Tuesday, February 22, 2011

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டு விழா



சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 76ஆம் அகவையில் 9-2-2011 அன்று சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டுவிழா சந்திரசேகர் திருமணமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். பத்மசிறீ ஒளவை நடராசன் வெளியிட காவியக்கவிஞர் வாலி பெற்றுக்கொண்டார். இருவரும் பெருங்கவிக்கோவின் காவியச் சிறப்பைக் கூறி வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிலம்பொலி செல்லப்பனார், முன்னாள் மேயர் சா.கணேசன் கவிவேந்தர் மேத்தா, பேராயக் கட்சியின் தலைவர் இதயதுல்லா, பேராசிரியர் ச.முத்துக்குமரன், முனைவர் அ.இராமசாமி, மாம்பலம்.ஆ.சந்திரசேகர், புலவர் செந்தமிழ்ச்செழியன், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் மறைமலை, தலைமையில் சேதுகாப்பியம் ஆய்வரங்கம் நடைபெற்றது. முனைவர் இராசகோபாலன், முனைவர் பேராசிரியர் குமாரவேலு, உலகநாயகி பழநி, கவிஞர்.நவநித கிருட்டிணன் ஆய்வுரை வழங்கினர்.

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் தொகுப்புரை வழங்கினார்.மன்றச் செயலர் கவிச்சிங்கம் கண்மதியன் நன்றியுரை வழங்கினார்

Saturday, February 19, 2011

சென்னையில் அறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழா தமிழர்தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினர்



தமிழ்ப்போராளி அறிஞர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை அண்ணாநகர் தமிழ்ச்சங்கமும் இலக்கிய்வ வீதி அமைப்பும் சென்னையில் வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது.

இலக்கியவீதி இன்யவன் அனைவரையும் வரவேற்று உரயாற்றினார்.அண்ணாநகர் தமிழ்ச்சங்க புலவர் இராமலிங்கம் முன்னுரை வழங்கினார்.பேராசிரியர் க.திருமாறன் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்கட்கு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன்,தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி,முன்னாள் ஆட்சியர் இலட்சுமிகாந்தன் பாரதி, சிலம்பொலி செல்லப்பனார்,பெருங்கவிக்கோ.வா.மு.சேதுராமன், கவிமுரசு வா.சே.திருவள்ளுவர் உள்ளிட்ட பெருமக்கட்கு வழங்கப்பட்டது.

இலக்குவனாரின் திருமக்கள் பொறிஞர் திருவேலன்,முனைவர் மறைமலை,தமிழ்க்காப்பு திருவள்ளுவன் உள்ளிட்ட பெருமக்கள் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருது வழங்கி், விருந்து படைத்து மகிழ்ந்தனர்.

Friday, February 18, 2011

திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்ப்பணிச்செல்வர் விருது


திருச்சியில் தமிழ்த்தாய் அறக்கட்டளை, எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்கள்,உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு 22,23,-1-11 ஆகிய இருநாட்களில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்சியில் அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கப் பட்டது. அதுபோது கவிமுரசுவா.மு.சே.திருவள்ளுவருக்கு மாணபமை மத்திய நிதி இணையமைச்சர் திருக்கரத்தால் தமிழ்ப்பணிச் செல்வர் எனும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மாநாட்டிற்கு செம்மொழி நிறுவன பொறுப்பு அலுவலர் க.இராமசாமி,பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், மாண்பமை வணிகவரித்துறை அமைச்ச சி.நா.மி.உபயதுல்லா,கடவூர் மணீமாறன் பனப்பாக்கம் சீத்தா, தாளாளர் யூனுசு, மற்றும் எழுத்தாளர் பெருமக்களும் கவிஞர் பெருமக்களும் ஆய்வாளர்களும் பெருமளவில் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.

இரண்டு நாள் மாநாட்டையும் உடையார்கோயில் குணா, முனைவர் மன்சூர் மிகச்சிறப்பாக நடத்தினர்.

Friday, February 4, 2011

தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ் ஆட்சிமொழி மாநாடு


(25-1-11 அன்று சென்னையில் நடந்த மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

இந்தியாவின் ஆட்சிமொழியில் தமிழ் இடம் பெறவும், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்கவும் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கருத்துக்களைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் புலவர் சுந்தரராசன் அவர்க்ளும் இணைபிரியாத களப் போராளிகள். வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் காலையில் உரையாற்றிச் சென்றுள்ளார்கள்.

தமிழ்ச் செம்மொழிப் போராட்டத்தில் தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் மற்ற அனைத்து தமிழ் அமைப்புகளும் இணந்து தலைநகர் தில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கண்முன்னே வருகிறது. அதில் கலந்து கண்ட அறிஞர் பெருகமக்கள் பலரை இத் தலைநகர்த் தமிழ்ச் சங்கக் சொந்தக் கட்டிடத்தில் காண்பதில் பேருவகை கொள்கின்றேன். பெங்களூருவிலிருந்து வருகை தந்திருக்கும் கா. சுப்பிரமணீயம் குழுவினர், நாமக்கல்லிலிருந்து வருகை தந்திருக்கும் சுப்பண்ணன் குழுவினர்,பேராசிரியப் பெருமக்கள் இந்திராணி மணியம், சரளா இராச கோபாலன், மற்றும் அனைத்துப் பெருமக்களும் இங்கே பங்கு பெற்றிருப்பது நாம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்ற தன் இன்னுயிரை ஈந்தார். பேறறிஞர் அண்ணா அவ்ர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றி, சட்டமன்றத்தில் மும்முறை தமிழ்நாடு என அண்ணா முழங்க அனைவரும் வாழ்க என முழங்கி இன்றும் யாம் தமிழ் நாடு என மன மகிழ்வோடு வழங்கி வருவது வரலாறு.

நாமெல்லாம் கூடி செம்மொழி போராட்டக் குழு அமைத்தபோது நமக்கு களம் அமைத்து போராட்டத்திற்கு பலம் சேர்த்த பெருமகன் நம் முதல்வர்கலைஞர். அரசியலில் 40\40 என தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பால் மத்திய அரசைப் பணியவைத்து நமக்கு செம்மொழித்தகுதியை பெற்றுத் தந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று. கலைஞரை தமிழினம் காலம் காலமாகப் போற்றும்,

உலகமே வியக்கும்வண்ணம் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழின் பெருமையை உலகில் தலைநிமிரச் செய்தார்.செம்மொழி நிறுவனம் சார்பில் உலகத் தரம் வாய்ந்த விருதுகள், கருதரங்குகள், பல்வேறு விருதுகள் வழங்கி் செம்மொழித் தகுதியை வரலாறாகப் பதித்துள்ளார்.

பகச்சொல்லி கேளிர் பிரிப்பர்நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்

என்ற வள்ளுவப் பெருமான் குறளுக்கொப்ப நம்மிடம் உள்ள குறைகளை கூறாமல் நன்மையைப் பேசி கூடி போராட்டத்தில் வெற்றிபெற வழிவகை காண வேண்டும்.

அறிஞர் சி,யூ.போப் மொழிபெயர்த்த திருக்குறள் உரையை படித்த இரசிய அறிஞர் டால்சுடாய் அண்ணல் காந்தியடிகளுக்கு திருக்குறளைப் பற்றி எழுதியுள்ளார். திருக்குறளைப் படித்த காந்தியடிகள் தாய் மொழியாம் தமிழில் மூலத்தை படிக்க வேண்டும் என்ற அவாவைப் பதிவு செய்துள்ளார். இந்த செய்தியே திருக்குறளை தேசிய நூலாகவும் தழிழை ஆட்சிமொழியாகவும் ஆக்க மத்தியில் ஆளும் பெருமக்களுக்கு அறிவுருத்தலாம்.

உலக மொழியாக தமிழ் வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்களே உலகில் எல்லாப் பகுதியிலும் சிறப்பாக ஓடி வெற்றிவாகை சூடுகிறது.

ஈழப் போராட்டத்தால் தமிழர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று எண்ணியவர்கள் மிரளும் வண்ணம் தமிழர்கள் பரந்து விரிந்து தமிழைத் தூக்கி நிறுத்துகின்றனர்.

நம்முடைய போராட்டம் வெற்றியடைய நாமெல்லாம் ஒன்றுபட்டு திருக்குறளை தேசிய இலக்கியமாக்குவோம், தமிழை ஆட்சி மொழியாக்குவோம்.

Tuesday, February 1, 2011

சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா



சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா
{16-1-’11 அன்று சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பங்கேற்று ஆற்றிய உரை}

திருவள்ளுவர் ஆண்டு 2042 ஆம் ஆண்டின் தமிழாண்டுவிழாவை இன்று நாம் நடத்தக் குழுமியுள்ளோம். யோகத் திருமகன் ஆசான ஆண்டியப்பனின் குழந்தைகள் மிகச் சிறப்பாக இசையால் பாடினர். திருகுறளின் கடவுள் வாழ்த்தைப் பாடிய மாணவிகளுக்குக்கு வாழ்த்துக்கள்.

திருக்குறள் செல்லம்மாள் அவர்களின் திருக்குறட்பணி போற்றி மகிழத்தக்கதாகும். அழைப்பிதழில் அச்சிட்டுள்ள திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.

துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் மனம் கலங்காதவனை வந்தடைந்த துண்பமே துன்பப்படும். என்ற பொருளுக்கிணங்க யாங்கள் பன்னாடுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் செல்லம்மாள் பங்கேற்ற பெருமைக்குரியவர்.

யாங்கள் மாநாடு நடத்தியபோது அவருடைய மகளின் மகப்பேறுகாலம். யான் வேண்டாம் மகளைப் பாருங்கள் என்று கூறியபோதும் தமிழ் தமிழரின்பால் உள்ள பற்றால் திருக்குறள் கூற்றுப்படி துன்பங்களைக்கண்டு மனம் கலங்காமல் இலட்சிய நோக்கோடு மாநாட்டில் பங்கேற்று நடனமாடி உலத் தமிழர்களை மகிழ்வித்தவர். இதோ இங்கே உள்ள மழலை குறளமுதுதான் அன்று பிறந்த மழலை.

செல்லம்மாளின் மகன் கிரிதர் - யோகலட்சுமியின் செல்வன் குறளரசு அருமையாக பாட்டியைப் போன்றே திருக்குறளை ஒப்புவித்தான் செல்லம்மாள் உலகுக்கு மட்டுமில்லாமல் தன் இல்லத்திலேயும் திருக்குறளை நிலைநிறுத்துகிறார.

சென்ற ஆண்டு தன் இல்லத்தின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி எழுச்சித் தமிழர் திருமாவளவன் திருக்கரத்தால் திறந்து வைத்தார். அதுபோது யானும் பங்கேற்று உரையாற்றினேன்.

திருவள்ளுவரின் 2042 ஆம் ஆண்டு தொடக்க நாளான இன்று சிலைக்கு மாலை அணவித்து வணங்கி அறிஞர்களை அழைத்து திருவள்ளுவர் தினத்தை மிகச் சிறபாக கொண்டாடி வருகிறோம்.

திருவள்ளுவர் உலக மாந்தர் அனைவரையும் ஒன்றாகவே கூறுகிறார். கடவுளின் பெயரால் மனிதர்களை வேதங்கள் வேறுபடுத்துகிறது. திருக்குறள் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்ற குறள் மூலம் பிறபினால் அனைவரும் ஒரே சமம் என அருதியிட்டுக் கூறியுள்ளார்.

ஆணுக்கு நிகராக ஏன் ஆண்களுக்கு மேலாக தொண்டு செய்வதில் மேலோங்கியுள்ளனர். செல்லம்மாள் அவர்களின் தொண்டும் பெண்களின் பெருமையை பரைசாற்றும் தொண்டாகும். அவருக்கு துணையாக தூணாக இருக்கும் இராசமாணிக்கம் அவர்களையும் குடும்பத்தாரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நமது முதல்வர் கலைஞர் பெருமான் திருவள்ளுவராண்டை தமிழாண்டின் தொடக்கமாக அறிவித்து உலகம் முழுமையும் திருவள்ளுவர் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து நகரின் தலைநகர் பெர்ன் நகரின் வள்ளுவன் பாட சாலை என்ற அமைப்பை ஈழத்து முருகவேள் – நந்தினி இணையர் நடத்தி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் திருவள்ளுவர் ஆண்டை கொண்டாடி வருகின்றனர். யான் சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது அவர்க்ளின் தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

இவ்வாண்டும் திருவள்ளுவர் 2042 ஆம் ஆண்டுத் திருநாளைப் பெர்ன் நகரத் தந்தையைக் கொண்டு தமிழர்கள் கூடி ஒரு பேரரங்கில் நடத்துகின்றனர். தமிழ மக்களின் சார்பாக அவர்களுக்கு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயன் திருவள்ளுவருகு குமரி முனையில் வானளாவ சிலை எழுப்பிய முதல்வர் கலைஞருக்கு தமிழாண்டாக அறிவித்து நடைமுறைப் படுத்தியமைக்காக அனைவரும் நன்றி செலுத்துவோம்.

உலகமெலாம் பர்வியுள்ள நம் இனத்தை வள்ளுவ நெறியால் வாழ்விப்போம். உலக மறையாம் திருக்குறளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்வோம் என உறுதி ஏற்போம்.

எனக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஆசான ஆண்டியப்பனுக்கு நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்.

Tuesday, January 18, 2011

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

(கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர்,தமிழ்ப்பணி

பெருமகனார் பற்றி பெருமக்கள்

பெருமகனாரைப்பற்றி அறிஞர் பெருமக்கள் கூறும் கருத்துக்களை காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

புலவர் இலால்குடி அரங்கசாமி அவர்கள் தம் பாடலில்

நின் நெடிய உருவெங்கே நெற்றிதிரு
மண்ணெங்கே நெடுஞ்சேன் கேட்கும்
நன்குரலின் ஒலியெங்கே நற்றமிழின்
சுவைகூட்டும் நாவும் எங்கே
தன்னடக்கப் பணிவெங்கே தாயொக்கும்
அன்பெங்கே எங்கே என்று
மன்னுபுகழ் ஐயாவே மனமழிந்து
யாமரற்ற எங்கே சென்றாய்

வித்வான் இராமசாமிக் கோனார் அவர்கள் தம் பாடலில்

தமிழன்னை யுளங்களிக்கத் தனித்தமிழில் `
பலநூல்கள் தந்தாய், தூய
அமிழ்தமென மாணவர்கள் அகங்குளிர `
அரியவுரை யாற்றி, நல்யாழ்
இமிழ்தல்போல் இசைமிளிர இனியதமிழ்ச்
சுவையூட்டும் இனியாய்! திருமண்
உமிழ்சுடர்போல் ஒளிவீசும் உன் முகத்தை
யார்மறப்பார் அந்தோ! அந்தோ!

புலவர் த.கி.குப்புசாமி ஆழ்வார் தம் பாடலில்

முன்னமோர் அகத்தியனே முதுபொதியில்
இருந்துதமிழ் முழங்கச் செய்தான்
இன்னமோர் அகத்தியனாய் சிராமலையில்
இருந்துதமிழ் இலங்க வாழ்ந்தாய்
பன்னருஞ்சீர் பதம்சென்று பழகுதமிழ்
வளர்த்திடவே படர்ந்தா யாயின்
இன்னுமே இவணிருந்துன் றனைநினைந்தே
இணைந்திடுவல் இயல்போ ஐயா!

மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தம் கருத்து

கோனார் பிறர் மனம் நோவாவாறு பக்குவமாக எதையும் சொல்லும் நாகரீகப் பண்புடையவர். பழைய மரபும் புதிய மரபும் தழுவியவர். எப்பணியிலும் இறைப்பணியும் தமிழ்ப்பணியும் மாறாதவர்.

பம்பாய் பாரதி கலாமன்ற செயாலாளர் இராமன் அவர்கள் தம் கருத்து

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் மன்றத்தின் விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியதை இன்றும் பம்பாய் மக்கள் மனத்திலிருந்து மாறவில்லை.ஒரு பெரிய தமிழ் மேதையை ஒரு தமிழ்க் கடலை இழந்து விட்டோம்.

அறிஞர் கீ. இராமலிங்கனார். அவர்கள் தம் கருத்து

அவர்களது அன்பு கனிந்த மொழிகளை என் செவிகுளிர இனி எப்போது கேட்க முடியும் என்னிடத்தில் உண்மையான உழுவழன்பு கொண்டிருந்தார்களே என் உடன் பிறந்த இளவல் போல் என் நலன்களை அறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிவகைகளைச் சொல்வார்களே! இனி யார் எனக்கு அவர்களது நிலையிலிருந்து அன்பு செய்யக் கூடியவர்கள்.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் கருத்து

கோனாரையா அவர்கள் பண்பால் உயர்ந்தவர் . எவர் மனமும் கோணாதவாறு நடந்து கொள்ளும் சான்றோர். எத்தனையோ பேருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய உத்தமர். எல்லோருக்கும்உதவுகின்ற தூய மனம் படைத்த கருணைவள்ளல். துவக்க காலத்தில் எனக்குப் பாடல் எழுதப் பழகித்தந்து அன்போடு குற்றம் குறைகளைத் திருத்திய ஆசான்.


அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 10, புது பங்களாத் தெருவிலிருந்து அவர் மறைவிற்கு 1969ஆம் ஆண்டு எழுதிய மடல்,

அன்புச் சகோதரருக்கு, வணக்கம் பல. தந்தையார் காலமான செய்தி அறிந்து வருந்தினேன், சென்ற மாதம் அங்கு வந்த சமயமும் அவரைச் சந்திக்க இயலவில்லை. தமிழன்னைக்கு ஈடு செய்யமுடியாத இழப்பை எவ்வாறு ஈடு செய்ய இயலும்!

முடிவுரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (60)

பெருகானாரின் பொன்னுரையில், இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் மனிதனேயாயினும் வானுலகில் வாழும் தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

என்ற பொருளுக்கினங்க பெருமகனார் அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்துதமிழுக்கும் தமிழருக்கும் சிறந்த தொண்டாற்றியவர். பெருமகனார் என்றும் தமிழர் நெஞங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்.

வாழ்க பெருமகனாரின் புகழ்! தொடர்க திருக்குறட் தொண்டு!

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

(கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர்,தமிழ்ப்பணி

(15-1-1911 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திருவள்ளுவர் மைய 5ஆம் மாநாட்டில் கவிமுரசு திருவள்ளுவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரை)

முன்னுரை

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் தமிழ்ப்பணியை நிறுவி 40 ஆண்டுகள் நிறைவுறுகிறது. தமிழ்ப்பணியில் எழுதாத எழுத்தாளர்கள் இல்லை என்ற பெருமகிழ்ச்சி எனக்கு உண்டு. அரிய சான்றோர்களை தந்தையார் அவர்கள் அட்டையில் வெளியிட்டு வாழ்த்துப்பா பாடியும் பதிவு செய்வார்கள். அந்தப்பதிவுகளெல்லாம் வரலாற்றுச் சுவடுகள்தானே..

திருக்குறளுக்காக தன் வாழ்நாளையே ஒப்படைத்த அருள்மாமுனிவர் கு. மோகன்ராசு அவர்கள் திருக்குறள் தூதர்கள் மூலம் திருக்குறளுக்கு தொண்டாற்றிய 133 பெருமக்களை தேர்ந்தெடுத்ததே பெரும் பணியாகும். அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளையும் தொண்டுகளையும் வராலாற்று ஆவணமாக்குவது வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வரிசையில் ஐயன் பெருமாள் கோனார் அவர்களின் வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்துவது எமக்கும் பெரும் பேறாகும். இந்தப் பதிவுக்கு துணை நின்ற மதுரை தொழிலதிபர் சடகோபன் திருச்சி பேராசிரியர் அரங்கநாதன் ஆகியோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

தோற்றம்

தமிழகத்தில் தமிழ் என்ற பாடம் வரும்போது கோனார் தமிழ் உரை புகழ் பெற்ற உரை நூலாகும். இந்த உரை நூலின் வாயிலாகவே கோனார் என்றால் தமிழ் என்ற அளவிற்கு புகழ் பெற்ற சொல்லாகும். இப்பெருமைக்குரிய ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் திருவள்ளுவர் ஆண்டு1936 ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (5-1-1905) பிறந்தார். பெருமகனாரின் பெற்றோர் திருவேங்கடக் கோனார் அகிலாண்டத்தம்மையார். சங்கத்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் பிறந்த பெருமைக்குரியவர்.

இளமைப்பருவம்

பெருமகனார் இளமையில் தம் அன்னையை இழந்தார். திருச்சியில் தம் பெரிய அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். அம்மையாரின் ஊக்கமே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. தொடக்கக் கல்வியை ஆரியன் உயர் ஆரம்பப் பள்ளியில் படித்தார். படிக்கும் காலத்திலேயே திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் மடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அடிகளார் அவர்கள் கந்தர் கலிவெண்பா நூலை பெருமகனாருக்கு வழங்கினார். இந்த நூலை மனனம் செய்து மகிழ்ந்த வண்ணம் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தேசிய உயர்நிலைப்பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஆசிரியப் பெருமக்கள் தி..பொ.பழனியப்பன், சீத்தராமன் தமிழாசிரியர்களாக இருந்தனர் ஆசிரியர்கள் தனிப்பற்று ஏற்படும் வகையில் பெருமகனார் தமிழில் சிறந்து விளங்கினார்.பள்ளி இறுதித் தேர்வில் உயர்ந்த மதிபெண்கள் பெற்றார். அன்றியும் மதுரைத் தமிழ்ச்ச்ங்கம் நடத்தி வரும் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

தோற்றம்

பெருமகனார் பணிவுடைமையும் இன்சொல்லையும் அணியாகக் கொண்டவர். பக்தியும் அருட்பண்பு மிகுந்த பார்வையும் செம்மாந்த மிடுக்குமுடையவர். அகன்ற நெற்றியும் அதனை அலங்கரிக்கும் எழில்மிகு திருமண்ணும் அணியப் பெற்றவர். வைணவத் தோற்றப் பொழிவினர். தூய வெள்ளாடை அணிந்து வெள்ளுடைப் பெரும் பேராசிரியராகப் உலகை வலம் வந்தவர்.

உரையாசிரியர்

பெருமகனாரின் கல்வித்தகுதியை அறிந்த திருச்சி சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் தமிழாசிரியராகப் பணியமர்த்தினர். பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே 1926-இல் மதுரை தமிழ்ச் சங்க பண்டிதர் தேர்வில் வெற்றிபெற்றார். பெருமகனார் தாம் பயிலும் பாடங்களுக்கு ஏற்ற உரைக் குறிப்புகள் எழுதுவதையும் வினாவிடைகள் எழுதிப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.தொடர்ந்து தமிழ் நூல்களைப் படித்து சென்னைப் பல்கலைக் கழக தனித்தமிழ் வித்வான் தேர்வு எழுதி 1933இல் வெற்றிபெற்றார். பள்ளி வேலை, பல்கலைக் கழகப் படிப்பு, பொது நிகழ்வுகள் என பல்வேறு பணிகளுக்கிடையில் பள்ளியிறுதி மாணவர்களுக்குரிய தமிழ்ப்பாட நூலுக்கு வினா விடை எழுதி வெளியிடலானார். மாணவரிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் உரைநூல்களையும் வெளியிட்டார். தம் சொந்த முயற்சியிலேயே 15 ஆண்டுகள் வெளியீடு செய்தார். மாணவர்களுக்குத் தமிழைப் ஆழ்ந்து படிப்பிக்கும் தமிழாசிரியராகவும் உரை நூல்களை தாம் பிறவெளியிட்டதன் மூலமாகவும் வெளியிட்டு உரையாசிராகவும் சிறந்து விளங்கினார் பெருமகனார்.

பேராசிரியர்

1942ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராக பெருமகனார் பொறுப்பேற்றார். கல்லூரியில் 1966ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியில் திறமையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பேராசிரியப் பணியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போற்றிப் புகழ்ந்தனர். கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கும் உரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.

கோனார் மாளிகை

பெருமகனாரின் உரையின் சிறப்பை உணர்ந்த செ.மெ.பழனியப்ப செட்டியார் உரைநூல்களை அவரது பழனியப்பா நிறுவனமே வெளிட்டது. கோனார் தமிழ் கையகராதி எனும் அகராதி நூலும், திருக்குறள் தெளிவுரை நூலும் வெளியிட்டுள்ளனர். இன்றும் பெருமகனாரின் நூல்கள் வெளிவந்து உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. பழனியப்ப செட்டியார் அவர்கள் தம்முடைய கட்டிடத்திற்கு கோனார் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளார், மதுரை சீனிவாசக் கோனார் வாசன் பதிப்பகத்தின் மூலம் இளங்கலை வகுப்பு தமிழ் உரை நூலை வெளியிட்டுள்ளார்.மதுரை பல்கலைகழக தமிழ்ப்பாட நூல்களின் உரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பெருமகனார் ஆய்ந்தறிந்த தமிழ்ப் பெருமக்கள் பலரை தம்மோடு இணைத்து பெரும்பணி புரிந்துள்ளார்.

சொல்லேருழவர்

பெருமகனார் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்.ஆய்ந்தறிந்த புலமையை தமிழ் மக்களுக்கு வழங்கிய பேருரையாளர்.அவரது சொற்பொழிவைப் பற்றிக் குறிப்பிடும் புலவ்ர் த.கி.குப்புசாமி ஆழ்வார் ”சாந்தமல்கும் தடம் பொதியச் சைலத்திருக்கும் தமிழ்க்கோதாய் என்று இசையுடன் தொடங்கும்போதே அவையினர் தேனுண்ட வண்டென மயங்கிக் கேட்பர். ஒழுங்கு முறையுடன் உரைக்கும் திறனுடன் அழகாய் அடுக்கடுக்காய் சொற்பெருக்காற்றி தொகுப்புரை கூறி முடிக்கும் இவர் திறனை எவரும் பாராட்டுவர்.” என குறிப்பிட்டுள்ளார்.
அறிவும் திருவும் புகழும் கற்போர் நெஞ்சம் காமுறப் பயிற்றும் திறனும் கொண்டவர் பேராசிரியப் பெருமகன்.தேர்வினை குறிக்கோளாகக் கொண்டு தமிழில் தேர்ச்சி பெறப் போராடும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடங்களை ஆர்வமுடன் கற்கும் முறையிலும் வெற்றிபெறுவதற்கேற்ற வகையிலும் உரைநூல் அளித்தமையால் தமிழ் மாணவர்களீடம் இன்றும் தனியிடம் பெற்று விளங்குகிறார். மாணவர்கள் “நான் கோனர் மாணவன்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வர்.

பாராட்டுகள்

பெருமகனாரின் தமிழ்ப் பற்றையும் தொண்டினையும் சிறப்பித்து ஆனந்தவிகடன் இதழ் ஆசிரிய இரத்தினங்கள் என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வெளியிட்டது. உறையூர் வாகீச பக்த சன சபையினர் மதுரை திருஞானசம்பந்த சாமிகள் மடத்தின் அருளாளரைக் கொண்டு சொற்பொழிவுத் தொண்டினை போற்றும் முறையில் பெருமகனாருக்கு “செம்பொருட்காட்சியர்” என்னும் பட்டத்தை வழங்கினர். பெருமகனாரின் சமயத் தொண்டினை பாராட்டி காஞ்சிகாமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சாமிகள் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி “திருப்பாவை ஆராய்ச்சி மணி” எனப் பட்டம் வழங்கி் சிறப்பித்தனர். மார்கழித் திங்களன்று திருச்சி வானொலி நிலையத்தில் திருப்பாவை பாடி விளக்கவுரை வழங்கியதை கேட்டு மகிழ்ந்து பாராட்டியவர் பல்லாயிரக் கணக்கினர்.

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு
என்ற குறளுக்கு ஒப்ப தான் சேர்த்த பொருளையெல்லாம் தம்மைச் சார்ந்தோர்க்கு வழங்கிய அறிஞர்களை போற்றி ஆதரித்தார். தம் தமிழ்த் தொண்டினால் மாணவர், ஆசிரியர், சமய அன்பர்கள், தமிழுலகம் பயனுறுமாறு அருளாளராகவும் ,உரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும் தலைசிசிறந்து விளங்கினார்.

திருக்குறள் பொன்னுரை

பெருமகனார் அவர்கள் திருக்குறள்பால் நீங்காத பற்றுடையவர். திருக்குறளை வாழ்வியல் நெறிகளை மக்களின் மனத்தில் நிலைபெறச் செய்தவர். செல்லும் இடமெல்லாம் திருக்குறள் கூறி எளிய விளக்கத்தைக் கொடுத்த வல்லமை பெற்றவர். திருவள்ளுவரின் 1330 குறளுக்கும் எளிய உரையாக எழுதி பொன்னுரையாக் வெளியிட்டுள்ளார். திருக்குறள் கோனார் பொன்னுரை நூலை பனிரெண்டு மக்கள் பதிப்பாக பழனியப்பா நிறுவனம் இன்றும் வெளியிட்டு வருகிறது. . பெருமகனார் பிறந்து நூற்றைந்து ஆண்டுகளாகியும் இன்றும் அவர் புகழ் பரவும் வண்ணம் அவரது படைப்புகள் உள்ளன.

பெருமகனார் அவர்கள் அதிகாரங்களின் தலைப்புகளையே படிக்காத பாமரரும் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். அந்த தலைப்பின் விளக்கத்தைப் படித்தாலே உட்கரு புரியும் வண்ணம் உள்ளது. வலிஅறிதல் என்ற அதிகாரத்தை ”வினைவலி முதலியவற்றை அறிதல்” எனக் கூறுகிறார். சுற்றம் தாழல் எனும் அதிகாரத்தை ”சுற்றத்தினரைத் தழுவிக்கொள்ளுதல்: எனக் எளிமையாகக் விளக்கியுள்ளார். சான்றாண்மை எனும் அதிகாரத்த ‘பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளும் தன்மை” என பெரும் பேராசிரியர் மக்கள் மொழியில் வழங்கியுள்ளார்.இன்பத்துப் பாலில் குறிப்பு அறிவுறுத்தல் என்ற அதிகாரத்திற்கு ”தலைவன், தலைவன், தோழி என்ற இவர்கள் குறிப்பினை ஒருவருக்கு அறிவுறுத்துதல்” என சொற்கள் அதிகமானாலும் மக்களைத் தெளிவுறுத்தம் வண்ணம் தெளிவுரை வழங்கியுள்ளார்.

பெருமகனாரின் எளிய பொன்னுரையில் சில

அறத்தாறு இதுவென வேண்டா: சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37)

அறத்தின் பயன் இத்தன்மையுடையது என்று சொல்ல வேண்டுவதில்லை.. பல்லக்கை சுமந்து செல்பவனுக்கும் அதன்மீது ஏறிச் செல்பவனுக்கும் இடையே அதைக் காணலாம்.
உரையைப் படித்தவுடன் யாவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ளதை உணரலாம்.

துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (52)
ஆதரவில்லாதார்க்கும் ஏழைகளுக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்வான் என்பவன் துணை செய்தற்கு உரியவனாவான்.

இல்வாழ்வானின் கடமைகளை பெருமகனார் யார் யார் என பட்டியலிட்டு விளககித் தானும் அவ்வாறு வாழ்ந்த பெருமைக்குரியவராகிறார். அவர் மறைந்த போது இலங்கையைச் சேர்ந்த மு.சு கார்த்திகேசு அவர்கள் குறிப்பிடுகிறார். “ என் மகன் இராசேந்திரனுக்கு அளவற்ற அன்புடன் செய்த அநேக மதிக்கமுடியாத உதவிகளை செய்துள்ளார். அன்னார் இன்றேல் எனது மகன் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது எமை தங்கள் உற்றார் உறவினர் போன்று காலத்துக்கு காலம் உபசரித்து உணவளித்துப் பாராட்டிய வள்ளல்.”அவரது மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவராகப் படிப்பதற்கு உதவியும் புரிந்துள்ளார் பெருமகனார்.
நாடோறும் நாடுக மன்னன்: வினை செய்வான் கோடாமை கோடாது உலகு (530)
தொழில் செய்பவன் நேர்மையினின்றும் மாறுபடாதிருப்பின் இவ்வுலகமும் மாறுபடாது: ஆதலால் அரசன் அத்தொழில் செய்வோரை நாள்தோறும் ஆராய்க.

அற்றேமென்று அல்லற் படுபவோ, பெற்றோமென்று
ஓம்புதல் தேற்றா தவர் (636)

செல்வத்தை பெற்றோம் என்று மகிழ்ந்து அதனை பாதுகாத்தலை அறியாதவர் அதை இழ்ந்துவிட்டோமே என்று வருத்தப் படமாட்டார்.

உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் (740)
அவைக்களத்தைக் கண்டு அஞ்சி தாம் கற்றவற்றை ஏற்பச் சொல்லாமாட்டாதவர், உயிரோடு வாழ்பவர் எனினும் இறந்தவரை ஒப்பர்.

ஒவ்வொரு குறளின் தெளிவுரையை நாம் படிக்கும்போதும் பெருமகனார் நம்மை நுட்பமாகத் தெளியவைக்கிறார்.

புணர்ச்சி பழ்குதல் வேண்டாம் உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். (795)
நட்பாகிய உரிமையைப் பெறுவதற்கு கூடி வாழ்வதோ பழகுவதோ தேவையில்லை ஒத்த மனவுணர்ச்சியே அந்நட்புரிமையைத் தருவதாகும்.

விழையர் விழையப் படுப, பழையர்கண் பண்பின் தலைப்பிரியா தார் (810)
பழைமையாக வரும் நண்பர்கள் குற்றம் செயினும் அவரிடத்தில் அன்பு நீங்காதவர் தம் பகைவராலும் விரும்பப் படுவர்.

நட்பிற்கு இலக்கணம் கூறிய பொய்யாமொழியாரின் சிந்தனையை செப்பமாக உரைத்துள்ளார்.
காமத்துப்பாலில் உள்ள குற்ளுக்கு பெருமகனாரின் உரை நம் மகளிரின் சிறப்பை உணர்த்துகிறது.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.. (1210)

என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரேயாயினும் அவரைப்பற்றி ஒரு சொல்லைக் கேட்பினும். அஃது என் காதுக்கு இன்பம் தரும்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர் யாருள்ளி நோக்கினீர் என்று (1320)
தலைவியின் அழ்கையே நினைத்திருந்து பார்த்தாலும் என் அழகையெல்லாம் யாருடைய அழகுக்கு ஒப்பாக எண்ணிப் பார்த்தீர் என்று கூறிக் கோபிப்பாள்
.
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா (1329)

ஓளீ பொருந்திய அணிகலன்களை அணிந்த இவள் ஊடுவாளாக. அவ்வூடலை தீர்க்கும் பொருட்டு யாம் இரத்தற்காக இரவுப் பொழுது நீள்வதாக.

இவ்வாறு பெருமகனார் அவர்கள் தன் பொன்னுரையில் முற்றும் அறிந்து உணர்ந்து எழுதியும் இந்தியா முழுமையும் உரையாற்றியும் திருக்குறளுக்கு பெருந்தொண்டாற்றியுமுள்ளார்கள்.

இறப்பு
தமிழுலகமே போற்றிய ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் தம் இறுதி காலத்தில் திருச்செந்தூர் திருப்பாவை மாநாட்டில் பங்கேற்று திருச்சிக்குத் தொடர் வண்டியில் திரும்பும் வழியில் உடல் நலிவுற்று மதுரையில் இறங்கினார். மருத்துவ மனையில் சேர்த்தும் பலனின்றி 1-1-1969 ஆம் நாள் காலமானார்.

பெருமகனார் பற்றி பெருமக்கள்