Saturday, July 17, 2010

உயிர்த்தமிழ் முதல்வா வாழி


உயிர்த்தமிழ் முதல்வா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

எத்திக்கும் தமிழர் கூட்டம்
ஏற்றமாய் செம்மொழி வெற்றி
தித்திக்கும் அறிஞர் ஆற்றல்
தேர்ந்திட்ட மாநாட்டு வெற்றி
பத்தியம் காப்பது போல்
பார்புகழ் தமிழர் கூட்டி
வித்தக மாநாடு கண்ட
வெற்றியின் முதல்வா வாழ்க


சாத்திரம் சடங்கை ஓட்டி
சரித்திர நம்மின் பாங்கை
சூத்திரம் காண்பது போல்
சுழழ் கண்காட்சி காட்டி
தீத்திற கவிஞர் சான்றோர்
தீந்தமிழ் முழக்கம் காண
காத்த நம்தமிழர் ஒன்றாய்
கூட்டிய மாண்பே வாழி

பழந்தமிழ் சான்றோர் போற்றி
புத்தொளிர் ஆய்வு மன்றம்
களம்பல தலத்தில் கண்ட
கவின்மிகு அறிஞர் கூட்டி
உலகலாம் போற்றும் வண்ணம்
உன்னதத் தமிழின் மாட்சி
பலமெலாம் ஒன்றாய்க் காட்டும்
பைந்தமிழ் வேந்தே வாழி

கட்சியின் வாசம் இல்லை
கவின்மிகு தமிழர் ஒன்றாய்
கூட்டிய தாயின் பாசம்
குழுமிய அரங்கில் கண்டோம்
நாட்டமாய் தமிழில் கற்றோர்
நல்கிடும் அரசின் வேலை
ஊட்டமாய் நூறு கோடி
ஊட்டிய தலைவா வாழி

“கட்டளை இடுக என்றே
கவின்மிகு அறிஞர் மக்காள்”
தட்டுக கதவை என்றே
தூய்மையர் ஏசுவைப் போல்
மொட்டது மலரும் பூவாய்
மொய்த்துள யாங்கள் எல்லாம்
உட்பூசல் கலைந்த எங்கள்
உயிர்த்தமிழ் அறிஞா வாழி

Friday, July 16, 2010

தமிழியக்கங்களின் தாக்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர், தமிழ்ப்பணி

இந்தியாவின் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27-6-2010 ஆம் நாள் நப்பூதனார் அரங்கில் வழங்கிய ஆய்வுக் கட்டுரை

முன்னுரை
தமிழ் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பையும் உணர்வையும் ஊட்டிய பங்கு திராவிட இயக்ககங்களைச் சாரும். இந்திய விடுதலைக்கு பேராயக் கட்சியின் பங்களிப்பு மகத்தானது. தமிழ் தமிழர் விடுதலைக்கு திராவிட இயக்கங்களே வித்திட்டன. திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார். தமிழர்கள் யார் என்பதை தனக்குத்தானே உணரவைத்தவர். தமிழர் மறுமலர்ச்சிக்கு தன்மானத் தளபதிகளை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் பாசறையாக இருந்த பெருமைக்குரியவர். தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் சமுதாய இயக்கமாயிற்று.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்திதிணிப்பு அறிவிப்பு மிகப்பெரும் மொழிப் புரட்சியை உருவாக்கியது. பெரியாரிடமிருந்து அவரது வழித்தோன்றல்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெருந்தலைவர்கள் தோற்றுவித்த திராவிட முன்னேற்றக்கழகம் மொழிவிடுதலை இயக்கமாக மாறி மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. தி.மு.கவின் கொடிக்கு வண்ணம் தேர்ந்தெடுத்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருப்பின் மேல் தன் விரலைக் கீறி இரத்தத்தை வைத்து இருவண்ணக்கொடியை உருவாக்கினர். புரட்சிகரமான வேகத்தோடு மொழிப்போராட்டமும் திராவிட முன்னேற்றக் கழ்கத்தினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத்,கே.ஏ.மதியழகன் பேராசிரியர் க.அன்பழகன், போன்ற தனிப்பெருந் தலைவர்கள் சொற்பெருக்காற்றி தமிழுணர்வர்வாளர்களை கிளர்ந்தெழச் செய்தனர். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் பெயரளவிலேயெ இருந்தது

பேரறிஞர் அண்ணா தலைமையில் மும்முனைப்போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்டது. தாய் மொழிக்காக தன் இன்னுயிரை தீக்குளித்துத் துறந்தனர். கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன், பீளமேடு தண்டபாணி, சத்திய மங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், கீரனூர் முத்து, வீராலிமலை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி போன்ற தமிழ்ப்போரளிகள். மொழிக்காக உயிரை ஈகம் செய்த பெருமைக்குரிய ஈகவான்கள். உலகில் தமிழினம்தான் மொழிக்காக ஈகம் செய்த இனம்.

தமிழ் நாட்டில் ஏற்படுகின்ற புரட்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர்தான் காரணம் என்று அன்றே குற்றம் சாட்டி பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்,இந்தியை எதிர்த்து 63 நாட்கள் தனிமைச் சிறையில் வாடினார். கல்லக்குடியில் தமிழுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் தண்டவாளத்தில் தலையை வைத்துப் உயிரை துச்சமாக நினைத்துப் போராட்டம் நடத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். தம் வாழ்நாளை சிறையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் தியாகம் செய்த பெருமைகுரியவர்கள் தி.முகவினர்.

மொழியுணர்வால் தமிழ்கத்தின் ஆட்சிப்பொறுப்பு தி.மு.க என்ற பேரியக்கத்தின் தலைமையில் அமைந்தது.பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். தமிழை முன்னிறுத்தி ஆட்சி அமைந்ததால் அனைவர் நாவிலும் தமிழ் முழங்கின. சட்டமன்றம், மேலவை, பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நிதிநிலை அறிக்கை போன்ற சொற்களெல்லாம்
நடைமுறைக்கு வந்தன. மக்கள் மொழியும் விவாகம் திருமணமாகவும், நமசுகாரம் வணக்கமாகவும்,சமாச்சாரம் செய்தியாகவும்,நாசுட்டா சிற்றுண்டியாகவும் தமிழ்ச்சொற்கள் தமிழர்களால் நடைமுறை வழக்கில் வந்தன.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மெட்ராச் சுடேட் என்றிருந்த தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றச் சட்டத் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற மாற்றத்திற்கு தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரைக் குறிப்பிட்டார் முதல்வர். அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று மூன்றுமுறை முழங்க உறுப்பினர்கள் வாழ்க! வாழ்க! என முழங்கி தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பை நிலைப்படுத்தினார்.

இந்தியாவிலேயே மொழியின் பெயரால் பெயர் பெற்ற சிறப்பைப் பெற்றாலும் இது நாள்வரை தமிழிற்கு எந்த நிலையிலும் தமிழ்நாட்டில் முதன்மை கிடைக்கப் பெறவில்லை. தமிழ் நாட்டில் தமிழுக்கு இயக்கம் வேண்டும் என்ற கொள்கையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தம் கவிதைகள் வழியும் உணர்வோடு பாடுபட்டார். புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேடைகள்தோறும் உணர்ச்சி பொஙகப் பாடினர். தமிழின உணர்வை மீட்டிய பெருமைக்குரியவர் பாவேந்தர்.

அறிஞர் பெருமக்கள் கா.அப்பாதுரையார்,மொழிஞாயிறு தேவனேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கனார், வேலா.அரசமாணிக்கனார், முனைவர் தமிழ்க்குடிமகன் போன்ற பெருமக்கள் தொடர்ந்து தமிழை முன்னிறுத்த அயராது பாடுபட்டனர்.
இருமொழிக் கொள்கையின் வேகம் காலப்போக்கில் தமிழுக்கு முதன்மையின்றி ஆங்கிலத்திற்கு முதன்மையாயிற்று.ஆங்கிலத்தின் ஆதிக்கம் மழலையர் பள்ளிகளில் பெருகின. தமிழே படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆகலாம் என்ற அவல நிலை உருவானது.

தமிழ்நாட்டில் ஆட்சித் துறையில் அலுவல்மொழியாக தமிழ் இல்லை, கல்வித்துறையில் பயிற்றுமொழியாக இல்லை, நீதித்துறையில் வழக்காடும் ,மொழியாக இல்லை,ஆலயத்தில் வழிபாட்டு மொழியாக இல்லை.இந்நிலையைப் போக்க தமிழ்நாட்டில் உணர்ச்சிமிகு இயக்கங்கள் தோன்றின.பன்னாட்டுத் தமிழுறவுமன்றம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்,தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழகத் தமிழாசிரியர் கழகம்,பாவேந்தர் இலக்கியப் பேரவை, தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம், கலைஞர் கருணாநிதி இலக்கிய வட்டம், தமிழ் வளர்ச்சிப்பேரவை, பாவேந்தர் பாசறை, பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம்,திருக்குறள் பேரவை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் நற்பணி மன்றம். உயிர்மெய்த் தமிழ்ச்சங்கம் ,தமிழ் மீட்புப் பேரவை, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, செந்தமிழ் விரும்பிகள்மன்றம், தமிழ்த் தன்னுரிமை இயக்கம், தையற் கலைஞர் தமிழ்ப் பேரவை, இலக்கியப் பண்ணை, தமிழ்ச் சுரங்கம் போன்ற தமிழ் இயக்கங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைக்குப் போராட்டங்கள், உண்ணாநோன்பு, மறியல், தெருமுனை விளக்கப் பொதுக் கூட்டம் தமிழ் மேம்பாட்டு மாநாடு என தமிழ்க் களம் கண்டுள்ளன.

1993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கன்னியா குமரியிலிருந்து சென்னை வரை 1330 கி.மி. 50 நாட்கள் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப்பயணமாக வந்தனர். பட்டி தொட்டியெல்லாம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கொள்கை முழக்கமிட்டு தமிழுக்காகப் போராடினர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அன்றைய முதல்வர் செயலலிதாவை நேரில் அறிக்கை கொடுக்கச் சென்றபோது அலுவலரே வாங்கினர்.முதல்வரை சந்திக்கக கூட வாய்ப்பளிக்கப்படவில்லை.

தஞ்சையில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அறிஞர் பெருமக்கள் ஒன்பது தமிழ்க் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர். 1-1-1995 ஆம் நாள் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,புலவர் சுந்தரராசன் ,புலவர்.வேதிருவேங்கடம், புலவர் ப.சாத்தன், இரா.பத்மநாபன் போன்ற பெருமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறைப்பட்டவர்கள் பிணையில் வர மறுத்ததால் மாநாடு முடிந்த பிறகே விடுதலை ஆகினர். தமிழ்ச் சான்றோர்கள் கைதைத் தொடர்ந்து ஊர்கள்தோறும் பல மன்றங்கள் சங்கங்கள் அறிஞர்கள் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி கண்டித்தன.

25-4-1999 அன்று தமிழ்ச் சான்றோர் பேரவையோடு தமிழ் இயக்கங்கள் அடையாறு நா.அருணாச்சலத்தோடு இணைந்து மிகப் பெரிய உணர்வுப் போராட்டமான பட்டினிப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு தமிழகம் முழுமையும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலோடு இருந்தனர். இறுதியாக 102 பெருமக்கள் சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தனர்.அறிஞர் தமிழண்ணல் தலைமையில்
1.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் இருந்திட வேண்டும். 2.பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட உயர்கல்விகள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே தொடங்குதல் வேண்டும். 3. தமிழ்ப் வழிப் படித்த்வர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழ்ங்கப்படுதல் வேண்டும் என்ற கொள்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்தனர் .
போராட்டக் குழுவின் சார்பில் பேராசிரியர் தமிழண்ணல் ,நா.அருணாச்சலம், பெ.மணியரசன்,தோழர் தியாகு உள்ளிட்டோர்அரசோடு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
தமிழக அரசு உண்ணா நோன்பு இருந்தோரின் உணர்வுகளை மதித்து அமைச்சர் தமிழ்க்குடிமகன் வழி மறுநாள் காலை 8.30 மணிக்கு உண்ணாநோன்பை முடித்து வைத்தார். பெருங்கவிக்கோ வாமுசேதுராமன், கயல் தினகரன் போராட்டக் குழுவிற்கும் அரசுக்கும் பாலமாக இருந்து செயல்பட்டனர்.


தமிழக அரசின் அறிக்கையில் “ஒன்று முதல் ஐந்துவகுப்புகளுக்குரிய தொடக்கப் பள்ளிகள் நாடு முழுவதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி தமிழ் மொழிப்பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் இருத்தல் வேண்டும் என்ற கொள்கையில்தமிழ் அறிஞர்களுக்கும் தமிழக அரசுக்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. இக் கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ஏப்ரல் 30க்குள் ஒரு குழு அமைக்கப்படும் மே 31க்குள் அக் குழுவிடம் பரிந்துரை பெற்று வரும் கல்வி ஆண்டிலேயே அதனை நடைமுறைப்படுதுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்யும்.” என பண்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அரசின் உறுதிமொழிப்படி தமிழ் வழிக் கல்விக்கான வழிவகைகளைக் கண்டறிய நீதிஅரசர் மோகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழுவில் முனைவர் வா.செகுழந்தைசாமி, முனைவர் ச,முத்துக்குமரன் புலவர் இரா.இளங்குமரன், முனைவர் தமிழண்ணல் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

மோகன்குழு அறிக்கையின்படி தமிழக அரசு தமிழ்ப்பாடத்தை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தது. ஆங்கிலக் கல்வி வழங்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் நீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்றனர். பணத்தை ஆங்கிலக் கல்வியைக் காட்டி திரட்டி மக்கள் அறியாமையை பயன்படுத்தி தமிழ்வழிக் கல்விக்கு பெரும் தடையாக உள்ளனர்.
மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோதே தமிழ் வழியாகக் கல்வியைக் கொணர்ந்தார்.அப்போதே தமிழ்ப் பகைவர்கள் ஆங்கிலத்திற்க்கு வக்காளத்து வாங்கினர்.தமிழ் ஒழிக ,ஆங்கிலம் வாழ்க என்ற உச்சநிலையில் எதிர்த்தனர். சிலம்புச்செல்வர் ம.பொ.சி, முத்தமிழ்க்காவலர் கீ.ஆ.பெ.வி., தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் வேண்டுகோளிற்கிணங்க தளர்த்தினார் கலைஞர்.


தற்போது ஐந்தாம் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் மாண்புமிகு கலைஞர். இன்னும் தமிழ் நாட்டில் தமிழே பயிலாமல் பட்டம் பெறலாம் என்ற இழி நிலையைக் கண்ட கலைஞர் முதல் வகுப்பிலிருந்து தமிழ் கட்டாயம் என சட்டம் கொணர்ந்து நடை முறைப்படுத்தியுள்ளார்.

தமிழால் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.முக. தமிழ் வழிக் கல்விக்கும் தமிழ் உயர்வுக்கும் செய்தது என்ன. கால்கள் கொப்பளிக்க எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்கு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பெருங்கவிக்கோ தலைமையில் நடந்து வந்த நடைப்பயணக் குழுவினரை முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு முதல்வர் செயலலிதாவைக் கோட்டைக்குச் காணச் சென்றபோது நேரில் கூட அறிக்கையைப் பெறவில்லை.தமிழ் இயக்கவாதிகளின் உணர்வை உணராத அரசாக இருந்தது.

தஞ்சையில் நடந்த 8ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் உண்ணாநோன்பு இருக்கச் சென்றபோது அடித்து இழுத்து சிறையில் தள்ளினர். தமிழ் உணர்வை தமிழ் மாநாட்டிலேயெ நிலைகுலையச்செய்த அரசு அ.தி.மு.க அரசுதமிழைச் செம்மொழி ஆக்குவதற்கு மாண்புமிகு முதல்வர் கலைஞரின் சிந்தனையும் செயலும் முன்னோடியானது.தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை தமிழக அரசின் வாயிலாக மைசூர் செம்மொழிவாரியத்திற்கு பரிந்துரைத்து செயல்வடிவமாக்கினார்.

தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்கு தமிழ் இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளன.பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தலைநகர் தமிழ்ச் சங்கம்,பெங்களூர் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழ் செவ்விவியல் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உண்ணாநோன்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு 135 தமிழ்ப் பெருமக்கள் தில்லியில் 18-8-2003 அன்று
உண்ணாநோன்பு போராட்ட்டத்தில் பங்கேற்றனர். மாண்பமை அர்சியல் பெருமக்கள் மத்திய அமைச்சர்கள் போராட்டக் களத்தில் வாழ்த்துரைத்தனர். உண்ணா நோன்பு முடித்து அன்றைய பாரதப் பிரதமர் வாச்பாய் அவர்களை போராட்டக் குழுவினர் சந்தித்து அறிக்கை வழங்கினர்.குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்தனர். இப் போராட்டத்தில் தம் சொந்த செலவிலேயே தமிழகத்திலிருந்து தில்லிக்கு வருகை தந்து போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் இயக்கவாதிகளின் உணர்வு மகத்தானது. தமிழை எல்லா நிலைகளிலும் உயர்த்த தமிழ் இயக்கங்களின் ஈகத்தை இப் போராட்டங்கள் மூலம் உணரலாம். மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த உண்ணாநோன்பு குறித்து முரசொலியில் கடிதம் எழுதி உணர்வுக்குத் தலைமைதாங்கினார்.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு முதல்வர் கலைஞரின் அயரா முயற்சியால் 40/40 வெற்றிபெற்று ஆட்சி அமைத்தனர். அன்னை சோனியா தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. மைசூரிலிருந்த செம்மொழி வாரியத்தை சென்னைக்கு மாற்றி கட்டிடமே எழுப்பி திறப்பவிழாக் கண்டார் நம் மாண்புமிகு முதல்வர் கலைஞர். தம்முடைய சொந்தத் தொகையில் ரூபாய் ஒரு கோடி வழங்கினார். ஆண்டு தோறும் ரூபாய் பத்து இலட்சம் கலைஞர் செம்மொழி விருதாக செம்மொழி மேம்பாட்டு வாரியம் வழங்குகிறது.தமிழ் மேம்பாட்டு வாரியத்தில் ஆய்ந்தறிந்த தமிழ் அறிஞர் பெருமக்களை ஐம்பெருங்குழு எண்பேராய உறுப்பினர்களாக நியமித்து தமிழிற்கு மிகச் சிறந்த தொண்டாற்றி வருகின்றனர்.

தமிழியக்கங்களின் உணர்வுக்கு இது நாள் வரை கலைஞர் அரசுதான் செவிசாய்த்து தமிழ் உணர்வை மேலோங்கச் செய்துள்ளது.மேலும் தமிழ் இயக்கங்களின் பணிகள் தொடரவேண்டும்.தனித்தனி தீவுகளாக இருக்கும் தமிழ் இயக்கங்கள் ஒன்றுபட்டு மக்களிடம் தமிழ் உணர்வை மீக்கெழச் செய்யவேண்டும். ஓன்றுபட்டுப் போராட வேண்டும்.

முடிவுரை
தமிழ் நாட்டில் தமிழிற்கு ஓரளவு முன்னேற்றம் – மாற்றம் உருவானது தமிழியக்கங்களின் தாக்கங்களினால்தான். நாம் தாய்மொழியாம் தமிழ் நாட்டில் அனைத்துத் துறையிலும் முதன்மை பெற, இந்திய ஆட்சிமொழியாக தமிழ் அரியனை ஏற தமிழ் இய1க்கங்களின் பொறுப்பில்தான் உள்ளது. தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக வாழும் கலைஞர் காலத்திலேயே நடைபெறும் என்பது திண்ணம்.

Tuesday, May 25, 2010

போற்றிடும் தமிழே வாழ்க

போற்றிடும் தமிழே வாழ்க
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்,


திராவிடச் சொல்லில் வாழும்
திண்ணிய நெஞ்சர் எம்கோ
தீரராம் தமிழர் வாழ்வின்
திக்கெட்டும் வாழும் எம்கோ
பரவிடும் சாதிப் பேயை
பொசுக்கிடும் கொள்கைத் தங்கம்
துறவியாய் என்றும் வாழும்
துன்பத்தை துரத்தும் சிங்கம்

அருவிகள் தோற்கும் இன்ப
அமுதமாய்ப் பொழியும், சொற்கள்
தருவதில் பேகன் பாரி
தாண்டிய இல்லோர் செம்மல்
உறுதியில் எக்கும் தோற்கும்
உன்னத உழைப்புத் தேனீ
கருதிடும் செயலின் வாழ்வாய்
கழகத்தைக் காக்கும் எம்கோ

விம்மிய வாழும் ஏழ்மை
விரட்டிட அண்ணா சொன்ன
நம்மனக் கலைஞர் ரூபாய்
நயத்தகு அரிசி தந்தார்
எம்மினம் உயர்ந்து வாழ
ஏற்றமாய் நிலமும் தந்தார்
தெம்புடன் வாழஎரி வாயு
தக்கவர் தந்த எம்கோ

செம்மொழிச் சிறப்பை நன்றாய்
செழுமையாய் பெற்ற எம்கோ
நம்மொழி உலகோர் கூட
நயத்தகு மாநாடு கண்டார்
மும்மொழி வையச் சான்றோர்
முழுமையாய் கோவை கூட்டி
செம்மொழித் திறனை ஏற்றும்
செம்மொழிக் கலைஞர் வாழி

முதுமையும் மிரண்டு ஓடும்
முத்தமிழ் அறிஞர் எம்கோ
எதுஎது நமது சொந்தம்
ஏற்றமாய் வழங்கும் எம்கோ
பதுமையாய் பகட்டாய் வாழும்
பாதகி துரத்தும் எம்கோ
விதிஎன வாழும் நம்மோர்
வீரத்தை எழுப்பும் எம்கோ

சதிவலை கண்டு நீக்கி
சாதனை படைக்கும் எம்கோ
கதியிலா ஏழ்மை மக்கள்
காத்திடும் வறியார் தோழன்
புதியன படைக்கும் சிற்பி
புத்தமுது தொல்காப்பியம் தந்தோன்
விதிகளை சமைக்கும் எங்கள்
வித்தகத் தலைவா வாழ்க

நூற்றாண்டு கடந்து எந்தன்
நுண்ணறி குடியைக் காக்க
காற்றினைப் போன்று எங்கள்
கடைமைசெய் பேறே வாழ்க.
தூற்றிய பகையோர் எல்லாம்
தூயஉன் அடிகள் பற்றி
போற்றிடும் தமிழே எம்கோ
புண்ணிய நீடு வாழ்க

Friday, April 30, 2010

காவியச் சான்றோன் தி.க.ச புகழ் வாழ்க!

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர், தமிழ்ப்பணி

திராவிட இயக்கத் தோன்றல்
தீந்தமிழ் வளர்த்த தென்றல்
போராடும் குணமோ சொந்தம்
பொங்கிடும் அன்புச் சந்தம்
நேரான பார்வைச் சான்றோன்
நேர்நிறை காணும் மூத்தோன்
வேராகக் கழகம் காககும்
வேந்தர் அன்பழகர் வாழி!

நிமிர்ந்த நன்நடையின் ஆற்றல்
நிகரிலா அரிமா நோக்கு
பூமியின் சுழற்சி போன்றே
புவியுள தமிழர் காத்தார்
எழுந்துள அறவோர் தம்மை
ஏற்றியே போற்றும் நெஞ்சம்
தொழுதிடும் குணங்கள் கொண்ட
தொல்புகழ் அன்பழகர் முன்னே

வணங்கியே வணக்கம் சொன்னேன்!

வான்புகழ் திகச எண்ணி
வந்துள அருமைச் சாண்றோர்
சொந்தமாய் திகச போற்றும்
சார்ந்துள நடிக வேள்கள்
முந்திடும் தமிழை ஏந்தும்
முத்தமிழ் அறிஞர் மக்காள்
வந்துமே வணக்கம் சொன்னேன்
வாழிய உங்கள் கொற்றம்
.

நாடகக் கலையை நன்றாய்
நாட்டிய கொள்கைக் கோமான்
தேடரும் கலையின் வித்தாய்
தோன்றிய அறத்தின் சான்றோன்
பீடுறு அவ்வைப் பாட்டி
பெற்றிமை வாழ்க்கை காட்டி
பாடிடும் வாழ்வாய் வாழ்ந்த
பார்புகழ் திகச அன்றோ!

நாட்டையே இன்றும் ஆளும்
நாயகர் கலைஞர் எம்மான்
நாடகக் கலையில் வேந்தை
நல்தொல் காப்பியர் என்றார்!
காட்டிடும் திரையில் இன்றும்
காவியச் சான்றோன் பேரால்
கேட்டிடும் அவ்வை சண்முகி
கேண்மையின் சிறப்பு அன்றோ!

தமிழரின் ஆட்சிப் பேற்றை
தலைமையாய் முதலாய் வென்ற
எமின்இன ஏந்தல் அண்ணா
ஏற்றாமாய் மேலவை மன்றம்
நமின்அவ்வை நாடக மேதை
நாட்டமாய் கலைக்குத் தந்தார்
தமிழரின் கலைவாழ்வுச் செம்மல்
தகுதியாம் அவ்வை அன்றோ!

மலேசியா சிங்கை சென்றார்
மாசிலா கலையால் வென்றார்!
தலம்புகழ் நாடகச் செல்வர்
தக்கநல் மாட்சி அன்றோ!
உலகெலாம் விரிந்து நிற்கும்
உன்னதக் கலையின் வேந்தர்
தலமெலாம் இன்றும் பேசும்
தவநெறி அவ்வைச் சான்றோன்!

இந்திய நாட்டில் எங்கும்
இணையிலா நாடகக் காட்சி
சிந்தனைக் கலைஞர் எல்லாம்
சீர்மிகு வாழ்வைப் பெற்றார்
செந்தமிழ் மக்கள் நாவில்
செந்தேனைப் போன்றே நன்று
நம்தமிழ் காத்த மேலோன்
திகச புகழே வாழி!

பாரத நாட்டின் மேன்மைப்
பத்மசிறி பட்டம் பெற்றார்
சீர்மிகு நடிகர் காக்க
சிந்தனை இதழைக் கண்டார்!
வேரதாம் தம்மின் வாழ்க்கை
வியத்தகு நூலை யாத்தார்
வரலாறு காக்கும் வாழ்வாய்
வாழ்ந்த நம்அவ்வைச் சான்றோன்


வழிவழி மக்கள் பெற்றார்
வாஞ்சையாய் கலையும் தந்தார்
பொழிவுடன் தமிழை ஏந்தி
புகழ், கலைவாணன் சேர்ந்தே
தெளிவுடை அமெரிக்கா மண்ணில்
தேர்ந்தநல் நாடக காட்சி
களிப்புடன் தந்தை போற்றும்
கலைவழி மக்கள் வாழ்க!

தந்தையின் பெயரைத் தாங்கி
தனித்தமிழ் காக்கும் பிள்ளை
செந்தமிழ் இசையைப் பாரில்
செழுமையாய்ப் பாடும் பாடல்
சிந்தனைச் சங்கரதாசு மன்றம்
சீர்மிகு சான்றோன் வழியில்
செந்தமிழ்க் கலைவாணண் காக்கும்
செயலறம் வாழி! வாழி!

பத்மசிறீ தி.க.சண்முகம் 98ஆம் அகவை விழாவில் 26-04-2010 அன்று மாண்பமை பேராசிரியர்.க.அன்பழகனார் தலைமையில் சென்னை இராணி சீதை மன்றத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடிய கவிதை.

Saturday, April 24, 2010

கற்புக்கரசி கண்ணகி

கற்புக்கரசி கண்ணகி

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர் தமிழ்ப்பணி

ஐம்பெரும் காப்பிய மாநாடு மலேசிய ஈப்போ நகரில் நடைபெறுவது போற்றி மகிழத் தக்கது. ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றி தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் ஆய்வு மழை ஈப்போ நகரில் பொழிய உள்ளனர்.மாநாட்டினை நடத்தும் ஆசிரியமணி இரா.மாணிக்கம் தமிழக மலேசிய தமிழ் நெஞ்சங்களின் ஒப்புரவாளர் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன. அதிமுக ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றியபோது தமிழகமே அச் சிலையை நிறுவ போராடியது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்பமை கலைஞர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சிப் பெருமக்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.பன்னாட்டுத் தமிழுறவுமன்றத்தின் சார்பில் யானும் பங்கேற்று முழங்கினேன்
.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை பெருங்கவிக்கோ தலைமையில் கண்ணகிச் சுடரை ஏந்தி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் கலைஞரின் திருக்கரத்தில் வழங்கினோம். மீண்டும் அதேஇடத்தில் நிறுவினார் மாண்பமை முதல்வர் கலைஞர்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.முதல்வர் கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்
”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.

கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் காணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”
என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

Saturday, April 17, 2010

மடமையைச் சாய்த்தல் என்றோ?

பக்தியாம் போலி வேடம்
படித்தவன் போற்றும் ஈனம்
சக்தியாய் தனனைக் காட்டி
சாய்த்திடும் மனித நேயம்
வக்கிர நெறியில் வாழ்ந்தே
வனிதையர் கற்பை சாய்த்தே
முக்தியை காணும் மோக
மடமையைச் சாய்த்தல் என்றோ?

இயல்பினால் வாழ்க்கை வாழ
இயலாத மடமைச் சாமி
புயலென காமம் தேக்கி
புரிந்திடும் அவலம் ஏனோ?
செயல்நெறி உணரா மக்கள்
செறிந்துள அறிவை மாய்த்து
முயற்சியின் அருமை தன்னை
முயலாது செல்தல் தானே!

பெரியார் தோன்றிய மண்ணில்
பேதமை தொடரும் மோசம்
அறியாமை வீழ்த்திய அண்ணா
அகவழி வெல்தல் என்றோ?
நெறியிலா பக்திச் சாயம்
நிலையான உருவாய்ச் சேர்க்க
புரியாத மக்கள் தம்மை
புதைகுழி தள்ளல் நன்றோ?

நித்தியா நந்தன் லீலை
நீசத்தை நாளும் காட்டி
எத்திசை மக்கள் எல்லாம்
ஏசியே முகம் சுழிக்க
பத்தியம் குடும்பம் காக்கும்
பாவையர் கொதித்தல் வீணோ?
சத்தியம் வாழ்க்கை என்றே
சாக்கடைக் குளியல் அன்றோ!

பக்தியை விற்கும் வேடம்
பரத்தையர் சேர்க்கும் ஓலம்
சக்தியே தானே என்றே
சந்ததி அழிக்கும் மோசம்
புத்தியைக் கூர்மை ஆக்கி
புவியினில் மடமை சாய்த்தே
நத்திடும் இயல்பின் வாழ்க்கை
நாடிடும் நாள்தான் என்றோ?

Wednesday, April 7, 2010

ஒர் தமிழனின் புலம்பல்

ஒர் தமிழனின் புலம்பல்

தமிழ் ஈழ மாயையில்

சிக்கியதால்….



தமிழர்;

மதியிழந்தனர்..

அறமிழந்தனர்..

கல்வியிழந்தனர்…

தனமிழந்தனர்…

தரமிழந்தனர்..



மானமிழந்தனர்..

பதியிழந்தனர்..

உயிரிழந்தனர்..

பாலரையிழந்தனர்..

தாரமிழந்தனர்..

தந்தையிழந்தனர்…

தாயையிழந்தனர்..

சகோதரனையிழந்தனர்…

துணையிழந்தனர்…

சுற்றமிழந்தனர்…

சூழலிழந்தனர்…



கதியிழந்தனர்…

நெறியிழந்தனர்…

நேர்மையிழந்தனர்…

கலையிழந்தனர்…

மறையிழந்தனர்…

பண்பிழந்தனர்….

தவமிழந்தனர்…

தானமிழந்தனர்..

நிலைகுலைந்தனர்…

ஆனால்……தமிழர்;

மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்





விடுதலைக்காக

அடிமைகளாயினர்.



விடிவிற்க்காக…

இருட்டில் தள்ளப்பட்டனர்…

வழி தவறினர்.



பிள்ளைகள் கடத்தப்பட…

பெற்றோர் பதறினர்,

உற்றோர் வருந்தினர்;

தமிழர் தமிழனை தமிழின் பெயரால்

அழிப்பதை கண்டேங்கினர்;



போர் களத்தில்,

உயிர்க்கேடயம் ஆகினர்;

வாழ்விற்கும் சாவிற்க்கும்

இடையே விழிம்பில் பரிதவித்தனர்;



அழிவின் மத்தியில் ஆக்கம்

இறப்பின் மத்தியில் பிறப்பு

பாவத்தின் மத்தியில் புண்ணியம்

கோரத்தின் மத்தியில் கருணை

அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.



உயிரைப் பேணாக் கேவலம்;

பொய், பிரட்டு, சூது, வாது,

கொலை, கொள்ளை,

அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,

கண்டனர்.



மூத்தோர் இருக்க

இளையோர் மாண்டதை..

தம்முயிரைக்காக்க

காயமுற்றோரை கைவிட்டதை…

தம்முயிரின் மேலாக

மற்றயோரதை பேணியமையை

எதிரியின் கருணையை கண்டனர்.



இன்று,

அகதிகளாய்..

ஊனமுற்றோராய்…

விதவைகளாய்…

நடைபிணங்களாய்…

நாதியற்றோராய்….

கையேந்தி நிற்போராய்…

கைதியாய்….

இருக்கும் தமிழருக்கு

தீர்வு என்ன?



இது போதாதென்று

களம் இறங்கியுள்ளனர்

தமிழ் அரசியல் கழுகுகள்..

தேர்தல் பெயரில்

பிணந்தின்ன..



கடவுளே!

போதும் நாம் பட்டபாடு..

முதலில் காப்பாற்று எம்மை

இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….



கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.