்டது போல் பூங்காவில் கிடைத்த அரும் புதையல். புதையலின் அருமையை உணர்ந்த சமுக ஆர்வலர் இந் நூலைப் பதிப்ப்பித்த யாசேவா அவர்கள் பட்டை தீட்டி திரையுலக சமூகத்திற்கு வழங்கியுள்ளார். இருவரையும் திரையுலகம் நன்றியோடு பாராட்டவேண்டும். இன்று வாய்ப்புக்கிடைத்த அரைகுறைகளும், தம்மையே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பேதைகளுமே உலகில் போற்றப் படுகிறார்கள் புகழப்படுகிறார்கள். இலக்கியத்திற்காகவும் கலைக்காககாகவும் ,சமூகத்திற்காகவும் தன் வாழ்நாளையே வழங்கியவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைப்படவேண்டியது நிலையாகும். ஆனால் அப் பெருமக்கள் காற்றாய், மழையாய், ஒளியாய் எதையும் எதிர்பாரமல் தம் கடமையைச் செய்து வருகிறார்கள் அதனால்தான் நம் இனத்திற்கும் மொழிக்கும் சான்றுகள் நிலையாக இருந்துவருகிறது.

தொல்காப்பியர் காலத்தை அருட்செல்வர் மகாலிங்கம் 9000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என பதிவு செய்துள்ளார்.தமிழர்கள் வழங்கிய இலக்கியங்களே நமக்கு சான்றாக நம் இனத்தின் வரலாறாக உள்ளது. சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கு சான்றான இலக்கியம் என அனைவரும் பதிவு செய்துள்ளனர். அரங்கின் திரைச்சிலை மேலிருந்தும், இருபக்கமும் மூன்று முறைகளில் இருந்ததையும், அரங்க அமைப்பின் அளவு விபரங்களையும் இளங்கோவடிகள் யாத்துள்ளார். அறிஞர் பெருமக்கள் இந்நாள்வரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

யான் இலண்டன் மாநகர் சென்றபோது தேம்சு நதிக்கரையின் கரையோரம் என் துணைவியார் பரிமளாவோடு எழிலை வியந்தவண்ணம் நடந்தோம். அப்போது ஒரு அரங்கத்தைக் கண்டோம். சேக்சுபியர் நாடகம் நடத்தி வாழ்ந்த அரங்கம். உள்ளே சென்றோம் அங்கே மேக்பத் நாடகம் நாடகக் குழுவினர் நடத்திக் கொண்டிருந்தனர். இன்றும் நுழைவுச்சீட்டு பெற்று நாடகங்களை அனைவரும் கண்டு களிகின்றனர். ஒரு படைப்பாளன் இன்றும் அரங்கில் தாம் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வகையில் தொல்காப்பியத்தில் தோய்ந்து ஆழ்ந்து தாம் கண்டெடுத்த நன்முத்துக்களை நடிப்பியல் களஞ்சியமாக வழங்குகிறார் புலவர் செந்தமிழ்ச்செழியன் பொருளதிகராத்தில் மெய்பாட்டியலில் தொல்காப்பியர் கூறியுள்ள யாப்புகளை பகுத்து விரித்து பாமரனும் புரியும் வண்ணம் வழங்கியள்ளார் புலவர்.

”நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல்:-பொருள்-மெய்-1197)

எட்டுச் சுவைகளையும் பட்டியலிட்டு பின் ஒவ்வொன்றிலும் உள்ள நான்கு பிரிவுகளையும் விரித்து 32 மெய்ப்பாடுகளையும் விரித்துரைக்கும் நயம் புலவரின் ஆழ்ந்த புலமைக்குச் சான்றாகும்.

அறுபது பக்கங்களே கொண்ட நூல் என்று எண்ண இயலா வண்ணம் தம் வாழ்நாள் பணீயாக நடிப்பியலுக்கு பிழிவாகத் தந்துள்ளார். புலவர் அவர்கள் எழுத்தாளர், கவிஞர், தமிழாசிரியர், இதழாளர், அனைத்தையும் தாண்டி நடிகராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆதலால்தான் 32 சுவைகளையும் தம் வாழ்நாளில் கண்ட அனைத்து நடிகர்களையும் சான்றாகக் காட்டி தொல்காப்பியர் காலத்திற்கும் இன்நூன்றாண்டிற்கும் பாலமாக இந்நூலைத் தந்துள்ளார்.

தொல்காப்பியத்தில் தலைவன் தலைவிக்குக் கூறிய ஒப்புமைகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சாத்திரம் சோதிடம் என்று திரியும் அறிவிழிகளுக்கு சாட்டையடியாக உள்ளது புலவரது விளக்கம்.

பிறப்பே குடிமை, ஆண்மை, ஆண்டோடு
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பிளது வகையே. (தொல்:-பொருள்-மெய்-1219)

தொல்காப்பியர் ஒப்புமைகளை 1. நற்குடிப்பிறப்பு 2. நல்லொலுக்கம் 3. ஆளுமைத்தன்மை 4. வயதுப் பொருத்தம் 5. வடிவம் 6. காம உணர்வுப் பொருத்தம் 7. உள்ள உறுதி, 8. கொடைப் பண்பு 9. புரிந்தொழுகும் நுட்ப அறிவு 10, செல்வம் என விளக்கியுள்ள பாங்கு போற்றுதற்குரியது. தமிழர்கள் வாழ்க்கை இணை தேர்வுக்குப் பின் பற்றவேண்டிய நடைமுறைகளாகும

இல்லற வாழ்விற்கு வேண்டாத பத்தையும் தொல்காப்பியத்திலிருந்து நமக்குப் பலாச்சுளையாகத் தந்துள்ளார் புலவர்.

தொல்காப்பியத்தில் நடிப்பியல் தொல்தமிழர் சிறப்பைப் போற்றி நம்மைப் பின்பற்றச்செய்யும் நூல். இந் நூலை யாத்த புலவரையும் வெளியிட்டு அதன் புகழைப் பரப்பும் பணியைச் செய்யும் யாசேவா அவர்களையும் என் அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

புலவர் செந்தமிழ்ச்செழியன் மேலும் தொல்காப்பியரின் சிந்தனைகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டுகிறேன் அதற்கு தமிழ்லுலகம் என்றும் துணைநிற்கும். எங்களது அன்னை சேது அறக்கடளையின் விருதைப் பெற்றபெருமகன் அனைத்து விருதுகளையும் பெறுவார் என்பது திண்ணம்.

Monday, November 14, 2011

முத்தமிழறிஞர் கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா ஆய்வுரை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார்திடலில் புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் நடைபெற்றவிழா வில் ஆசிரியர் வழங்கிய ஆய்வுரை)

தொல்காப்பியப் பூஙகா தமிழர்களுக்குக் கிடைத்த காலக்கனி. அந்தக் கனியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய வாரது வந்த மாமணி முத்தமிழறிஞர் கலைஞரைத் தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணிப் போற்றிப் பெருமையுறும்.

தொல்காப்பியப் பூங்காவைப் பற்றித் தொடர்ந்து ஆய்வுரை வழங்கும் தஞ்சை கூத்தரசன் அவர்களின் பணி மகத்தானது. தமிழ்வள்ளல் சந்திரசேகர் கலைஞரின் பால் நீங்கா பற்றுடையவர். தொல்காப்பியப் பூங்காவின் அவரது உரைகள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் வல்லமை உடையது. புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர் நிகழ்வுகளைத் திறம்பட அயர்வின்றி நடத்திவரும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அம்மையாரை நெஞ்சாரப் தமிழ் உள்ளங்களின் சார்பில் போற்றுகிறேன்.

தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர். பூங்காவுள் உள்ள மலரை நுகரவும் காணவும் மகிழவும் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு தந்துள்ளார் தமிழாய்ந்த தமிழ் மகன் முத்தமிழறிஞர் கலைஞர்.

எழுத்தைப் பற்றிக் தொல்காப்பியர் கருத்தைக் கூற வந்த கலைஞர் “செதுக்கிச் சிலைவடிக்க உளியும் ஓவியம் தீட்டத் தூரிகையும் போல எழுத்துத் தவையன்றோ நூல் படைக்க” (பக்:41) எனக் கூறி எழுத்துக்களின் அணிவகுப்பை அழகுபடக் கூறியுள்ளார்.

தொல்காப்பியரின் உயிர்மெய்யைக் கூறவந்த கலைஞர் என்றும் தமிழர்தம் நெஞ்சில் நிலையாக உள்ள அண்ணாவையும் தன்னையும் கூறும் பாங்கைப் பாருங்கள்.”என்னதான் இருந்தாலும் தமிழ் தந்த கொடையைப் பாருங்கள் ’அ’ வை முதல் எழுத்தாகக் கொண்ட அண்ணா நமக்குத் தலைவர்-இன்று ’க’வை முதல் எழுத்தாகக் கொண்ட கலைஞர் கருணாநிதி நமக்குத் தலைவர்”.(பக்:53)

தொல்காப்பியத்தின் மாத்திரை அளவைக் கூற வந்த கலைஞர் சாதாரணக் குடிமகனும் புரியும் வண்ணம் ஒரு நாடகமே நம் முன் நிறுத்துகிறார்.இரு பெண்கள் மாத்திரை குறித்துப் பேசுவது பொலவும் திருட வந்த திருடர்கள் ஏதோ மகப்பெறு நடக்கும்வீடு என்று எண்ணி சென்று விட்டதாகக கூறி தொலகாப்பியரின் எழுத்துக்களுக்கான மாத்திரை அளவைக் கூறுவது அருமையிலும் அருமை.

”எல்லா மொழிக்கும் உயீர் வரு வழியே
உடம்படு மெய்யின் உருபு கொளல் வரையார்”
தொல்காப்பியநூற்பா 38.

ஆசிரியரும் மாணவியும் இலக்கியக்காதலும் ஒன்றுபடும் வண்ணம் உடம்படு மெய்யின் கருத்தையும் மனத்தையும் ஒன்ற வைக்கிறார். கலைஞரின் கவின்மிகு சொற்களைப் பாருங்கள் “எல்லாச் சொற்களிலும் உயிர் ஈற்று முன் உயிர் வரும்போது உடம்பொடு மெய் தொன்றும் என்றும், அதன் வடிவை நீக்கார் என்றும் சொல்லிவிட்டு மா+இலை=மாவிலை என்பது உடம்படு மெய்யாயிற்று என்றீர்களே. நம்மைப் பாருங்கள் அந்த உடம்படு மெய்தானே இது. உயிர் ஈற்றுமுன் உயிர் கலக்கும்போது நம் மெய் இரண்டு கலத்தல் இலக்கணப்படி ஏற்கத்தக்கதுதானே. உருபு கொளல் வரையர் என்றுதானே கற்பித்தீர்கள்” (பக்:75)

பாட்டியையும் சிறுவனையும் உரையாட வைத்து தொல்காப்பித்தின் உயிரிணை அஃறிணையை தலைமுறைகள் வழி விளக்குகிறார். “பாட்டி நீ சொல்லும் சோழன் உன் மகனாகவோ பேரனாகவோ இருந்தால் உயர்திணை அல்லது அந்தச் சோழன் பேருந்தாக இருந்தால் அஃறிணை” (பக்:88)

அரசியல் ஞானி கலைஞர் உலக அரசியலையும் நம் அரசியலையும் கூறி தொல்காப்பியத்தை விளக்குகிறார். உலகபோரில் முதன்மை நாட்டோடு பங்கேற்ற நேச நாடுகளையும் தேர்தலுக்கு முதண்மைக் கட்சிகளோடு கூட்டணி சார்பைக் கூறி அதைப் பொன்று குற்றிய லிகரம், குற்றிய லிகரம் எனக் குறிப்பிடுவது சாதரண மக்களுக்கு உலக நடப்போடு கூறுகி’றார்.

பகுத்தறிவும் கோமகன் கலைஞர் அவர்கள் பராசக்தி முதல் இன்று வரை மடாதிபதிகளின் கயமைகளைச் சாடுவதில் அவருக்கு இணை அவரே.தொல்காப்பியத்தின் வழுவமைதியைக் கூறும் வழியை நோக்குங்கள்.

”இரவுக்கிளி போய்விட்டார்களா? என்று பன்மையில் கேட்கிறீர்1 ஒரு மடாதிபதிதான் உள்ளே இருக்கிறார் மடாதிபதிகள் என்று பன்மையில் உரைக்கிறீர், உமது கூற்றுப்படி அறைக்குள்ளே எத்த்தனை மடாதிபதிகள்? எத்தனை கிளிகள்? ஒரு மடாதிபதியும் பல கிளிகளுமா? அல்லது ஒரு கிளியும் பட மடாதிபதிகளுமா?

சின்னச்சாமி குழப்பாதீர்1 நான் இலக்கணப்படி தான் கேட்டுள்ளேன் ஒருவ்னையும் ஒருத்தியையும் சுட்டிச்சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச்சொல்லும் உலக வழக்கில் உயர்த்திச் சொல்லும் சொல்லாம். இலக்கண வழக்கெல்லாம் என்று தொல்காப்பியர் பால்வழுமைதி என கூறியிருக்கிறார்”.(பக்:96)

கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மைக் கூறும் கடப்பாடில்வே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே (நூற்பா: 62)

இந்த சொல்லதிகார நூற்பாவிற்கு சிற்பி ஒவியரை காதலன் காதலாக்கி கலைஞர் வழங்கும் சொல்லோவியம்.” இரண்டு கண்கள் இருப்பினும் ஓவியத்தில் ஒன்றுதான் தெரிகிறது ஓவியத்தில் இரண்டு மார்பகங்கள் காணப்படவிலலை ஒன்றுதான் உள்ளது. மூங்கிலணைய உன் தோளையும் அவ்வாறே தீட்டியுள்ளாய். கண்கள், தோள்கள் மார்பகங்கள் என்றில்லாமல் கண்ணும் தோளும் மார்பகம் மட்டும் காண்கிறேன் அதாவது தொல்காப்பியர் கூற்று அப்படியே தோய்ந்திருக்கிறது இந்த ஓவியத்தில்!” (பக்:101)

எனது மகன் என்ற சொல்லுக்கு கலைஞர் தொல்காப்பிய வழி கருணையானந்த அச்சகத்தையும் எண்ணி சீர்திருத்த திருமணத்தையும் அதில் நேரம் படும் பாட்டையும் விளக்குவது அருமையில் அருமை “எனது மகன் என்று எழுதும்போது உயர்திணையுடன் ’அது’ என்ற ஆறாம் வேற்றுமை உருபுக்குப் பதிலாக நான்காம் வேற்றுமையாகிய ’கு’ உருபு வருதல் வேண்டும். இல்லையேல் எனது என்று குறித்திடும்போது தவறாகிவிடும் என்வே ’கு’ உருபை இணைத்து ’எனக்கு மகன்’ என்பதே சரியாகு.ம்.(பக்:114)

தொல்காபியத்தின் பெருந்திணையை விளக்க மடலேறுதல் கூறி அறியார்க்கும் அறிய வைக்கிறார். “கடற்கோள் எனப் குமுறிப் பொங்கும் வலிமையினால் காமந்தணித்துக் கொள்ளப் பாய்ந்திடும் செயலும் பெருந்திணை எனப்படும் “ என விளக்குகிறார்.(பக்:202)

தொல்காப்ப்பிய பொருளதிகாரம் புறத்திணையியல் நூற்பா 5க்கு நடுகல்லானவன் எனும் தலைப்பில் போர்ப்பரணியாகவே வரைந்துள்ளார். ”ஓ மகனே! நீ பொன்முடி வேண்டாமெனப் புகழ் முடி சூடிக் கொண்டாயோ! எனக் கலங்கிய காவலன் அவன் நெற்றியில் முத்தமிட்டான். வெற்றியில் மகிழ்ந்திட முடியாத வீரர் கூட்டம் போரில் விழுப்புண்பட்டோர்க்கு கல் எடுத்து நீராட்டி நினைவு நடுகல் நாட்டிடும் முறையைப் பின்பற்றி களத்தில் மாண்ட மனனர் மனையின் இளவலுக்கும் நடுகல் நாட்டி நினைவு போற்றியதில் புதுமை என்ன இருகிறது.!” (பக்: 217)

இருபொருள் ஒரு விளக்கம் தலைப்பில் விளக்கவந்த கலைஞர் சிலப்பதிகாரத்தை நினைவுறுத்தி தரும் பகுத்தறிவு விளக்கம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது

.” பார்ப்பனர் ஓதிய மந்திரமும் – கோள்
பார்த்துக் குறித்த ஓரையுமே
பாதுகாத்திடவில்லை அவர்களையென்று
பகரும் சான்று சிலப்பதிகாரம் (பக்:292)

அய்யர் விளக்கத்தி நம் அய்யர் கலைஞர் தொல்காப்பிய வழி விளக்குவது சிந்தையில் பதிய வைக்கவேண்டியது.

அய்யர் எதற்காக என்று கேட்டோருவர்
அவர்வேறுகுலம் நம்மிடையே ஏன் வரவேண்டும் என்றார்
அன்பரே அந்த அய்யரல்ல இவர் அறிக
அறநெறி வகுத்து தீநெறி விளக்கும்
தக்கவர் இவர்-தலைமைச் சிறபுடையார் இவர்
களவு ஒழுக்கம் தவறி
பொய்யும் வழுவும் தோன்றிய போது
காரணம் யாத்த அய்யர் இவர்” (பக்:305)

”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன” ( பொருளியல் நூற்பா15)

கலைஞரின் விளக்கம் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் முற்போக்கு ஞானியாக உரைக்கிறார்.

“இந்தக் கால கட்டத்து பெண்களின்ன் நிலையோடும் அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளோடும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால கட்டத்துப் பெண்களின் நிலை ஆண்களின் நிலை ஆகியவற்றை பழம்பெரு வரலாறுகளிலோ இலக்கியங்களிலோ படித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தவறாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அக்கால நிலையை அறிந்துகொள்ள துணைபுரியும் சாதனங்களாகமட்டுமே அவற்றைப் பார்க்கவேண்டும்-பய்ன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதே அறிவுடையோர் செயலாகும்.” (பக்:354)

தொல்காப்பியத்தின் பெரிமிதம் நான்கு கல்வி, தறுகண் , இசைமை, கொடை கலைஞரின் விளக்கம் தமிழர்களின் தறுகண்மையைக் கூறுவதாகும்.

முதல்நூலும் வழிநூலும் தலைப்பில் தொல்காப்பியத்தை பாணினியின் பின்னர் என் புராணாம் பாடியோர்க்கு கலைஞர் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என பனம்பாரனார் பாயிரத்தைக் கூறி பாணினிக்கு முற்பட்டவர் என்பதை நிலைநாட்டுகிறார்.

”முதல் நூல் வழி நூல் வகை பற்றி விளக்குகிற நூற்பாக்களாக இவற்றைக் கருத வேண்டுமேயல்லாமல் முதல் நூல் தொல்காப்பியர் இயற்றியதா? அல்லது இறைவன் இயற்றியதா? என்ற ஆராய்ச்சி தேவையில்லை” எனப் பகர்கிறார் கலைஞர்.

தொல்காப்பியத்தின் மரபியல் நூற்பா 95 பாடலைக் கூறி “ அறிவிற் சிறந்து விளங்குவோர் முனைந்து கண்டதே குற்றம் குறையில்லா முதல் நூலாக அமையும்”என்ற விளக்கம் நிறைவானதாகும்.

இந்நூற்றாண்டில் பெரியார் அண்ணா வழி நம் இனத்தைக் காக்கும் ஒப்பற்ற தலைவர் அவர்களின் நூலை ஆய்வு செய்வது யாம் பெற்ற பேறு. திரைப்படங்களில், அரசியலில்,ஊடகங்களில் அவரவர் போக்குக்கு எழுதி இளைஞர்களை தடம் மாற்றும் இந்தக் காலக்கட்டத்தில் தொல்காப்பியப் பூங்காவைப் படைத்து தமிழையும் தமிழரையும் நாளெலாம் பொழுதெலாம் உயர்த்தும் உன்னதத் தமிழ்மாமணியாய் வாழும் ஐயனை வணங்குவோம்.

Saturday, November 12, 2011

முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் ஆய்வுரை



கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(சென்னையில் முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் ஆய்வுரை)

அறிவியக்கம் நடத்தி தமிழ் மொழிக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தம் வாழ்நாள் வரை கடைப்பிடித்த சாலை இளந்திரையனாரையும் சாலினி அம்மாவையும் நினைவு கூறும் வண்ணம் தமிழ் எழுதும் முறையைப் பின்பற்றி ஒருநூலையே வெளியிட்டுள்ள முத்துவிழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டனம் பழநிச்சாமியின் கொள்கை உறுதியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.யாங்கள் தாய்லாந்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நடத்தியபோது கவியரங்கில் பங்கேற்று பாடிய பெருமைக்குரிய கவிஞர். பின் மலேசியா சிங்கப்பூர் சென்றுவந்த சிறப்புக்குரியவர்.கோவை என்றாலே அமரர் ஆண்மையரசு அம்மையப்பா அவர்களை மறக்க இயலாது அப்பெருமகன் மன்றத்தையும் தமிழ்ப்பணியையும் நிலைபெறச்செய்தவர்.அப் பெருமகனும் மாநாடு வந்து கலந்து கொண்டதை எண்ணிப் பெருமையுருகிறேன்.

அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமைதாங்கும் பெருந்தலைவர் கோபாலகிருட்டிணன் அவர்களின் தகுதிவாய்ந்த தலைமையை வணங்குகிறேன்.தலைவர் கோபாலகிருட்டிணன தகுதி வாய்ந்த மாபெரும் மனித நேய மாமணி. இன்று உயர் நிலையில் உள்ள அனைத்துப் பெருமக்களையும் வளர்த்து தமிழர்களை பெருமைப்படுத்திய ஏணி.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது யானும் தந்தையரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இரண்டாம் மாநாடு நடை பெற்றபோது பெருமகனைக் காண அலுவலகம் சென்றோம் அன்போடு வரவேற்று உற்றுழி உதவி தமிழிற்கு தோள் கொடுத்த பெருமகன். கோயில் குளத்திற்கு அள்ளி வழங்கிய அந்த இருக்கையில் ஒரு தமிழன் அமர்ந்ததால் தமிழின் மேம்பாட்டிற்கு தமிழ் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கியதை எளிதாக யாரும் மறக்க இயலாது. காலமான என் அருமைத் சிற்றந்தையர் இந்திய நேரடி வரித்துறையின் தலைவர் பதவி வரை உயர்வு கண்ட வா.மு.முத்துராலிங்கம் அவர்களை தலைவர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

நாசே என்றாலே தன்னம்பிக்கைதான் பிறப்பெடுக்கும். தன்கடின உழைப்பால் இன்று கடல் சார் பல்கலைக் கழகம் வரை நிறுவி இங்கு கவிஞரை பாராட்ட அமர்ந்திருக்கும் நாசே இராமச்சந்திரன அவர்களையும். வழக்கறிஞர் வீரசேகரன் அவர்களையும் விழாவை சிறப்புடன் நடத்தும் ஐயா இரவீந்திரன், மற்றும் கவிஞரின் மக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.


அந்திதீபம் கவிதைநூல் 170 தலைப்புகளில் 200 பக்கங்களில் மனிதம் மொழி வாழ்க்கை என அனைத்துத் துறையிலும் தமது முத்து விழா வரைக் கண்ட அனுபவப் பிழிவை நமக்கு வழங்கியுள்ளார் கவிஞர். ஐந்தாம் வகுப்புவரை படித்து ஆடுமாடு மேய்துக்கொண்டிருந்த தாம் ஒரு தமிழ்வழித் திருமணத்தில் பேராசிரியர் ப.சு. மணீயம் அவர்களின் சொற்பொழிவே தம்மை தமிழ் வழீஈர்த்து படித்து பட்டம் பெற்று தமிழாசிரியராகப் பணிபுரிந்து இந்த நூல்களையும் இயற்றவைத்தது என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.

ஆங்கில மோகத்தால் தமிழ் வழிக்கல்வி அழிக்கப்படுவதைக் கவிஞர் தம்கவிதையால் வன்மையாகக் கண்டிக்கிறார்.
பிறளய்த்தால் குமரிக் கண்டம் அழிந்ததுபோல்
பிறமொழியில் பாடத்தய்ப் பயிற்றி வந்தால்
திறமான தமிழ்நாட்டில் டாடி, மம்மி
திசைமாறி அம்மப்பா மறந்து போகும் (பக்:17}

தமிழ்படித்தோர்க்கே தமிழ் நாட்டினிலே முதன்மய் நிலை வேண்டும்-ஆகவே
தமிழ்ப் பள்ளிகளின் மூடு விழாக்கள் தடுக்க என்செய்தீர் (பக்:41}

தமிழ்வழி படிக்கும் மாணவருக்கு பிச்சய்போடுதல் கேவலம் – இந்தக்
தடத்தில் வருவ்வோர் பணிமுன்னுரிமய் செய்திடல் வெற்றிஊர்வலம்
அமிழ்தென இச்சட்டம் செய்தால் அங்கே கூட்டம் கூடுமே – இதய்
அருந்தமிழ்ப் பேரவய் வலுவாய் தூண்டும் ஆட்சிக் குழுவும் நாடுமா? (பக்:42}

கடுமையாகப் பாடிய கவிஞர் தனது எணபது வயதில் கண்ட தமிழ் அழிப்பால் அதிசயம் என்ற தலைப்பில் சமூக அவலத்தை கண்டு நோகிறார்.

தமிழகம் உள்ள தமிழர் எல்லாம் தமிழய்ப் படித்தால் அதிசயம்
தமிழக கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனை அதிசயம்
தமிழக வழக்கு மன்றங்களிலே தம்ழில் புழங்கல் அதிசயம் (பக்:44}

அசய்வு அனும் தலைப்பில் அண்ட இயக்கத்தையே நம் கண்முன் நிறுத்துகிறார்.

உலகம் இருப்பது அசய்வாலே – சூழும்
உயிர்கள் இருப்பதும் அசய்வாலே
இலகும் அணுக்களும் அசய்வாலே
இருக்கும் கோள்களும் அசய்வாலே
இசவாய் நாளும் அசய்ந்திடுவீர் – அதற்கு
இணிக்கும் பயிற்சிகள் துணையாகும் (பக்:60}

உடற்பயிற்சியையும் தம் கவிதையாலே தருகிறார் கவிஞர். தொந்தி எமனுக்குத் தந்தி எனச் சாடுகிறார்.

முந்தி வந்திடும் தொந்தி – எமனய்
முந்தி வரச் சிய் தந்தி – அதனால்
குந்திக் குந்தி உட்கார் – வயிற்றய்க்
குனிந்து குனிந்து எக்கு (பக்:65}

இதுபோன்று உடல் பேணும் கவிதைகளை அனுபவப் பிழிவாகத் தந்துள்ளார் கவிஞர்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

என்ற குறளின் வழி முயற்சிக்கு கவிஞரின் கவிதை உள்ளத்தைத் தொடுகிறது

முயற்சி என்ற விதய் போடு
பயிற்சி என்ற செயல் பாடு
வளர்ச்சியான பயிர் விளையும் – அது
மகிழ்ச்சி உள்ள அறுவடையே (பக்:76}

மூடப்பழக்கக்கங்களை ஆங்காக்கே சாடுகிறார் கவிஞர். நல்லநேரம் என்ற தலைப்பில்

பஞ்சாங்க படிமனமே பார்த்துச் செய்தும் – பலர்
பஞ்சாய்ப் போனவர்கள் நாட்டிலுண்டு
அஞ்சாமல் உறுதியுடன் உழய்த்தவர்கள் – இந்த
அகிலமே பாராட்டும் தங்கத் தேர்கள் (பக்:89}

கோயில்கள் கட்டி என்ன?
கும்பிடு போட்டுமென்ன
கோபத்தை ஒழிக்காவிட்டால் – கண்மணி
கொஞ்சமும் பயனில்லையே! ` (பக்:97}

சகோதர உறவைப்பாட வந்த கவிஞர் அண்ணன் தம்பி எனும் தலைப்பில் தம் குடிக்கு உணர்த்துகிறார்.

உயர்ந்தவன் நானே எல்லாம் எனக்கென
ஒருவன் மாறிச் செயல்பட்டால்
ஒற்றுமய் குலயும் வெறுப்பும் கவலய்
உள்ளே புகுந்து வாட்டிடுமே (பக்:125}

மலேசியா சிங்கப்பூர் சென்ற கவிஞர் அந்நாட்டின் எழிலை நம் கண் முன் கவிதையில் நிறுத்துகிறார்.

தெங்கெண்ணெய் கொழுப்பென்று ஒதுக்கி – அங்கே
தேர்ந்திட்டார் பனயெண்ணெய் மரங்களாய்ப் புதுக்கி
அங்குரயில் குளிர்பெட்டி ஓட்டம் – நிலயம்
அடைகின்ற பொதிலே ஊர்ப்பெயர் காட்டும். (பக்:147}

வாக்களர்களுக்கு அறிவுறுத்தும் வண்ணம் அரசியல் பகுதியில் கவிதைக் கனலை கக்குகிறார்.

பதவிக்காகக் கூட்டணி சேர்தல்
பாமரத் தனத்தி மக்கள்தாம்
உதவிடும் மதுபிரி யாணி ஒதுக்கி
யோக்கியர் தேர்வதும் எப்போது? (பக்:186}

இலவசங்கள் பெறுவதே இன்பம் என்று
ஏற்ப்து இகழ்ச்சி அவ்வய் வாக்கய்த் தின்று
கய்வசங்கள் இருப்போரும் முட்டி மோதி
கருணையின்றி மாய்கின்றார் அந்தோ சேதி (பக்:189}

முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீபம். சமுதாயக் கேடுகளை ஒழிக்கும் நெருப்பு. தமிழர்களின் சாதனைகளைச் செப்பும் சுடர்.தமிழ்ர்களின் வாழ்வியல் காக்கும் மங்கல விளக்கு.

அன்பினால் அடக்கத்தய்க் கற்றவன் சான்றோன்
ஆத்திரம் அலட்சியம் அற்றவன் சான்றோன்
நண்பினய்ப் பண்பினால் நட்டவன் சான்றோன்
நலந்தரு பழக்கமே பலமுடன் ஊக்குமே (பக்:94}

என்ற தம் கவிதை வாழ்வு வாழும் முத்துவிழாக் காணும் பெருமகன் நீடு வாழ்ந்து தமிழ்ச் சமுகத்துக்கு தொண்டாற்ற அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

Friday, November 11, 2011

அன்னை சேது 5ஆம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்களம் அனனை சேது அறக்கட்டளையின் பொற்கிழி வழங்கு விழா


5-11-2010 அன்று காலை 10 மணிக்கு அன்னை நினைவு பொற்கிழி வழங்கு விழா மதுரையில் கல்லூரி விடுதியில் நடைபெற்றது.
சங்க கால இலக்கியங்களையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களையும் இந்தியில் மொழிபெயர்த்த பேராசிரியர் முனைவர் பி.கே பாலசுப்பிரமணியம் அவர்கட்கும், சிற்ப அம்பலம் தமிழ்க்கல்வி எனற் ஈராயிரம் பக்கங்கள் கொண்ட நூலை படைத்து, பதிப்பித்த சாதனையாளர் இறுதியில் இன்பத்தான் (சதானந்தம்)அவர்கடகும் ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

திருக்குறள்செம்மல் மணிமொழியன் தலைமை தாங்கி அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து இரண்டு அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார்.

யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இ.கி.இராமசாமி கேடயம் வழங்கினார். கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார்.மதுரை தமிழ்ச் சங்க பேராசிரியர் சின்னப்பா, முனைவர் இரா.மோகன் ஆய்வுரை வழங்கினார்.சேவைச்செம்மல் நவமணியன் அருட்தந்தை ஞான ஆனந்தராசு கவிஞர் இரவி பாராட்டுரை வழங்கினர். கவிஞர் அசோக்ராசு தொகுப்புரை வழங்கினார்.ஆவின் பொன்.மீனாட்சிசுந்தரம் நன்றி நவின்றார்

அன்னை சேதுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2011 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முதுகுளத்தூர் மாகாதேவன் அவர்களின் மகன் குமரன், கமுதி கோடையிடி குத்தாலம் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புலவர் வேணு செயராமன், கவிஞர் முனியாண்டி, , மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் சானகிசக்திவேல் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார்.

ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.

அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.

வாழ்க அன்னையின் புகழ்

வளர்க அறக்கட்டளையின் தொண்டு.

Thursday, September 22, 2011

ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை



கவிமுரசு. வா.மு.சே. திருவள்ளுவர்

ஈழத் துயரில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் உணர்வாளர்களும் பெருங்கவிக்கோ தலைமையில் ஒன்று கூடி வேற்றுமையிலும் ஈழத் துயர் நீக்க ஒற்றுமையாக உண்ணா நோண்பு இருந்து போராடியதும் தில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வழங்கியதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

தில்லி சந்தர் மந்தர் பகுதியில் 28 – 7- 2011 அன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடி மாலை 5.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒவ்வொருவரும் ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் அறிக்கைப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.

சென்னையிலிருந்து 120 பெருமக்கள் சி.டி தொடர்வண்டியில் 25-7-2011 அன்று புறப்பட்டோம். தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பெருமக்கள் வருகை தந்திருந்தனர். சென்னையிலிருந்து 25 புறப்பட்டாலும் வெளியூரிலிருந்து 24 அன்றே புறப்பட்டு சோர்வில்லாமல் ஈழ மக்கள் சோர்வினை நீக்க பங்கேற்றது என்னை நெகிழச்செய்தது.

சென்னையிலிருந்து தொடர்வண்டி புறப்பட்டதும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. யாங்கள் பெயர்ப் பதிவை அனைத்துப் பெருமக்கள் இருக்கை சென்று கையொப்பம் பெற்று வருகையை உறுதிப்படுத்திக் கொண்டோம். உணர்வாளர்கள் அனைவரும் ஒருங்கிணைய தொடர் வண்டிப் பயணம் உறுதுணையாக இருந்தது. தொடர்வண்டியில் பயணித்தோர்க்கு தமிழ்ப்பணி இதழ்களும் நூல்களும் வழங்கப்பட்டன.

27ஆம் நாள் காலை புதுதில்லி நிறுத்தத்தை அடைந்தது. அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ, முகுந்தன், கிருட்டிணமூர்த்தி போன்ற பெருமக்கள் எங்களை வரவேற்று பேருந்தில் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். இன்று காலை 9-30 மணிக்கு தலைமையமைச்சரை சந்திப்பதாகக் கூறினர். யாங்கள் தயார் நிலையில் இருந்தோம். முகுந்தன் தந்தையாரை அழைத்துக் கொண்டு தங்குமிடம் வந்தார். யாங்கள் 5 பேர் ஆகையால் மூவரை தந்தையாரோடு அனுப்பி யானும் முகுந்தனும் தாணியில் சென்றோம். தலைமையமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி பெற்று எங்களுக்காக தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தமிழ்நாடு இல்லத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

சாலையில் சாலை நெருக்கடியால் யாங்கள் செல்வதற்குள் தலைவர் தங்கபாலு எங்கே எங்கே உள்ளீர்கள் எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாக முகுந்தன் என்னிடம் தொல்பேசியை கொடுத்த்விட்டார். யான் ஐயா, யாங்கள் நெருங்கி வந்துவிட்டோம் ஐயா முன்னமே புறப்பட்டு விட்டார் அங்கு வந்துவிடுவார் என்றேன். தாம் வாயிலிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒருவழியாக அனைத்துத் தடைகளயும் கடந்து தந்தையாரும் யாங்களும் தமிழ்நாடு இல்லத்தை அடைந்தோம் வாயிலில் தயாராக இருந்த தலைவர் தங்கபாலுவின் மகிழ்வுந்தோடு தலைமையமைச்சர் இல்லம் நோக்கி விரைந்து சென்றோம்.

காங்கிரசுத் தலைவர் தங்கபாலு, உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவையின் செயலாளர் கவிஞர் பனப்பாக்கம் சீத்தா,காஞ்சி மருத்துவமாமணி விம்முணா மூர்த்தி, முத்தமிழ்ப்பேரவைச் செயலாளர் முகுந்தன், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர் வா.மு.சே.திருவள்ளுவராகிய யான் அனவரும் தலைமை அமைச்சரின் வாயிலில் காவலர்கள் புறச்சோதனை முடித்து, எங்களின் அடயாள அட்டைகளின் சோதனை முடித்து உள்ளே அனுப்பினர். ஐயா அவர்கள் தன்னுடைய கைப்பையையும் கைத்தொலைபேசியையும் கொண்டுவந்ததால் ஒரு காவலர் அதைப் பெற்று அனுப்பினர்.

சோதனைக் கட்டம் முடித்து தலைமையமைச்சக இரு மகிழ்வுந்து வந்தது. அதில் யாங்கள் ஏறி சில மணித்துளிகளில் தலைமையமைச்சரின் இல்லத்தை அடைந்தோம். யாங்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம், யான் செர்மனி பெர்லின் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மூன்றாம் மாநாட்டிற்கு தலைவர் தங்கபாலு அவர்களை அழைத்தையும் மலருக்கு அவர் வழங்கிய வாழ்த்தையும் நினவுபடுத்தினேன். தந்தையார் அவர்களோடு டாக்டர் பஞ்சாட்சரம் நடத்திய தமிழீழ மாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். தமிழகத்திலிருந்து பல தலைவர்கள் பங்கேற்றதை தந்தையார் கூறினார்.

தலைமைஅமைச்சரைக் காண காவலர் அழைத்தனர். யாங்கள் அனைவரும் தலைமையமச்சரின் அறைக்குச் சென்றோம்.தலைமையமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள வ்ருகை தந்தார். யாங்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறினோம். தலைவர் தங்கபாலு அவர்கள் எங்கள் ஐவரையும் தலையமைச்சருக்கு அறிமுகப் படுத்தினார். தந்தையார் அவர்கள் ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் அறிக்கைப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை மடலை உலக்த் தமிழ்க் கூட்டமைப்பின் பட்டினிப் போராட்ட குழுவினர் சார்பாக வழங்கினார்.

ஈழத்தில் முள் வேலியில் துன்புறும் அவலத்தையும், இராசபக்சே அரசு எந்தவித மனித நேயமின்றி நடத்துவதையும் அமெரிக்காவில் ஐநா மன்றம் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியாக இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்றும்குறிப்பிட்டோம். அஞ்சா நெஞசமுடைய தந்தையார் அவர்கள் இந்தியாதான் இக் கொலைகளைச் செய்ததாக எண்ணும் அனைவரின் கருத்தையும் வெளியிட்டு அதை தஙகபாலு அவர்களும் மொழி பெயர்த்தார். தலைமையமைச்சர் அவர்கள் இந்தியாவின் சார்பில் வழங்கிய நிதி உதவிகளையும் தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சகம் கவனித்து வருவதையும் தலையமைச்சர் குறிப்பிட்டார்.

யான் தலையமைச்சரிடம் ” Respected Sir Your Aids were not utilized by the srilankan government to the worstly affected area of tamils still they are in bad situation” தக்க நடவடிக்கை எடுப்பதாக தலைமையமச்சர் அவர்களும், தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி கூர்ந்து கவனிக்கும் என்று தங்கபாலு அவர்களும் கூறினர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈழத் தமிழர்ககு இராசபக்சே அரசின் கொடுரப் போர்க்குற்றங்களை வண்ணப்படங்களுடன் ஆங்கிலத்தில் மலராகத் தொகுத்துள்ளனர். ஈழத்தமிழர் கண்ட கொடுமைகளை விளக்கும் மலராக உள்ளது. அம்மலரை தலைமையமைச்ச்ருக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்த்ரம் வழங்கினார்.முத்தமிழ்ப்பேரவைச் செயலாளர் பொன்னாடை போர்த்தினார்.

யான் 40 ஆண்டு கால பெருமையுடைய தமிழ்ப்பணி இத்ழை வழங்கினேன். இந்த இதழிழ் இலண்டன் ஒளிபரப்பு 4 ஒளிபரப்பிய கொடுரப் படங்களை அட்டையில் அச்சிட்டிருந்தேன், எம் அலுவலகச் சாலையோரம் வாழ்ந்து மறைந்த ஒரு அம்மையாரைப் பற்றிய கவிதை எழுதி இருந்தேன். சாலை மக்கள் வளர்ந்தால்தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி எனக் குறிப்ட்டிருந்த்தேன். தலைமையமைச்சர் இல்லத்தில் எங்களுக்கு வடை சாம்பார் சட்டினி தேனீர் வழங்கினர்.

அறிஞர்களும், உணர்வாளர்களும், தொண்டர்களும் ஈழப்போரில் குற்றம்புரிந்த இராசபக்சேவைக் கூண்டில் ஏற்ற உண்ணாநோன்பு இருந்து தலைமையமைச்சரைத் சந்தித்து உணர்வுகளை வெளிப்படுத்தினோம், தலைமையமைச்சரை சந்தித்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைவருக்கும் இது குறித்த செய்தியை உலகறியச் செய்தோம். தலைமையமைசரை சந்திக்க ஏற்பாடு செய்த தலைவர் தங்கபாலு அவர்கட்கு தந்தையார் நன்றி கூறினார். அன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் இராசபக்சேவை போர் குற்றவாளியாக இந்தியா நிர்பந்திக்க வேண்டு என்ற செய்தி வெளியாகியது.

28-7-2011 அன்று காலை பட்டினிப் போராட்டம் தொடங்கியது காங்கிரசு கட்சித் த்லைவர் கே.வி. தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன்,லோக் சனசக்தி தலைவர் ராம்விலாசு பாசுவான்,திமுக துணைப் பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன், மாநிலங்கலவை உறுப்பினர் வசந்தி சுடான்லி, மற்றும் பெருமக்கள் உண்ணாநோன்பில் பங்கேற்று கண்டன உரையாற்றினர், இறுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி,கே,எசு. இளங்கோவன், பாரதீய சனதா கட்சி தில்லி துணைமேயர் அணில் சர்மா பழச்சாறு கொடுத்து உண்ணா நோன்பை முடித்துவைத்து கண்டன உரையாற்றினர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயககுநராகிய யான் நன்றியுரை கூற பட்டினிப் போராட்டம் சிறப்புடன் நடந்து முடிந்தது.

Monday, September 19, 2011

‘கவிச்சிங்கம் கண்மதியன் அன்பென்னும் உறவுக்கு உரைகல்


‘கவிச்சிங்கம் கண்மதியன் அன்பென்னும் உறவுக்கு உரைகல்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள் இனமானக் காவலர் பேராசிரியர் அவர்களின் வருகை கவிச்சிஙகம் பல்லாண்டு காலம் ஏங்கிய ஏக்கத்தின் பேறு.. கண்மதியன் அவர்கள் எங்களது குடும்ப நண்பர். தந்தையரோடு 40 ஆண்டுகாலம் தொடர்புடையவர். சென்னையில்அவரது மகன் திருமணம் வைதீக முறையில் நடந்த போது திருமணத்திற்கே செல்லாமால் புறக்கணித்த கொள்கையாளர். திருமணம் நடக்கும் நாளன்று குடும்பத்தாரைப் பணியவைத்து எம் அருமைத்தந்தையர் பெருங்கவிக்கோ, கவிக்கொண்டல் மா.செ.. முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், எழுகதிர் அருகோ ஆகியோரைக் கொண்டு தமிழ்த் திருமணத்தை நடத்தி முடித்த பெருமைக்குரிய கொள்கை மறவர். இனமானக் காவலரை திருமணத்திற்கே அழைத்து நடத்த அவர் ஏங்கிய ஏக்கம் இன்று கவிஞரின் நூல்வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியரின் வருகையால் மன நிறைவு பெறுகிறார்.

கண்மதியன் பன்னாட்டுத்தமிழுறவு மன்றச் செய்லாளராக மிகச் சிறப்பாக மாதக் கூட்டங்களை நடத்தியவர். மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் மாநாட்டில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பெருந்தகை. யான் உலகத் தமிழர்கள் கையேட்டையும், தந்தையாரின் பவழ விழா மலரையும் வெளியிட்டபொது அவரது உன்னதப் பேருழைப்பை எண்ணி எண்ணிப் போற்றுகிறேன்.

மலேசியா பன்னாட்டுத்ந்தமிழுறவு மன்ற 6ஆம் மநாட்டிற்கு தன் தாயரோடு வருகை தந்த பாசத்திருமகன். மாநாட்டின் ஐந்து நாட்களும் தயாரோடு அவர் வலம் வந்ததை அனைவரும் பாராட்டினர்.

தமிழ்ப்பணியின் தொடக்க காலத்திலிருந்தே எழுதிவரும் எழுச்சிக்கவிஞர், கவிஞரின் கவிதைகளை பாவேந்தர் மரபுப் பாவலர் வரிசையில் முனைவர் மறைமலை இலக்குவனார் மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

கவிஞரின் கவிதைகள் சமூகத்திற்கு அரணாக உள்ளவை. தந்தை பெரியாரைப் பற்றி பாடும்போது

“நீ பிறக்க வில்லையெனில் நிலந்திருந்த வழியேது” என தமிழகத்தின் விடிவெள்ளியை நன்றியோடு எண்ணுகிறார்.

அண்ணல் காந்தியைப் பற்றி கூறும் போது மனித தெய்வம் என்று கூறி தெய்வம் என்று கல்லையும் மண்ணையும் வணங்கும் மக்களுக்கு வழிகாட்டுகிறார்,

கோபுரத்தில் பிறந்த காந்தி
குடிசையில் வாழ்ந்து காட்டி
மாபெரும் தியாக வாழ்வில்
மனிதருள் தெய்வ மானார். (பக்:93)

தென்னாட்டு காந்தி பெரறிஞர் அண்ணாவைப் பற்றி குறிப்பிடும்போது அவரது வாழ்வையே படம்பிடித்துக் காட்டுகிறார்.

“அரிவினில் முற்றிய நெற்கதிர்
அகற்றலில் அவனோர் செங்கதிர்
பொறுமையில் தாங்கிடும் மாநிலம்- புதுமைப்
புரட்சியில் அவனோர் போர்க்களம் (பக்:181)

மகாகவி பாரதியைப் பாட வந்த கவிஞர் பாரதி தன்னிடம் கூறுவது போன்றே பாடி இன்றைய கவிஞர் நிலையைப் பாடுகிறார்.

என்னைநீ பார்த்த பின்னும்
இன்னுமா கவிதை தீட்டி
உன்னுடல் அழித்துக் கொண்டாய்?
ஊரினுக் குழைக்க வந்தாய்? (பக்:185)
இதனால்தான் கவிஞர் சில காலம் கவிதைத் துறையைத் துறந்திருந்தாரோ.

பாவெந்தனைப் பாட வந்த கவிஞர் அவரும் புரட்சிக் கவிஞரின் வழித்தோன்றல் என நிருபிக்கிறார்.

புரட்டுப் பொய்மை தம்மைப்
புரட்டித் புரட்டித் தாக்கி
விரட்டி யடித்த வேந்து
வெடிகுண் டான பாட்டு (பக்:189)

இலக்கணத் தாத்தா மே,வி.வே அவர்களைப்படும்போது

இலக்கணம் தன்னில் ஈடில் புலமை
முதிர்ச்சி பெற்ற முற்றிய செந்நெல்
அதிர்ச்சி வைத்தியம் அளித்திடும் மருத்துவர். (பக்:231)
என மனமொன்றிப் பாடுகிறார்.

அண்ணன் கவிச்சிங்கம் அவர்களைப் பற்றி யான் என் சிந்தையில் தோன்றியதை அவரே தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

முறைப்படி தமிழ்கற்ற யானோர் புலவன்
மூண்டகொடுஞ் செயலெதிர்க்கும் யானோர் தலைவன்
அறிஞர்தம் ஏவலுக்கு யானோர் இளவல்
அன்பென்னும் உறவுக்கு யானோர் உரைகல்
விதியென்று உரைப்பார்க்கு யானோர் பகைவன்! (பக்:207)

நூறு திருக்குறளுக்கு வெண்பா பாடி குறளமுதம் தந்துள்ள கவிஞர்

சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

என்ற குறளுக்கு ஒப்ப சொல்லிய வண்ணம் தம் வாழ்க்கை வாழும் அண்ணன் கண்மதியன் அவர்கள் வாழ்வாங்கு வாழ எம் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தினர் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

Saturday, September 3, 2011

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தி


தந்தையார் கெனொசா உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கு பெற்றதை அமெரிக்கப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுளன.

ஒரு தமிழ்க் கவிஞனை அமெரிக்காவில் பத்திரிக்கைகள் உலகக் கவிஞர்களுடன் இணைத்துப் பெருமைப் படுத்துவது கட்டுரையாக வெளியிடுவது சிறப்பாக அமையும்.

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தியை தங்கள் பத்திரிக்கை உலக நண்பர்களுக்கும் தங்கள் பதிவிலும் வெளியிடுவது தமிழன்னைக்கு நாம் செய்யும் சிறப்பு

மேலும், நிழற்படங்கள், செய்தி தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செய்தி உலக நண்பர்கள் மின்னஞ்சல் இருப்பின் எனக்கு அனுப்புங்கள், நானும் அவர்களைத் தொடர்பு கொள்கிறேன்.

நட்புடன்
.கவி.

Tuesday, July 12, 2011

வெல்க சமச்சீர் கல்வி


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னை 23-6-2011அன்று பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கவியரங்கை
தொடங்கி வைத்த தொடக்கப் பா]

மூத்த தமிழ் வாழ்வின்
முதன்மை மண்ணின் மக்காள்
காத்த தமிழ் நாட்டின்
கனிந்த கண்மணி மக்காள்
பூத்த தமிழ் நெஞ்சம்
புலர்ந்த தமிழ் நூல்கள்
ஏத்தும் எம்மொழியின் பேறே
ஏற்க என்றன் வணக்கம்|

பாக்கம் தமிழன் இவன்
பண்பார்ந்த தமிழ் அன்பன்
ஊக்கத் தமிழ் வார்ப்பின்
உயர்ந்த கவி நெஞ்சன்
பூக்கும் தமிழ்ப் பூங்கா
பூவைத் தமிழ் அங்கம்
காக்கும் தமிழர் மானம்
கவிஞனுக்கு என் வணக்கம்|

தேக்கும் மரபு வானம்
தேர்ந்த கவி ஊற்று
ஆக்கும் புயல் காற்றாம்
அரவணைக்கும் தலைமை நெல்லை
போக்கித் தமிழ்ப் பகையை
பொழிவாய் தமிழ் ஆளும்
காக்கும் இராமச் சந்திரர்
கவிவாணர்க்கு என் வணக்கம்.

வந்தோரை ஆள வைத்து
வறியாராய் தினம் நிற்கும்
சொந்தமதை உதறித் தள்ளி
சுகமாகக் கைகள் ஏந்தும்
விந்தைக் குணம் என்றால்
வின்வளர்ச்சி வரும் எங்கே
மந்திக் குணம் ஏற்று
மானமின்றி நிலம் வாழ்வோ

பெரியார் கொள்கை தம்மை
பேணியே ஏற்கா தன்மை
உரியாரை உணராப் போக்கால்
உள்ளதை இழந்து நின்றான்
பொரியை ஊதுதல் போன்றே
பொல்லாதார் கையில் உள்ளான்
நெறிமறந்த நம் மக்கள்
நிலையாதல் என் நாளோ

பாவேந்தன் தோன்றி நம்மின்
பகுத்தறிவு பாவைத் தந்தார்
நாவேந்தும் கலைஞர் நன்றாய்
நயத்தகு சமச்சீர் கண்டார்
பூவேந்தும் மழலைச் செல்வம்
புகழேந்தும் கல்வி ஒன்றாய்
சாவேந்தல் முறையோ தானா
சிந்திப்பீர் செயலாய்க் காண்பீர்

கோபுரத்து வாழும் பிள்ளை
கொட்டடியில் வாழும் கிள்ளை
மாபுகழின் கல்வி தம்மை
மாசமச் சீராய் கற்றல்
நாபுகழ் கலைஞர் சிந்தை
நசுக்குதல் முறையோ சொல்வீர்
பாபுகழ் அறிஞர் கண்ட
பயன்சமச்சீர் வீழ்தல் நன்றோ

சாத்திரம் சடங்கு மாயம்
சலிக்காமல் காணும் ஆட்சி
கோத்திரம் கோயிலில் வீணாய்
கோடிகோடி கொட்டும் ஆட்சி
காத்திடும் மழலைச் செல்வம்
கல்வியில் தடைதான் ஏனோ
மாத்திறக் கல்வி தன்னை
மதியாமல் மாய்த்தல் நன்றோ

கல்வி நிலையம் எல்லாம்
கயமைக் கீழோர் கையில்
கொள்ளை நிலையம் என்றே
கோடிகோடி சேர்க்கும் நாளில்
பள்ளீச் சமச்சீர் சாய்த்து
பருவத்தே பம்மாத்து காட்டி
கல்விப் பயனை ஏழ்மை
கிட்டாமல் செய்யும் மோசம்

எதுதமிழர் உரிமை என்றே
எழுச்சிக் கவிஞர் மக்காள்
முதுகு தெறித்து ஓடும்
முத்தமிழ்க் கவியைத் தருக
சதிவலை தகர்த்து எரிய
சமத்துவ சமச்சீர் காண்க
ஆதித்தமிழர் கவிய ரங்கை
ஆர்தெழுந்தே தொடங்கு கின்றேன்

தொடங்கிய முழக்க நாதம்
தொடர்ந்திடும் செயலாய்க் காண்க
முடங்கிய நம்மின் வீரம்
மூர்க்கமாய் கிளர்ந்து எழுக
அடக்கிய கூட்டம் ஓய
ஆவேச எழுச்சி கொள்க
தொடங்கிய சமச்சீர் காண
தொழரே வெற்றி காண்போம்|

Friday, July 1, 2011

மண்ணில் உன்நிலை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில் புதைவது மாற்றமா
சீற்றம்இன்றிதோழா
சிறுமை ஏற்பது மாற்றமா
நாற்றம்இன்றிதோழா
நலமாய் மகிழ்வது மாற்றமா
தேற்றுவோர்தம்மைத்தோழா
தெருவில் தள்ளுதல் மாற்றமா


வெற்றுக்கூச்சலைத்தோழா
வெறியாய்க் கொள்வது மாற்றமா
உற்றஉன்மொழிதோழா
உதறத் துடிப்பது மாற்றமா
கற்றஉன்வழிதோழா
கதற வைப்பது மாற்றமா
முற்றும்முழுமதிதோழா
மூடியே வைப்பது மாற்றமா

பற்றிலான்வாழ்வைத்தோழா
பகடியம்செய்வதுமாற்றமா
வெற்றியின்மாளிகைதோழா
வேரோடுசாய்ப்பதுமாற்றமா
கற்றவர்கல்வியைத்தோழா
கடிந்து முடிப்பது மாற்றமா
உற்றவர்உரிமையைத்தோழா
உலகில் மாய்ப்பது மாற்றமா

கூற்றுவன்மடமைமூடம்
குனிந்து ஏற்றதன் சோகம்
வேற்றுமைசோதிடக்கயமை
வேதனைதந்தமாயம்
நாற்றங்கால் பகுத்தறிவுக் கொள்கை
நயத்தகு பெரியார் எங்கே
மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில்உன்நிலைஎன்ன?

Thursday, June 30, 2011

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்தியமணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(28-6-2011 அன்று தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல், தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தலும் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கமும் இன்று தலைநகர்த்ததமிழ்ச் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் நடைபெறுவதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்குத் தலைமை தாங்கும் வெள்ளைச்சாமி அவர்களே பேராசிரியர் அவர்களின் திருமகன் அவரது பணியை தொடர்ந்து செய்து வரும் மெ.மீனாட்சிசுந்தரம் அவர்களே, புலவர் என்றால் பெருமை சேர்ப்பவர் என் அருமைத் தந்தையார் வரிசையில் புலவர் சுந்தரராசனும் ஆவார்கள். தன் அயராத முயற்சியால் தலைநகரில் இந்தக் கட்டிடத்த்தைக் கட்டி இங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்திவரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்த ஆட்சியானாலும் ஆய 64 தமிழ்க்கவலைகளை எழுதும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் ஆறு. அழகப்பனார் அவர்களே, தமிழன் தொலைக்காட்சி இயகுநர் கலைக்கோட்டுதயம் அவர்களே,சமச்சீர் கல்விக்காகா அன்றும் இன்றும்போராடி வரும் கசேந்திரன் அவர்களே, மணிவாசகர் பதிப்பக பொறுப்பாளர் குருமூர்த்தி அவர்களே சங்கத்தை மிகச் சிறப்பாக இயக்கி வரும் செயலாளர் பாவலர் கணபதி, புலவர் புஞ்ஞையரசன், அழகியநம்பி கவிஞர் இளங்கண்ணன் உள்ளிட்ட பெருமக்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்கள் சிறந்த பேராசிரியர், நுண்ணிய ஆய்வறிஞர், தலைசிறந்த்த பதிப்பாளர், தமிழுக்காகப் போராடியவர், மனிதநேய மாமணி.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி மிகச் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியவர். தாம் பேராசிரியராக இருந்தபோது பல்வேறு தமிழ் நூல்களை எழுதியும் எழுத்தாளர்களையும் மாணவர்களையும் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். தலைசிறந்த பதிப்பாளர். வெற்றி என்ற உரை நூலை வெளியிட்டுத் தமிழகம் முழுமையும் புகழ் பெற்றவர். மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக தலைசிறந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். அனைத்துத் துறைகளிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் நூலை வெளியிட்டவர். அவரது வழியில் அவரது திருமகன் பல்வேறு பதிப்புகளை வெளியிட்டு வருகிறார். அண்மையில் தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த நூல் ஆசிரியர்களுக்கும் பதிப்பாளருக்கும் விருது வழங்கி தந்தையின் புகழை மங்காமல் காத்துவருகிறார்
.
பேராசிரியர் மெய்யப்பனார் ஒரு தமிழ்ப் போராளி. மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார் அவர்கள் எங்கும் தமிழ் எதிலும் என்ற கொள்கைக்கு சென்னையில் பேரணி நடத்தியபோது தன்னுடைய கனத்த உடலோடு வியர்க்க வியர்க்க முழக்கத்தோடு நடந்த நடை என் மனக்கண் முன் தோன்றுகிறது.

பேராசிரியர் அவர்கள் சிறந்த மனித நேயமாமணி. 30 வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள எங்களது புத்தகக் கடை வழியாகச் மெய்யப்பனார் சென்றபோது கடைக்குள் வந்து கண்டு தனது பத்தாயிரம் ரூபாய் உரைகளை அளித்தது தொழிலைப் பெருக்குங்கள் எனக் கூறிய பெருமனத்தர்.

செருமணியிலிருந்து நண்பர் கணேசலிங்கம் வந்திருந்தபோது ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம் அப்போது செருமனி வாழ் தமிழர்களுக்கு தன் பதிப்பக நூல்களைக் கொண்டுவந்து வழங்கிய அவரது வள்ளல் தன்மை எண்ணி போற்றத்தக்கதாகும்.
ஒருமுறை என் தங்கை எம்.எசி தேர்வுக்குச் சிதம்பரம் சென்றபோது தங்குவதற்கு தன் இல்லத்தை வழங்கீயதும் அவர்தம் துணைவியார் ஆச்சி காட்டிய பரிவும் நெஞ்சை விட்டு நீங்காதது.

இதையெல்லாம் குறிப்பிடுவதற்குக் காரணம் யாம் மட்டும் அல்ல அவரோடு பழகிய தமிழ் அறிஞர்கள் அணைவரும் அறிந்த ஒன்றாகும்.

தமிழைப் பயிற்று மொழியாக்க, அனைத்து நிலைகளில் தமிழ் அரியணையில் அமர 1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப் பயணமாக வந்தோம். பின் தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வந்து மக்களை தெளிவித்தும் அரசையும் வலியுறுத்தியும் வருகிறோம்.
மேலும் தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழை பயிற்றுமொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழியாகவும் ஆக்கப் போராடுவோம்.

கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தசரதனைக் குறிப்பிடும்போது

‘ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்இல் நூல்நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம்”

எனக் குறிப்பிடுகிறார். அதைப் போன்றே மெய்யப்பனார் அறிவுக்கடலை ஆய்ந்து கடந்தார். தம் வாழ்வில் பகைக் கடலை காய்ந்து கடந்தார். இரப்போர்கடலை ஈந்து கடந்தார்.

வாழ்க மெய்யப்பனார் புகழ். சாகோதரர் மீனாட்சி சுந்த்ரம் வழி அவரது தொண்டு தொடர்க எனக் கூறி விடைபெறுகிறேன்.

Saturday, June 18, 2011

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழா


(சென்னை கன்னிமாரா நூலகத்தில் 8-6-2011 அன்று நடைபெற்ற கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் விழாவும் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவும் அறிஞர்களுக்கு விருதளிப்பு விழாவுமாக முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விழாவிற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பெரியார் சிந்தனையாளர் பரஞ்சோதி அவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைகள் தாங்கி பழுத்த பழமாக வாழும் செங்ட்டுவனார் உணர்வுக்கு ஏற்ற தலமையாகும். வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் பேராசிரியர் இராசகோபாலன், கவிவேந்தர் வேழவேந்தன்,பெரியார் பேருரையாளர் தென்மொழி ஞானபண்டிதன்,கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், தமிழ்வள்ளல் சந்திரசேகர் பொன்ற பெருமக்களெல்லாம் நெஞ்சாரப் போற்றியுள்ளனர்

பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது சென்னையில் அண்ணாசாலையில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் என்னைத் தோள் மீது இருத்தியவாறு அண்ணாவின் திரூஉடலைக் கண்டேன். தமிழகமே திறண்டுவந்து அஞ்சலி செலுத்திய,தமிழகத்தையே தமிழர்கள் கையில் வழங்கிய பேரறிஞருடன் இருந்து அண்ணாவின் எழுத்துக்களை எழுதி அண்ணாவின் உணர்வுகளை இன்றும் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் பாதுகாத்து வரும் கவிக்கொண்டல் விழாவில் பன்கேற்பது யான் பெற்ற பேறு.

யான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஐயா அவர்க்ளின் மீது அன்பும் ஈடுபாடும் உண்டு. என் அருமைத் தந்தையாரும் ஐயா அவர்களும் இணைந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு வித்தூன்றியவர்கள். அக்காலகட்டங்களில் புரட்சிக்கவிஞர் பாவெந்தரை இருட்டடிப்பு செய்ய ஒரு கூட்டமே இருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்றங்கள் ஒன்றியப்பேரவை என்ற அமைப்பின் மூலம் தமிழ் மன்றங்களை ஒன்றிணைத்து மாதம் முழுமையும் பாவேந்தருக்கு விழா நடத்திய பெருமைகுரியவர்கள்.

பாவேந்தரின் சிலையை பிறந்தநாளின்பொது ஏணி போட்டு ஏறி கழுவி மாலை சூட்டி விழாநடத்திய பெருமைக்குரியவர்கள். பாவேந்தரின் சிலை அருகே கவிஞர் குழாத்தே கூடி யிருந்தது இன்றும் நிழலாடுகிறது. பாவெந்தரின் புகழ்பாடும் இதழாகவே இன்றும் கவிக்கொண்டலை நடத்தி பாவேந்தர் பாசறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவே உள்ளார்.

நெஞசம் மறவா நிகழ்ச்சிகள் தம் கவிக்கொண்டலில் தொடர்ச்சியாக வெளியிட்டு நூலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளார்.அவரது நூலைப் படிக்கும் போது திராவிட இயக்க வரலாற்றை அறியக் கூடிய பேழையாக உள்ளது. தொடர்ந்து ஐயா அவர்கள் தன் அனுபவங்களைப் பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிமையும் மக்கள் நேயப் பண்பையும் ஐயாவின் எழுத்தில் படிக்கும்போது கண்கள் பணீக்கின்றது. ஐயாவின் எழுத்துக்கள் திராவிட இயக்கத்தின் ஆவணமாகவே உள்ளது.

கவிக்கொண்டல் மா.செ தலைசிறந்த இதழாளர் பதிப்பாளர். தலைசிறந்த தமிழகத்து மலர்களை தொகுத்து வழங்கிய பெருமைகுரியவர். தந்தைபெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமானப் பேராசிரியர் போன்ற பெருந்தலைவர்களுடன் இதழ்ப் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர். இதழியல் கல்வி படிப்போரெல்லாம் மா.செ. அவர்களுடன் பயிற்சி மேற்கொண்டால் இதழாலர்களுக்கு பகுத்தறிவு உணர்வு செழிக்கும். தமிழினம் தழைக்கும்.

கவிகொண்டல் இதழில் வெண்பா விருந்து மூலம் எண்ணற்ற எழுத்தாளர்களை இலக்கண வரம்புக்கு உட்பட்ட கவிஞர்களை உருவாக்கியவர். ஒரு கவிஞர் கவிக்கொண்டலில் எழுதினால் மரபுவழிப் பாவலர் என்ற பெருமையைப் பெறும் பல்கலைக் கழகமாக கவிகொண்டல் இதழ் உள்ளது

கவிகொண்டல் மாசெ அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து தமிழ் தமிழரின் அடையளங்களையும் நெஞ்சம் மறவா நிகழ்சிகளின் மூலம் பெரியார் அண்ணா கலைஞரோடு உள்ள திராவிட போராட்ட உணர்வுகளையும் பதிவு செய்ய வேண்டி விழைகிறேன்.

மருத்துவமணையில் உள்ள அம்மையார் தாமரைச்செல்வி அம்மையார் நலம் பெற்று ஐயா அவர்களின் பணி சிறக்க எனது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

Monday, May 30, 2011

கணினியூனூடே செம்மொழி

கணினியூனூடே செம்மொழி
கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்

(வள்ளுவர் கோட்டத்தில் உலகத்திருக்குறள் மையத்தின் சார்பில் 28-05-2011 அன்று குறள்ஞானி மோகனராசு தலைமையில் இணையதளத்தில் நாங்கள் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை)

கல்தொன்றி மந்தொன்றாக் காலத்தே மூத்த முதல் மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்கு காலம் காலமாக அனைத்துத் தலைமுறையினரும் துறை சார்ந்தவர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.. ஒலைச்சுவடிகள், கல்வெட்டுகள், அச்சாக்கம் என பல்வேறு நிலைகளில் பல் நூற்றாண்டுகளாக வழங்கிய மொழி தற்போது இணையதளங்களில் வலைப் பூக்களாக வலம் வருகின்றன.

தற்பொது வெளிவரும் தின இதழ்கள். நமது சங்க இலக்கியங்கள் வாழும் சிந்தனைகள் அனைத்தும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இணைய தளம் மூலம் கண்டு உலகத் தமிழர்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சியால் வந்த பயனை இந்திய மொழிகளில் தமிழ் மொழி இணையதளங்களில் பயன்பாட்டு மொழியாக முதல் இடத்தில் உள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அவர்தம் சிந்தனைகள் வலைப்பூக்களை உருவாக்கி இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூக்களின் வரும் சிந்தனைகளைக் கண்டு அவரவர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்கின்றனர்.
நாம் எழுதி அதைப் பதிப்பித்து பிறரை அடைந்து பின் அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் வலைப்பூக்களின் கண்டவுடன் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் கண்டால் நமக்கு இணையதளத்தின் பயன்பாடு புரியும்.

இணையதள பயன்பாட்டை அறிஞர்பெருமக்கள் வழக்கத்தில் கொள்ளவேண்டும். பொருளாதார மேம்பாடு உடையோர் ஒரு கணினியைப் பொருத்தி நம்மிடம் இருக்கும் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டே இணையதள வசதியை ஏற்படுத்தி நம் இடத்திலேயே பயன்படுத்தலாம். இயலவில்லையாயின் இணையதள சேவைகள் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளன. அங்கு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் நாடு இணய பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்றோமனால் இணையதளத்தில் தமிழின் வளர்ச்சியை அறியலாம். உலகத் தமிழர்கள் தமிழைப் பயில இணைய பல்கலைக் கழகம் பெருந்தொண்டாற்றி வருகிறது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் இவ் இணைய தளத்தில் காணலாம். தமிழ் அகராதி முழுமையும் இணையதளத்தில் கண்டு தெளிவு பெறலாம். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இணைய பல்கலைக் கழகத்தின் வழி பயின்று தேர்வுஎழுதி பட்டம் பெறுகின்றனர்.

உலகில் வாழும் கணினி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து உத்தமம் என்ற அமைப்பை நிறுவி 10 மாநாடுகள் பல்வேறுநாடுகளில் நடத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு செம்மொழி மாநாட்டோடு இணைந்து கணீனி மாநாடும் நடத்தினர். உலகம் முழுதும் அறிஞர் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். இவ்வாண்டு உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணையா மாநாட்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமுள்ள பெருமக்கள் தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம

உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும் இசைந்துள்ளார். உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுகிறார்.

மலேசியா : இளந்தமிழ், துணைத்தலைவர், உத்தமம் : vice-chair@infitt.org , Elantamil@infitt.org

இந்தியா : ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : antopeter@infitt.org

இலங்கை : மயூரன், செயற்குழு உறுப்பினர் உத்தமம் : mauran@infitt.org

ஐரோப்பா : சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர் உத்தமம் : sivapillai@infitt.org

ஆசுதிரேலியா : முகுந்த், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : Mugunth@infitt.org

சிங்கை : மணியம், செயலர்- இயக்குநர் உத்தமம், ed@infitt,org, maniam@infitt.org

அமெரிக்கா: கவிஅரசன் வா.மு.சே. தலைவர் உத்தமம், chair@infitt.org, kavi@infitt.org

கணினி அறிஞர்களின் கருத்துரைகளை அறிந்து தமிழக அரசு ஒருங்குறி தமிழ் எழுத்துகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஒருங்குறி முறையைக் கொண்டு வந்ததனால் உலகமெங்கும் ஒருங்குறி அச்சுருக்களை காண வழி பிறந்தது. ஒருங்குறி முறை இல்லையெனில் அவரவர்கள் வெவ்வேறு அச்சுருக்களை பயன்படுத்தும் போது அவரவர்கள் பயன்படுத்திய அச்சுருவை கணினிக்கு இறக்கம் செய்தே காண வேண்டும். தமிழக அரசின் ஒருங்குறி அச்சுருக்களே உலகின் எங்கும் காணக் கூடிய நிலையில் உள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ் ஒருங்குறி எழுத்துக்களை http://www.infitt.org என்ற இணயதளத்திலிருந்து கணினியில் இறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழக அரசு மாநடுகளின்போது அச்சுருக்கான குறுவட்டுகளையும் மக்களுக்கு வழங்கியது.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை உலகமெங்கும் காண்பது போல் நம் தமிழையும் காணமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மின் அஞ்சல் அனுப்பும்போது ஒருங்குறியைப் பயன்படுத்தி தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர்.

வலைப்பூக்கள் பல்வேறு பெருமக்கள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் மறைமலை தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களுக்கு வலைப்பூ உருவாக்கி அவரது கவிதைகளை வழங்கியுள்ளார். வாழும் மரபுக் கவிஞர்கள் 35 கவிஞர்கட்கு அவரவர் பெயர்களில் வலைப்பூ உர்வாக்கி அவர்களது வாழ்க்கைக் குறிப்பு கவிதைகளை பதிவு செய்துள்ளார்.

ABDUL RAHMAN
amuthabarathy
ARATTAI
ARIVUMATHI
E.S.MUTHUSWAMI
Erode Tamilanban
Ilangkannan
K.C.S.ARUNACHALAM
Maa.Sengkuttuvan
manimaran
manivendhan
Naaraa Nachiyappan
PICHINIKKAADU ILANGO
Poet Amallathasan
Poet Kalaimathiyan
POET SIRPI
Poet Minnoor Seenivasan
POET PONNADIYAN
Poet Va.Mu.Sethuraman
POET VEZHAVENDHAN

உலகளாவிய நிலையில் நார்வே பிரபு, சுவிட்சர்லாந்து முருகவேள், செர்மணி சுபா, சிங்கப்பூர் மணியம், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் வலைப்பூ உருவாக்கியுள்ளனர்.
வருகை தந்துள்ள ஆன்றோர் பெருமக்களே அச்சில் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ள நீங்கள் இணையத்திலும் தங்களின் பங்களிப்பை வழங்கி உலகத்தமிழர்களோடு பயணிக்க வேண்டுகிறேன்

Thursday, May 5, 2011

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு



கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு ஆய்வரங்கில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்கு தலைமை வகிக்கும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவைத் தலைவர் புலவர் கு சீத்தா, தன்னுடைய மனைவி இறந்தும் சோகம் கலையாமல் இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள கொள்கை மறவர் தமிழ்மறையான், விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்ப்பணி வாசகர் வட்டத்தை கூட்டி தமிழ்ப்பணீக்கு உரமூட்டிய கவிமாமணி சி.விக்கிரமன், முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாருரிலிருந்து அரிய தொண்டாற்றும் புலவர் வெற்றிப்பேரொளி, திருக்குறள் பணியையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு பணீயாற்றும் மூத்தபெருமகன் கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வரதராசனார், அவர்தம் வழியில் தொண்டாற்றும் மக்கள் மதிவாணர், இராமானுசம் பாவேந்தர் பாடல்களைப் பாடி மகிழ்வித்த சித்ராமணி அம்மையார் , இசுரேல் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பொறியாளர் எய்தான் டொரான் மற்றும் பெருமக்களையெல்லாம் காணும்போது சென்னையிலிருந்து வந்த களைப்பு நீங்கி களீ பேருவகை கொள்கின்றேன்.

. மனமோகனதாசனின் ஆசிரியர் பேசும்போது அவர் தொடக்கப்பள்ளி படிக்கும் காலத்தில் மோகன்தாசுகரம்சந்த் காந்தி எனும் பெயரை மனமோகனதாசன் என மாற்றியதாகக் கூறினார்கள். அண்ணல் அவர்களின் பெயராலேயே மனமோகனதாசன் என செந்தமிழிலே நாமெல்லாம் அழைத்து வருகிறோம். தமிழ் உணர்வோடும், போராட்ட எண்ணத்தோடும் தொண்டாற்றும் அன்புநெஞ்சர். நம் குடியரசு என்ற இதழை செம்மொழி தழைக்க அரும்பாடுபட்டு நடத்தும் பெருமைக்கு உரியவர். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற கருத்துக்குச் சொந்தக்காரர். இந்த மாபெரும் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி என்னை தமிழறிஞர்கள் படத்தை திறந்து வைத்து சிற்ப்புரையாற்ற அழைத்தமைக்கு மனமோகனதாசனுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்

காலம் காலமாக தமிழ் தமிழரை எண்ணும் வண்ணம் ஐயன் திருவள்ளுவர்,ஒளவையார், சி.இராமகிருட்டிணன்,இலக்குவனார், தாளமுத்து நடராசன்,முத்துக்குமார் ஆகியோர் படங்களைத் திறந்து அவர்களது தொண்டுகளையும் அவற்றைத்தொடர்ந்து நாம் தொடர வேண்டிய பணிகளையும் அறிஞர் பெருமக்களும் கவிஞர்களும் ஆய்வறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழ் முதன்மையான மூத்த மொழி. காலத்தால் அழியாத முன்னோடி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட மொழி. இரசியா சென்ற பாரதப் பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலைப் பாடி இந்திய இலக்கியக் கூற்றாகக் கூறிய பெருமைக்குரிய மொழி தமிழ் மொழி. முன்னாள் குடியசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில் பூங்குன்றனாரின் பாடலையும் திருக்குறளையும் பாடி இந்திய இலக்கியமாகக் கூறிய பெருமைக்குரிய மொழி நம் தமிழ்மொழி. அண்ணல் காந்தியடிகள் திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைப் பயின்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார். யான் செருமனி நாடு சென்றிருந்தபோது சகோதரர் கணேசலிங்கமும் நண்பர்களும் ரெய்னே நகரை சுற்றிக்காண அழைத்துச் சென்றனர். அதுபோது ஒரு பாலத்தில் தமிழில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை செதுக்கி வைத்துள்ளனர். இது என்ன விந்தை என வினவியபோது உலகின் சிறந்து கருத்துக்களை ஆங்காங்கே செர்மனியில் பதிய வைத்துள்ளனர் என நண்பர்கள் கூறினர்.

தமிழகத்திற்கு மதத்தைப் பரப்பவந்த அறிஞர் சி.யூ.போப்., தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்து தன்னைத் தமிழ் அன்பராக நீக்கமற நிறைந்து அருந்தொண்டாற்றினார். இலண்டனில் உள்ள அவரது கல்லறையில் ”தமிழ் மாணவர் இங்கே உறங்குகிறார்” என பொறித்து வைத்து தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.யான் இலண்டன் சென்றபொது கண்டு மெய் சிலிர்த்தேன். அதே போன்று பெசுக்கி எனும் பாதிரியார் தன்னை வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றி தமிழுக்கு சதுராகராதியையும் எண்ணற்ற நூல்களையும் படைத்து தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். அறிஞர் கால்டுவெல். எல்லிசு போன்ற பெருமக்கள் தமிழின் தொன்மையை ஆய்ந்து நிலைநாட்டியுள்ளனர்.

காலம் காலமாக அடிமைப் பட்டிருந்த தமிழர்கள் தந்தை பெரியாரின் எழுச்சியால் தன்மான உணர்வைப் பெற்று சிலிர்த்தெழுந்தனர்.பெரியாரின் வழித் தோன்றல் பேரறிஞர் அண்ணா தமிழாலேயே ஆட்சியைப் பிடித்தார். தமிழ்நாடு எனப் வரலாற்றுப் பெருமைமிக்க பெயர் மாற்றம் கண்டார். அவர் வழி வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியார் அண்ணா சிந்தனைகளையெல்லாம் செயல் வடிவமாக்கினார்.அனைத்திற்கும், முத்தாய்ப்பாக காலாதிகாலம் நாம் போராடிய தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார், உலகே வியக்கும் வண்ணம் கோவையில் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழ் தமிழரின் பெருமையின் சிகரம் கண்டார்.

நாமெல்லாம் கூடி கூட்டம் நடத்தி, மாநாடுகள் கண்டு தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப் போராடி வருகிகிறோம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தம் தேர்தல் அறிக்கையிலேயே தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். செம்மொழித் தகுதியை பெற்றதைப் போல் முத்தமிழறிஞர் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தி தமிழை ஆட்சி மொழியாக்குவோம் எனச் சூளுரை மேற்கொள்வோம்,தமிழை ஆட்சிமொழியாக்கினால் இந்தியாவிற்கே பெருமை இந்தியாவின் கூட்டாட்சி கொள்கைக்குப் பெருமை பயப்பதாக இருக்கும்,

நமது அடுத்த கோரிக்கை திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிப்பது. திருக்குறள் மனித குலத்திற்கே திருவள்ளுவரால் படைக்கப்பட்ட மறை நூல். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மறை. தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போற்றிவணங்கும் மறை நூல். யான் பர்மா சென்றபோது தட்டோன் பகுதிக்கு நமது அறநெறிக்கழகத் தலைவர் கலைச்செல்வன் அழைத்துச் சென்றார்.அங்கே அமரர் மாரிமுத்து அவர்களின் அயரா முயற்சியால் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார்.அங்கு யாங்கள் சென்ற போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஓதுவாராக உள்ள குருசாமி அவர்கள் திருக்குறளை ஓதி எங்களை வாழ்த்தினார். பர்மாவிற்கும் நமக்கும் 40 ஆண்டுகள் தொடர்பற்ற நிலையிலிருந்தாலும் உணர்வுகள் நீங்காமல் நிலைத்திருப்பதை அறியமுடிந்தது.

திருக்குறள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வருகின்றன. மனித குலத்திற்கே பேரோளியாம் திருக்குறள் குறித்த மாநாடுகள் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் நடைபெற்று திருக்குறள் உலகப் பொதுமறையாக உள்ளது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றத்தில் திருக்குறளைக் கூறியே நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் ஐயன் சிலையை நிறுவி உலகையே உற்று நோக்க வைத்துள்ளார்.

உலகறிந்த நாடறிந்த பொதுமறையாம் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க மாநாட்டின் சார்பில் கோரிக்கை வைப்பதில் இறும்பூதெய்துகின்றேன்