Sunday, December 9, 2012

மலேசியா சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை




(29-7-2012 அன்று சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில் செயளாலர்  கவிஞர்  தமிழ்மணி வடிவேலு முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை)

                தமிழர் சங்கத் தலைவர் வெற்றி நிச்சயம் நூலின் ஆசிரியர் வேணுகோபால் அவர்களே, மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கருத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் சோகூர் மாநிலத்தில் தமிழ் பயிற்றுவித்து தமிழ்ப் பட்டாதாரிகளை உருவாக்கும் அருமைக் கவிஞர் பெருமகன் தமிழ்மணி வடிவேலு அவர்களே. என் உரையைக் கேட்க வந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களே, சான்றோர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
     தலைவர் வேணுகோபால் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலை அனைவரும் படித்திருப்பீர்கள். உண்மையிலேயெ தமிழ் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். அவரது தந்தையார் அவர்கள் சப்பான் போரின் போது அனைவரும் உடைமைகளை விற்றுக், கொண்டிருந்த நேரத்தில் தாம் சேர்த்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் பரன்மேல் பாதுகாப்பாக வைத்துவிட்டு வந்தார்களாம். போருக்குப் பிறகு ஊர் திரும்பி மிகச் சிறந்த தொழில் அதிபராக மிளிர்ந்தார். என்பதை நன்றிப் பெருக்கோடு கூறியுள்ளார். தந்தையார் வழியில் மலேசியாவின் தொழில் அதிபராக, திருகோயிலின் தலைவராக, சிறந்த எழுத்தாளராக இன்றும் தளராது நடைபோடுகிறார்.
     நமது செயலாளர் தமிழ்மணி வடிவேலு அவர்கள் மலேசியா சிங்கை நாடுகளை இணைத்து மாநாட்டு மலரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். மிகச் சிறந்த கவிதை. மலேசிய சிங்கை ஒப்புறவுக் கவிதையாகக் கூறலாம் அந்தக் கவிதையை நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன் உலகத்தமிழர்களின் பாரட்டுதலைப் பெற்ற கவிதை. மேலும் தொண்டின் சிகரமாக சோகூர் மாநிலத்தில் தமிழ்ப் பட்டப் படிப்பை பயிற்றுவிக்கும் அமைப்பை நிறுவி தமிழகத்திலிருந்து நூல்களையெல்லாம் வரவழைத்து இம்மாநில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரிய தமிழ்த் தொண்டாற்றுகிறார். பேராசிரியரிடம் கல்வி பயிலும் பெருமக்கள் பலரைக்  இங்கு காணும்போது பெருமகிழ்ச்சியாக உள்ளது. பெரு முயற்சி எடுத்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள  இரு பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
     நண்பர்களே தமிழர்கள் உலகம் முழுமையும் வாழக்கூடிய இனம். தமிழ் அன்றும் இன்றும் என்றும் உலக நீதியை வழங்கக் கூடிய மொழி. நாமெல்லாம் தமிழர்கள் என்பதில் பெருமையோடு நெஞ்சுயர்த்தி வாழாலாம். நம்மையும் மொழியையும் அழித்துவிடலாம் என நம் எதிரிகள் எண்ணுவர், சங்க காலம் முதல் இன்று  வரை போராடி போராடித்தான் தமிழ் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
      நம் இலக்கியங்கள் என்றும் நமக்கு பேரரணாகப் இருப்பவை. இதொ ஒரு பாடலைக் கேளுங்கள்.
     எற்றென்றும் இல்லாவிடத் தும்குடிப் பிறந்தார் 
     அற்றுத்தற் சேர்ந்தார்க்குஅசைவிடத்து ஊற்றாவார் 
     அற்றக் கடைத்தும் அகல்யா(று) அகழ்ந்தக்கால் 
     தெற்றெனத் தெண்ணீர் படும்
     பாடலின் பொருளைப் பாருங்கள். ஆற்றில் நீர்ப் பெருக்கு அற்றுப்பொய் நடப்பவர்கள் அடியைச் சுடும் கொடும் வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் தன் பால் ஊறிவரும் நீரால் உலகை ஊட்டுகின்றது, அவ்வாறு நற்குடியில் பிறந்தவர்கள் தம்மிடம் இல்லையென்றாலும் ஏற்றவர்க்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ஈதலின்  வலிமையை உலகிற்கே நம் இலக்கியங்கள் பகர்கின்றன.
ஒரு பழம் பாடல் கூறும் அறத்தை நோக்குங்கள்.

ஈயெனஇரத்தல்இழிந்தன்றுஅதனெதிர் 
                                   ஈயேன்என்றல்அதனினும்இழிந்தன்று 
                                   
கொள்ளெனக்கொடுத்தல்உயர்ந்தன்றுஅதனெதிர் 

 கொள்ளேன் என்றல் அதனினும்  உயர்ந்தன்று 
பிறரை நாடி இரங்குதல் இழிவு அதைவிட இழிவு கேடபவர்க்கு இல்லை என்று கூறுதல் அதைவிட இழிவான செயல் என்று கூறுகிறது.
நம் இலக்கியங்கள் உலக நீதியையும் அறத்தையும் உலகிற்கு வழங்கியுள்ளன. உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவர் கூறும் அறத்தைப் பாருங்கள்.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அஃது
ஈதல் இயையாக் கடை                (குறள்-230).
நம்மிடம் இருக்கும் பொருளை உலகில் நம்மோடு இருக்கும் மக்கட்கு கொடுத்து உதவும் ஈகைக் குணம் இல்லை என்றால்  அவன் சாவதே மேல் எனக் கூறுகிறார். இதை விடக் கடுமையாகக் கூற முடியாது.
நக்கீரரின் பழம் பாடல்  ஒன்று கேளுங்கள் மானிட வாழ்வியலைப்
படம் பிடித்துக் காட்டுகிறது.

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
ஒருநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கருமாப் பாக்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது தாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்தும் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே

செல்வர் என்பதன் பொருளே ஈதலே என்பதை அழகாக செறிவாக உணர்த்திகிறது. உண்பதும் உடுப்பதும் அனைவருக்கும் ஒன்றே என்று நயம் பட உணத்தியுள்ளதை அறியலாம்
பெருமக்களே நம்மிடம் ஏற்படும் தோல்விக்கு காரணமே பொதுமை இல்லாததுதான். அது உணர்வாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் வலியோர் எளியோரை எண்ணாமையே ஆகும்.
     வளம் மிக்கமலேசிய மக்களே என்றும்போல் மொழிக்கும் இனத்திற்கும் வழிகாட்டுங்கள். எம்முடைய 42 ஆண்டுகால தமிழ்ப்பணியை தங்களின் உறவுப் பாலமாக பயன்படுத்துங்கள் எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி. வணக்கம்.
    


       

No comments:

Post a Comment