Saturday, September 3, 2011

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தி


தந்தையார் கெனொசா உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கு பெற்றதை அமெரிக்கப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுளன.

ஒரு தமிழ்க் கவிஞனை அமெரிக்காவில் பத்திரிக்கைகள் உலகக் கவிஞர்களுடன் இணைத்துப் பெருமைப் படுத்துவது கட்டுரையாக வெளியிடுவது சிறப்பாக அமையும்.

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தியை தங்கள் பத்திரிக்கை உலக நண்பர்களுக்கும் தங்கள் பதிவிலும் வெளியிடுவது தமிழன்னைக்கு நாம் செய்யும் சிறப்பு

மேலும், நிழற்படங்கள், செய்தி தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செய்தி உலக நண்பர்கள் மின்னஞ்சல் இருப்பின் எனக்கு அனுப்புங்கள், நானும் அவர்களைத் தொடர்பு கொள்கிறேன்.

நட்புடன்
.கவி.

Tuesday, July 12, 2011

வெல்க சமச்சீர் கல்வி


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னை 23-6-2011அன்று பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கவியரங்கை
தொடங்கி வைத்த தொடக்கப் பா]

மூத்த தமிழ் வாழ்வின்
முதன்மை மண்ணின் மக்காள்
காத்த தமிழ் நாட்டின்
கனிந்த கண்மணி மக்காள்
பூத்த தமிழ் நெஞ்சம்
புலர்ந்த தமிழ் நூல்கள்
ஏத்தும் எம்மொழியின் பேறே
ஏற்க என்றன் வணக்கம்|

பாக்கம் தமிழன் இவன்
பண்பார்ந்த தமிழ் அன்பன்
ஊக்கத் தமிழ் வார்ப்பின்
உயர்ந்த கவி நெஞ்சன்
பூக்கும் தமிழ்ப் பூங்கா
பூவைத் தமிழ் அங்கம்
காக்கும் தமிழர் மானம்
கவிஞனுக்கு என் வணக்கம்|

தேக்கும் மரபு வானம்
தேர்ந்த கவி ஊற்று
ஆக்கும் புயல் காற்றாம்
அரவணைக்கும் தலைமை நெல்லை
போக்கித் தமிழ்ப் பகையை
பொழிவாய் தமிழ் ஆளும்
காக்கும் இராமச் சந்திரர்
கவிவாணர்க்கு என் வணக்கம்.

வந்தோரை ஆள வைத்து
வறியாராய் தினம் நிற்கும்
சொந்தமதை உதறித் தள்ளி
சுகமாகக் கைகள் ஏந்தும்
விந்தைக் குணம் என்றால்
வின்வளர்ச்சி வரும் எங்கே
மந்திக் குணம் ஏற்று
மானமின்றி நிலம் வாழ்வோ

பெரியார் கொள்கை தம்மை
பேணியே ஏற்கா தன்மை
உரியாரை உணராப் போக்கால்
உள்ளதை இழந்து நின்றான்
பொரியை ஊதுதல் போன்றே
பொல்லாதார் கையில் உள்ளான்
நெறிமறந்த நம் மக்கள்
நிலையாதல் என் நாளோ

பாவேந்தன் தோன்றி நம்மின்
பகுத்தறிவு பாவைத் தந்தார்
நாவேந்தும் கலைஞர் நன்றாய்
நயத்தகு சமச்சீர் கண்டார்
பூவேந்தும் மழலைச் செல்வம்
புகழேந்தும் கல்வி ஒன்றாய்
சாவேந்தல் முறையோ தானா
சிந்திப்பீர் செயலாய்க் காண்பீர்

கோபுரத்து வாழும் பிள்ளை
கொட்டடியில் வாழும் கிள்ளை
மாபுகழின் கல்வி தம்மை
மாசமச் சீராய் கற்றல்
நாபுகழ் கலைஞர் சிந்தை
நசுக்குதல் முறையோ சொல்வீர்
பாபுகழ் அறிஞர் கண்ட
பயன்சமச்சீர் வீழ்தல் நன்றோ

சாத்திரம் சடங்கு மாயம்
சலிக்காமல் காணும் ஆட்சி
கோத்திரம் கோயிலில் வீணாய்
கோடிகோடி கொட்டும் ஆட்சி
காத்திடும் மழலைச் செல்வம்
கல்வியில் தடைதான் ஏனோ
மாத்திறக் கல்வி தன்னை
மதியாமல் மாய்த்தல் நன்றோ

கல்வி நிலையம் எல்லாம்
கயமைக் கீழோர் கையில்
கொள்ளை நிலையம் என்றே
கோடிகோடி சேர்க்கும் நாளில்
பள்ளீச் சமச்சீர் சாய்த்து
பருவத்தே பம்மாத்து காட்டி
கல்விப் பயனை ஏழ்மை
கிட்டாமல் செய்யும் மோசம்

எதுதமிழர் உரிமை என்றே
எழுச்சிக் கவிஞர் மக்காள்
முதுகு தெறித்து ஓடும்
முத்தமிழ்க் கவியைத் தருக
சதிவலை தகர்த்து எரிய
சமத்துவ சமச்சீர் காண்க
ஆதித்தமிழர் கவிய ரங்கை
ஆர்தெழுந்தே தொடங்கு கின்றேன்

தொடங்கிய முழக்க நாதம்
தொடர்ந்திடும் செயலாய்க் காண்க
முடங்கிய நம்மின் வீரம்
மூர்க்கமாய் கிளர்ந்து எழுக
அடக்கிய கூட்டம் ஓய
ஆவேச எழுச்சி கொள்க
தொடங்கிய சமச்சீர் காண
தொழரே வெற்றி காண்போம்|

Friday, July 1, 2011

மண்ணில் உன்நிலை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில் புதைவது மாற்றமா
சீற்றம்இன்றிதோழா
சிறுமை ஏற்பது மாற்றமா
நாற்றம்இன்றிதோழா
நலமாய் மகிழ்வது மாற்றமா
தேற்றுவோர்தம்மைத்தோழா
தெருவில் தள்ளுதல் மாற்றமா


வெற்றுக்கூச்சலைத்தோழா
வெறியாய்க் கொள்வது மாற்றமா
உற்றஉன்மொழிதோழா
உதறத் துடிப்பது மாற்றமா
கற்றஉன்வழிதோழா
கதற வைப்பது மாற்றமா
முற்றும்முழுமதிதோழா
மூடியே வைப்பது மாற்றமா

பற்றிலான்வாழ்வைத்தோழா
பகடியம்செய்வதுமாற்றமா
வெற்றியின்மாளிகைதோழா
வேரோடுசாய்ப்பதுமாற்றமா
கற்றவர்கல்வியைத்தோழா
கடிந்து முடிப்பது மாற்றமா
உற்றவர்உரிமையைத்தோழா
உலகில் மாய்ப்பது மாற்றமா

கூற்றுவன்மடமைமூடம்
குனிந்து ஏற்றதன் சோகம்
வேற்றுமைசோதிடக்கயமை
வேதனைதந்தமாயம்
நாற்றங்கால் பகுத்தறிவுக் கொள்கை
நயத்தகு பெரியார் எங்கே
மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில்உன்நிலைஎன்ன?

Thursday, June 30, 2011

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்தியமணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(28-6-2011 அன்று தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல், தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தலும் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கமும் இன்று தலைநகர்த்ததமிழ்ச் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் நடைபெறுவதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்குத் தலைமை தாங்கும் வெள்ளைச்சாமி அவர்களே பேராசிரியர் அவர்களின் திருமகன் அவரது பணியை தொடர்ந்து செய்து வரும் மெ.மீனாட்சிசுந்தரம் அவர்களே, புலவர் என்றால் பெருமை சேர்ப்பவர் என் அருமைத் தந்தையார் வரிசையில் புலவர் சுந்தரராசனும் ஆவார்கள். தன் அயராத முயற்சியால் தலைநகரில் இந்தக் கட்டிடத்த்தைக் கட்டி இங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்திவரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்த ஆட்சியானாலும் ஆய 64 தமிழ்க்கவலைகளை எழுதும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் ஆறு. அழகப்பனார் அவர்களே, தமிழன் தொலைக்காட்சி இயகுநர் கலைக்கோட்டுதயம் அவர்களே,சமச்சீர் கல்விக்காகா அன்றும் இன்றும்போராடி வரும் கசேந்திரன் அவர்களே, மணிவாசகர் பதிப்பக பொறுப்பாளர் குருமூர்த்தி அவர்களே சங்கத்தை மிகச் சிறப்பாக இயக்கி வரும் செயலாளர் பாவலர் கணபதி, புலவர் புஞ்ஞையரசன், அழகியநம்பி கவிஞர் இளங்கண்ணன் உள்ளிட்ட பெருமக்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்கள் சிறந்த பேராசிரியர், நுண்ணிய ஆய்வறிஞர், தலைசிறந்த்த பதிப்பாளர், தமிழுக்காகப் போராடியவர், மனிதநேய மாமணி.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி மிகச் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியவர். தாம் பேராசிரியராக இருந்தபோது பல்வேறு தமிழ் நூல்களை எழுதியும் எழுத்தாளர்களையும் மாணவர்களையும் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். தலைசிறந்த பதிப்பாளர். வெற்றி என்ற உரை நூலை வெளியிட்டுத் தமிழகம் முழுமையும் புகழ் பெற்றவர். மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக தலைசிறந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். அனைத்துத் துறைகளிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் நூலை வெளியிட்டவர். அவரது வழியில் அவரது திருமகன் பல்வேறு பதிப்புகளை வெளியிட்டு வருகிறார். அண்மையில் தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த நூல் ஆசிரியர்களுக்கும் பதிப்பாளருக்கும் விருது வழங்கி தந்தையின் புகழை மங்காமல் காத்துவருகிறார்
.
பேராசிரியர் மெய்யப்பனார் ஒரு தமிழ்ப் போராளி. மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார் அவர்கள் எங்கும் தமிழ் எதிலும் என்ற கொள்கைக்கு சென்னையில் பேரணி நடத்தியபோது தன்னுடைய கனத்த உடலோடு வியர்க்க வியர்க்க முழக்கத்தோடு நடந்த நடை என் மனக்கண் முன் தோன்றுகிறது.

பேராசிரியர் அவர்கள் சிறந்த மனித நேயமாமணி. 30 வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள எங்களது புத்தகக் கடை வழியாகச் மெய்யப்பனார் சென்றபோது கடைக்குள் வந்து கண்டு தனது பத்தாயிரம் ரூபாய் உரைகளை அளித்தது தொழிலைப் பெருக்குங்கள் எனக் கூறிய பெருமனத்தர்.

செருமணியிலிருந்து நண்பர் கணேசலிங்கம் வந்திருந்தபோது ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம் அப்போது செருமனி வாழ் தமிழர்களுக்கு தன் பதிப்பக நூல்களைக் கொண்டுவந்து வழங்கிய அவரது வள்ளல் தன்மை எண்ணி போற்றத்தக்கதாகும்.
ஒருமுறை என் தங்கை எம்.எசி தேர்வுக்குச் சிதம்பரம் சென்றபோது தங்குவதற்கு தன் இல்லத்தை வழங்கீயதும் அவர்தம் துணைவியார் ஆச்சி காட்டிய பரிவும் நெஞ்சை விட்டு நீங்காதது.

இதையெல்லாம் குறிப்பிடுவதற்குக் காரணம் யாம் மட்டும் அல்ல அவரோடு பழகிய தமிழ் அறிஞர்கள் அணைவரும் அறிந்த ஒன்றாகும்.

தமிழைப் பயிற்று மொழியாக்க, அனைத்து நிலைகளில் தமிழ் அரியணையில் அமர 1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப் பயணமாக வந்தோம். பின் தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வந்து மக்களை தெளிவித்தும் அரசையும் வலியுறுத்தியும் வருகிறோம்.
மேலும் தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழை பயிற்றுமொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழியாகவும் ஆக்கப் போராடுவோம்.

கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தசரதனைக் குறிப்பிடும்போது

‘ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்இல் நூல்நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம்”

எனக் குறிப்பிடுகிறார். அதைப் போன்றே மெய்யப்பனார் அறிவுக்கடலை ஆய்ந்து கடந்தார். தம் வாழ்வில் பகைக் கடலை காய்ந்து கடந்தார். இரப்போர்கடலை ஈந்து கடந்தார்.

வாழ்க மெய்யப்பனார் புகழ். சாகோதரர் மீனாட்சி சுந்த்ரம் வழி அவரது தொண்டு தொடர்க எனக் கூறி விடைபெறுகிறேன்.

Saturday, June 18, 2011

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழா


(சென்னை கன்னிமாரா நூலகத்தில் 8-6-2011 அன்று நடைபெற்ற கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் விழாவும் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவும் அறிஞர்களுக்கு விருதளிப்பு விழாவுமாக முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விழாவிற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பெரியார் சிந்தனையாளர் பரஞ்சோதி அவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைகள் தாங்கி பழுத்த பழமாக வாழும் செங்ட்டுவனார் உணர்வுக்கு ஏற்ற தலமையாகும். வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் பேராசிரியர் இராசகோபாலன், கவிவேந்தர் வேழவேந்தன்,பெரியார் பேருரையாளர் தென்மொழி ஞானபண்டிதன்,கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், தமிழ்வள்ளல் சந்திரசேகர் பொன்ற பெருமக்களெல்லாம் நெஞ்சாரப் போற்றியுள்ளனர்

பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது சென்னையில் அண்ணாசாலையில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் என்னைத் தோள் மீது இருத்தியவாறு அண்ணாவின் திரூஉடலைக் கண்டேன். தமிழகமே திறண்டுவந்து அஞ்சலி செலுத்திய,தமிழகத்தையே தமிழர்கள் கையில் வழங்கிய பேரறிஞருடன் இருந்து அண்ணாவின் எழுத்துக்களை எழுதி அண்ணாவின் உணர்வுகளை இன்றும் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் பாதுகாத்து வரும் கவிக்கொண்டல் விழாவில் பன்கேற்பது யான் பெற்ற பேறு.

யான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஐயா அவர்க்ளின் மீது அன்பும் ஈடுபாடும் உண்டு. என் அருமைத் தந்தையாரும் ஐயா அவர்களும் இணைந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு வித்தூன்றியவர்கள். அக்காலகட்டங்களில் புரட்சிக்கவிஞர் பாவெந்தரை இருட்டடிப்பு செய்ய ஒரு கூட்டமே இருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்றங்கள் ஒன்றியப்பேரவை என்ற அமைப்பின் மூலம் தமிழ் மன்றங்களை ஒன்றிணைத்து மாதம் முழுமையும் பாவேந்தருக்கு விழா நடத்திய பெருமைகுரியவர்கள்.

பாவேந்தரின் சிலையை பிறந்தநாளின்பொது ஏணி போட்டு ஏறி கழுவி மாலை சூட்டி விழாநடத்திய பெருமைக்குரியவர்கள். பாவேந்தரின் சிலை அருகே கவிஞர் குழாத்தே கூடி யிருந்தது இன்றும் நிழலாடுகிறது. பாவெந்தரின் புகழ்பாடும் இதழாகவே இன்றும் கவிக்கொண்டலை நடத்தி பாவேந்தர் பாசறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவே உள்ளார்.

நெஞசம் மறவா நிகழ்ச்சிகள் தம் கவிக்கொண்டலில் தொடர்ச்சியாக வெளியிட்டு நூலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளார்.அவரது நூலைப் படிக்கும் போது திராவிட இயக்க வரலாற்றை அறியக் கூடிய பேழையாக உள்ளது. தொடர்ந்து ஐயா அவர்கள் தன் அனுபவங்களைப் பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிமையும் மக்கள் நேயப் பண்பையும் ஐயாவின் எழுத்தில் படிக்கும்போது கண்கள் பணீக்கின்றது. ஐயாவின் எழுத்துக்கள் திராவிட இயக்கத்தின் ஆவணமாகவே உள்ளது.

கவிக்கொண்டல் மா.செ தலைசிறந்த இதழாளர் பதிப்பாளர். தலைசிறந்த தமிழகத்து மலர்களை தொகுத்து வழங்கிய பெருமைகுரியவர். தந்தைபெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமானப் பேராசிரியர் போன்ற பெருந்தலைவர்களுடன் இதழ்ப் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர். இதழியல் கல்வி படிப்போரெல்லாம் மா.செ. அவர்களுடன் பயிற்சி மேற்கொண்டால் இதழாலர்களுக்கு பகுத்தறிவு உணர்வு செழிக்கும். தமிழினம் தழைக்கும்.

கவிகொண்டல் இதழில் வெண்பா விருந்து மூலம் எண்ணற்ற எழுத்தாளர்களை இலக்கண வரம்புக்கு உட்பட்ட கவிஞர்களை உருவாக்கியவர். ஒரு கவிஞர் கவிக்கொண்டலில் எழுதினால் மரபுவழிப் பாவலர் என்ற பெருமையைப் பெறும் பல்கலைக் கழகமாக கவிகொண்டல் இதழ் உள்ளது

கவிகொண்டல் மாசெ அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து தமிழ் தமிழரின் அடையளங்களையும் நெஞ்சம் மறவா நிகழ்சிகளின் மூலம் பெரியார் அண்ணா கலைஞரோடு உள்ள திராவிட போராட்ட உணர்வுகளையும் பதிவு செய்ய வேண்டி விழைகிறேன்.

மருத்துவமணையில் உள்ள அம்மையார் தாமரைச்செல்வி அம்மையார் நலம் பெற்று ஐயா அவர்களின் பணி சிறக்க எனது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

Monday, May 30, 2011

கணினியூனூடே செம்மொழி

கணினியூனூடே செம்மொழி
கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்

(வள்ளுவர் கோட்டத்தில் உலகத்திருக்குறள் மையத்தின் சார்பில் 28-05-2011 அன்று குறள்ஞானி மோகனராசு தலைமையில் இணையதளத்தில் நாங்கள் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை)

கல்தொன்றி மந்தொன்றாக் காலத்தே மூத்த முதல் மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்கு காலம் காலமாக அனைத்துத் தலைமுறையினரும் துறை சார்ந்தவர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.. ஒலைச்சுவடிகள், கல்வெட்டுகள், அச்சாக்கம் என பல்வேறு நிலைகளில் பல் நூற்றாண்டுகளாக வழங்கிய மொழி தற்போது இணையதளங்களில் வலைப் பூக்களாக வலம் வருகின்றன.

தற்பொது வெளிவரும் தின இதழ்கள். நமது சங்க இலக்கியங்கள் வாழும் சிந்தனைகள் அனைத்தும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இணைய தளம் மூலம் கண்டு உலகத் தமிழர்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சியால் வந்த பயனை இந்திய மொழிகளில் தமிழ் மொழி இணையதளங்களில் பயன்பாட்டு மொழியாக முதல் இடத்தில் உள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அவர்தம் சிந்தனைகள் வலைப்பூக்களை உருவாக்கி இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூக்களின் வரும் சிந்தனைகளைக் கண்டு அவரவர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்கின்றனர்.
நாம் எழுதி அதைப் பதிப்பித்து பிறரை அடைந்து பின் அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் வலைப்பூக்களின் கண்டவுடன் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் கண்டால் நமக்கு இணையதளத்தின் பயன்பாடு புரியும்.

இணையதள பயன்பாட்டை அறிஞர்பெருமக்கள் வழக்கத்தில் கொள்ளவேண்டும். பொருளாதார மேம்பாடு உடையோர் ஒரு கணினியைப் பொருத்தி நம்மிடம் இருக்கும் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டே இணையதள வசதியை ஏற்படுத்தி நம் இடத்திலேயே பயன்படுத்தலாம். இயலவில்லையாயின் இணையதள சேவைகள் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளன. அங்கு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் நாடு இணய பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்றோமனால் இணையதளத்தில் தமிழின் வளர்ச்சியை அறியலாம். உலகத் தமிழர்கள் தமிழைப் பயில இணைய பல்கலைக் கழகம் பெருந்தொண்டாற்றி வருகிறது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் இவ் இணைய தளத்தில் காணலாம். தமிழ் அகராதி முழுமையும் இணையதளத்தில் கண்டு தெளிவு பெறலாம். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இணைய பல்கலைக் கழகத்தின் வழி பயின்று தேர்வுஎழுதி பட்டம் பெறுகின்றனர்.

உலகில் வாழும் கணினி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து உத்தமம் என்ற அமைப்பை நிறுவி 10 மாநாடுகள் பல்வேறுநாடுகளில் நடத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு செம்மொழி மாநாட்டோடு இணைந்து கணீனி மாநாடும் நடத்தினர். உலகம் முழுதும் அறிஞர் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். இவ்வாண்டு உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணையா மாநாட்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமுள்ள பெருமக்கள் தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம

உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும் இசைந்துள்ளார். உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுகிறார்.

மலேசியா : இளந்தமிழ், துணைத்தலைவர், உத்தமம் : vice-chair@infitt.org , Elantamil@infitt.org

இந்தியா : ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : antopeter@infitt.org

இலங்கை : மயூரன், செயற்குழு உறுப்பினர் உத்தமம் : mauran@infitt.org

ஐரோப்பா : சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர் உத்தமம் : sivapillai@infitt.org

ஆசுதிரேலியா : முகுந்த், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : Mugunth@infitt.org

சிங்கை : மணியம், செயலர்- இயக்குநர் உத்தமம், ed@infitt,org, maniam@infitt.org

அமெரிக்கா: கவிஅரசன் வா.மு.சே. தலைவர் உத்தமம், chair@infitt.org, kavi@infitt.org

கணினி அறிஞர்களின் கருத்துரைகளை அறிந்து தமிழக அரசு ஒருங்குறி தமிழ் எழுத்துகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஒருங்குறி முறையைக் கொண்டு வந்ததனால் உலகமெங்கும் ஒருங்குறி அச்சுருக்களை காண வழி பிறந்தது. ஒருங்குறி முறை இல்லையெனில் அவரவர்கள் வெவ்வேறு அச்சுருக்களை பயன்படுத்தும் போது அவரவர்கள் பயன்படுத்திய அச்சுருவை கணினிக்கு இறக்கம் செய்தே காண வேண்டும். தமிழக அரசின் ஒருங்குறி அச்சுருக்களே உலகின் எங்கும் காணக் கூடிய நிலையில் உள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ் ஒருங்குறி எழுத்துக்களை http://www.infitt.org என்ற இணயதளத்திலிருந்து கணினியில் இறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழக அரசு மாநடுகளின்போது அச்சுருக்கான குறுவட்டுகளையும் மக்களுக்கு வழங்கியது.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை உலகமெங்கும் காண்பது போல் நம் தமிழையும் காணமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மின் அஞ்சல் அனுப்பும்போது ஒருங்குறியைப் பயன்படுத்தி தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர்.

வலைப்பூக்கள் பல்வேறு பெருமக்கள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் மறைமலை தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களுக்கு வலைப்பூ உருவாக்கி அவரது கவிதைகளை வழங்கியுள்ளார். வாழும் மரபுக் கவிஞர்கள் 35 கவிஞர்கட்கு அவரவர் பெயர்களில் வலைப்பூ உர்வாக்கி அவர்களது வாழ்க்கைக் குறிப்பு கவிதைகளை பதிவு செய்துள்ளார்.

ABDUL RAHMAN
amuthabarathy
ARATTAI
ARIVUMATHI
E.S.MUTHUSWAMI
Erode Tamilanban
Ilangkannan
K.C.S.ARUNACHALAM
Maa.Sengkuttuvan
manimaran
manivendhan
Naaraa Nachiyappan
PICHINIKKAADU ILANGO
Poet Amallathasan
Poet Kalaimathiyan
POET SIRPI
Poet Minnoor Seenivasan
POET PONNADIYAN
Poet Va.Mu.Sethuraman
POET VEZHAVENDHAN

உலகளாவிய நிலையில் நார்வே பிரபு, சுவிட்சர்லாந்து முருகவேள், செர்மணி சுபா, சிங்கப்பூர் மணியம், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் வலைப்பூ உருவாக்கியுள்ளனர்.
வருகை தந்துள்ள ஆன்றோர் பெருமக்களே அச்சில் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ள நீங்கள் இணையத்திலும் தங்களின் பங்களிப்பை வழங்கி உலகத்தமிழர்களோடு பயணிக்க வேண்டுகிறேன்

Thursday, May 5, 2011

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு



கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு ஆய்வரங்கில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்கு தலைமை வகிக்கும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவைத் தலைவர் புலவர் கு சீத்தா, தன்னுடைய மனைவி இறந்தும் சோகம் கலையாமல் இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள கொள்கை மறவர் தமிழ்மறையான், விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்ப்பணி வாசகர் வட்டத்தை கூட்டி தமிழ்ப்பணீக்கு உரமூட்டிய கவிமாமணி சி.விக்கிரமன், முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாருரிலிருந்து அரிய தொண்டாற்றும் புலவர் வெற்றிப்பேரொளி, திருக்குறள் பணியையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு பணீயாற்றும் மூத்தபெருமகன் கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வரதராசனார், அவர்தம் வழியில் தொண்டாற்றும் மக்கள் மதிவாணர், இராமானுசம் பாவேந்தர் பாடல்களைப் பாடி மகிழ்வித்த சித்ராமணி அம்மையார் , இசுரேல் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பொறியாளர் எய்தான் டொரான் மற்றும் பெருமக்களையெல்லாம் காணும்போது சென்னையிலிருந்து வந்த களைப்பு நீங்கி களீ பேருவகை கொள்கின்றேன்.

. மனமோகனதாசனின் ஆசிரியர் பேசும்போது அவர் தொடக்கப்பள்ளி படிக்கும் காலத்தில் மோகன்தாசுகரம்சந்த் காந்தி எனும் பெயரை மனமோகனதாசன் என மாற்றியதாகக் கூறினார்கள். அண்ணல் அவர்களின் பெயராலேயே மனமோகனதாசன் என செந்தமிழிலே நாமெல்லாம் அழைத்து வருகிறோம். தமிழ் உணர்வோடும், போராட்ட எண்ணத்தோடும் தொண்டாற்றும் அன்புநெஞ்சர். நம் குடியரசு என்ற இதழை செம்மொழி தழைக்க அரும்பாடுபட்டு நடத்தும் பெருமைக்கு உரியவர். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற கருத்துக்குச் சொந்தக்காரர். இந்த மாபெரும் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி என்னை தமிழறிஞர்கள் படத்தை திறந்து வைத்து சிற்ப்புரையாற்ற அழைத்தமைக்கு மனமோகனதாசனுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்

காலம் காலமாக தமிழ் தமிழரை எண்ணும் வண்ணம் ஐயன் திருவள்ளுவர்,ஒளவையார், சி.இராமகிருட்டிணன்,இலக்குவனார், தாளமுத்து நடராசன்,முத்துக்குமார் ஆகியோர் படங்களைத் திறந்து அவர்களது தொண்டுகளையும் அவற்றைத்தொடர்ந்து நாம் தொடர வேண்டிய பணிகளையும் அறிஞர் பெருமக்களும் கவிஞர்களும் ஆய்வறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழ் முதன்மையான மூத்த மொழி. காலத்தால் அழியாத முன்னோடி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட மொழி. இரசியா சென்ற பாரதப் பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலைப் பாடி இந்திய இலக்கியக் கூற்றாகக் கூறிய பெருமைக்குரிய மொழி தமிழ் மொழி. முன்னாள் குடியசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில் பூங்குன்றனாரின் பாடலையும் திருக்குறளையும் பாடி இந்திய இலக்கியமாகக் கூறிய பெருமைக்குரிய மொழி நம் தமிழ்மொழி. அண்ணல் காந்தியடிகள் திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைப் பயின்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார். யான் செருமனி நாடு சென்றிருந்தபோது சகோதரர் கணேசலிங்கமும் நண்பர்களும் ரெய்னே நகரை சுற்றிக்காண அழைத்துச் சென்றனர். அதுபோது ஒரு பாலத்தில் தமிழில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை செதுக்கி வைத்துள்ளனர். இது என்ன விந்தை என வினவியபோது உலகின் சிறந்து கருத்துக்களை ஆங்காங்கே செர்மனியில் பதிய வைத்துள்ளனர் என நண்பர்கள் கூறினர்.

தமிழகத்திற்கு மதத்தைப் பரப்பவந்த அறிஞர் சி.யூ.போப்., தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்து தன்னைத் தமிழ் அன்பராக நீக்கமற நிறைந்து அருந்தொண்டாற்றினார். இலண்டனில் உள்ள அவரது கல்லறையில் ”தமிழ் மாணவர் இங்கே உறங்குகிறார்” என பொறித்து வைத்து தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.யான் இலண்டன் சென்றபொது கண்டு மெய் சிலிர்த்தேன். அதே போன்று பெசுக்கி எனும் பாதிரியார் தன்னை வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றி தமிழுக்கு சதுராகராதியையும் எண்ணற்ற நூல்களையும் படைத்து தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். அறிஞர் கால்டுவெல். எல்லிசு போன்ற பெருமக்கள் தமிழின் தொன்மையை ஆய்ந்து நிலைநாட்டியுள்ளனர்.

காலம் காலமாக அடிமைப் பட்டிருந்த தமிழர்கள் தந்தை பெரியாரின் எழுச்சியால் தன்மான உணர்வைப் பெற்று சிலிர்த்தெழுந்தனர்.பெரியாரின் வழித் தோன்றல் பேரறிஞர் அண்ணா தமிழாலேயே ஆட்சியைப் பிடித்தார். தமிழ்நாடு எனப் வரலாற்றுப் பெருமைமிக்க பெயர் மாற்றம் கண்டார். அவர் வழி வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியார் அண்ணா சிந்தனைகளையெல்லாம் செயல் வடிவமாக்கினார்.அனைத்திற்கும், முத்தாய்ப்பாக காலாதிகாலம் நாம் போராடிய தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார், உலகே வியக்கும் வண்ணம் கோவையில் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழ் தமிழரின் பெருமையின் சிகரம் கண்டார்.

நாமெல்லாம் கூடி கூட்டம் நடத்தி, மாநாடுகள் கண்டு தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப் போராடி வருகிகிறோம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தம் தேர்தல் அறிக்கையிலேயே தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். செம்மொழித் தகுதியை பெற்றதைப் போல் முத்தமிழறிஞர் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தி தமிழை ஆட்சி மொழியாக்குவோம் எனச் சூளுரை மேற்கொள்வோம்,தமிழை ஆட்சிமொழியாக்கினால் இந்தியாவிற்கே பெருமை இந்தியாவின் கூட்டாட்சி கொள்கைக்குப் பெருமை பயப்பதாக இருக்கும்,

நமது அடுத்த கோரிக்கை திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிப்பது. திருக்குறள் மனித குலத்திற்கே திருவள்ளுவரால் படைக்கப்பட்ட மறை நூல். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மறை. தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போற்றிவணங்கும் மறை நூல். யான் பர்மா சென்றபோது தட்டோன் பகுதிக்கு நமது அறநெறிக்கழகத் தலைவர் கலைச்செல்வன் அழைத்துச் சென்றார்.அங்கே அமரர் மாரிமுத்து அவர்களின் அயரா முயற்சியால் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார்.அங்கு யாங்கள் சென்ற போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஓதுவாராக உள்ள குருசாமி அவர்கள் திருக்குறளை ஓதி எங்களை வாழ்த்தினார். பர்மாவிற்கும் நமக்கும் 40 ஆண்டுகள் தொடர்பற்ற நிலையிலிருந்தாலும் உணர்வுகள் நீங்காமல் நிலைத்திருப்பதை அறியமுடிந்தது.

திருக்குறள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வருகின்றன. மனித குலத்திற்கே பேரோளியாம் திருக்குறள் குறித்த மாநாடுகள் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் நடைபெற்று திருக்குறள் உலகப் பொதுமறையாக உள்ளது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றத்தில் திருக்குறளைக் கூறியே நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் ஐயன் சிலையை நிறுவி உலகையே உற்று நோக்க வைத்துள்ளார்.

உலகறிந்த நாடறிந்த பொதுமறையாம் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க மாநாட்டின் சார்பில் கோரிக்கை வைப்பதில் இறும்பூதெய்துகின்றேன்