Tuesday, January 18, 2011

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

(கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர்,தமிழ்ப்பணி

பெருமகனார் பற்றி பெருமக்கள்

பெருமகனாரைப்பற்றி அறிஞர் பெருமக்கள் கூறும் கருத்துக்களை காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

புலவர் இலால்குடி அரங்கசாமி அவர்கள் தம் பாடலில்

நின் நெடிய உருவெங்கே நெற்றிதிரு
மண்ணெங்கே நெடுஞ்சேன் கேட்கும்
நன்குரலின் ஒலியெங்கே நற்றமிழின்
சுவைகூட்டும் நாவும் எங்கே
தன்னடக்கப் பணிவெங்கே தாயொக்கும்
அன்பெங்கே எங்கே என்று
மன்னுபுகழ் ஐயாவே மனமழிந்து
யாமரற்ற எங்கே சென்றாய்

வித்வான் இராமசாமிக் கோனார் அவர்கள் தம் பாடலில்

தமிழன்னை யுளங்களிக்கத் தனித்தமிழில் `
பலநூல்கள் தந்தாய், தூய
அமிழ்தமென மாணவர்கள் அகங்குளிர `
அரியவுரை யாற்றி, நல்யாழ்
இமிழ்தல்போல் இசைமிளிர இனியதமிழ்ச்
சுவையூட்டும் இனியாய்! திருமண்
உமிழ்சுடர்போல் ஒளிவீசும் உன் முகத்தை
யார்மறப்பார் அந்தோ! அந்தோ!

புலவர் த.கி.குப்புசாமி ஆழ்வார் தம் பாடலில்

முன்னமோர் அகத்தியனே முதுபொதியில்
இருந்துதமிழ் முழங்கச் செய்தான்
இன்னமோர் அகத்தியனாய் சிராமலையில்
இருந்துதமிழ் இலங்க வாழ்ந்தாய்
பன்னருஞ்சீர் பதம்சென்று பழகுதமிழ்
வளர்த்திடவே படர்ந்தா யாயின்
இன்னுமே இவணிருந்துன் றனைநினைந்தே
இணைந்திடுவல் இயல்போ ஐயா!

மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தம் கருத்து

கோனார் பிறர் மனம் நோவாவாறு பக்குவமாக எதையும் சொல்லும் நாகரீகப் பண்புடையவர். பழைய மரபும் புதிய மரபும் தழுவியவர். எப்பணியிலும் இறைப்பணியும் தமிழ்ப்பணியும் மாறாதவர்.

பம்பாய் பாரதி கலாமன்ற செயாலாளர் இராமன் அவர்கள் தம் கருத்து

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் மன்றத்தின் விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியதை இன்றும் பம்பாய் மக்கள் மனத்திலிருந்து மாறவில்லை.ஒரு பெரிய தமிழ் மேதையை ஒரு தமிழ்க் கடலை இழந்து விட்டோம்.

அறிஞர் கீ. இராமலிங்கனார். அவர்கள் தம் கருத்து

அவர்களது அன்பு கனிந்த மொழிகளை என் செவிகுளிர இனி எப்போது கேட்க முடியும் என்னிடத்தில் உண்மையான உழுவழன்பு கொண்டிருந்தார்களே என் உடன் பிறந்த இளவல் போல் என் நலன்களை அறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிவகைகளைச் சொல்வார்களே! இனி யார் எனக்கு அவர்களது நிலையிலிருந்து அன்பு செய்யக் கூடியவர்கள்.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் கருத்து

கோனாரையா அவர்கள் பண்பால் உயர்ந்தவர் . எவர் மனமும் கோணாதவாறு நடந்து கொள்ளும் சான்றோர். எத்தனையோ பேருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய உத்தமர். எல்லோருக்கும்உதவுகின்ற தூய மனம் படைத்த கருணைவள்ளல். துவக்க காலத்தில் எனக்குப் பாடல் எழுதப் பழகித்தந்து அன்போடு குற்றம் குறைகளைத் திருத்திய ஆசான்.


அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 10, புது பங்களாத் தெருவிலிருந்து அவர் மறைவிற்கு 1969ஆம் ஆண்டு எழுதிய மடல்,

அன்புச் சகோதரருக்கு, வணக்கம் பல. தந்தையார் காலமான செய்தி அறிந்து வருந்தினேன், சென்ற மாதம் அங்கு வந்த சமயமும் அவரைச் சந்திக்க இயலவில்லை. தமிழன்னைக்கு ஈடு செய்யமுடியாத இழப்பை எவ்வாறு ஈடு செய்ய இயலும்!

முடிவுரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (60)

பெருகானாரின் பொன்னுரையில், இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் மனிதனேயாயினும் வானுலகில் வாழும் தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

என்ற பொருளுக்கினங்க பெருமகனார் அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்துதமிழுக்கும் தமிழருக்கும் சிறந்த தொண்டாற்றியவர். பெருமகனார் என்றும் தமிழர் நெஞங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்.

வாழ்க பெருமகனாரின் புகழ்! தொடர்க திருக்குறட் தொண்டு!

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

(கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர்,தமிழ்ப்பணி

(15-1-1911 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திருவள்ளுவர் மைய 5ஆம் மாநாட்டில் கவிமுரசு திருவள்ளுவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரை)

முன்னுரை

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் தமிழ்ப்பணியை நிறுவி 40 ஆண்டுகள் நிறைவுறுகிறது. தமிழ்ப்பணியில் எழுதாத எழுத்தாளர்கள் இல்லை என்ற பெருமகிழ்ச்சி எனக்கு உண்டு. அரிய சான்றோர்களை தந்தையார் அவர்கள் அட்டையில் வெளியிட்டு வாழ்த்துப்பா பாடியும் பதிவு செய்வார்கள். அந்தப்பதிவுகளெல்லாம் வரலாற்றுச் சுவடுகள்தானே..

திருக்குறளுக்காக தன் வாழ்நாளையே ஒப்படைத்த அருள்மாமுனிவர் கு. மோகன்ராசு அவர்கள் திருக்குறள் தூதர்கள் மூலம் திருக்குறளுக்கு தொண்டாற்றிய 133 பெருமக்களை தேர்ந்தெடுத்ததே பெரும் பணியாகும். அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளையும் தொண்டுகளையும் வராலாற்று ஆவணமாக்குவது வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வரிசையில் ஐயன் பெருமாள் கோனார் அவர்களின் வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்துவது எமக்கும் பெரும் பேறாகும். இந்தப் பதிவுக்கு துணை நின்ற மதுரை தொழிலதிபர் சடகோபன் திருச்சி பேராசிரியர் அரங்கநாதன் ஆகியோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

தோற்றம்

தமிழகத்தில் தமிழ் என்ற பாடம் வரும்போது கோனார் தமிழ் உரை புகழ் பெற்ற உரை நூலாகும். இந்த உரை நூலின் வாயிலாகவே கோனார் என்றால் தமிழ் என்ற அளவிற்கு புகழ் பெற்ற சொல்லாகும். இப்பெருமைக்குரிய ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் திருவள்ளுவர் ஆண்டு1936 ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (5-1-1905) பிறந்தார். பெருமகனாரின் பெற்றோர் திருவேங்கடக் கோனார் அகிலாண்டத்தம்மையார். சங்கத்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் பிறந்த பெருமைக்குரியவர்.

இளமைப்பருவம்

பெருமகனார் இளமையில் தம் அன்னையை இழந்தார். திருச்சியில் தம் பெரிய அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். அம்மையாரின் ஊக்கமே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. தொடக்கக் கல்வியை ஆரியன் உயர் ஆரம்பப் பள்ளியில் படித்தார். படிக்கும் காலத்திலேயே திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் மடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அடிகளார் அவர்கள் கந்தர் கலிவெண்பா நூலை பெருமகனாருக்கு வழங்கினார். இந்த நூலை மனனம் செய்து மகிழ்ந்த வண்ணம் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தேசிய உயர்நிலைப்பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஆசிரியப் பெருமக்கள் தி..பொ.பழனியப்பன், சீத்தராமன் தமிழாசிரியர்களாக இருந்தனர் ஆசிரியர்கள் தனிப்பற்று ஏற்படும் வகையில் பெருமகனார் தமிழில் சிறந்து விளங்கினார்.பள்ளி இறுதித் தேர்வில் உயர்ந்த மதிபெண்கள் பெற்றார். அன்றியும் மதுரைத் தமிழ்ச்ச்ங்கம் நடத்தி வரும் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

தோற்றம்

பெருமகனார் பணிவுடைமையும் இன்சொல்லையும் அணியாகக் கொண்டவர். பக்தியும் அருட்பண்பு மிகுந்த பார்வையும் செம்மாந்த மிடுக்குமுடையவர். அகன்ற நெற்றியும் அதனை அலங்கரிக்கும் எழில்மிகு திருமண்ணும் அணியப் பெற்றவர். வைணவத் தோற்றப் பொழிவினர். தூய வெள்ளாடை அணிந்து வெள்ளுடைப் பெரும் பேராசிரியராகப் உலகை வலம் வந்தவர்.

உரையாசிரியர்

பெருமகனாரின் கல்வித்தகுதியை அறிந்த திருச்சி சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் தமிழாசிரியராகப் பணியமர்த்தினர். பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே 1926-இல் மதுரை தமிழ்ச் சங்க பண்டிதர் தேர்வில் வெற்றிபெற்றார். பெருமகனார் தாம் பயிலும் பாடங்களுக்கு ஏற்ற உரைக் குறிப்புகள் எழுதுவதையும் வினாவிடைகள் எழுதிப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.தொடர்ந்து தமிழ் நூல்களைப் படித்து சென்னைப் பல்கலைக் கழக தனித்தமிழ் வித்வான் தேர்வு எழுதி 1933இல் வெற்றிபெற்றார். பள்ளி வேலை, பல்கலைக் கழகப் படிப்பு, பொது நிகழ்வுகள் என பல்வேறு பணிகளுக்கிடையில் பள்ளியிறுதி மாணவர்களுக்குரிய தமிழ்ப்பாட நூலுக்கு வினா விடை எழுதி வெளியிடலானார். மாணவரிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் உரைநூல்களையும் வெளியிட்டார். தம் சொந்த முயற்சியிலேயே 15 ஆண்டுகள் வெளியீடு செய்தார். மாணவர்களுக்குத் தமிழைப் ஆழ்ந்து படிப்பிக்கும் தமிழாசிரியராகவும் உரை நூல்களை தாம் பிறவெளியிட்டதன் மூலமாகவும் வெளியிட்டு உரையாசிராகவும் சிறந்து விளங்கினார் பெருமகனார்.

பேராசிரியர்

1942ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராக பெருமகனார் பொறுப்பேற்றார். கல்லூரியில் 1966ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியில் திறமையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பேராசிரியப் பணியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போற்றிப் புகழ்ந்தனர். கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கும் உரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.

கோனார் மாளிகை

பெருமகனாரின் உரையின் சிறப்பை உணர்ந்த செ.மெ.பழனியப்ப செட்டியார் உரைநூல்களை அவரது பழனியப்பா நிறுவனமே வெளிட்டது. கோனார் தமிழ் கையகராதி எனும் அகராதி நூலும், திருக்குறள் தெளிவுரை நூலும் வெளியிட்டுள்ளனர். இன்றும் பெருமகனாரின் நூல்கள் வெளிவந்து உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. பழனியப்ப செட்டியார் அவர்கள் தம்முடைய கட்டிடத்திற்கு கோனார் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளார், மதுரை சீனிவாசக் கோனார் வாசன் பதிப்பகத்தின் மூலம் இளங்கலை வகுப்பு தமிழ் உரை நூலை வெளியிட்டுள்ளார்.மதுரை பல்கலைகழக தமிழ்ப்பாட நூல்களின் உரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பெருமகனார் ஆய்ந்தறிந்த தமிழ்ப் பெருமக்கள் பலரை தம்மோடு இணைத்து பெரும்பணி புரிந்துள்ளார்.

சொல்லேருழவர்

பெருமகனார் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்.ஆய்ந்தறிந்த புலமையை தமிழ் மக்களுக்கு வழங்கிய பேருரையாளர்.அவரது சொற்பொழிவைப் பற்றிக் குறிப்பிடும் புலவ்ர் த.கி.குப்புசாமி ஆழ்வார் ”சாந்தமல்கும் தடம் பொதியச் சைலத்திருக்கும் தமிழ்க்கோதாய் என்று இசையுடன் தொடங்கும்போதே அவையினர் தேனுண்ட வண்டென மயங்கிக் கேட்பர். ஒழுங்கு முறையுடன் உரைக்கும் திறனுடன் அழகாய் அடுக்கடுக்காய் சொற்பெருக்காற்றி தொகுப்புரை கூறி முடிக்கும் இவர் திறனை எவரும் பாராட்டுவர்.” என குறிப்பிட்டுள்ளார்.
அறிவும் திருவும் புகழும் கற்போர் நெஞ்சம் காமுறப் பயிற்றும் திறனும் கொண்டவர் பேராசிரியப் பெருமகன்.தேர்வினை குறிக்கோளாகக் கொண்டு தமிழில் தேர்ச்சி பெறப் போராடும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடங்களை ஆர்வமுடன் கற்கும் முறையிலும் வெற்றிபெறுவதற்கேற்ற வகையிலும் உரைநூல் அளித்தமையால் தமிழ் மாணவர்களீடம் இன்றும் தனியிடம் பெற்று விளங்குகிறார். மாணவர்கள் “நான் கோனர் மாணவன்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வர்.

பாராட்டுகள்

பெருமகனாரின் தமிழ்ப் பற்றையும் தொண்டினையும் சிறப்பித்து ஆனந்தவிகடன் இதழ் ஆசிரிய இரத்தினங்கள் என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வெளியிட்டது. உறையூர் வாகீச பக்த சன சபையினர் மதுரை திருஞானசம்பந்த சாமிகள் மடத்தின் அருளாளரைக் கொண்டு சொற்பொழிவுத் தொண்டினை போற்றும் முறையில் பெருமகனாருக்கு “செம்பொருட்காட்சியர்” என்னும் பட்டத்தை வழங்கினர். பெருமகனாரின் சமயத் தொண்டினை பாராட்டி காஞ்சிகாமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சாமிகள் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி “திருப்பாவை ஆராய்ச்சி மணி” எனப் பட்டம் வழங்கி் சிறப்பித்தனர். மார்கழித் திங்களன்று திருச்சி வானொலி நிலையத்தில் திருப்பாவை பாடி விளக்கவுரை வழங்கியதை கேட்டு மகிழ்ந்து பாராட்டியவர் பல்லாயிரக் கணக்கினர்.

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு
என்ற குறளுக்கு ஒப்ப தான் சேர்த்த பொருளையெல்லாம் தம்மைச் சார்ந்தோர்க்கு வழங்கிய அறிஞர்களை போற்றி ஆதரித்தார். தம் தமிழ்த் தொண்டினால் மாணவர், ஆசிரியர், சமய அன்பர்கள், தமிழுலகம் பயனுறுமாறு அருளாளராகவும் ,உரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும் தலைசிசிறந்து விளங்கினார்.

திருக்குறள் பொன்னுரை

பெருமகனார் அவர்கள் திருக்குறள்பால் நீங்காத பற்றுடையவர். திருக்குறளை வாழ்வியல் நெறிகளை மக்களின் மனத்தில் நிலைபெறச் செய்தவர். செல்லும் இடமெல்லாம் திருக்குறள் கூறி எளிய விளக்கத்தைக் கொடுத்த வல்லமை பெற்றவர். திருவள்ளுவரின் 1330 குறளுக்கும் எளிய உரையாக எழுதி பொன்னுரையாக் வெளியிட்டுள்ளார். திருக்குறள் கோனார் பொன்னுரை நூலை பனிரெண்டு மக்கள் பதிப்பாக பழனியப்பா நிறுவனம் இன்றும் வெளியிட்டு வருகிறது. . பெருமகனார் பிறந்து நூற்றைந்து ஆண்டுகளாகியும் இன்றும் அவர் புகழ் பரவும் வண்ணம் அவரது படைப்புகள் உள்ளன.

பெருமகனார் அவர்கள் அதிகாரங்களின் தலைப்புகளையே படிக்காத பாமரரும் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். அந்த தலைப்பின் விளக்கத்தைப் படித்தாலே உட்கரு புரியும் வண்ணம் உள்ளது. வலிஅறிதல் என்ற அதிகாரத்தை ”வினைவலி முதலியவற்றை அறிதல்” எனக் கூறுகிறார். சுற்றம் தாழல் எனும் அதிகாரத்தை ”சுற்றத்தினரைத் தழுவிக்கொள்ளுதல்: எனக் எளிமையாகக் விளக்கியுள்ளார். சான்றாண்மை எனும் அதிகாரத்த ‘பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளும் தன்மை” என பெரும் பேராசிரியர் மக்கள் மொழியில் வழங்கியுள்ளார்.இன்பத்துப் பாலில் குறிப்பு அறிவுறுத்தல் என்ற அதிகாரத்திற்கு ”தலைவன், தலைவன், தோழி என்ற இவர்கள் குறிப்பினை ஒருவருக்கு அறிவுறுத்துதல்” என சொற்கள் அதிகமானாலும் மக்களைத் தெளிவுறுத்தம் வண்ணம் தெளிவுரை வழங்கியுள்ளார்.

பெருமகனாரின் எளிய பொன்னுரையில் சில

அறத்தாறு இதுவென வேண்டா: சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37)

அறத்தின் பயன் இத்தன்மையுடையது என்று சொல்ல வேண்டுவதில்லை.. பல்லக்கை சுமந்து செல்பவனுக்கும் அதன்மீது ஏறிச் செல்பவனுக்கும் இடையே அதைக் காணலாம்.
உரையைப் படித்தவுடன் யாவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ளதை உணரலாம்.

துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (52)
ஆதரவில்லாதார்க்கும் ஏழைகளுக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்வான் என்பவன் துணை செய்தற்கு உரியவனாவான்.

இல்வாழ்வானின் கடமைகளை பெருமகனார் யார் யார் என பட்டியலிட்டு விளககித் தானும் அவ்வாறு வாழ்ந்த பெருமைக்குரியவராகிறார். அவர் மறைந்த போது இலங்கையைச் சேர்ந்த மு.சு கார்த்திகேசு அவர்கள் குறிப்பிடுகிறார். “ என் மகன் இராசேந்திரனுக்கு அளவற்ற அன்புடன் செய்த அநேக மதிக்கமுடியாத உதவிகளை செய்துள்ளார். அன்னார் இன்றேல் எனது மகன் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது எமை தங்கள் உற்றார் உறவினர் போன்று காலத்துக்கு காலம் உபசரித்து உணவளித்துப் பாராட்டிய வள்ளல்.”அவரது மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவராகப் படிப்பதற்கு உதவியும் புரிந்துள்ளார் பெருமகனார்.
நாடோறும் நாடுக மன்னன்: வினை செய்வான் கோடாமை கோடாது உலகு (530)
தொழில் செய்பவன் நேர்மையினின்றும் மாறுபடாதிருப்பின் இவ்வுலகமும் மாறுபடாது: ஆதலால் அரசன் அத்தொழில் செய்வோரை நாள்தோறும் ஆராய்க.

அற்றேமென்று அல்லற் படுபவோ, பெற்றோமென்று
ஓம்புதல் தேற்றா தவர் (636)

செல்வத்தை பெற்றோம் என்று மகிழ்ந்து அதனை பாதுகாத்தலை அறியாதவர் அதை இழ்ந்துவிட்டோமே என்று வருத்தப் படமாட்டார்.

உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் (740)
அவைக்களத்தைக் கண்டு அஞ்சி தாம் கற்றவற்றை ஏற்பச் சொல்லாமாட்டாதவர், உயிரோடு வாழ்பவர் எனினும் இறந்தவரை ஒப்பர்.

ஒவ்வொரு குறளின் தெளிவுரையை நாம் படிக்கும்போதும் பெருமகனார் நம்மை நுட்பமாகத் தெளியவைக்கிறார்.

புணர்ச்சி பழ்குதல் வேண்டாம் உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். (795)
நட்பாகிய உரிமையைப் பெறுவதற்கு கூடி வாழ்வதோ பழகுவதோ தேவையில்லை ஒத்த மனவுணர்ச்சியே அந்நட்புரிமையைத் தருவதாகும்.

விழையர் விழையப் படுப, பழையர்கண் பண்பின் தலைப்பிரியா தார் (810)
பழைமையாக வரும் நண்பர்கள் குற்றம் செயினும் அவரிடத்தில் அன்பு நீங்காதவர் தம் பகைவராலும் விரும்பப் படுவர்.

நட்பிற்கு இலக்கணம் கூறிய பொய்யாமொழியாரின் சிந்தனையை செப்பமாக உரைத்துள்ளார்.
காமத்துப்பாலில் உள்ள குற்ளுக்கு பெருமகனாரின் உரை நம் மகளிரின் சிறப்பை உணர்த்துகிறது.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.. (1210)

என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரேயாயினும் அவரைப்பற்றி ஒரு சொல்லைக் கேட்பினும். அஃது என் காதுக்கு இன்பம் தரும்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர் யாருள்ளி நோக்கினீர் என்று (1320)
தலைவியின் அழ்கையே நினைத்திருந்து பார்த்தாலும் என் அழகையெல்லாம் யாருடைய அழகுக்கு ஒப்பாக எண்ணிப் பார்த்தீர் என்று கூறிக் கோபிப்பாள்
.
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா (1329)

ஓளீ பொருந்திய அணிகலன்களை அணிந்த இவள் ஊடுவாளாக. அவ்வூடலை தீர்க்கும் பொருட்டு யாம் இரத்தற்காக இரவுப் பொழுது நீள்வதாக.

இவ்வாறு பெருமகனார் அவர்கள் தன் பொன்னுரையில் முற்றும் அறிந்து உணர்ந்து எழுதியும் இந்தியா முழுமையும் உரையாற்றியும் திருக்குறளுக்கு பெருந்தொண்டாற்றியுமுள்ளார்கள்.

இறப்பு
தமிழுலகமே போற்றிய ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் தம் இறுதி காலத்தில் திருச்செந்தூர் திருப்பாவை மாநாட்டில் பங்கேற்று திருச்சிக்குத் தொடர் வண்டியில் திரும்பும் வழியில் உடல் நலிவுற்று மதுரையில் இறங்கினார். மருத்துவ மனையில் சேர்த்தும் பலனின்றி 1-1-1969 ஆம் நாள் காலமானார்.

பெருமகனார் பற்றி பெருமக்கள்

Wednesday, January 5, 2011

Wednesday, December 29, 2010

பொன்மன நல்லி வாழ்க


பொன்மன நல்லி வாழ்க

பத்மசிறீ நல்லி குப்புசாமிசெட்டியார் அவர்களின் 70ஆம்
அகவையை முன்னிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடியது

பட்டுவை நெய்து நம்மின்
பெருமையை நிலைக்கச் செய்தோன்
மட்டிலா நல்லி மேன்மை
மண்புகழ் பரவச் செய்தார்
எட்டிடும் சிகரம் நோக்கி
ஏறுபோல் உயர்ந்து வென்றார்
பட்டென உடலின் பொட்டாய்
பொன்மன நல்லி வாழ்க!

புன்னகை மன்னன் பாரில்
புன்னகை பூக்கச் செய்வோன்
கண்ணென தொழிலைப் போற்றி
கண்டிட்டார் வணிக ஏற்றம்
தன்னரும் வாழ்வின் மேன்மை
தகுதியாய் நூலாய்த் தந்தோன்
புண்ணியப் பணிகள் ஆற்றும்
புண்ணிய நல்லி வாழ்க!

உலகெலாம் பறந்து நம்மின்
உயர்தொழில் உயர்த்தும் நல்லி
பலமெலாம் பகிர்ந்து நல்கும்
பண்புள நெஞ்சர் நல்லி
நிலமெலாம் கருணை ஊற்றை
நிகழ்த்திடும் தூயோன் நல்லி
நலமெலாம் இணைந்தே பாரில்
நனிபுகழ் நல்லி வாழ்க!

எழுபதைக் கண்டார் நம்மின்
எழுச்சியாய் வாழ்வில் நின்றார்
தொழுதிடும் சேவை வாழ்வில்
தொண்டராய் என்றும் உள்ளார்
பழுதிலா நல்லி மேன்மை
பார்புகழ் மென்மேல் ஏற்று
விழுதுபோல் அறங்கள் தாங்கும்
வியத்தகு நல்லி வாழ்க!

அமெரிக்க மருத்துவமாமணி பத்மினி பஞ்சாட்சரம் படத்திறப்பு



அமெரிக்க மருத்துவமாமணி பஞ்சாட்சரம் அவர்களின் துணைவியார் மருத்தவர் பத்மினி படத்திறப்பு

அமிரிக்கா நியூயார்க்கில் தமிழுக்கும் தமிழ் ஈழத்திற்கும் அருந்தொண்டாற்றி வரும் மருத்துவமாமணி தமிழ்மாமணி வின்செண்ட் பஞ்சாட்சரம் அவர்களின் துணைவியார் மருத்துவர் பத்மினி இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெருவிக்கிறோம்.. தமிழுக்காகவே அமெரிக்கா வாழும் குடும்பங்களில் வின்சண்ட் பஞ்சாட்சரம் குடும்பம் தலைமையான குடியாகும்.

மருத்துவர் பத்மினி அவர்கட்கு பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பாக வீரவணக்கம் 5-11-2010 ஆம் நாள் வடபழனி அறிஞர் அண்ணா நூலகத்தில் நடத்தப்பட்டது. மாட்சிமிகு கு.க.செல்வம், செ.கண்ணப்பன் முன்னிலையில் சென்னை முன்னாள் மாநகரத்தந்தை சா.கணேசன் தலைமை தாங்கினார். மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அறிமுகவுரையாற்றினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அம்மையார் படத்தை திறந்துவைத்து அவரது சிறப்புகளை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மறவன்புலவு சச்சிதானந்தம், மணீமேகலை கண்ணன், கண்மதியன், இரங்கலுரை நிகழ்த்தினர்.கழகப் புர்டோத்தமன் நன்றி நவின்றார்

Friday, November 26, 2010

திருக்குறளில் கலைகள்


திருக்குறளில் கலைகள்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர் தமிழ்ப்பணி

சென்னையில் 26,27,-11-2010 நாட்களில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய உரை

திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையத்தின் சார்பில் திருக்குறள் கலை இலக்கிய சங்கமம் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இருபது ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்திவரும் முனைவர் இலலிதா சுந்தரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகளிர்மாமணியான இலலிதா சுந்தரம் 1999ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டிற்கு வருகை தந்த பெருமைக்குரியவர். அண்மையில் மலேசியாவில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று பன்னாட்டுத்தமிழுறவுப் பணிகளில் இரண்டரக் கலந்தவர். எந்த அமைப்பாக இருந்தாலும் நான் என்று முன்னின்று செயலாற்றும் மன வளம் உடையவர். இந்த மன வளத்திற்கு அடிப்படை திருக்குறள் சிந்தனைகளே.

தமிழ் மறை:

தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக தோன்றிய தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் திருக்குறள் தாக்கத்தினாலாயே நிலைபெற்றுள்ளனர். திருக்குறளின் கருத்துக்கள் உலகத்தையே வலம் வந்து தமிழனின் பேராற்றலை செப்பும் தமிழ் மறையாகும்.
நாம் வாழும் இந்நூற்றாண்டில் திருக்குறள் சிந்தனைகளால் தம் மக்களை நிலைபெறச் செய்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. அவர்தம் வழியில் திருக்குறளை வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்து தமிழினத்தையும் திருக்குறளையும் நிலைநிறுத்தியவர் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இந்த மாபெரும் கலைஞர்களை உருவாக்கிய திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்துமே கலை வாழ்வியல் சார்ந்து உலக மக்களுக்கு வந்துதித்த பெருங்கொடை..

உலகக் கலைஞானி:

உலகப் பெரும் ஞானி திருவள்ளுவர் வாழ்க்கையின் அறச் சிந்தனைகளை மென்மையாகவும், கடுமையாகவும் உணர்த்தியுள்ளார். நணபர்களுக்கு இன்னல் வருமேயாயின் அதை நீக்க மானிட உள்ளம் உணருமாரு உணர்த்தியுள்ளார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788)

தான் உடுத்தியிருக்கும் ஆடை தானாக நெகிழ்ந்தால் தன்னுடைய கைகள் உடனே தாங்கி மானம் காப்பதைப் போல் நண்பரின் இன்னல் கண்டு இயல்பாக இடையூற்றை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். திருவள்ளுவர் வாழ்வியல் கலைகள் அனைத்தையும் அறிந்த கலைஞானி என்பதால் மானிட வாழ்வில் தாம் உடுத்தும் உடையைக்கொண்டே மிகப் பெரும் இடையூற்றை நீக்கி மகிழ மானிட சமுகத்திற்கு உணர்த்துகிறார்.

பகுத்தறிவுக் கலைக்கோமான்:

அவரவர் தம் வலிமையை அறிய வலியுறுத்தும் திருவள்ளுவர் வண்ணமயிலின் இறகைக் கொண்டு உணர்த்துகிறார். வண்ணமயிலை எண்ணும்போதே அதனுடைய அழகு மானிட உலகை மகிழச்செய்யும் அந்த மயிலின் இறகின் மென்மையையும் மனிதனின் மென்மையான மானிட வாழ்வையும் ஒப்பிட்டு வாழ்வியல் கருத்தை வழங்குகிறார்.மூடத்தனமாக எதையும் வலிமையறியாமல் செய்யக்கூடாது என்ற பகுத்தறிவுக் கலைக்கோமானாக உணர்த்துகிறார்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (475)

மயிலின் தோகை மென்மையாக இருந்தாலும் அதனை மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும் தாங்கும் வலிமையறியாமல் தாக்கம் விளைவிப்பாரின் நிலையும் அதுதான் என உணர்த்தியுள்ளார். மானிட வாழ்வில் எண்ணற்றோர் தம் வலிமையறியாமலேயே படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உலகில் வாழும் மானிடர்களுக்கு எக் காலத்திலும் உணரும்வண்ணம் வாழ்வியல் உண்மைகளை உணரும் திருக்குறளுக்கு நிகர் வேறேதும் இல்லை.

உலகப் புரட்சிக் கலைஞன்:

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. தனக்காக மட்டுமின்றி அறம் பொருள் இன்பம் என அனைத்தையும் உய்த்துணர்ந்து தம்மையும் உலக மக்களையும் காக்கும் வாழ்வியல் மறையை வழங்கிய காவியக் கலைஞனாக நம் சிந்தையில் திருவள்ளுவர் குடிகொண்டுள்ளார். அந்த வாழ்வு குற்றமில்லாத வாழ்வாக வாழவேண்டும் அப்படி குற்றமேற்படின் அழிந்து போகும் என தீர்வாக கூறுகிறார்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (435)

தவறு நேர்வதற்கு முன்பே குற்றத்தை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்க இயாலாதவர் வாழ்க்கை நெருப்பு முன் வைக்கோல் போர் போல அழிந்து விடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய திருவள்ளுவர் இன்று பாடியது போன்று எக் காலதிற்கும் ஒத்தது போன்று பாடியுள்ளார். அவருடைய கலைக் கண் மானிட சமுகம் மீட்சியுற குற்றமின்றி வாழ்வாங்கு வாழ கடுமையின் தன்மையை குறிப்பிட்டு உணர்த்தியுள்ளார்.

பேருழைப்புக் கலைஞன்:

உழைப்பையும் முயற்சியையும் திருவள்ளுவர் மானிடத்தின் உயிராக உணர்த்தியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முயற்சியும் உழைப்புமே நற்பயனைத் தரும் என வலியிறுத்தியுள்ளார்.அக் காலத்திலும் இன்றும் பண்டாரங்களாகவே வாழ்ந்து எந்த உழைப்பும் இன்றி வாழ்வோரைச் சாடி உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் மகுடமான புரட்சிக் கலைஞனாக உள்ளார். தன்னுடைய வாழ்வியலுக்கே திண்டாடும் பலர் பக்தி என்ற போர்வையில் கடன் பெற்று தம் வாழ்வையே அழித்து பக்தியைப் புலப்படுத்துகின்றனர். தான் எந்தக் காரியத்திற்காக நம்மை அணியப்படுத்தி உலகில் வாழ்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சோம்பேறிகளாக பக்தி என்ற வலையத்தில் வலம் வருகின்றனர் அவர்களையெல்லாம் தகர்த்து நிலைகுலையச் செய்யும் பேருழைப்புக் கலைஞனாக திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளாக வலம் வருகிறார்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வத்தை நம்பி மூடத்தனமாக வாழும் பிறவிகளே தங்களின் குறிக்கோளும் முயற்சியும் உழைப்பும் இருக்குமேயானால் வெற்றிபெற முடியும் என பாட்டாளிக் கலைஞனாக திருவள்ளுவர் மெய்சிலிர்க்க வைக்கிறார். உலகில் வெற்றி பெற்ற பெருமக்களின் வாழ்வியலைக் கண்டோமானால் வள்ளுவப் பேராசானின் கருத்தை உணர முடியும்.

அருட் கலைஞன்:

பொருளுடையோர் பொருளை அருள் வழியில் பயன்படுத்தவும் வழிகூறுகிறார். அருளை அன்பு ஈனும் குழந்தையாகக் கண்டு குழந்தையைப் பேணுவதுபோல் அறப்பணீகளை வலியுறுத்தி உலக மக்களிடம் மனித நேயத்தை மீக்கெழச் செய்கிறார். மனிதம் வாழ்விக்க வந்த அருட்கலைஞராக பொய்யாமொழியார் நெஞ்சம் நிறைகிறார்.

அருளெனும் அன்புஈன் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு (757)

அன்பு என்ற தாய்பெற்ற பிள்ளைதான் அருளாகும். அந்த மழலையை வளர்க்கும் பொறுப்பு செவிலித்தாயாகிய பொருளுக்கு உண்டு. என பொருளுடையோரின் பொறுப்பை உலகுக்கு உணர்த்துகிறார். வறுமை தலைவிரித்தாடும் நம் நாட்டில் பொருளுடையோர் 45 விழுக்காடு உள்ளனர். திருவள்ளுவர் கூறிய மறையை முழுமையாகப் பின்பற்றுவோமானால் நம் நாட்டில் வறுமையை முற்றுமாக ஒழித்துவிட முடியும். பொருளுள்ளவர்கள் செவிலித்தாயாக வலம் வந்தால் அருளாகிய குழந்தை செழிப்படையும்.

இல்லற நல்லறக் கலைஞன்:

இல்லற இன்பத்தை முற்றும் முழுமை உணர்ந்த இல்லறக் கலைஞர் நம் பாட்டன். மானிட வாழ்வில் அறம் பொருள் இன்பம் என பட்டியலிட்டு வாழ்வின் முழுமையை உணர்த்தியுள்ளார்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. (1323)

வாழ்விணையரின் காதலை உணர்த்தும் திருவள்ளுவர் நீரும் நிலமும் கலந்தமையைக் குறிப்பிடுவது இல்லறத்தின் நல்லறக் கலைஞராக நிலைபெறுகிறார்.இல்லற இணையர் காணும் இன்பம் புத்தேள் உலகத்திலும் இல்லை என அறுதியிட்டுக் கூறுகிறார்.

முடிவுரை:

உலகமக்களின் நலனுக்கு வாழ்பவர்கள். உள்ளத்தாலும் செயலாலும் உண்மையாக வாழ்பவர்கள் உலக மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழ்வர். உலகப் பொதுமறை வழங்கிய பொய்யாமொழியார் இன்றும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்துள்ளார். மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெருமக்கள் வள்ளுவப் பெருமான் குறள்போல் நிலையாக வாழ்ந்து வருகின்றனர்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன். (294)

உளத் தூய்மையாக சொல்லும் செயலும் ஒன்றாக தூய்மையான வாழ்வு வாழ்பவர்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்வான் என உண்மையை உலகோர் பின்பற்ற பதியம் போட்டுள்ளார் திருவள்ளுவர்.

Wednesday, November 10, 2010

என்றும் ஆளும் அன்னை சேது




அன்னை சேதுமதியின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2010 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்,கணேசுக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளஞ்செம்பூர் பேரூராட்சி தலைவர் காயாம்பு தலைமையில் தொழிலதிபர் கந்தசாமி, கவிச்சிங்கம் கண்மதியன், முனியாண்டி, செந்தமிழ்ச்செழியன், மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கருப்பண் கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் சென்னைமாநகரத் தந்தை சா.கணேசன் நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் வரவேற்றார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் மாலதிமுருகேசன் குத்துவிளக்கேற்றினர். சானகிசக்திவேல் இராசேசுவரி கோபிநாதன் அன்னையின் பதிகப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர் நன்றிபாராட்டினார்.

6-11-2010 அன்று மாலையில் அபிராமம் பேரூராட்சி மண்டபத்தில் தமிழ் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பெருங்கவிக்கோ வா.மு.சே.அறிமுகவுரை ஆற்றினார். மாண்புமிகு அமைச்சர் சுப.தங்கவேலனார் அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து மூன்று அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார் ஆசிரியர் பாலகுருசாமி, செல்வி பாலமீரா,சனாப் இத்ரீசு மற்றும் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் சென்னைமாநகரத் தந்தை சா.கணேசன் நிறைவுரையாற்றினார். வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். அதுபோது அவர் குறிப்பிட்டடதாவது

அன்னையின் நினைவாக ஆண்டுதோரும் தமிழ் அறிஞர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்கிவருகிறோம். 2006ஆம் ஆண்டு மதுரை மார்சல் முருகன், சென்னை கவிக்குயில் பொன் ஐயனாரப்பன் 2007ஆம் ஆண்டு காரைக்குடி பொற்கிழிக்கவிஞர் அரு சோமசுந்தரம், சென்னை கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், 2008ஆம் ஆண்டு முதுபெரும் கவிஞர் பழநி இளங்கம்பன், நாகர்கோயில் பெரும்புலவர் பெருமாள், சென்னை எழுகதிர் கவிச்செம்மல் அரு.கோபாலன், இராசபாளையும் பாவாணர் கோட்ட புலவர் நெடுஞ்சேரலாதன் திருவில்லிபுத்தூர் சிவ.வே.மோகனசுந்தர அடிகளார் 2009ஆம் ஆண்டு கம்பம் மேனாள் இயகுநர், வே.தில்லைநாயகம், மதுரை சமூகக் காவலர் நவமணி, சென்னை இலக்கியச்சுடர் மூவெந்தர் முத்து, நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் விருதும் ரூ.10,000 பொற்கிழியும் பெற்றுள்ளனர்.

இவ்விருதினை சேது அறக்கட்டளையின் சார்பில் வழங்குவதை பெரும்பேறாகக் கருதுகிறோம். இவ்வாண்டு விருது வழங்க குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் வருகை தந்துள்ளார். மாண்பமை முதல்வர் தலைவர் கலஞரின் வழியில் அயராத மக்கள் தொண்டில் தன்னை ஒப்படைத்த இம் மண்ணின் நாயகர் தங்கவேலனார் கரத்தில் அறிஞர் பெருமக்கள் விருது பெறவுள்ளனர்.

2010ஆம் ஆண்டு மூன்று பெருமக்களுக்கு விருது வழங்க முடிவெடுத்தோம். முதலாவதாக முத்துவிழாக் காணும் நாயகர், பேரறிஞர் அண்ணா அவ்ர்களால் திராவிட நாட்டில் 1963ஆம் குறிபிடப்பட்ட 252 பெயரில் 7 பெருமக்கள்தான் உள்ளனர் அவர்களுள் ஒருவர் சா.கணேசன் அவர்கள்.சென்னை மாநகரதின் மாநகரத் தந்தையாகப் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் சா.க அவர்களை மேயர் என்றே அழைக்கின்றனர். இன்னார் இனியார் எனப் பாராமல் தொண்டாற்றும் பெருமைக்குரிய பெருந்தகை.சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பன்னாட்டுத்தமிழுறவு மன்றப் பணிகளுக்கு தந்தையின் தோளோடு தோள் நின்று தொண்டு செய்யும் செயல் மறவர். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டிற்கு தம் சொந்த செலவிலேயே பங்கேற்று மாநாட்டிற்கு பெருமைசேர்த்த பண்பாளர்.

இரண்டாவதாக விருது பெறுபவர் கவியரசு செந்தமிழ்ச்செழியன்.புலவர் செந்தமிழ்ச் செழியனாரின் இடிமுழக்கம் நூலைப் படித்தால் பாவேந்தர் கவிதையோ என்று எண்ணும் அளவிற்கு தமிழ் உணர்ச்சி பொங்கி வழியும். சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி தமிழுணர்வுப் பெருமக்களை உருவாக்கியவர்.மிகச் சிறந்த நடிகர் பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்தவர். பட்டிமன்றப் பேச்சாளர். அருமைத்தந்தையரின் சேது காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பெருமைக்குரிய பெரும்புலவர். புலவர்களுக்கேயுள்ள அறிவுச் செருக்கோடு வாழும் செயல் வல்லார்.

மூன்றாவதாக விருதுபெறும் பெருமைக்குரியவர் தூத்துக்குடி மோ. அன்பழகன். சுழழும் தேனீயைப் போன்று பணியாற்றும் தமிழ்த்தொண்டர். தூத்துக்குடி பன்னாட்டுத்தமிழுறவு மன்றக் கிளையின் செயலாளர்.அருமைத் தந்தையார் 1993 ஆம் ஆண்டு நடப்பயணத்தைத் தொடந்து 18 வருட ஊர்திப் பயணங்களுக்கு துணைநின்ற செயல் மறவர். சிறந்த எழுத்தாளர். திருக்குறள் கட்டுரைகள் பல படைத்த படைப்பாளி.

ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.

அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருமகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.

வாழ்க அன்னையின் புகழ்
வளர்க அறக்கட்டளையின் தொண்டு.