Friday, November 26, 2010

திருக்குறளில் கலைகள்


திருக்குறளில் கலைகள்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர் தமிழ்ப்பணி

சென்னையில் 26,27,-11-2010 நாட்களில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய உரை

திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையத்தின் சார்பில் திருக்குறள் கலை இலக்கிய சங்கமம் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இருபது ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்திவரும் முனைவர் இலலிதா சுந்தரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகளிர்மாமணியான இலலிதா சுந்தரம் 1999ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டிற்கு வருகை தந்த பெருமைக்குரியவர். அண்மையில் மலேசியாவில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று பன்னாட்டுத்தமிழுறவுப் பணிகளில் இரண்டரக் கலந்தவர். எந்த அமைப்பாக இருந்தாலும் நான் என்று முன்னின்று செயலாற்றும் மன வளம் உடையவர். இந்த மன வளத்திற்கு அடிப்படை திருக்குறள் சிந்தனைகளே.

தமிழ் மறை:

தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக தோன்றிய தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் திருக்குறள் தாக்கத்தினாலாயே நிலைபெற்றுள்ளனர். திருக்குறளின் கருத்துக்கள் உலகத்தையே வலம் வந்து தமிழனின் பேராற்றலை செப்பும் தமிழ் மறையாகும்.
நாம் வாழும் இந்நூற்றாண்டில் திருக்குறள் சிந்தனைகளால் தம் மக்களை நிலைபெறச் செய்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. அவர்தம் வழியில் திருக்குறளை வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்து தமிழினத்தையும் திருக்குறளையும் நிலைநிறுத்தியவர் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இந்த மாபெரும் கலைஞர்களை உருவாக்கிய திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்துமே கலை வாழ்வியல் சார்ந்து உலக மக்களுக்கு வந்துதித்த பெருங்கொடை..

உலகக் கலைஞானி:

உலகப் பெரும் ஞானி திருவள்ளுவர் வாழ்க்கையின் அறச் சிந்தனைகளை மென்மையாகவும், கடுமையாகவும் உணர்த்தியுள்ளார். நணபர்களுக்கு இன்னல் வருமேயாயின் அதை நீக்க மானிட உள்ளம் உணருமாரு உணர்த்தியுள்ளார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788)

தான் உடுத்தியிருக்கும் ஆடை தானாக நெகிழ்ந்தால் தன்னுடைய கைகள் உடனே தாங்கி மானம் காப்பதைப் போல் நண்பரின் இன்னல் கண்டு இயல்பாக இடையூற்றை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். திருவள்ளுவர் வாழ்வியல் கலைகள் அனைத்தையும் அறிந்த கலைஞானி என்பதால் மானிட வாழ்வில் தாம் உடுத்தும் உடையைக்கொண்டே மிகப் பெரும் இடையூற்றை நீக்கி மகிழ மானிட சமுகத்திற்கு உணர்த்துகிறார்.

பகுத்தறிவுக் கலைக்கோமான்:

அவரவர் தம் வலிமையை அறிய வலியுறுத்தும் திருவள்ளுவர் வண்ணமயிலின் இறகைக் கொண்டு உணர்த்துகிறார். வண்ணமயிலை எண்ணும்போதே அதனுடைய அழகு மானிட உலகை மகிழச்செய்யும் அந்த மயிலின் இறகின் மென்மையையும் மனிதனின் மென்மையான மானிட வாழ்வையும் ஒப்பிட்டு வாழ்வியல் கருத்தை வழங்குகிறார்.மூடத்தனமாக எதையும் வலிமையறியாமல் செய்யக்கூடாது என்ற பகுத்தறிவுக் கலைக்கோமானாக உணர்த்துகிறார்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (475)

மயிலின் தோகை மென்மையாக இருந்தாலும் அதனை மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும் தாங்கும் வலிமையறியாமல் தாக்கம் விளைவிப்பாரின் நிலையும் அதுதான் என உணர்த்தியுள்ளார். மானிட வாழ்வில் எண்ணற்றோர் தம் வலிமையறியாமலேயே படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உலகில் வாழும் மானிடர்களுக்கு எக் காலத்திலும் உணரும்வண்ணம் வாழ்வியல் உண்மைகளை உணரும் திருக்குறளுக்கு நிகர் வேறேதும் இல்லை.

உலகப் புரட்சிக் கலைஞன்:

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. தனக்காக மட்டுமின்றி அறம் பொருள் இன்பம் என அனைத்தையும் உய்த்துணர்ந்து தம்மையும் உலக மக்களையும் காக்கும் வாழ்வியல் மறையை வழங்கிய காவியக் கலைஞனாக நம் சிந்தையில் திருவள்ளுவர் குடிகொண்டுள்ளார். அந்த வாழ்வு குற்றமில்லாத வாழ்வாக வாழவேண்டும் அப்படி குற்றமேற்படின் அழிந்து போகும் என தீர்வாக கூறுகிறார்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (435)

தவறு நேர்வதற்கு முன்பே குற்றத்தை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்க இயாலாதவர் வாழ்க்கை நெருப்பு முன் வைக்கோல் போர் போல அழிந்து விடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய திருவள்ளுவர் இன்று பாடியது போன்று எக் காலதிற்கும் ஒத்தது போன்று பாடியுள்ளார். அவருடைய கலைக் கண் மானிட சமுகம் மீட்சியுற குற்றமின்றி வாழ்வாங்கு வாழ கடுமையின் தன்மையை குறிப்பிட்டு உணர்த்தியுள்ளார்.

பேருழைப்புக் கலைஞன்:

உழைப்பையும் முயற்சியையும் திருவள்ளுவர் மானிடத்தின் உயிராக உணர்த்தியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முயற்சியும் உழைப்புமே நற்பயனைத் தரும் என வலியிறுத்தியுள்ளார்.அக் காலத்திலும் இன்றும் பண்டாரங்களாகவே வாழ்ந்து எந்த உழைப்பும் இன்றி வாழ்வோரைச் சாடி உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் மகுடமான புரட்சிக் கலைஞனாக உள்ளார். தன்னுடைய வாழ்வியலுக்கே திண்டாடும் பலர் பக்தி என்ற போர்வையில் கடன் பெற்று தம் வாழ்வையே அழித்து பக்தியைப் புலப்படுத்துகின்றனர். தான் எந்தக் காரியத்திற்காக நம்மை அணியப்படுத்தி உலகில் வாழ்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சோம்பேறிகளாக பக்தி என்ற வலையத்தில் வலம் வருகின்றனர் அவர்களையெல்லாம் தகர்த்து நிலைகுலையச் செய்யும் பேருழைப்புக் கலைஞனாக திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளாக வலம் வருகிறார்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வத்தை நம்பி மூடத்தனமாக வாழும் பிறவிகளே தங்களின் குறிக்கோளும் முயற்சியும் உழைப்பும் இருக்குமேயானால் வெற்றிபெற முடியும் என பாட்டாளிக் கலைஞனாக திருவள்ளுவர் மெய்சிலிர்க்க வைக்கிறார். உலகில் வெற்றி பெற்ற பெருமக்களின் வாழ்வியலைக் கண்டோமானால் வள்ளுவப் பேராசானின் கருத்தை உணர முடியும்.

அருட் கலைஞன்:

பொருளுடையோர் பொருளை அருள் வழியில் பயன்படுத்தவும் வழிகூறுகிறார். அருளை அன்பு ஈனும் குழந்தையாகக் கண்டு குழந்தையைப் பேணுவதுபோல் அறப்பணீகளை வலியுறுத்தி உலக மக்களிடம் மனித நேயத்தை மீக்கெழச் செய்கிறார். மனிதம் வாழ்விக்க வந்த அருட்கலைஞராக பொய்யாமொழியார் நெஞ்சம் நிறைகிறார்.

அருளெனும் அன்புஈன் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு (757)

அன்பு என்ற தாய்பெற்ற பிள்ளைதான் அருளாகும். அந்த மழலையை வளர்க்கும் பொறுப்பு செவிலித்தாயாகிய பொருளுக்கு உண்டு. என பொருளுடையோரின் பொறுப்பை உலகுக்கு உணர்த்துகிறார். வறுமை தலைவிரித்தாடும் நம் நாட்டில் பொருளுடையோர் 45 விழுக்காடு உள்ளனர். திருவள்ளுவர் கூறிய மறையை முழுமையாகப் பின்பற்றுவோமானால் நம் நாட்டில் வறுமையை முற்றுமாக ஒழித்துவிட முடியும். பொருளுள்ளவர்கள் செவிலித்தாயாக வலம் வந்தால் அருளாகிய குழந்தை செழிப்படையும்.

இல்லற நல்லறக் கலைஞன்:

இல்லற இன்பத்தை முற்றும் முழுமை உணர்ந்த இல்லறக் கலைஞர் நம் பாட்டன். மானிட வாழ்வில் அறம் பொருள் இன்பம் என பட்டியலிட்டு வாழ்வின் முழுமையை உணர்த்தியுள்ளார்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. (1323)

வாழ்விணையரின் காதலை உணர்த்தும் திருவள்ளுவர் நீரும் நிலமும் கலந்தமையைக் குறிப்பிடுவது இல்லறத்தின் நல்லறக் கலைஞராக நிலைபெறுகிறார்.இல்லற இணையர் காணும் இன்பம் புத்தேள் உலகத்திலும் இல்லை என அறுதியிட்டுக் கூறுகிறார்.

முடிவுரை:

உலகமக்களின் நலனுக்கு வாழ்பவர்கள். உள்ளத்தாலும் செயலாலும் உண்மையாக வாழ்பவர்கள் உலக மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழ்வர். உலகப் பொதுமறை வழங்கிய பொய்யாமொழியார் இன்றும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்துள்ளார். மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெருமக்கள் வள்ளுவப் பெருமான் குறள்போல் நிலையாக வாழ்ந்து வருகின்றனர்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன். (294)

உளத் தூய்மையாக சொல்லும் செயலும் ஒன்றாக தூய்மையான வாழ்வு வாழ்பவர்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்வான் என உண்மையை உலகோர் பின்பற்ற பதியம் போட்டுள்ளார் திருவள்ளுவர்.

Wednesday, November 10, 2010

என்றும் ஆளும் அன்னை சேது




அன்னை சேதுமதியின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2010 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்,கணேசுக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளஞ்செம்பூர் பேரூராட்சி தலைவர் காயாம்பு தலைமையில் தொழிலதிபர் கந்தசாமி, கவிச்சிங்கம் கண்மதியன், முனியாண்டி, செந்தமிழ்ச்செழியன், மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கருப்பண் கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் சென்னைமாநகரத் தந்தை சா.கணேசன் நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் வரவேற்றார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் மாலதிமுருகேசன் குத்துவிளக்கேற்றினர். சானகிசக்திவேல் இராசேசுவரி கோபிநாதன் அன்னையின் பதிகப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர் நன்றிபாராட்டினார்.

6-11-2010 அன்று மாலையில் அபிராமம் பேரூராட்சி மண்டபத்தில் தமிழ் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பெருங்கவிக்கோ வா.மு.சே.அறிமுகவுரை ஆற்றினார். மாண்புமிகு அமைச்சர் சுப.தங்கவேலனார் அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து மூன்று அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார் ஆசிரியர் பாலகுருசாமி, செல்வி பாலமீரா,சனாப் இத்ரீசு மற்றும் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் சென்னைமாநகரத் தந்தை சா.கணேசன் நிறைவுரையாற்றினார். வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். அதுபோது அவர் குறிப்பிட்டடதாவது

அன்னையின் நினைவாக ஆண்டுதோரும் தமிழ் அறிஞர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்கிவருகிறோம். 2006ஆம் ஆண்டு மதுரை மார்சல் முருகன், சென்னை கவிக்குயில் பொன் ஐயனாரப்பன் 2007ஆம் ஆண்டு காரைக்குடி பொற்கிழிக்கவிஞர் அரு சோமசுந்தரம், சென்னை கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், 2008ஆம் ஆண்டு முதுபெரும் கவிஞர் பழநி இளங்கம்பன், நாகர்கோயில் பெரும்புலவர் பெருமாள், சென்னை எழுகதிர் கவிச்செம்மல் அரு.கோபாலன், இராசபாளையும் பாவாணர் கோட்ட புலவர் நெடுஞ்சேரலாதன் திருவில்லிபுத்தூர் சிவ.வே.மோகனசுந்தர அடிகளார் 2009ஆம் ஆண்டு கம்பம் மேனாள் இயகுநர், வே.தில்லைநாயகம், மதுரை சமூகக் காவலர் நவமணி, சென்னை இலக்கியச்சுடர் மூவெந்தர் முத்து, நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் விருதும் ரூ.10,000 பொற்கிழியும் பெற்றுள்ளனர்.

இவ்விருதினை சேது அறக்கட்டளையின் சார்பில் வழங்குவதை பெரும்பேறாகக் கருதுகிறோம். இவ்வாண்டு விருது வழங்க குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் வருகை தந்துள்ளார். மாண்பமை முதல்வர் தலைவர் கலஞரின் வழியில் அயராத மக்கள் தொண்டில் தன்னை ஒப்படைத்த இம் மண்ணின் நாயகர் தங்கவேலனார் கரத்தில் அறிஞர் பெருமக்கள் விருது பெறவுள்ளனர்.

2010ஆம் ஆண்டு மூன்று பெருமக்களுக்கு விருது வழங்க முடிவெடுத்தோம். முதலாவதாக முத்துவிழாக் காணும் நாயகர், பேரறிஞர் அண்ணா அவ்ர்களால் திராவிட நாட்டில் 1963ஆம் குறிபிடப்பட்ட 252 பெயரில் 7 பெருமக்கள்தான் உள்ளனர் அவர்களுள் ஒருவர் சா.கணேசன் அவர்கள்.சென்னை மாநகரதின் மாநகரத் தந்தையாகப் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் சா.க அவர்களை மேயர் என்றே அழைக்கின்றனர். இன்னார் இனியார் எனப் பாராமல் தொண்டாற்றும் பெருமைக்குரிய பெருந்தகை.சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பன்னாட்டுத்தமிழுறவு மன்றப் பணிகளுக்கு தந்தையின் தோளோடு தோள் நின்று தொண்டு செய்யும் செயல் மறவர். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டிற்கு தம் சொந்த செலவிலேயே பங்கேற்று மாநாட்டிற்கு பெருமைசேர்த்த பண்பாளர்.

இரண்டாவதாக விருது பெறுபவர் கவியரசு செந்தமிழ்ச்செழியன்.புலவர் செந்தமிழ்ச் செழியனாரின் இடிமுழக்கம் நூலைப் படித்தால் பாவேந்தர் கவிதையோ என்று எண்ணும் அளவிற்கு தமிழ் உணர்ச்சி பொங்கி வழியும். சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி தமிழுணர்வுப் பெருமக்களை உருவாக்கியவர்.மிகச் சிறந்த நடிகர் பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்தவர். பட்டிமன்றப் பேச்சாளர். அருமைத்தந்தையரின் சேது காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பெருமைக்குரிய பெரும்புலவர். புலவர்களுக்கேயுள்ள அறிவுச் செருக்கோடு வாழும் செயல் வல்லார்.

மூன்றாவதாக விருதுபெறும் பெருமைக்குரியவர் தூத்துக்குடி மோ. அன்பழகன். சுழழும் தேனீயைப் போன்று பணியாற்றும் தமிழ்த்தொண்டர். தூத்துக்குடி பன்னாட்டுத்தமிழுறவு மன்றக் கிளையின் செயலாளர்.அருமைத் தந்தையார் 1993 ஆம் ஆண்டு நடப்பயணத்தைத் தொடந்து 18 வருட ஊர்திப் பயணங்களுக்கு துணைநின்ற செயல் மறவர். சிறந்த எழுத்தாளர். திருக்குறள் கட்டுரைகள் பல படைத்த படைப்பாளி.

ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.

அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருமகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.

வாழ்க அன்னையின் புகழ்
வளர்க அறக்கட்டளையின் தொண்டு.

Tuesday, October 12, 2010

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் நான்காம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்

வாழ்க பெருங்கவிக்கோ
கவிஞர் இரா.இரவி

சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்
வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார்

இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்
இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர்

சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்
சேது சமுத்திரத் திட்டத்தை மதியில் வைத்து உள்ளார்

தமிழுக்காக நடைப்பயணம் நடந்த வேங்கை
தமிழுக்காக உரக்க குரல் கொடுக்கும் சிங்கம்

இவர் மீசையின் நிறம் வெள்ளை அளவு பெரிது
இவர் உள்ளமோ வெள்ளை மனமோ பெரிது

மரபு க்கவி புனைவதில் மாபெரும் வல்லவர்
மரபு க்கவி மறையாமல் காத்து வருபவர்

பெருங்கவிக்கோ வெற்றிக்கு அவரது துணைவி
அன்னை சேதுமதி முன் நின்றார்கள்

மனைவி இறந்தவுடன் மறுமணம் புரியும் காலத்தில்
மனைவி இறந்தவுடன் ஆலயம் கட்டி வணங்கும்

பெருங்கவிக்கோ வாழ்க பல்லாண்டு

Wednesday, October 6, 2010

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் ‘ பாருலாப் பாக்கள்’ நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையத்தள வலைப்பூ அறிமுக விழா





பெருங்கவிக்கோமுன்னிலையில்,மேயர்மா.சுப்பிரமணியன் வலைப்பூவைத் திறக்க தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது


பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் பாருலாப் பாக்கள் நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையதள வலைப்பூ அறிமுக விழா 4-10-10 சென்னையில் கன்னிமாரா நூலக அண்ணா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

சென்னைமாநகரத் தந்தை வணக்கத்திற்குரிய மா.சுப்பிரமணியன் தமிழ்ப்பணி பிளக்சுபாட் வலைப்பூவை திறந்து வைத்துப் பேசினார். வலைப்பூவில் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது கண்டோர் மகிழ்சிப் பெருக்கில் கரவொலி எழுப்பினர். விழாவிற்கு சா.கணேசன் தலைமை தாங்கினார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை உரையாற்றினார். கவிமுரசு திருவள்ளுவரின் பாருலாப்பாக்கள் நூலை இலண்டன் கவிஞர் கருணானந்த ராசா வெளீயிட தமிழ் வள்ளல் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் மறைமலை வலைப்பூ பயிற்சி பட்டறையை சிறப்புடன் நடத்தினார்.அவர் அவர் உருவாக்கிய 31 பாவேந்தர் பர்ம்பரைக் கவிஞர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தி உரையாற்றி காணொலியில் காட்டினார்.

கணித்மிழ்ச் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர். இரா.கருணாநிதி,வாழ்த்துரை வழங்கினர். கவிச்சிங்கம் கண்மதியன் வரவேற்புரையாற்றினார். திருக்குறள் மு.வேங்கடேசன் நன்றி நவின்றார். கவிமுரசு வா..மு. சே. திருவள்ளுவர் ஏற்புரையாற்றினார்.

Sunday, October 3, 2010

காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்



காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மாமன்னர் இராச ராசன்
மதிநுட்ப தமிழர் வேந்தன்
தேமதுரத் தமிழின் மேன்மை
தேசமெலாம் வணங்கும் சோழன்
பூமணத்து நம்மின் மக்கள்
புத்தமுதக் கலையின் உச்சம்
காமணக்கும் கற்கோயில் கண்ட
காலத்தால் அழியா சோழன்

வீரத்தால் தம்மின் நாட்டை
விண்ணளவு ஏற்றி வைத்தார்
சோராத வேங்கை நாடு
சொந்தமாக கங்கை பாடி
வேராக தடிகைப் பாடி
வேந்தனது நுலம்ப பாடி
மாறாத குடமலை ஈழம்
மதிகொல்லம் கலிங்கம் கண்டான்

பெரியகோயில் லிங்கம் பாரில்
பேரெழுந்த வடிவம் என்னே
உரியநல் கோபுரத் தோற்றம்
உன்னத வானை முட்டும்
இருநூற்றுப் பத்தும் ஆறும்
இறுமாந்த எழிலைக் காட்டும்
கருங்கல்லில் அடுக்கின் ஏற்றம்
கவின் பதிமூன்று அன்றோ

ஆயிரத்து ஆண்டின் முன்னே
அகிலத்தை ஆண்ட வேந்தன்
மாயிரத்து ஐப்பசி திங்கள்
மாமண்ணில் உதித்த மன்னன்
பாயிரம் அற்றை நாளில்
பாடிய கரூர் தேவன்
மாஇனத்து வேந்தன் வாழ்வை
மாத்தமிழில் செதுக்கி உள்ளான்

தகதகக்கும் ஐம்பொன் மேனி
தவவேந்தன் இராச ராசன்
புகழ்காத்த உலகமா தேவி
புண்ணியச் சிலையின் தோற்றம்
அகமதாபாத் அருங்காட்சி மன்றம்
அடங்கியுள இணையர் தம்மை
மக்த்தான முயற்சி கண்டு
மாக்கோயில் உள்ளே காண்போம்

மெய்கீர்த்தி தம்மின் வாழ்வை
மேதினிக்கே தந்து சென்றோன்
பொய்யறியா நம்மின் மக்கள்
போற்றிடும் வரலாறு தந்தோன்
செய்வதை உணர்ந்து வெல்லும்
செயல்வல்லார் கலைஞர் வேந்தர்
மெய்வடிவாய் ஆயிரம் ஆண்டை
மேற்கொண்டார் நீடு வாழ்க

Wednesday, September 22, 2010

பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்


பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்

சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் எனக்குத் தெரிந்தவரை கவிஞராகவே அறிமுகப்படுத்தப்பட்டவர். பாடசாலை விழாக்களில் அல்லது எமது சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் தனது பேச்சாற்றலால் கவிவல்லமையினால் சமய சொற்பொழிவுகளாலும், கவியரங்கங்க‌ளாலும் அலங்கரித்தவர். நாடகம், கவிதை இலக்கியம், சமயம் எனத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வாழ்ந்த சமூகத்தையும் வாழ்ந்திடச் செய்த ஒரு சமூக யோதி. ஆசிரியராக, அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டாலும் ஒரு நாடக ஆசானாக, கவிஞனாக எமக்கு அறிமுகமான அவரின் ‘பாடுமனமே’ கவிதைநூல் என்னை முழுமையாக ஆகர்சித்ததாகும்.

இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருக்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர், எனப்பட்டங்கள் இருந்தும் மதுரகவி எனவே ஈழத்தில் அறிமுகமானவர்.

இவர் ஆரம்பக்கல்வியை நுணாவில் கணேசவித்தியாலயம், சாவகச்சேரி றிபேக்கல்லூரி ஆகியவற்றிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கூடவே நாடகம் கல்வி சார்ந்த டிப்புளோமா கற்கை நெறிகளையும் கற்றுத் தனதாக்கிக் கொண்டார்.

இவர் மாத்தளை புனிதத்தோமையர் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கல்லூரி இலக்கியவட்டம், மாத்தளை இலக்கியவட்டம் ஆகியவற்றில் அதிக பங்காற்றினார். புவியியல் பட்டதாரியான இவர் மேற்படி கல்லூரியில் சிறந்த ஆசிரியராக மாணவராலும், ஆசிரியராலும் போற்றப்பட்டார். மலையகம் சார்ந்த அனைத்து இலக்கிய, சமய நிகழ்வுகளில் தன்னை ஆத்மாத்தமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பின்னர் வயாவிளான் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றியபின் யோகபுரம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக்கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய காலத்தில் குரும்பசிட்டி சர்மார்க்க சபை சார்ந்த இலக்கிய நண்பர்கள். குலாம் இணைந்ததால் பின்னாளில் ரசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களின் அபிமானத்திற்கு உரியவரானார். 1980ல் நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக தென்னாபிரிக்கா சென்று ஆசிரியராகக் கடமை புரிந்தார். 1988 முதல் இன்றுவரை கனடாவில் வாழ்ந்து வரும் கவிஞர் அருணோதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட ‘பூச்சொரியும் பொன்னொச்சிமரம’ (2000) தொகுப்பில் எழுதிய கனடாவில் சைவசமயம் என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

நுணாவில் என்றதுமே என் உறவுசார்ந்து என் இலக்கிய உலகம் சார்ந்து ஒரு தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய, இலங்கை இராணுவ நகர்வின் போதும் எம்மை ஆதரித்த ஒரு கிராமமாகவும் நுணாவில் எம்முள் வாழ்கிறது.

ஈழத்துக்கவிதைக் கனிகள்(1991) என்னும் நூலில் நான் பிறந்ததும் ஏதுக்கே! எனும் கவிஞரின் கவிதையை சிலோன் விஜஜேந்திரன் சேர்த்துள்ளார்.

ஆசிரியரின் நூல்களாக 110 ரூபாய் (1954), இலக்கிய உலகம் (1964), ஏன் இந்தப் பெருமூச்சு (1965), கூனியின் சாதனை (1966), கீரிமலையினிலே (1969), நுணாவிலூர் (1971), நல்லூர் நாற்பது (1971), பாடுமனமே (1972), உய்யும் வழி (1972), பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (1972) கவியரங்கில் கந்தவனம் (1972), இலங்கையில் ஆசிரியத்தொழில் (1977), விநாயகப்பா (1993), ஒன்றுபட்டால் (1994), மணிக்கவிகள் (1994), இயற்கைத்தமிழ் (1995), எழுத்தாளன் (1995), முத்தான தொண்டன் (1995), புதிய சைவ விநாவிடை (1997), தங்கம்மா நான்மணி மாலை (1997). பத்துப்பாட்டு (1998). ஆறுமுகம் (1998), ) சிவபுராணத் தத்துவம் (1998), கனடாவில் சைவசமயம் (2000), அது வேறுவிதமான காதல் (2001), சிவ வழிபாடு (2001), புதிய சைவ வினாவிடை- 2 (2001), கந்தன் கதை (2002), ஓ கனடா (2002), வரிக்கவிகள் (2002), குருவழிபாடு (2002), விநாயகப் பெருமானும் அகத்தியரும் (2003), முருகப்பெருமானும் அவ்வையாரும் (2003), விநாயக வெண்பா (2004) விநாயக விருத்தம் (2004), பொங்கு தமிழ் (2005), கவிதை மரபு (2005), தென்னகத்தில் என்னகத்தார் (2007), பாவாரம் (2007) எனத் தொடர்கிறது. கூடவே பல தொகுப்பு நூல்களின் வெளியீட்டிலும் அக்கறை காட்டி வருகிறார்.

இவரின் பவளவிழா சிறப்புற காற்றுவெளி சார்பில்லும் வாழ்த்துகிறோம்.

கவி‍-முல்லை அமுதன்

Thursday, September 9, 2010

தடைகள்

சென்னை சாசுத்தா பொறியியல் கல்லூரியில் 9-9-2010அன்று கல்லூரியின் டீன் முனைவர் வைத்தியநாதன் தலைமையில் அரிமா கோசுவாமி முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை

மனித சமுதாயத்தில் செய்தித் தொடர்புத் தடைகள் ஏராளமாக உள்ளன. தடைகளினாலேயே பல்வேறு வளர்ச்சிகள் தடைபட்டும் நிறகின்றன.மனித சமூகத்தில் வளர்ச்சிக்கான தடைகள் சாதி மதம் இனம் மொழி நாடு உலக மாந்தர்கள் ஒருகுடைக்கீழ் வாழ்வதற்கு தடையாகவே உள்ளது.

உலகின் மாந்தர்கள் வாழ்வதற்கும் மற்றவர்ளை உயர்த்தி தானும் உயரவே பிறப்பெடுக்கிறார்கள். பிறக்கும் குடி, சமூகம், நாடு போன்ற சூழல்களே அவர்களை வழிப்படுத்துகின்றது. பிறகு கல்வி கடமைளை உணர்ந்து தன் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கும் தொண்டு செய்கிறான்
.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்ற குறள்வழி வழி வழி வரும் மனித சமுகம் தன்னுடைய அறிவால் ஆற்றலால் மனித குல வளர்ச்சிக்கு வித்தாகிறான். அந்த வித்துகள் எல்லாம் விருட்சமாகி உலகின் பல்வேறு துறைகளும் வளர்சியின் சிகரத்தை அடைந்துள்ளன.

இன்று இணைய தளமும், கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புகள் உலகத்தை நம் கைக்குள் கொண்டு வந்துள்ளது. உலகின் எப்பகுதியில் எது நடந்தாலும் நொடியில் அறியக் கூடியா வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தற்போது வாழும் தலை முறை தகவல் தொடர்பால் தலைநிமிர்ந்து நிற்கும் தலைமுறை.

சங்க கால புறநாநூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றனார்

”யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என உலகத்து மக்களையெல்லாம் உறவினர்களாகவே கருதியுள்ளான். மனித குலத்தில் பிறந்தவர்கள் அனைவரும் நம் சுற்றத்தாரே. நாம் காணும் இன்பமும் துன்பமும் அவரவர் செயர்பாட்டு வினைகளே என்று ஆணித்தரமாக எழுதிச் சென்றுள்ளனர். இன்றுள்ள தகவல் தொடர்பையே நன்மைக்குப் பயன்படவேண்டியவற்றை தீய வழிகளிலும் பயன்படுத்துவதை அன்றாடச் செய்திகளில் காண்கிறோம்..

உலகின் வளர்ச்சியும் முன்னோர்களின் கருதுக்களும் கொட்டிக் கிடந்தாலும் மனிதன் பல்வேறு தடைகளுக்கு ஆளாகிறான். பரந்துபட்ட உலகில் வளர்ச்சியையும் இலட்சியத்தையும் நோக்கிச் செல்பவனுக்கு பல்வேறு தடைகள் வரும் அதைத் தகர்த்தெறிந்து செல்பவனே வெற்றியாளனாக வலம் வருவான்.

வளர்ச்சிகு முதல்தடை தன்னம்பிக்கை இன்மையே. என்னால் முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் வரவேண்டும்.அந்த நம்பிக்கையே அவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒருசெயலைச் செய்யும் நிறை குறைகளை முற்றும் அறிந்து தொடங்க வேண்டும். தொடங்கியபின் அதன் நிறைவேற்ற செயலாக்கம் காண்பதே சிறந்த வழி என்கிறார் திருவள்ளுவர்.

மிகச்சிறந்த அறிவாளியாக இருப்பார்கள் மனித உறவில் இறுக்கமாகக் காணப்படுவார்கள். வளர்சிக்குப் இது ஒரு பெரும் தடை. சக மனிதர்களை புன்முறுவல் பூக்கக் கூட மறுப்பது பெரும்தடை. குழு உணர்வோடு செயல்பட இவர்களால் இயலாது புண்ணகை என்பது மனிதர்களால் மட்டுமே உரிய ஒன்று அது மனித உறவைப் பேணும் மந்திரம். இந்தியன் வானுர்தில் விற்பனை மேலாளரகப் பணியாற்றிய சந்திரன் என்பவர் என் கண்முன் வருகிறார் 30 ஆண்டுகளுக்கு முனபு என் தந்தை பெருங்கவிக்கோ அவர்கட்கு உலகப்பயணத்திற்கு பயணச்சீட்டு வாங்க சந்தித்தோம்.சந்திரன் முகம் சிரித்தால் மல்லிகை மலர்தோட்டம் போன்றே இருக்கும் அவர் அமரராகிவிட்டாலும் இன்றும் என் நினைவில் நிற்கிறார்.

தான் எண்ணியதைத் சொல்லத் தயங்குதல் ஒரு பெரும் தடை. நாம் கூறும் கருத்து தவறாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்வதற்கு அச்சப்படக் கூடாது. தாங்கள் எண்ணியிருக்கும் கருத்தைக் கூறாமல் இருந்தால் தவறான கருத்தே தங்களிடம் நிலைகொண்டுவிடும்.

நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பாராட்டாமல் இருப்பது ஒரு தடை. நம்மில் ஒருவர் சிறந்த செயலாக்கம் காணும் போது அவரை மனம் திறந்து பாராட்டவேண்டும். பாராட்டே அவர் மேலும் துறையில் மேம்பட மாமருந்தாக இருக்கும். துறை மேம்படும்போது வளர்ச்சியைக் காணலாம்.

நாம் செய்த செயல்களை விளக்கக் கூடிய ஆற்றலின்மை பெருந்தடையாகும். அதற்கு மொழியும் பெருந்தடையாக இருக்கும். தமிழ் மக்கள் கூடியுள்ள பகுதியில் ஆங்கிலத்தில் பேசுவதும்.ஆங்கிலத்தில் பேசவேண்டிய இடத்தில் மறுப்பதும் பெரும் தடையாகும். உலகின் தொழில் வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் சப்பான் சப்பானிய மொழியையே அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். உலகின் எம் மொழியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தலூம் அடுத்த சில மணிநேரங்களில் சப்பானிய மொழியில் அரசே சப்பானிய மொழியில் மொழிபெயர்த்து சப்பானிய மக்களுக்கு வழங்குகிறது.வளரும் நாடுகளில் மொழி ஒரு தடைக்கல்லாகும்.

நம்மைப் போன்ற நாடுகளில் ஏழ்மையும் மிகப்பெரும் தடைக்கல்லாகும். இந்தியாவில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் எல்லாம் உயர் கல்வி பயில இயாலாமல் சிதைந்து போகின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஏழ்மை மாணவர்கள் அறியாத காரணமும் ஒன்றாகும்.ஏழ்மை மாணவர்களுக்குள்ள உரிமைகள் தகுந்த காலத்தில் அறியாமையும் தடையே.

மிகப் பெரும் தகவல் புரட்சி வந்துள்ள காலத்தில் அதைப்பற்றி அறியா மை மிகப் பெரும் தடைக்கல்லாகும். அறியாமை என்ற பேதமை நம்மைப் பின்னோக்கித் தள்ளும்.
யாம் எந்த கருத்து குறித்து பேசுகின்றோமே அது குறித்தே பேச வேண்டும் அதைவிடுத்து தேவையற்றவற்றை பேசுவதும் ஓரு தடைக்கல்லாகும்.

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.

என திருவள்ளுவர் பயனுடைய சொல்லைப் பேசாமை மடமை எனக் கூறியுள்ளார்.

மாணவச் செல்வங்களே தடைகளையெல்லாம் தகர்த்து நம் நாட்டின் தளபதிகளாக உயர்ந்து உங்களை பல்வேறு இன்னல்களில் பெரும் பொருட்செலவில் படிக்கவைக்கும் பெற்றோர்க்கும், நயமான கல்வி வழங்கும் கல்லூரிக்கும், நம் நாட்டுக்கும் பெருமையை நிலை நாட்டுங்கள்.