Monday, November 14, 2011

முத்தமிழறிஞர் கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா ஆய்வுரை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார்திடலில் புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் நடைபெற்றவிழா வில் ஆசிரியர் வழங்கிய ஆய்வுரை)

தொல்காப்பியப் பூஙகா தமிழர்களுக்குக் கிடைத்த காலக்கனி. அந்தக் கனியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய வாரது வந்த மாமணி முத்தமிழறிஞர் கலைஞரைத் தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணிப் போற்றிப் பெருமையுறும்.

தொல்காப்பியப் பூங்காவைப் பற்றித் தொடர்ந்து ஆய்வுரை வழங்கும் தஞ்சை கூத்தரசன் அவர்களின் பணி மகத்தானது. தமிழ்வள்ளல் சந்திரசேகர் கலைஞரின் பால் நீங்கா பற்றுடையவர். தொல்காப்பியப் பூங்காவின் அவரது உரைகள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் வல்லமை உடையது. புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர் நிகழ்வுகளைத் திறம்பட அயர்வின்றி நடத்திவரும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அம்மையாரை நெஞ்சாரப் தமிழ் உள்ளங்களின் சார்பில் போற்றுகிறேன்.

தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர். பூங்காவுள் உள்ள மலரை நுகரவும் காணவும் மகிழவும் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு தந்துள்ளார் தமிழாய்ந்த தமிழ் மகன் முத்தமிழறிஞர் கலைஞர்.

எழுத்தைப் பற்றிக் தொல்காப்பியர் கருத்தைக் கூற வந்த கலைஞர் “செதுக்கிச் சிலைவடிக்க உளியும் ஓவியம் தீட்டத் தூரிகையும் போல எழுத்துத் தவையன்றோ நூல் படைக்க” (பக்:41) எனக் கூறி எழுத்துக்களின் அணிவகுப்பை அழகுபடக் கூறியுள்ளார்.

தொல்காப்பியரின் உயிர்மெய்யைக் கூறவந்த கலைஞர் என்றும் தமிழர்தம் நெஞ்சில் நிலையாக உள்ள அண்ணாவையும் தன்னையும் கூறும் பாங்கைப் பாருங்கள்.”என்னதான் இருந்தாலும் தமிழ் தந்த கொடையைப் பாருங்கள் ’அ’ வை முதல் எழுத்தாகக் கொண்ட அண்ணா நமக்குத் தலைவர்-இன்று ’க’வை முதல் எழுத்தாகக் கொண்ட கலைஞர் கருணாநிதி நமக்குத் தலைவர்”.(பக்:53)

தொல்காப்பியத்தின் மாத்திரை அளவைக் கூற வந்த கலைஞர் சாதாரணக் குடிமகனும் புரியும் வண்ணம் ஒரு நாடகமே நம் முன் நிறுத்துகிறார்.இரு பெண்கள் மாத்திரை குறித்துப் பேசுவது பொலவும் திருட வந்த திருடர்கள் ஏதோ மகப்பெறு நடக்கும்வீடு என்று எண்ணி சென்று விட்டதாகக கூறி தொலகாப்பியரின் எழுத்துக்களுக்கான மாத்திரை அளவைக் கூறுவது அருமையிலும் அருமை.

”எல்லா மொழிக்கும் உயீர் வரு வழியே
உடம்படு மெய்யின் உருபு கொளல் வரையார்”
தொல்காப்பியநூற்பா 38.

ஆசிரியரும் மாணவியும் இலக்கியக்காதலும் ஒன்றுபடும் வண்ணம் உடம்படு மெய்யின் கருத்தையும் மனத்தையும் ஒன்ற வைக்கிறார். கலைஞரின் கவின்மிகு சொற்களைப் பாருங்கள் “எல்லாச் சொற்களிலும் உயிர் ஈற்று முன் உயிர் வரும்போது உடம்பொடு மெய் தொன்றும் என்றும், அதன் வடிவை நீக்கார் என்றும் சொல்லிவிட்டு மா+இலை=மாவிலை என்பது உடம்படு மெய்யாயிற்று என்றீர்களே. நம்மைப் பாருங்கள் அந்த உடம்படு மெய்தானே இது. உயிர் ஈற்றுமுன் உயிர் கலக்கும்போது நம் மெய் இரண்டு கலத்தல் இலக்கணப்படி ஏற்கத்தக்கதுதானே. உருபு கொளல் வரையர் என்றுதானே கற்பித்தீர்கள்” (பக்:75)

பாட்டியையும் சிறுவனையும் உரையாட வைத்து தொல்காப்பித்தின் உயிரிணை அஃறிணையை தலைமுறைகள் வழி விளக்குகிறார். “பாட்டி நீ சொல்லும் சோழன் உன் மகனாகவோ பேரனாகவோ இருந்தால் உயர்திணை அல்லது அந்தச் சோழன் பேருந்தாக இருந்தால் அஃறிணை” (பக்:88)

அரசியல் ஞானி கலைஞர் உலக அரசியலையும் நம் அரசியலையும் கூறி தொல்காப்பியத்தை விளக்குகிறார். உலகபோரில் முதன்மை நாட்டோடு பங்கேற்ற நேச நாடுகளையும் தேர்தலுக்கு முதண்மைக் கட்சிகளோடு கூட்டணி சார்பைக் கூறி அதைப் பொன்று குற்றிய லிகரம், குற்றிய லிகரம் எனக் குறிப்பிடுவது சாதரண மக்களுக்கு உலக நடப்போடு கூறுகி’றார்.

பகுத்தறிவும் கோமகன் கலைஞர் அவர்கள் பராசக்தி முதல் இன்று வரை மடாதிபதிகளின் கயமைகளைச் சாடுவதில் அவருக்கு இணை அவரே.தொல்காப்பியத்தின் வழுவமைதியைக் கூறும் வழியை நோக்குங்கள்.

”இரவுக்கிளி போய்விட்டார்களா? என்று பன்மையில் கேட்கிறீர்1 ஒரு மடாதிபதிதான் உள்ளே இருக்கிறார் மடாதிபதிகள் என்று பன்மையில் உரைக்கிறீர், உமது கூற்றுப்படி அறைக்குள்ளே எத்த்தனை மடாதிபதிகள்? எத்தனை கிளிகள்? ஒரு மடாதிபதியும் பல கிளிகளுமா? அல்லது ஒரு கிளியும் பட மடாதிபதிகளுமா?

சின்னச்சாமி குழப்பாதீர்1 நான் இலக்கணப்படி தான் கேட்டுள்ளேன் ஒருவ்னையும் ஒருத்தியையும் சுட்டிச்சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச்சொல்லும் உலக வழக்கில் உயர்த்திச் சொல்லும் சொல்லாம். இலக்கண வழக்கெல்லாம் என்று தொல்காப்பியர் பால்வழுமைதி என கூறியிருக்கிறார்”.(பக்:96)

கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மைக் கூறும் கடப்பாடில்வே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே (நூற்பா: 62)

இந்த சொல்லதிகார நூற்பாவிற்கு சிற்பி ஒவியரை காதலன் காதலாக்கி கலைஞர் வழங்கும் சொல்லோவியம்.” இரண்டு கண்கள் இருப்பினும் ஓவியத்தில் ஒன்றுதான் தெரிகிறது ஓவியத்தில் இரண்டு மார்பகங்கள் காணப்படவிலலை ஒன்றுதான் உள்ளது. மூங்கிலணைய உன் தோளையும் அவ்வாறே தீட்டியுள்ளாய். கண்கள், தோள்கள் மார்பகங்கள் என்றில்லாமல் கண்ணும் தோளும் மார்பகம் மட்டும் காண்கிறேன் அதாவது தொல்காப்பியர் கூற்று அப்படியே தோய்ந்திருக்கிறது இந்த ஓவியத்தில்!” (பக்:101)

எனது மகன் என்ற சொல்லுக்கு கலைஞர் தொல்காப்பிய வழி கருணையானந்த அச்சகத்தையும் எண்ணி சீர்திருத்த திருமணத்தையும் அதில் நேரம் படும் பாட்டையும் விளக்குவது அருமையில் அருமை “எனது மகன் என்று எழுதும்போது உயர்திணையுடன் ’அது’ என்ற ஆறாம் வேற்றுமை உருபுக்குப் பதிலாக நான்காம் வேற்றுமையாகிய ’கு’ உருபு வருதல் வேண்டும். இல்லையேல் எனது என்று குறித்திடும்போது தவறாகிவிடும் என்வே ’கு’ உருபை இணைத்து ’எனக்கு மகன்’ என்பதே சரியாகு.ம்.(பக்:114)

தொல்காபியத்தின் பெருந்திணையை விளக்க மடலேறுதல் கூறி அறியார்க்கும் அறிய வைக்கிறார். “கடற்கோள் எனப் குமுறிப் பொங்கும் வலிமையினால் காமந்தணித்துக் கொள்ளப் பாய்ந்திடும் செயலும் பெருந்திணை எனப்படும் “ என விளக்குகிறார்.(பக்:202)

தொல்காப்ப்பிய பொருளதிகாரம் புறத்திணையியல் நூற்பா 5க்கு நடுகல்லானவன் எனும் தலைப்பில் போர்ப்பரணியாகவே வரைந்துள்ளார். ”ஓ மகனே! நீ பொன்முடி வேண்டாமெனப் புகழ் முடி சூடிக் கொண்டாயோ! எனக் கலங்கிய காவலன் அவன் நெற்றியில் முத்தமிட்டான். வெற்றியில் மகிழ்ந்திட முடியாத வீரர் கூட்டம் போரில் விழுப்புண்பட்டோர்க்கு கல் எடுத்து நீராட்டி நினைவு நடுகல் நாட்டிடும் முறையைப் பின்பற்றி களத்தில் மாண்ட மனனர் மனையின் இளவலுக்கும் நடுகல் நாட்டி நினைவு போற்றியதில் புதுமை என்ன இருகிறது.!” (பக்: 217)

இருபொருள் ஒரு விளக்கம் தலைப்பில் விளக்கவந்த கலைஞர் சிலப்பதிகாரத்தை நினைவுறுத்தி தரும் பகுத்தறிவு விளக்கம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது

.” பார்ப்பனர் ஓதிய மந்திரமும் – கோள்
பார்த்துக் குறித்த ஓரையுமே
பாதுகாத்திடவில்லை அவர்களையென்று
பகரும் சான்று சிலப்பதிகாரம் (பக்:292)

அய்யர் விளக்கத்தி நம் அய்யர் கலைஞர் தொல்காப்பிய வழி விளக்குவது சிந்தையில் பதிய வைக்கவேண்டியது.

அய்யர் எதற்காக என்று கேட்டோருவர்
அவர்வேறுகுலம் நம்மிடையே ஏன் வரவேண்டும் என்றார்
அன்பரே அந்த அய்யரல்ல இவர் அறிக
அறநெறி வகுத்து தீநெறி விளக்கும்
தக்கவர் இவர்-தலைமைச் சிறபுடையார் இவர்
களவு ஒழுக்கம் தவறி
பொய்யும் வழுவும் தோன்றிய போது
காரணம் யாத்த அய்யர் இவர்” (பக்:305)

”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன” ( பொருளியல் நூற்பா15)

கலைஞரின் விளக்கம் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் முற்போக்கு ஞானியாக உரைக்கிறார்.

“இந்தக் கால கட்டத்து பெண்களின்ன் நிலையோடும் அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளோடும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால கட்டத்துப் பெண்களின் நிலை ஆண்களின் நிலை ஆகியவற்றை பழம்பெரு வரலாறுகளிலோ இலக்கியங்களிலோ படித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தவறாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அக்கால நிலையை அறிந்துகொள்ள துணைபுரியும் சாதனங்களாகமட்டுமே அவற்றைப் பார்க்கவேண்டும்-பய்ன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதே அறிவுடையோர் செயலாகும்.” (பக்:354)

தொல்காப்பியத்தின் பெரிமிதம் நான்கு கல்வி, தறுகண் , இசைமை, கொடை கலைஞரின் விளக்கம் தமிழர்களின் தறுகண்மையைக் கூறுவதாகும்.

முதல்நூலும் வழிநூலும் தலைப்பில் தொல்காப்பியத்தை பாணினியின் பின்னர் என் புராணாம் பாடியோர்க்கு கலைஞர் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என பனம்பாரனார் பாயிரத்தைக் கூறி பாணினிக்கு முற்பட்டவர் என்பதை நிலைநாட்டுகிறார்.

”முதல் நூல் வழி நூல் வகை பற்றி விளக்குகிற நூற்பாக்களாக இவற்றைக் கருத வேண்டுமேயல்லாமல் முதல் நூல் தொல்காப்பியர் இயற்றியதா? அல்லது இறைவன் இயற்றியதா? என்ற ஆராய்ச்சி தேவையில்லை” எனப் பகர்கிறார் கலைஞர்.

தொல்காப்பியத்தின் மரபியல் நூற்பா 95 பாடலைக் கூறி “ அறிவிற் சிறந்து விளங்குவோர் முனைந்து கண்டதே குற்றம் குறையில்லா முதல் நூலாக அமையும்”என்ற விளக்கம் நிறைவானதாகும்.

இந்நூற்றாண்டில் பெரியார் அண்ணா வழி நம் இனத்தைக் காக்கும் ஒப்பற்ற தலைவர் அவர்களின் நூலை ஆய்வு செய்வது யாம் பெற்ற பேறு. திரைப்படங்களில், அரசியலில்,ஊடகங்களில் அவரவர் போக்குக்கு எழுதி இளைஞர்களை தடம் மாற்றும் இந்தக் காலக்கட்டத்தில் தொல்காப்பியப் பூங்காவைப் படைத்து தமிழையும் தமிழரையும் நாளெலாம் பொழுதெலாம் உயர்த்தும் உன்னதத் தமிழ்மாமணியாய் வாழும் ஐயனை வணங்குவோம்.

No comments:

Post a Comment