Tuesday, March 19, 2024

 

பாட்டினில் பாடும் பாவாய்

பார்புகழ் நீரில் பயணம்.

தமிழ்மாமணி   வா.மு.சே.திருவள்ளுவர்

எழுச்சியின் வளர்ச்சி எங்கும்

      எழுந்திடும் துபாய் நாட்டில்

பழுத்திடும் பேரிச்சம் பழமே

       பற்றிடும்  உலக ஈர்ப்பே

தொழுதிடும் மெக்கா மதினா

       தொடர்ந்திடும் மக்கள் வெள்ளம்

 அழகுயர்  பரந்த மசுதீ

         அருகுள அபுதாபி விந்தை  

 

 துபாயின் கேளிக்கைக் கூத்து

        தரணியின் மாந்தர் வருவர்

அபாரமாய் நீரின் ஆட்சி

        ஆற்றினில்  வளமாய்ப் பொங்கும்

 திறமான நாவாய்  ஆற்றில்

         திகழொளி உமிழ்ந்தே செல்லும்

 உறவென நண்பர் சேர்ந்தே

         உலகுயர் நீரில் பயணம்

 

  ஆற்றினில் எழிலாய் செல்லு,ம்

        அணியென கப்பல் காட்சி 

பேற்றினை உலக மக்கள்

        பெற்றிமை ஆடல் பாடல்

வேற்றுமை  இல்லா இசையில்

     வேண்டியே  சூழ்ந்தே மகிழ்வர்

 ஆற்றினில் கவிஞன் யானும்

        ஆனந்த நடனம் கொண்டேன் 

 

 ஊட்டிடும் உணவு எல்லாம்

       உலகுயர் மக்கள் உண்பர்

 நாட்டிடும் மதுவின் போதை

       நாளெலாம் குடித்தே களிப்பர்

 ஓட்டிடும் கப்பல் உள்ளே

      ஒன்றியே உவந்தே ஆட்டம்

 பாட்டினில் பாடும் பாவாய்

         பார்புகழ் நீரில் பயணம்.

No comments:

Post a Comment