Thursday, November 21, 2013

தீக்குச்சி


 கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

 கலைவளர் அறுபத்தி நான்கு
       கயமையை பொசுக்க நாமும்
 தவதீக் குச்சிகள் கொண்டே
      தீய்த்திட்டே தமிழைக் காப்போம்
கவலைகள்  சொன்ன ஆசான்
     கவனமாய் தீர்க்க நாமும்
 புவனத்து தமிழ்த்தாய் எண்ணி
      பூமியில் ஓங்கி வாழ்வோம்!

 ஒளியினை வழங்கும் குச்சி
       ஒண்டமிழ் காக்கும் வேள்வி
 பழியினைப் போக்க என்றும்
       பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்
 விழிகளின் தோழன் ஒளியே
        விண்டிடும் தீக்குச்சி வழியே
 தளிர்விடும் அறத்தைக் காக்க
        தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்!

 தீக்குச்சி தலைப்பு தந்து
        தீமைகள் கலையும் ஆசான்
 பாக்குச்சி சமைத்து நானும்
        பாதைவழி காணல் நன்றே
 பூக்குச்சி மலரைத் தந்து
        பூமணம் காத்தல் போல
 தேக்குச்சி போன்றே நாமும்
         தேந்தமிழ் காப்போம் சென்றே !

 குச்சுகள் கூடியே கூடாய்
        குவலயம் இணைந்து காப்போம்
 மெச்சிடும் நலமே காண
         மாண்புகள் காத்து வாழ்வோம்
 தச்சனும் செதுக்கும் உருவாய்
        தரணியில் மனிதம் போற்றி
 உச்சமாய் தமிழார் மேன்மை
        உயர்த்திட வாழ்வோம் வாரீர்!

No comments:

Post a Comment