Wednesday, March 16, 2011

கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !


கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

புறநாநூற்றுப் பாவின் மெய்மைப்
புலியை ஈன்ற தாயே
மறுவிலா மாசிலா மாவீரன்
மண்ணில் ஈன்ற பார்வதி
வெறுவாய் மெல்லும் நம்மோர்
வெட்டியாய் வாழ்வோர் தம்மில்
உருவிலா எம்மின உருவாம்
உன்னதத் தலைவனின் தாயே !

உலகுள தமிழர்கள் கலங்கி
உத்தமக் கருவறை போற்றும்
பழுதிலா ஈழம் காணா
பார்வதித் தாயும் சாய்ந்ததே
விழுதுகள் ஆயிரம் விதைத்த
வீரத்திருமகன் போர்க்கள மண்ணில்
தொழுவோம் தெய்வீகத் தாயே
தொல்குடி நாளும் எண்ணுமே !

ஈழத்துப் போரினில் மாய்ந்த
இன்னுயிர் மக்கள் பின்னே
தாழாப்பெருமைத் தலைவரின் தாயின்
தன்னுயிர் மாத்தவம் ஈந்ததே
காலம்காலம் கண்போல் காத்த
கணவனை இழந்தாய் களத்தில்
ஓலக்குரல் மக்களின் மக்களாய்
ஒண்டமிழ்த் தாயும் சாய்ந்ததே !

மீளாத்துயரைத் தந்த கயவன்
மிருகராச பட்சே ஒழிக
காலம்காலம் போற்றிய தாய்மை
கயமைச் சிங்களம் சாய்க
வேழக்கூட்டம் தமிழாராம் எம்மின்
வேதனை மாய்ந்தே மீக்கெழ
காலஅமுதத் பார்வதித் தாயே
கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !