Thursday, April 24, 2025

 

தாயென உச்ச நீதி மன்றம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

நீதியின் உச்சம் கண்ட 

நிந்தனை ஆளுனர் முடக்கம்

ஊதியே உரிமை முடக்கும்

உவகையின் தீர்ப்பு அன்றோ

மாயமாய் உரிமை மாய்க்கும் 

மமதையின் ஆணவச் செயலை

தாயென உச்ச மன்றம்

 தகர்த்ததே மாநிலம் காத்தே!1

 

 மக்களின் சட்ட மன்றம்

மாநில மக்கள் காக்க

தக்கன உறுப்பினர் ஒப்ப

தகுதியாய் சட்டம் இயற்றித்

ஒன்றிய ஆளுநர் கைக்கே

               மின்னலாய் அனுப்பி வைத்தும் 

தன்னல அரசியல் செய்த   

தவறினை மாய்த்த தீர்ப்பு

 

 அடுக்கிய திட்டம் எல்லாம் 

ஆளுநர் அவையில் முடக்கம் 

தடுத்திட மீண்டும் மீண்டும் 

திருப்பியே அனுப்பல் என்றே 

முடக்கிடும் மக்கள் திட்டம் 

முனைவது ஆளுநர் செயலா 

தடுத்திட நீதி மன்றம்

தகுதியாய் தந்த தீர்வு!

 

 

 உச்ச நீதி மன்றம்

 உரிமையாய் தந்த தீர்ப்பு

 அச்சமே போக்கி  நன்றாய்

      அரசியல் சாசனக் காப்பு

இந்திய மாநிலம் எல்லாம் 

இதயமாய் நோக்கும் வண்ணம் 

வந்திடும் மாநில சுயாட்சி 

வளமிகு தீர்ப்பே தொடர்க!

No comments:

Post a Comment