Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Sunday, April 1, 2012

அவலம் அன்றோ

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னையில் ஆசிரியை கண்டித்ததற்காக மாணவன் கொலை செய்த கொடுமை கண்டு எழுதியது)

கல்வியை வணிகம் ஆக்கி
கருத்துமே கனியா வண்ணம்
நல்வழிப் படுத்த எண்ணா
நாட்டினர் இழிவுச் சிந்தை
பல்லூடகம் மோசம் காட்டி
பாதகம் கண்ட மோசம்
வெல்கதிர் மாணவன் இங்கே
வெட்டிய ஆசிரியை அந்தோ!

மழலையர் வளர்ப்பில் நம்மோர்
மாசிலா அன்பைத் தேரார்
உரம்தரும் தமிழக மண்ணில்
உலகினர் காணும் வேசம்
பலம்தரும் என்றே எண்ணி
பாசத்தை மறந்த போக்கால்
நலம்நிறை ஆசிரியை இங்கே
நசுங்கிடும் அவலம் அன்றோ!

கண்டிப்பு என்னும் வேலி
கருணையே துளியும் இன்றி
கொண்டிடும் வேக வீச்சால்
கொலைக்களம் சென்ற நாசம்
தண்டிக்கும் முறையை இன்றும்,
தலைமுறை ஏற்கா மாற்றம்
விண்டிடும் மாணவர் தம்மில்
விதைத்துள மோசம் தானே!

நல்லுள பெற்றோர் பெற்றார்
நாடுள சுற்றம் சூழ்ந்தார்
பள்ளியின் மேன்மை கண்டே
பாங்குடன் சேர்ந்தும் வென்றார்
உள்ளத்தால் சமூக மேன்மை
உன்னதம் மறந்த தன்மை
கள்ளமில் பிஞ்சு இன்றோ
கயமையர் சிறையில் அன்றோ

Wednesday, March 28, 2012

கொடும் பாதக இலங்கை வீழ்க!

கவிமுரசு. வா.மு.சே.திருவள்ளுவர்

மனித உரிமை மன்றம்
மதிப்பாய் ஐ.நா தன்னில்
துணிந்து அமெரிக்கா நன்றாய்
தூக்கி நிறுத்தும் வாய்ப்பை
இனிது இந்தியா தம்மை
இளித்த வாயோர் நம்மோர்
பணிய இலங்கை இன்றே
பதமாய் இணைந்தே வெல்க!

போரின் நாசச் செய்கை
பொதியாய் மக்கள் கொன்றார்
வேரின் இந்தியா இங்கோ
வேதனை ஏதும் இல்லை
பாரில் நாடுகள் கூடும்
பயங்கரச் செயலை எண்ணி
பாரே கண்டனம் செய்யும்
பாதக இலங்கை வீழ்க!

படுகொலை கண்டும் பதறா
பாவியர் வாழும் மண்ணாய்
கெடுமதி நன்றே செய்த
கேடும் விதைத்த மோசம்
நடுங்கும் கொலைகள் செய்த
நாச இலங்கை நேயம்
விடுக இந்தியத் தாயே
விரைந்து கொலைக்களம் ஏற்று!

மனித நேயம் காக்க
மாண்பாய் தீர்மானம் வெல்க
துணிந்து நாடுகள் ஏற்று
திறமாய் கண்டனம் செய்க!
பிணியாம் இராச பக்சே
பிடறி தெறிக்க ஓட
கனியும் அந்த நாளை
காலம் இணைந்தே வெல்க!

Friday, January 6, 2012

பொன்விழாக் காணும் நாயகன் உத்தமன் சத்தியன் வித்தகன் உன்னத ஈகையன் கவியரசன் வாழிய வாழியரோ


பெருங்கவிக்கோ

வாழிய வாழிய வாழியவே – உயிராம்
மாமகன் மதிமகன் குடிவாழிவித்த கொடைமகன் கவியரசன் (வாழிய)
ஆழிசூழ் உலகில் அண்ணன் தம்பிகள் தங்கை வாழத்
சூழினும் இடர்பல துணாஈநின் காப்பவன் கவியரசன் (வாழிய)

அம்மா சேதுமதி ஆணையை அனுவும் தவறாதவன்
அத்தாயே தன்வழி காட்டியாய் அகத்தாறு வாழ்பவன்
தம்மால் முடிந்ததை தக்கார்க்கு உதவும் சால்பினன்
தனைஇழந்தும் தன்குடி உயர்த்திய சான்றோனிவன் (வாழிய)

தந்தைசொல் மிக்கதோர் மந்திரமில் எனும் தகைமொழி
தனைப்போற்றினும் இணைவாதமும்ம் தாக்கிட உண்மை தேர்பவன்
உந்திவாழும் முயற்சியால் தன்னையே உருவாக்கி ஆள்பவன்
உத்தமன் சத்தியன் வித்தகன் உன்னத ஈகையன் கவியரசன் (வாழிய)

சமுதாய உணர்வுடை தந்தைவழி நடப்பவன் கணினியில்
தரணியை உயர்த்திடும் தமிழ்வழி உயர்த்திடும் தாயவன்
அமுதுதான் கிடைப்பினும் அதையும் பிறர்க்கு பகிர்ந்தீந்து
அகிலமனித நேயம் அறம்வளர் ஆக்கங்கொள் கவியரசன் (வாழிய}

இறையருள் எட்டுத்திசையும் தாள்பதித்த தந்தைவழி
எம்தமிழ் தமிழினர் ஏற்றம்பெற உழைப்பவன்
நன்று ஐம்பதகவை கண்டனன் நாநிலம் ஓங்கிடவே
நயன்வினை பயன்வினை நாயகனாய் நனிசெயல் கவியரசன் (வாழிய}

கணவன் வழியே தன்வழிஎனக்கருதும் கவியரசன் நன்மனைவி
கவின் தமிழ்நடைப்பாவை காப்புத்தாய் முத்துமாரி
மணவினை நாள்போல் மனம்கிழ்ந்து உன்உளமுளார்
வானகமும் வையகமும் வாழ்த்துமாறுஉன்பணிதொடர்கவேகவியரசே(வாழிய}

அப்பாஎன் சுமையையும் அன்புறுக் கவியே நீ தாங்கினாய்
அன்னையின் மனமென்றும் உன்னையே போற்றி மறைந்தனளே
முப்பால் தமிழ்க்குடிக்கும் முன்னுரையாய் திகழ்பவனே
மூத்துமூத்து என்முதுமை விழுதாகி யாத்துக் குழிமண் என்னுடல் உன்கைபோடவெ கவியரசே நீ (வாழிய}

ஒளிஉள்ளவரை உந்தொண்டுகள் ஒங்கிட வாழியரோ
உடன்பிற்ப்புகள் உறவுகள் உரிமை நட்புகள் உவந்திட வாழியரோ
களிமல்கும் உலகின்பம் உலகுறவு உலகுரிமை போற்றியே வாழியரோ
கலைமல்கும் குடிப்பெருமை காவல் தெய்வங்கள் காத்திட வாழியரோ
கவியரசே (வாழிய}

தேடித்தேடி கோடிக்கோடி திரவியம் தேடுக தேடுக தேடுகவே
தேடியபொருளை திசைத்தமிழ் ஓங்கிட நாடியே வழங்குகவே
பாடிய உந்தந்தை பாட்டெலாம் நனவாக அடித்தளம் ஆக்குகவே
பாரெலாம் வாழ்ந்திட நீரலையினும் நெடிநாள் வாழிய வாழிய
கவியரசன் வாழிய வாழியவே (வாழிய}

பல்லாண்டு வாழ்க நல்லாண்டு வாழ்க வாழ்கவெ
வெல்லாண்டு நூறாண்டு மேலாண்டு கவியரசன் குடி வாழிய வாழியவே
(வாழிய}

Saturday, November 19, 2011

அண்ணா நூற்றாண்டுக் கோயில்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

அறிவுக் களஞ்சியத் தேராம்
அண்ணா நூற்றாண்டுக் கோயில்
செறிவுத் திறனைத் தூக்கல்
செந்தமிழ் மக்களைச் சாய்த்தல்
பரிவுப் பொருளைத் தந்தே
பாதகம் விளைத்தல் நன்றா
உரிமை நூலகம் காத்தல்
உலகுள கருத்தைப் போற்றல்!

குழந்தைகள் மருத்துவம் பேணக்
குறையிலா இடத்தைத் தேர்க
கழனியை மாற்றவே சாடும்
கற்றவர் வாழும் நாட்டில்
தலமுயர் நூலகம் மாற்றல்
தமிழர்கள் புதைத்தல் அன்றோ
பலமதாம் அறிவுத் தேரை
பந்தமாய்க் காப்போம் இன்றே

கண்ணிலா மக்கள் காண
கருத்து ப்ரய்லி உண்டு
மண்ணுல நூல்கள் எல்லாம்
மகத்துவ நூலகம் உண்டு
எண்ணிலாக் கருத்தைக் காண
இணையதள வாய்ப்பு உண்டு
தன்னேரில் அரங்கம் எல்லாம்
தகுதியை அரசே மாய்த்த(லா)?

ஆசியா முதன்மைக் கண்ட
அருமை நூலகம் ஈதே
மாசிலாச் செயலச் செய்த
மாண்பமை கலைஞர் சிந்தை
தூசியைத் துடைத்தல் விட்டு
துன்பத்தைத் தருதல் நன்றோ?
காசிலா எழ்மை மக்கள்
கதறல் உம்மைச் சாய்க்கும்!

Friday, November 18, 2011

கொலைக்குக் கொலையா

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

மரணம் என்பது தீர்வா
மனங்கள் எண்ணுதல் முன்னே
சரணம் பாடும் கூட்டம்
சட்டம் போடுதல் நன்றா!
புராணம் பாடும் நாட்டில்
புண்ணியம் எனபது பொய்யா
தருணம் உயிரைக் காக்க
தக்கவர் இருந்து சாய்ப்போம்!

தண்டனை இருபத்தும் மேலே
தக்கோர் துன்பம் கண்டும்
கொண்டிடும் அவலம் சாய்க்கா
கொடுமை மரணம் ஏனோ?
எண்டிசை உள்ள நாட்டுள்
ஏற்கா மரண ஓலம்
அன்புள காந்தி மண்ணில்
அகிம்சை தவிர்த்தல் ஏனோ?

தாயின் கதறலைப் பாரீர்!
தந்தையார் பிள்ளை எங்கோ
சேயின் உறவைக் காணா
சோதனை மரணத்தின் மேலே
பாயிரம் பாடும் நாட்டில்
பண்புதான் கொலைக்குத் தூக்கா?
தாயினும் கார்த்தி கேயர்
தண்டனை நெறியைச் சொன்னார்!

இராசிவ் உன்னதத் தலைவர்
இறப்பில் துன்பியல் கண்டோம்
இறவாப் புகழைப் பெற்ற
இராசிவ் காந்தி பேரால்
துறவிக் கோலம் பூண்ட
தூய்மை அனனை சோனியா
கரையும் தமிழர் உள்ளம்
கனிந்தே தண்டனை போக்கும்!

Thursday, November 17, 2011

பரமக்குடி சோகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

சாதிப்பேயை தொடராய் நாட்டும்
சாத்தான் மாய்வது எந்நாள் ?
ஊதிஊதி மனிதம் சாய்த்து
மாண்பை வீழ்த்துதல் ஏனோ ?
நாதியற்ற தமிழன் இங்கும்
நசுக்குதல் வீழ்ச்சி அன்றோ
மாதிமிர் துப்பாக்கிச் சூடு
மமதை சாய்வது எந்நாள்?

கூடிய உணர்வின் மாட்சி
குதறித் தள்ளுதல் ஏனோ?
தேடியே துரத்தி மண்ணில்
தேகம் சாய்த்தல் நன்றோ?
நாடிடும் தலைவர் வேட்கை
நாடுள அனைவர்க்கும் ஒன்றே
சாடியே ஒருதலை வேசம்
சாமான்யரை நசுக்கும் மோசம்

கொன்றே சாய்த்த பின்பும்
குலை நடுங்காதது ஏன்/ஏன்
நன்றே பரிவுக் காசும்
நயம்பட வழங்காமை ஏன்?ஏன்?
கொன்ற உயிர்கள் காண
கொலைக்களம் சொல்லமை ஏன்?ஏன்?
மன்றம் தமிழன் ஆட்சி
மறந்த சோகம் அன்றோ!

பரமக்குடியின் தென்னகச் சோகம்
பரவாது காக்க வேண்டும்
வீறுள தமிழர் செர்ந்தே
வியத்தகு எழுச்சி வேண்டும்
சோரமாம் சாதி சாய்த்து
சமத்துவம் பேண வேண்டும்
வீரம்வீவேகம் நமக்குள் வேண்டாம்
வீணரை சாய்போம் சேர்ந்தே!

Tuesday, July 12, 2011

வெல்க சமச்சீர் கல்வி


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னை 23-6-2011அன்று பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கவியரங்கை
தொடங்கி வைத்த தொடக்கப் பா]

மூத்த தமிழ் வாழ்வின்
முதன்மை மண்ணின் மக்காள்
காத்த தமிழ் நாட்டின்
கனிந்த கண்மணி மக்காள்
பூத்த தமிழ் நெஞ்சம்
புலர்ந்த தமிழ் நூல்கள்
ஏத்தும் எம்மொழியின் பேறே
ஏற்க என்றன் வணக்கம்|

பாக்கம் தமிழன் இவன்
பண்பார்ந்த தமிழ் அன்பன்
ஊக்கத் தமிழ் வார்ப்பின்
உயர்ந்த கவி நெஞ்சன்
பூக்கும் தமிழ்ப் பூங்கா
பூவைத் தமிழ் அங்கம்
காக்கும் தமிழர் மானம்
கவிஞனுக்கு என் வணக்கம்|

தேக்கும் மரபு வானம்
தேர்ந்த கவி ஊற்று
ஆக்கும் புயல் காற்றாம்
அரவணைக்கும் தலைமை நெல்லை
போக்கித் தமிழ்ப் பகையை
பொழிவாய் தமிழ் ஆளும்
காக்கும் இராமச் சந்திரர்
கவிவாணர்க்கு என் வணக்கம்.

வந்தோரை ஆள வைத்து
வறியாராய் தினம் நிற்கும்
சொந்தமதை உதறித் தள்ளி
சுகமாகக் கைகள் ஏந்தும்
விந்தைக் குணம் என்றால்
வின்வளர்ச்சி வரும் எங்கே
மந்திக் குணம் ஏற்று
மானமின்றி நிலம் வாழ்வோ

பெரியார் கொள்கை தம்மை
பேணியே ஏற்கா தன்மை
உரியாரை உணராப் போக்கால்
உள்ளதை இழந்து நின்றான்
பொரியை ஊதுதல் போன்றே
பொல்லாதார் கையில் உள்ளான்
நெறிமறந்த நம் மக்கள்
நிலையாதல் என் நாளோ

பாவேந்தன் தோன்றி நம்மின்
பகுத்தறிவு பாவைத் தந்தார்
நாவேந்தும் கலைஞர் நன்றாய்
நயத்தகு சமச்சீர் கண்டார்
பூவேந்தும் மழலைச் செல்வம்
புகழேந்தும் கல்வி ஒன்றாய்
சாவேந்தல் முறையோ தானா
சிந்திப்பீர் செயலாய்க் காண்பீர்

கோபுரத்து வாழும் பிள்ளை
கொட்டடியில் வாழும் கிள்ளை
மாபுகழின் கல்வி தம்மை
மாசமச் சீராய் கற்றல்
நாபுகழ் கலைஞர் சிந்தை
நசுக்குதல் முறையோ சொல்வீர்
பாபுகழ் அறிஞர் கண்ட
பயன்சமச்சீர் வீழ்தல் நன்றோ

சாத்திரம் சடங்கு மாயம்
சலிக்காமல் காணும் ஆட்சி
கோத்திரம் கோயிலில் வீணாய்
கோடிகோடி கொட்டும் ஆட்சி
காத்திடும் மழலைச் செல்வம்
கல்வியில் தடைதான் ஏனோ
மாத்திறக் கல்வி தன்னை
மதியாமல் மாய்த்தல் நன்றோ

கல்வி நிலையம் எல்லாம்
கயமைக் கீழோர் கையில்
கொள்ளை நிலையம் என்றே
கோடிகோடி சேர்க்கும் நாளில்
பள்ளீச் சமச்சீர் சாய்த்து
பருவத்தே பம்மாத்து காட்டி
கல்விப் பயனை ஏழ்மை
கிட்டாமல் செய்யும் மோசம்

எதுதமிழர் உரிமை என்றே
எழுச்சிக் கவிஞர் மக்காள்
முதுகு தெறித்து ஓடும்
முத்தமிழ்க் கவியைத் தருக
சதிவலை தகர்த்து எரிய
சமத்துவ சமச்சீர் காண்க
ஆதித்தமிழர் கவிய ரங்கை
ஆர்தெழுந்தே தொடங்கு கின்றேன்

தொடங்கிய முழக்க நாதம்
தொடர்ந்திடும் செயலாய்க் காண்க
முடங்கிய நம்மின் வீரம்
மூர்க்கமாய் கிளர்ந்து எழுக
அடக்கிய கூட்டம் ஓய
ஆவேச எழுச்சி கொள்க
தொடங்கிய சமச்சீர் காண
தொழரே வெற்றி காண்போம்|

Friday, July 1, 2011

மண்ணில் உன்நிலை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில் புதைவது மாற்றமா
சீற்றம்இன்றிதோழா
சிறுமை ஏற்பது மாற்றமா
நாற்றம்இன்றிதோழா
நலமாய் மகிழ்வது மாற்றமா
தேற்றுவோர்தம்மைத்தோழா
தெருவில் தள்ளுதல் மாற்றமா


வெற்றுக்கூச்சலைத்தோழா
வெறியாய்க் கொள்வது மாற்றமா
உற்றஉன்மொழிதோழா
உதறத் துடிப்பது மாற்றமா
கற்றஉன்வழிதோழா
கதற வைப்பது மாற்றமா
முற்றும்முழுமதிதோழா
மூடியே வைப்பது மாற்றமா

பற்றிலான்வாழ்வைத்தோழா
பகடியம்செய்வதுமாற்றமா
வெற்றியின்மாளிகைதோழா
வேரோடுசாய்ப்பதுமாற்றமா
கற்றவர்கல்வியைத்தோழா
கடிந்து முடிப்பது மாற்றமா
உற்றவர்உரிமையைத்தோழா
உலகில் மாய்ப்பது மாற்றமா

கூற்றுவன்மடமைமூடம்
குனிந்து ஏற்றதன் சோகம்
வேற்றுமைசோதிடக்கயமை
வேதனைதந்தமாயம்
நாற்றங்கால் பகுத்தறிவுக் கொள்கை
நயத்தகு பெரியார் எங்கே
மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில்உன்நிலைஎன்ன?

Wednesday, March 16, 2011

கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !


கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

புறநாநூற்றுப் பாவின் மெய்மைப்
புலியை ஈன்ற தாயே
மறுவிலா மாசிலா மாவீரன்
மண்ணில் ஈன்ற பார்வதி
வெறுவாய் மெல்லும் நம்மோர்
வெட்டியாய் வாழ்வோர் தம்மில்
உருவிலா எம்மின உருவாம்
உன்னதத் தலைவனின் தாயே !

உலகுள தமிழர்கள் கலங்கி
உத்தமக் கருவறை போற்றும்
பழுதிலா ஈழம் காணா
பார்வதித் தாயும் சாய்ந்ததே
விழுதுகள் ஆயிரம் விதைத்த
வீரத்திருமகன் போர்க்கள மண்ணில்
தொழுவோம் தெய்வீகத் தாயே
தொல்குடி நாளும் எண்ணுமே !

ஈழத்துப் போரினில் மாய்ந்த
இன்னுயிர் மக்கள் பின்னே
தாழாப்பெருமைத் தலைவரின் தாயின்
தன்னுயிர் மாத்தவம் ஈந்ததே
காலம்காலம் கண்போல் காத்த
கணவனை இழந்தாய் களத்தில்
ஓலக்குரல் மக்களின் மக்களாய்
ஒண்டமிழ்த் தாயும் சாய்ந்ததே !

மீளாத்துயரைத் தந்த கயவன்
மிருகராச பட்சே ஒழிக
காலம்காலம் போற்றிய தாய்மை
கயமைச் சிங்களம் சாய்க
வேழக்கூட்டம் தமிழாராம் எம்மின்
வேதனை மாய்ந்தே மீக்கெழ
காலஅமுதத் பார்வதித் தாயே
கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !

Wednesday, December 29, 2010

பொன்மன நல்லி வாழ்க


பொன்மன நல்லி வாழ்க

பத்மசிறீ நல்லி குப்புசாமிசெட்டியார் அவர்களின் 70ஆம்
அகவையை முன்னிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடியது

பட்டுவை நெய்து நம்மின்
பெருமையை நிலைக்கச் செய்தோன்
மட்டிலா நல்லி மேன்மை
மண்புகழ் பரவச் செய்தார்
எட்டிடும் சிகரம் நோக்கி
ஏறுபோல் உயர்ந்து வென்றார்
பட்டென உடலின் பொட்டாய்
பொன்மன நல்லி வாழ்க!

புன்னகை மன்னன் பாரில்
புன்னகை பூக்கச் செய்வோன்
கண்ணென தொழிலைப் போற்றி
கண்டிட்டார் வணிக ஏற்றம்
தன்னரும் வாழ்வின் மேன்மை
தகுதியாய் நூலாய்த் தந்தோன்
புண்ணியப் பணிகள் ஆற்றும்
புண்ணிய நல்லி வாழ்க!

உலகெலாம் பறந்து நம்மின்
உயர்தொழில் உயர்த்தும் நல்லி
பலமெலாம் பகிர்ந்து நல்கும்
பண்புள நெஞ்சர் நல்லி
நிலமெலாம் கருணை ஊற்றை
நிகழ்த்திடும் தூயோன் நல்லி
நலமெலாம் இணைந்தே பாரில்
நனிபுகழ் நல்லி வாழ்க!

எழுபதைக் கண்டார் நம்மின்
எழுச்சியாய் வாழ்வில் நின்றார்
தொழுதிடும் சேவை வாழ்வில்
தொண்டராய் என்றும் உள்ளார்
பழுதிலா நல்லி மேன்மை
பார்புகழ் மென்மேல் ஏற்று
விழுதுபோல் அறங்கள் தாங்கும்
வியத்தகு நல்லி வாழ்க!

Sunday, October 3, 2010

காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்



காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மாமன்னர் இராச ராசன்
மதிநுட்ப தமிழர் வேந்தன்
தேமதுரத் தமிழின் மேன்மை
தேசமெலாம் வணங்கும் சோழன்
பூமணத்து நம்மின் மக்கள்
புத்தமுதக் கலையின் உச்சம்
காமணக்கும் கற்கோயில் கண்ட
காலத்தால் அழியா சோழன்

வீரத்தால் தம்மின் நாட்டை
விண்ணளவு ஏற்றி வைத்தார்
சோராத வேங்கை நாடு
சொந்தமாக கங்கை பாடி
வேராக தடிகைப் பாடி
வேந்தனது நுலம்ப பாடி
மாறாத குடமலை ஈழம்
மதிகொல்லம் கலிங்கம் கண்டான்

பெரியகோயில் லிங்கம் பாரில்
பேரெழுந்த வடிவம் என்னே
உரியநல் கோபுரத் தோற்றம்
உன்னத வானை முட்டும்
இருநூற்றுப் பத்தும் ஆறும்
இறுமாந்த எழிலைக் காட்டும்
கருங்கல்லில் அடுக்கின் ஏற்றம்
கவின் பதிமூன்று அன்றோ

ஆயிரத்து ஆண்டின் முன்னே
அகிலத்தை ஆண்ட வேந்தன்
மாயிரத்து ஐப்பசி திங்கள்
மாமண்ணில் உதித்த மன்னன்
பாயிரம் அற்றை நாளில்
பாடிய கரூர் தேவன்
மாஇனத்து வேந்தன் வாழ்வை
மாத்தமிழில் செதுக்கி உள்ளான்

தகதகக்கும் ஐம்பொன் மேனி
தவவேந்தன் இராச ராசன்
புகழ்காத்த உலகமா தேவி
புண்ணியச் சிலையின் தோற்றம்
அகமதாபாத் அருங்காட்சி மன்றம்
அடங்கியுள இணையர் தம்மை
மக்த்தான முயற்சி கண்டு
மாக்கோயில் உள்ளே காண்போம்

மெய்கீர்த்தி தம்மின் வாழ்வை
மேதினிக்கே தந்து சென்றோன்
பொய்யறியா நம்மின் மக்கள்
போற்றிடும் வரலாறு தந்தோன்
செய்வதை உணர்ந்து வெல்லும்
செயல்வல்லார் கலைஞர் வேந்தர்
மெய்வடிவாய் ஆயிரம் ஆண்டை
மேற்கொண்டார் நீடு வாழ்க

Thursday, August 19, 2010

நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி

நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


புத்தனைக் கண்ட தில்லை
புரியுமன ஞானத் தேடல்
சித்தமுடன் உலகை ஆளும்
சீராளன் வழியில் இகேதா
வித்தகன் விரிஉலக மன்றம்
விரிவாக்க கவிச் சித்தன்
நித்தமும் அமைதி வேண்டி
நிதம்பாடும் வானம் பாடி

கவிதையாம் களத்தில் கண்டார்
கவிஞானி சீனீ வாசன்
புவித்தலத் தொடர்பை நாட்டி
புத்தெழுச்சி இகேதா தந்தார்
தவித்தாரைத் தாங்கி நிற்கும்
தலம்வெல் பத்ம நாபர்
குவித்தபுகழ் பெருங்க விக்கோ
குவலயம் கண்ட இகேதா

கொத்துக் கொத்தாய் மாய்ந்த
கொடுமை நாகசாகி கிரோசிமா
செத்ததுவும் பவனி வரும்
செழுமைவளர் சப்பான் மண்ணில்
புத்தமுதாய் வந்த அண்ணல்
புரிஞான வள்ளல் கோவாம்
எத்திக்கும் புகழ் ஓங்கும்
ஏந்தலாம் இகேதா வாழி

போங்சாய் வளர் நுட்பம்
பொதியும் தனிச் சான்றாய்
எங்குமே பரவி நிற்கும்
எழுச்சியாம் சோகா கக்காய்
தங்குதடை துன்பம் எல்லாம்
தகர்த்துஎழும் இன்பம் இகேதா
பொங்கும்நற் கல்வி ஞானம்
போதிக்கும் ஞானி இகேதா

Sunday, August 8, 2010

Woman


Woman
Kavimurasu. Va.mu.se.Thiruvalluvar
Editor: Tamilpani

{சென்னையில் 7-8-2010அன்று உலகக் கவிஞர்கள் சங்கம் நடதிய விழாவில் முன்னாள் ஆளுனர் ஆ.பத்மநாபன்,சப்பானிய அறிஞர் அவுச்சி ஆகியோர் முன்னிலையில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் பாடிய ஆங்கிலக் கவிதை}

Woman is epitome of sacrifice
Woman is rays of hopes
Woman is embodiment of renunciation
Woman is like mother earth who revolves everyday

Woman is wedlock makes mercy
Woman is candle for her better half

By birth she is daughter
By living becomes daughter in-law

She is symphony of beauty
Her beauty is universe
She is an Idol
Who is worshiped as Goddess
She is nucleus in marriage

But she fire walks from epidemic veteran of dowry
She weaves her own modesty
She be a village belly or
Heroine of celluloid

Death cruelty does not spare her
She who learnt the burnt
Of her counterparts hang over

She surrenders to be male during instinct
Same man makes her trading flesh
She who hands on knees with societies mud slimming
She who treated as intoxicant by her fellow man

But she is Holy mother of Andal Mary Fathima Seetha
She who lives in dark with white robe as widows
She who lives as warrior irrespective of her Mr. Non-caliber
She who can rule the country but tires in to domesticity
Victories in societies
Victories in leading nation

All praise to Woman
Woman Woman woman

Saturday, April 17, 2010

மடமையைச் சாய்த்தல் என்றோ?

பக்தியாம் போலி வேடம்
படித்தவன் போற்றும் ஈனம்
சக்தியாய் தனனைக் காட்டி
சாய்த்திடும் மனித நேயம்
வக்கிர நெறியில் வாழ்ந்தே
வனிதையர் கற்பை சாய்த்தே
முக்தியை காணும் மோக
மடமையைச் சாய்த்தல் என்றோ?

இயல்பினால் வாழ்க்கை வாழ
இயலாத மடமைச் சாமி
புயலென காமம் தேக்கி
புரிந்திடும் அவலம் ஏனோ?
செயல்நெறி உணரா மக்கள்
செறிந்துள அறிவை மாய்த்து
முயற்சியின் அருமை தன்னை
முயலாது செல்தல் தானே!

பெரியார் தோன்றிய மண்ணில்
பேதமை தொடரும் மோசம்
அறியாமை வீழ்த்திய அண்ணா
அகவழி வெல்தல் என்றோ?
நெறியிலா பக்திச் சாயம்
நிலையான உருவாய்ச் சேர்க்க
புரியாத மக்கள் தம்மை
புதைகுழி தள்ளல் நன்றோ?

நித்தியா நந்தன் லீலை
நீசத்தை நாளும் காட்டி
எத்திசை மக்கள் எல்லாம்
ஏசியே முகம் சுழிக்க
பத்தியம் குடும்பம் காக்கும்
பாவையர் கொதித்தல் வீணோ?
சத்தியம் வாழ்க்கை என்றே
சாக்கடைக் குளியல் அன்றோ!

பக்தியை விற்கும் வேடம்
பரத்தையர் சேர்க்கும் ஓலம்
சக்தியே தானே என்றே
சந்ததி அழிக்கும் மோசம்
புத்தியைக் கூர்மை ஆக்கி
புவியினில் மடமை சாய்த்தே
நத்திடும் இயல்பின் வாழ்க்கை
நாடிடும் நாள்தான் என்றோ?

Sunday, March 21, 2010

மன்றம் வென்ற பெண்கள் உரிமை வாழ்க

ஒதுக்கீடு கண்ட எங்கள்
ஒப்புயர் கலைஞர் தம்மின்
புதுக்கிய புதுமைப் பெண்கள்
புத்தொளிர் வெற்றி வெல்க!
பதுக்கிடும் பெண்கள் தம்மின்
பண்புள உயர்வை நன்றாய்
செலுத்திய சோனியா அன்னை
செரிவுடை ஆட்சி வெல்க!

ஒளிபுகழ் மன்மோகன் சிங்
ஒப்பமாய் உரைத்த பாங்கு
நளினமாய் பாசக நன்றாய்
நாட்டிய பெண்கள் ஊக்கம்!
தெளிவுடை கலைஞர் கோவின்
தேர்ந்த நல்மகளாம் நம்மின்
பொழிவுடை கனிமொழி பேச்சின்
பெற்றிமை கண்ட வெற்றி!


மண்மகள் செயந்தி வென்ற
மாசிலா சொல்லின் ஆக்கம்
கண்மணி பெண்கள் நன்றாய்
காட்டிய பிருந்தா வெற்றி
மன்றமே திரண்டு நன்கு
மாண்புயர் பெண்கள் தாங்கும்
வென்றிடும் முழக்கம் கண்ட
வேங்கையாம் சுசுமா வாழ்க!

இந்திய மன்றம் தன்னில்
இணையிலா உரிமை கண்ட
சந்ததி வாழ்த்தி ஒன்றாய்
சாதித்த ஒதுக்கீடு வாழ்க!
முந்தைய நாளில் பெண்கள்
முடக்கிய மோசம் வீழ்க
சொந்தமாய் இணையாய் என்றும்
சோர்விலாப் பெண்கள் வெல்க!

Thursday, November 19, 2009

நூற்றாண்டு நாயகர் தூயோன் கக்கன்

மாசிலாத் தலைவன் எங்கள்
மாமணி காம ராசர்
காசிலாத் தொண்டின் வாழ்வாய்
கடமையைக் காத்த தூயோன்
கூசிடும் நாணம் இன்றி
குவித்திடும் அரசியல் வாழ்வில்
பேசிடும் வாழ்வாய் வாழ்ந்த
பெற்றிமைச் சான்றோன் கக்கன்!

அமைச்சராய் உயர்வு ஏற்றும்
அடிமட்ட வாழ்வாய் வாழ்ந்தார்
குமைந்திடும் வறியோர் எண்ணி
குடும்பமாய் துன்பம் ஏற்றார்
இமையதே கண்கள் காக்கும்
இனியநல் மக்கள் தொண்டர்
சுமையிலாத் தலிவர் நம்முள்
சுகத்தையே கண்டார் வென்றார்!

காவலர் அமைச்சுக் காலம்
கடமையாய் இளவல் வேலை
ஏவலாய்ப் பெற்றுத் தம்மின்
ஏந்தலைக் காணச் சென்றார்
காவலாய் வாழ்ந்த கக்கன்
காவலர் பணியைப் பெற்ற
மேவிடும் உறவைச் சாடி
மேதினி வென்றார் நின்றார்!

நூற்றாண்டு கண்ட நம்மின்
நுண்னுணர் தொண்டைப் போற்றி
நாற்றினில் காணும் நெற்கள்
நெறியுடன் வளர்தல் போன்றே
தூற்றிடும் இலஞ்சம் வஞ்சம்
துணிவோடு மாய்த்து நம்மில்
ஏற்றிடும் கக்கன் வாழ்வாய்
எண்ணியே எழுவோம் வெல்வோம்!