Wednesday, March 28, 2012

சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(25-3-2012 அன்று மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வி,ல் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வி,ல் பங்கேற்பதை பெரும்பேறாகக் கருதுகிறேன். நிகழ்விற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பஞ்சாட்சரம் அவர்களே, திருக்குறள் ஓதிய மாணவி ஐசுவரியா அவர்களே திராவிடர் கழகதின் சார்பில் நூல் வழங்கிய முத்து, என்னைச் சிறப்பித்த செல்வராசு அவர்களே, நீதியரசர் அவர்கள் மூன்று செயற்செம்மல்கள் பழனி, சிம்சன் கண்ணன்,பற்றிச் சொன்னார்கள் மற்றுமொருவர் இங்கு இருக்கிறார் அவர்தான் பெரும்புலவர் புஞ்சையரசன்.
அப்பெருமகன் அருமைத் தந்தையார் தலைமையில் உண்ணாநோண்பு போராட்டம் நடந்தபொது முன்னோட்டப் பணிகளுக்கு தந்தையாயார் தில்லி சென்றார். அதுபோது அவரது மகன் தமிழாசிரியராகப் பணியாற்றும் கிருட்டிணமூர்த்தி இல்லத்திலேயே தங்க வைத்து இறுதிவரை தந்தையும் மகனும் ஆற்றிய தொண்டை எண்ணிப்பார்க்கிறேன். முதிர்ந்த நிலையிலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழும் பெருமகன்.

பெருமக்களே பல்லாண்டுகளாக தம் வாழ்நாள் பணியாக திருவள்ளுவராண்டை நடைமுறைப்படுத்தப் போராடி வரும் ஐவர் வழி வேம்பையனார் போன்ற காலத்திகால அறிஞர் பெருமக்களின் சிந்தனையை .கலைஞர் அரசு கொண்டுவந்தது இந்த அரசு தமிழாண்டை எடுத்தாலும் உணர்வோடு பரப்பி வரும் பெரியார் சிந்தனையாளருக்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் உங்களின் கரவொலிகளுக்கிடையில் பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன்.

வருகைதந்துள்ள ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும்எனது முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

அருமைப் பெரியார் வழிப் பெருந்தொண்டர் வேம்பையனார் எது குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டபோது சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை எனும் தலைப்பில் பேசப் பணித்தார். சென்ற மாதம் கலைஞர் தொலைக்காட்சியில் என்னைப் பேட்டி கண்ட ஊடக அறிஞர் தம்பிராசா அவர்கள் தமிழகத்தில் நடந்து வரும் சல்லிக்கட்டு விளையாட்டின் அவசியம் குறித்து உரையாடினோம். மட்டைப்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழர்களின் வழிவழி சல்லிக்கட்டுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறினேன். அப்பொது சங்க இலக்கியத்தில் உள்ள காட்சிகளை விரிவாகக் கூற இயலவில்லை இருப்பினும் அவ்வாய்ப்பை வேம்பையானார் வள்ளுவர் மன்றம் வழி வழங்கியுள்ளார்.

மானிட வாழ்வு இரு கூறுகளைக்கொண்டது ஒன்று அகம் மற்றொன்று புறம்.ஒருவனும் ஒருத்தியும் கற்பு நெறியில் வாழ்ந்து துய்க்கும் அன்பு இன்ப நெறியே அகம். கல்வி கொடை வீரம் செங்கோலாட்சி அனைத்தும் புறத்தால் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் எல்லோராலும் உணரப்படுபவை புறம். இந் நெறிகளில் அமைந்தவைகளே சங்க இலக்கியங்கள்.இவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.அவை ,முதல், கரு,உரி, என்ற முப்பொருள் அமைந்த அகப்பாடல்களாகவும் கொடை அளி செங்கோல் பற்றிய புறப்பாடல்களாகவும் பாடப் பெற்றவை . பாடல்கள் எண்ணிக்கை கொண்ட வகைகளைக் கொண்டே பதிற்றுப்பத்து, ஐங்குருநூறு அகநானூறு பு(13-31) புறநானூறு(13-31) எனப் பெயர்பெற்றன.அகப்பாடல்களில் குறுந்தொகை(4-8) நற்றினை அகநானூறு எனும் அடி வரையரையால் திட்டமிட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளன. பாவகையால் கலித்தொகை பரிபாடல் எனப் பெயர் பெற்றன.

தொகைநூல்களுள் குறுந்தொகை, நற்றினை, அகநானூறு ஐங்குறுநூறு கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன இவற்றுள் தினைவகையால் தனித்தனி புலவர்களால் பாடப்பெற்றவை ஐங்குறுநூறும் கலித்தொகையும் ஆகும்.

அகம் என்ற சொல்லால் குறிக்கப்படுவது அகநாநூறு மட்டுமே. இவை நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை நெடுந்தொகை என்றனர். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் நித்திலக் கோவை என்ற மூன்று பிரிவுகளை உடைய தனிச் சிறப்பு அகநானூற்றுக்கு உண்டு.

கலித்தொகையில் முல்லைக்கலியில் சோழர் நல்லுருத்திரன் பாடிய பாடல் நம் தமிழர்கள் வீரத்தை செப்பும் முலலை நில மக்களின் மணக்கோலத்தை நம்முன் நிறுத்துகிறார்.

முல்லை நிலத்து ஆயர்குடி மக்கள் தம்மகள் பருவமெய்தியவுடன் ஒரு காளையையும் வளர்ப்பது மரபாம். இளைஞர்கள் ஏறுதழுவி அடக்கி பின் மங்கையை திருமணம் செய்வர் என்பதை முல்லைக் கலியில் கவிஞர் பாடியுள்ளார், முல்லைக் கலியில் உள்ள சில பாடல்கள்

அவ்வழி. முழக்கென இடியென முன்சமத்து ஆர்ப்ப
வழக்குமாறு கொண்டு வருபுவருபு ஈண்டி
நறையொடு துகள்எழ நல்லவர் அணிநிற்பத்
துறையும் ஆல்மும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ (பாடல் 101- 10-15)

இளைஞர்கள் இடிமுமுழக்கமென ஆர்ப்பரித்து களத்தில் அடுத்து அடுத்து வந்து கூடினர் மணமும் தூசியும் சூழுமாறு பெண்கள் குழுமினர். மரபு வழி வணங்கி களத்தில் இளைஞர்கள் பாய்ந்தனர்.

மேற்பட்டு உலண்டின் திறன் ஒக்கும் புன்புருக்கண்
நோக்குஅஞ்சான் பாய்ந்த பொதுவனை சாக்குத்திக்
கொட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றங்காண் (101 – 15-17)

சாம்பல் நிறம் கொண்ட காளையின் கடும் பார்வைக்கு அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை கொம்பால் குத்திக் குலைக்கும் காட்சியைப்பார்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர்விரிந் தன்ன கரிநெற்றிக்காரி
விடரிஅம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்தி குலைப்பதன் தோற்றங்காண் (101 – 20-23)

காதுகளில் செம்புள்ளிகளையுடைய வெண்மை நிறக் காளை அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை தன் கொம்பின் முனையால் குத்தும் காட்சியைப் பார்

நாம் ஒரு ஏறுபுகதலை நம் கண்முன் காண்பது போன்ற உணர்வை சங்ககாலப் பாக்கள் உணர்த்துகின்றன.

இகுளை இஃதுஒன்று கண்டை! இஃதுஒத்தன்!
கொட்டினத்து ஆயர் மகனன்றோ? மீட்டுஓரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன் (103 – 32-35)

போரை விரும்பும் ஏற்றின் கலுத்தை கையால் ஒரு மாலையைப் போன்று தழுவிக்கொண்ட ஆய குடும்பத்தான் வலிமையைப்பார். காளை மீண்டும் வலிமைபெறாமல் அதனை இருகப் பற்றிக்கொண்ட மாவீரனைப் பார்.
கோவினத்து ஆயர் மகனன்றோ! ஓவான்
மறையேற்றின் மேலிருந்து ஆடித் துறை அம்பி
ஊர்வான்போல் தோன்று மவன். (103 – 37-39)

மச்சத்தை உடைய ஏற்றின்மேல் ஏறி வீற்றிருக்கின்ற ஆயன் நீர்த்துறை தெப்பத்தில் அமர்ந்து அதனை செலுத்துபவன் போலத் தோன்றுகிறான். அவன் பெருவீரன் ஏற்றைவிட்டு எளிதாக இறங்க வில்லை

அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
நைவராரா ஆயமகள் தோள்! (103 – 65-67)

காளையின் கொம்புக்கு அஞ்சும் இளைஞனை ஆயர் குலத்து மங்கை மறுமையிலும் கணவனாகக் கொள்ளமாட்டாள் என்றும் வெறுப்பாள்.

செவலைக் காளையின் திறம்:

மருப்பில் கொண்டும் மார்புறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில்இறப் புல்லியும்
தோளிடைப் புகுதந்தும் துதைந்துபா டேற்றும்
நிறைமேற் சென்றாரை நீண்மருப் புரச்சாடிக்
கொளலிடம் கொளவிடா நிறுத்தன ஏறு.
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக்
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்செகில் காணிகா!
செயிரின் குறைநாளால் பின்சென்று சாடி
உயிருண்ணும் கூற்றமும் போன்ம். (105 – 30-39)

காளையின் கொம்பைப் பிடித்தும் மார்போடு தழுவியும் தமது தோளால் கழுத்தை அகப்படுத்திப் பிடித்தும் போரிட்ட வீரர்களை ஏறுகள் முட்டி கீழே தள்ளி அடக்கவிடாமல் விலக்கின தழுவியவரையெல்லாம் குத்திக் கொன்றன அவற்றை நெருங்குவோர் இல்லை அத்தைகைய செவலைக்களை எமனை ஒக்கும்.

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா
இருபெரு வேந்தரும் இகலிக்கண் ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ(105 – 47-49)

ஏறுகளும் வீரர்களும் இரு பெரிய அரசர்கள் மாறாத பகைமையோடு தம்முள் எதிர்த்துப் பொரும் போர்க்களத்தை ஒக்கும்.

இப்பேற்பட்ட பெருமையுடைய ஏறு தழுவவதால் தமிழர்களின் மறம் நம்மை மெலிர்க்க வைக்கிறது. இத்தணை சிறப்புடைய சல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்யாமல் அனைத்து உதவிகளும் செய்து முறைப்படுத்தி தமிழர்களின் வீர விளையாட்டாக உலகம் முழுமையும் காணும் தமிழர் விளையாட்டாக முறைப்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment