Thursday, December 31, 2015

கனடா டோரண்டோ நகரில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவரின் கற்றபின் நிற்க நூல் வெளியீட்டு விழா




(கனடா டோரண்டோ நகரில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவரின் கற்றபின் நிற்க நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)                         
கனடா டோரண்டோ நகரில் அரும்பாடு பட்டு கற்றபின் நிற்க நூலின் வெளியீட்டு விழா  நடத்தும் அருமைச் சகோதரர் உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களே நிகழ்வுக்கு தலைமை தாங்கும் சோதிசெல்லா அவர்களே முதுபெரும எழுத்தாளர் நவம் அவர்களே வருகை தந்துள்ள ஈழத் தமிழ் நெஞங்க்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். கற்றபின் நிற்க நூலை சிறப்பாக ஆய்வுரை வழங்கிய கீதம் வானொலி கணபதி இரவீந்திரன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி.
     தங்கள் முன் இன்றுநிற்பதற்குக் காரணம் அமெரிக்காவில் வாசிங்க்டன் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம் மாநாடு. தமிழகத்திலிருந்து 20 பெருமக்களோடு நான் நான் வாசிங்டன் நகருக்கு வந்தேன். அதுபோது அண்ணன் உதயன் லோகேந்திரலிங்கம் தலைமையில் கனடாவிலிருந்து ஒரு குழுவை அழத்துவந்தார்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் துரைராசா அவர்க்ளில் ஒருவர். அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.  இருபெரும்க்களும் மாநாட்டில் அரியொரு உரை நிகழ்த்தி மாநாடு சிறக்க பங்கேற்றமையை போற்றி மகிழ்கிறேன்.
     அண்ணன் லோகன் அவர்கள் தமிழகம் வந்திருந்தபோது என் கற்றபின் நிற்க நூலைக் கொடுத்து இந்நூல் கனடாவில் வெளியீடு காணவேண்டும் என்ற அவ்வாவினைத் தெருவித்தேன். அண்ணன் அவர்கள் நான் தமிழகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே தொலைபேசியில் பேசி நாள் இடம் அனைத்தையும் உறுதிப்படுத்தி முகநூலிலும் உதயன் இதழிலும்  பெரும் விளம்பரப் படுத்தினார்கள். உதயன் அவர்கள் நான் மட்டுமல்ல உலகிலிருந்து வரும் தமிழ்ப் பெரும்க்களை பாராட்டும் நட்பின் நாயகர்.
     மாநாடு வாசிங்டனில் முடித்து அமெரிக்கா வாசிங்க்டனிலிருந்து கனடா டொரண்டோவிற்கு தன் மகிழ்வுந்திலேயே என்னை இங்கு அழைத்துவந்துள்ளார்கள். அமெரிக்கா சாலைகளில் நாங்கள் பயணிக்கும்போது ஆனந்தக் களியாட்டம்தான். நீண்ட பரந்த சாலைகளும் எங்கு நோக்கினும் இயற்கைத்தாயின் எழிலும் எம்மை ஆட்கொண்டன. உதயன் லோகன் கவித்துவம் உடைய கவிநெஞ்சர். ஒவ்வொரு இயற்கைக் காட்சியின்போதும் நாயகாராவைத் தாண்டும்போதும் இவருடைய கவியருவியும் தலைகாட்டும்.
     நான் உலக நாடுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பே கற்றபின் நிற்க எனும் இந்நூல். பல்வேறு நாடுகளில் அருந்தமிழ்த் தொண்டாற்றும் பெருமக்களின் அருமை பெருமைகளைப் பதிவு செய்துள்ளேன். தமிழ் இலக்கியம் சமுதாயம் இன உணர்வு எழுத்தாளர்கள் என பல்வேறு கோணங்களில் இந்நூல்  பறைசாற்றும். எமை பேச அழைத்த பெருமக்கள் பெருமையுறும் வண்ணம் நன்கு தாயாரித்தபின்தான் பேசச் செல்வேன் அந்தப் பேச்சுக்களும் அந்நிகழ்வை அரும்பாடுபட்டு நடத்தியர்களையும் உலகறியச் செய்வதுதான் இந்த கற்றபின் நிற்க நூல் என பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
     மலேசியா. சிங்கப்பூர் கனடா அமெரிக்கா என பல நாடுளில் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. திரைப்படங்களே தமிழர்களை ஆளூகிற நேரத்தில் இலக்கியமும் உலகை வலம் வருவது எண்ணி மகிழத்தக்க ஒன்று. கனடாவில் தமிழ் இதழ்களும் கலைகளும் தமிழ்ப் பள்ளிகளும் வானொலி தொலைகாட்சி  கண்டுபெருவகை கொள்கிறேன். சுகார்பொரோ பகுதியில் சென்றால் எங்கு நோக்கினும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் கண்டு பேராணந்தம் கொண்டேன்.
     சென்றமுறை நான் இங்கு வந்தபோது நகராட்சி தேர்தல் நடைபெற்றது. அப்பொது இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கும் சகோதரர் சோதிசெல்லா மற்றும் நம் தமிழ்ப் பெருமக்கள் பலர் போட்டியிட்டனர் அதுபோது நம் மக்களின் சன்நாயகப் பங்களிப்பைக் கண்டேன்.தற்போது  இங்கு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினாராக உள்ள இரதிகா சிற்சபேசன், செந்தில், மற்றும் பல தமிழ்ப் பெருமக்கள் கனடாவின் மூன்று கட்சியிலும் போட்டியிடுகின்றனர். சுகார்பரோ தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சிகளும் வேட்பாளர்கள் தமிழர்களே. இந்த சனநாயகப் பங்களிப்பில் நம் தமிழ்மக்களின் உள்ளார்ந்த உணர்வைக் கண்டு மகிழ்கிறேன். மக்களாட்சியின் மாண்பை உலகுக்கு உணர்த்தும் கனடா நாட்டை போற்றிப் பாராட்டுகிறேன்..
     ஈழத்து மூத்த எழுத்தாளர் நவம் அவர்களின் நூலும் வெளியீடு கண்டுள்ளது. ஐயா அவர்களை சென்னையிலேயே கண்டு அளவலாவிய பேறுபெற்றுள்ளேன். அந்தக் காலத்திலேயே இலங்கையிலிலிருந்து தமிழகம் வந்து பயணக்கதையாக தந்துள்ளார்கள். அந்தக் கால தமிழகத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். பெருமகனாருக்கு என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.
     தமிழன் என்ற இனத்தை உலகிற்கு உணர்த்திய பெருமை ஈழப் போராட்டத்திற்கே உண்டு. ஈழ மக்களின் ஈகம் என்றும் நிலைத்து நிற்கும். காலத்தின் கோலத்தால் ஈழத் தமிழர்களிள் புலம், பெயர்ந்த நாடுகளில் வாழலாம். அவர்களுடைய உணர்வு எங்கும் தமிழ் தமிழர் பெருமையைக் காக்கும் பேரரணாக உள்ளது. தாங்கள் அளித்துள்ள ஈகம் வீண் போகாது காலப்போக்கில் கட்டாயம் தமிழீழம் பிறக்கும். பிறக்கும் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

2 comments:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete