Sunday, November 17, 2013
Sri Lanka: Cameron in 'robust' talks over human rights
Saturday, November 16, 2013
அன்னை சேதுமதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்
(அன்னை சேதுமதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2013அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.)
அன்னையின் நினைவிடத்தில் அருள்திரு மோகனசுந்தரம் அடிகளார் குழுவினர்மலர்க்கோலம் அமைத்து தமிழ் நெறிப்படி அஞ்சலி செலுத்தினார். அருள்திரு சாய்இரவிச்சந்திரசாமிக\ள் புலவர் நெடுஞ்சேரலாதன் புலவர் தமிழாளன்,கவிஞர் அந்தமான் கணேசன்,கவிஞர் காந்தி கவிஞர் பாப்பாங்குளம் பாண்டியன் கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்
. தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது.
திரு பால் செந்தில் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.
10-11-2013 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் பேராசிரியர் முத்துக்குமரன்தலைமையேற்றார் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.
பாராட்டு விருதாக கவிஞர் மாசிலாம\ணி, ஓவியக்கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் புலவர் செகநாதன், கவிச்சுடர் அழகுதாசன், கவிஞர் இளம்விழியன், கவிஞர் சேலம்பாலன், கவிஞர் இரா.சொ. இராமசாமி, ஒயெம்சிஎ பக்தவ்த்சலம் திருகுறள் இலலிதாசுந்தரம், திருக்குறள் செல்லம்மாள் ஆகிய பத்துப் பெருமக்களுக்கு தலா ரூ1000 மும் பட்டயமும் வழங்கப் பட்டது.
இதழாளர் லேனா தமிழ்வாணன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்துரைத்தார்.முன்னாள் மேயர் சா.கணெசன் பட்டயம் வழங்கினார். தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார்.
Thursday, November 14, 2013
காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக
கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்
பூத்திடும் மழலையர் ப\ள்ளிகள் எல்லாம்
புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம்
புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில்
புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை
நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர்
நயத்தகு மேடையில் நர்த்தன ஆட்டம்
தீத்திறம் இல்லா நம்மோர் செயலால்
திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள்
தலைமை தலைமை என்றே நம்மோர்
தலைவர் என்றே அனைவரும் உள்ளார்
தலைமை காக்கும் தலைமை இல்லை
தவநெறி போற்றும் தொ\ண்டர் இல்லை
அவனிவன் எனறே குறையாய் மொழிவான்
அவனியே போற்றும் நிறையை எள்ளுவான்
தவநிறை நம்மின் தடத்தை மறக்க
தடையாய் கல்வி முறையாய்க் கொ\ண்டான்
ஆசையாய் பெற்ற அருந்தமிழ்ச் சேயை
ஆங்கில வழியே அறியச் செய்வான்
மாசிலாக் குறளைக் கற்பது எப்படி
நாநிலம் போற்றும் இலக்கியம் துறந்து
காசினைப் போற்றும் கல்வியாய் உள்ளது
நயத்தகு கல்விக் கூடம் தன்னில்
நாசச் செயலாய் கொலையும் செய்தான்
அன்பாய் வளர்த்த பெற்றோர் தாமும்
அறநெறி காணாக் கல்வி நெறியால்
நேயம் மறந்து கொலைவெறி கொண்ட
நெடிய துன்பம் ஏனோ? எனோ?
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா
தந்த கொள்கை எங்கே? எங்கே?
விந்தை பாவேந்தன் சிந்தை பாரதி
விரிந்த எண்ணம் எங்கே? எங்கே?
சொந்தம் மறுத்து சுடரொளி கண்ட
சமத்துவ வள்ளலார் பாதை எங்கே?
நொந்தே பெற்ற விடுதலை வேள்வி
நோயாய் வந்தது ஏனோ? ஏனொ?
பந்தம் போற்றி வாழ்ந்த நம்மோர்
பாசம் மறந்து வாழ்வது ஏன்?ஏன்?
சந்தைப் பொருளாய் கல்விச் சாலை
சந்ததி மாய்க்கும் ஈனம் அன்றோ?
தொந்தி குளிர உணவு வேண்டா
மந்தை காட்டும் நீரும் வேண்டா
சிந்தை சாய்க்கும் மதுவும் வேண்டா
முந்து கல்வி அனைத்தும் தமிழில்
முழுதாய் ஏற்கும் முறைமை கொள்வோம்
எந்தை காத்த அரசுக் கல்வி
சிராய்த் தமிழகம் முழுமை தருக
காத்த எம்மோர் வழிவழி மொழியே
காக்கும் காக்கும் ஆள்வோர் அறிக
Saturday, January 5, 2013
உலகத் தமிழர்களுக்கு 2044 திருவள்ளுவராண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், ஆசிரியர், தமிழ்ப்பணி
ஈழத் தமிழர்கள் உணர்ச்சிக்கு வித்தானவரகள். ஈழத்தில் நடந்த அவலத்தால் புலம் பெயர்ந்த மக்கள் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் உலக நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள். உலகெங்கும் பயணித்துள்ள நான் உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் பேர்ன் வள்ளுவன் பாடசாலையின் முதல்வர் பொ.முருகவேள் – நந்தினியின் தொண்டை உளம் நெகிழ நேரில் கண்டு மகிழ்ந்தவன். ஆண்டுதோரும் திருவள்ளுவர் ஆண்டைமிகச் சிறப்பாக தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள் திருவள்ளுவர் உலக மாந்தருக்கு வழங்கிய அறநூல் திருக்குறள். திருக்குறள் மனித இனத்திற்கு வழிகாட்டும் பெட்டகம். உலகப் பொதுமறை என்பதற்கு ஒப்ப இன்று சுவிற்சர்லாந்திலும் ஏன் உலகெங்கும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப் படுகிறது. மலேசியா சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, மியான்மர், இந்தியா போன்ற நாடுகளில் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
தமிழ் உணர்வின் தணலாக வாழும் முருகவேள் அவர்களும் தமிழ் உணர்வாளர்களும் ஒன்று கூடி திருவள்ளுவர் ஆண்டு 2044 சிறப்பான முறையில் திட்டமிட்டுக் கொண்டாடுகின்றனர். யான் உலகெங்கும் உரையாற்றும் சொற்பொழிவுகளெல்லாம் சுவிற்சார்லாந்தில் கொண்டாடும் விழாவைக் கூறுவது வழக்கம்.. குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் தம்பிராசா பேட்டியின்போது வள்ளுவன் பாடசாலையின் பெருந்தொண்டைப் பதிவு செய்துள்ளேன்.
2044 திருவள்ளுவர் ஆண்டின் சிறப்புமலருக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வாழ்த்து உள்ளது அறிந்து மகிழ்கிறேன். சுவிற்சற்லாந்து தமிழ் மக்கள் பெற்ற பெரும் பேறு. திருவள்ளுவர் ஆண்டை உலகுக்கு உணர்த்தி, திருவள்ளுவர் ஆண்டை ஆட்சி அதிகாரங்களில் நடைமுறைப்படுத்தி, சென்னையில் வள்ளுவர் கோட்டமும் குமரியில் 133 அதிகாரத்தின் அடையாளமாக சிலையையும் நிறுவிய பெருமைக்குரிய தலைவர் கலைஞர்.
இன்றோ தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தமிழாண்டை புறக்கணிப்பதும்,
உலகமே வியந்து நோக்கும் திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் சிதைப்பதும் வேதனைக்குரிய ஒன்று.
இந்தச் சூழ்நிலையில் உலகத்தமிழர்கள் திருவளுவர் ஆண்டைக் கொண்டாடுவது போற்றி மகிழத் தக்கதாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம். திருக்குறள் நெறியைப் பரப்புவோம்.
சுவிற்சர்லாந்து தலைநகரான பேர்ண்மாநிலத்தில் பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் சார்பில் 2044 ஆம் திருவள்ளுவராண்டை சுவிற்சர்லாந்தின் தலைநகரில் கொண்டாடுவதும், தமிழப்புத்தாண்டுவிழா மலர் வெளியிடுவதும் இராவணன் அரங்கென்று பெயரிட்டுள்ளதும் தமிழனை அடையளப்படுத்தும் நிகழ்வாக உள்ளது.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுது தான்முந் துறும்
என்ற பொய்யாமொழியாரின் வாய்மொழிக்கேற்ப சுவிட்சர்லாந்திலும் வெற்றிபெறுவதைக் கண்டு பேருவகை கொள்கின்றோம்.
26.01.2013 தமிழாண்டு 2044 காரிக்கிழமை (சனி) அன்றுநடை பெறவுள்ள தமிழ்ப் புத்தாண்டு விழவிற்கு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற அமைப்பாளர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் தமிழகத் தமிழ் நெஞசங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெருவித்து மகிழ்கிறேன்.
Monday, December 31, 2012
80ஆம் அகவை காணும் பெரியாரின் பேரறம் தமிழர் தலைவர் வீரமணி நீடு வாழ்க!
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
காத்தடும் தமிழர் நாட்டில்
கயமையை துறத்தி மாய்த்து
சாத்திரம் சடங்கு நோயை
சலிக்காமல் மிரட்டி ஓட்டும்
பாத்திறத் தந்தை எங்கள்
பெரியாரின் தொண்டைப் பற்றி
பூத்திடும் ஒதுக்கீடு மேன்மைப்
பேறுவீர மணியே வாழ்க!
சிறுவனாய் வளரும் போதே
சேரிடம் சேர்ந்த செம்மல்
மருவிலா சேவை காக்கும்
மாண்புறு தமிழர் தலைவர்
பெரியாரின் வடிவாய் இன்றும்
புகழேணி தாங்கும் நெஞ்சம்
வறியவர் வாழ்வு ஓங்க
வாழும்வீர மணியே வாழ்க!
உலகினில் பறந்து சுற்றி
ஒப்பிலா பெரியார் கொள்கை
பலமோடு பரப்பி எங்கும்
பகுத்தறிவு ஓங்கச் செய்தார்
தலைநகர் தில்லி இன்று
தந்தையின் கொள்கை செப்பும்
கலைஉயர் கோட்டம் கண்ட
கோவீர மணியே வாழ்க!
சாதியால் தமிழன் சாகும்
சதியினைப் போக்க இன்றும்
மதிஉயர் கலப்பு மணமாம்
மாப்புரட்சி காணும் செம்மல்
விதியிலா நம்மின் பெண்கள்
வித்தக் கல்வி தந்தார்
நிதியிலாப் பிஞ்சைக் காக்கும்
நிலைவீர மணியே வாழ்க!
நதியினில் தவழும் நீராய்
நற்றமிழ் மேடைப் பேச்சு
விதிமூடம் மடமை சாய்க்கும்
சாடலில் அருவி வேகம்
மதிநல அறிவின் ஊற்றாம்
மாத்தமிழ் நூல்கள் கற்றோன்
கதியிலா நம்மொர் காக்கும்
களம்வீர மணியே வாழ்க!
ஈழத்துத் தமிழர் வாழ்வில்
இனமான உணர்வைக் கூட்டி
வேழம்நம் கலைஞர் எண்ணம்
வேதனை போக்கும் தீரர்
காலத்தின் கொடையாம் டெசோ
கண்டனக் கணைகள் சேர்த்து
ஓலத்தின் தீர்க்கும் வீர
ஓய்விலா மணியே வாழ்க!
பகுத்தறிவு இதழ்கள் எல்லாம்
பாரினில் வழங்கும் சான்றோன்
வகுத்தநல் விடுதலை இன்றும்
வியத்தகு கொள்கைக் குன்றம்
தகுதியாய் மன்றம் கூட்டும்
தக்கநல் இராதா கூடம்
மிகுதியால் அறிவுக் கோட்டம்
மீட்டிடும் நூலகம் கண்டார்!
கழகத்தின் இரும்புக் கோட்டை
கற்பகத் தறுவே வாழ்க!
போலிமை என்றும் போக்கும்
பொன்னொளிர் தலைவா வாழ்க!
எண்பதைக் கடந்து இன்றும்
எழுச்சியின் வடிவே வாழ்க!
மாணுடம் காக்கும் பண்பே
மாசறு தொண்டே வாழ்க!
Sunday, December 30, 2012
சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை
(சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெற்ற 381 ஆம் விழாவில் முகம் மாமணி தலைமையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெறும் இவ் விழாவிற்கு தலைமை தாங்கும் மூத்த இதழ் ஆசிரியர் தந்தை பெரியாரின் வழியில் பெரியாரின் சிந்தனைகளை தமிழ் உலகிற்கு அளித்தும், கிந்தனாராக முகம் இதழில் நடுநிலையான பதில்களை வழங்கிவரும் முகம் மாமணி அவர்களே, நிகழ்ச்சிகளை அரும்பாடுபட்டு தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திவரும் முனைவர் பிரபாகரன் அவர்களே, முகத்தின் சிறப்பாசிரியரும் நமக்கு மக்காவ் பயணம் மாதந்தோறும் அழைத்துச் செல்லும் பாரதிதாசனை என்றும் மறவாத பாவேந்தர் மரபு வழிப்பாவலர் இளமாறன் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய பாவேந்தர் இன்னிசைமணி சித்த்ராமணி அவர்களே குறுந்தொகைப் பாடலை விளக்கத்தோடு வழங்கிய நக்கீரன் அவர்களே வருகை தந்துள்ள ஆசிரியர் இராசசேகரன், திருக்குறள் வீராசாமி, திருக்குறள் கவிஞர் பத்மநாபன், வனத்துறையில் பணியாற்றி சிறந்த இலககிய ஒருங்கிணைப்பாளராக செயலாற்றும் கவிஞர் இராமச்சந்திரன் கவிச்சித்தர் பூவை அமுதன் போன்ற பெருமக்களே சான்றோர் பெருமக்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
அருமை நண்பர் பிரபாகரன் அவர்கள் வெளிநாடுகளில் தமிழர்களின் வாழ்வும் வளமும் பற்றிப் பேசுங்கள் எனக் கூறினார். உண்மையிலேயே தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர். தமிழர்கள் வாழ்வை தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மியான்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் நம் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர். அங்குள்ள கோயில்களெல்லாம் புதுப்பிக்கப்பட்டு எழிலார்ந்த நிலையில் உள்ளது.அங்குள்ள ஒரு கோவிந்தராசப் பெருமாள் கோயிலைப் புதுப்பிக்க ஒரு தமிழர் 5கோடி பர்மீயப் பணம் வழங்கியுள்ளார் என்றால் தமிழர்களின்வாழ்கை நிலையை எண்ணிப் பாருங்கள். தட்டோன் என்ற பகுதியில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருவள்ளுவருக்கு தினமும் திருக்குறள் ஓதி வழிபடுகின்றனர். பழைய இரும்பு விற்னை செயும் அங்காடி 60% விழுக்காடு தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய இரும்பு என்றால் ஃபொர்டு, பென்சு போன்ற கார்களின் இன்சின்களையே விற்பனை செய்யும் நிலையில் உள்ளனர்.
தாய்லாந்தின் பாங்காக் நகர் சென்றோமானால் நம் இசுலாமியத் தமிழர்கள் கல் வணிகத்தில் மிகச் சிறந்து விளங்குகின்றனர், அயூப், குமாயூன். இலியாசு, போன்ற பெருமக்கள் உலகம் முழுதும் கல்வணீகம் சிறப்பாகச் செய்கின்றனர். அங்கு மாரியம்மன் கோயில் என்ற கோயில் பாங்காக்கின் முக்கிய வீதியில் உள்ளது. பாங்க்காக்கில்தான் நாங்கள் 1999ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டை நடத்தினோம். இந்த இசுலாமியப் பெருமக்களெல்லாம் பேருதவி புரிந்தனர். தாய்லாந்தில் அரசர் பதிவி ஏற்கும்போது நம் திருப்பாவை திர்வெம்பாவை பாடுகின்றனர்.
சிங்கப்பூர் தமிழுக்கும் தமிழருக்கும் முறையான அங்கீகாரம் கொடுத்துள்ள நாடு. தமிழர்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். சாலைகள், தொடர் வண்டிகள் எங்கும் தமிழ் முழக்கம் உள்ளது, ஆட்சி அமைப்பிலும் முறையான பங்களிப்பு உண்டு. மூத்த அமைச்சர் லீகுவான்யூ அவர்கள் சிங்கப்பூர் முன்னேற்றத்தில் தமிழர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்த பெருமகன்.
மலேசியத் தமிழர்கள் வளமாக உள்ள நாடு. பேரறிஞர்அண்ணா அவர்கள் மலேசியாவிலதான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றார். இன்றும் அது உண்மைஎன அறியலாம். தமிழ்ப் பள்ளிகள், தமிழ் இதழ்கள் உணவகங்கள் என அனைத்துதுறையிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். மலேசியாவில் ம.இ.கா. என்ற நம் அமைப்பு அம்னோவுடன் சேர்ந்து தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர் மலேசியாவின் நீண்டகால அமைசர்ராக இருந்த பெருமை டத்தோ சாமிவேலு. அவர்காலத்தில்தான் மலேசியா முழுமையும் 6 வழிச் சாலைகள் மிகப் பெரும்புரட்சியை உருவாக்கினார். உலகின் மிக உயர்ந்த இரட்டை கோபுரத்தை கட்டியவர் அனந்த கிருட்டிணன் என்ற தமிழர். இன்று மிகச் சிறப்பாக ஒடும் ஏர் ஆசியா வானூர்தியின் உரிமையாளாரும் தமிழரே. மலெசியாவில் 2009 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தி 6ஆம் மாநாட்டை நடத்தினோம். ,மலேசியத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பதிவாகும்
அமெரிக்காவில் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர், கணினித் துறையில் அமெரிக்கர்களை விட நம் இந்தியர்களே மிகச் சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். தமிழகத்து நகரங்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அனைத்து மாகானங்களிலும் தமிழ் சங்கங்கள் உள்ளன. ஆண்டு தோரும் அமெரிக்கா கூட்டுத் தமிழ்ச் சங்கத்தினர் ஃபெட்னா என்ற அமைப்பின் மூலம் மாநாடுகள் நடத்துகின்றனர்.
கனடா ஈழத்தில் நடைபெறும் கொடூரத்தால் புலம் பெயர்ந்த மக்கள். தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றி பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்கும் அளவிற்கு தமிழர்கள் முன்னேறிஉள்ளனர். மாநாடுகள், நாட்டிய, இசை, அரங்கேற்றங்கள் என தமிழ்ப் பண்பாட்டு மையமாக கனடா இன்றும் உள்ளது. ஈழத்தில் உள்ள கோயில்களேல்லாம் இன்று கனடாவில் கட்டப்பட்டு ஆன்மீகப் பணியிலும் தொய்வில்லாமல்.ஆனால் பேரியாரின் தாக்கங்களைக் காண இயலவில்லை.
ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி வாழ்கின்றனர். அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றனர். தொலைக் காட்சிகள் வானொலிகள், உணவகங்கள், கடைகள், இதழ்கள் என அனைத்துத்துறையிலும் முன்னணியில் உள்ளனர். ஐரோப்பியன் நாடுகளிலும் நம் ஈழத் தமிழர்கள் கோயில்கள் கட்டி ஆன்மீகத் தொண்டை எங்கும் தொடர்கின்றனர். 1993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் மூன்றாம் மாநாட்டை நடத்தினோம்.
ஈழத்துப் போராட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் உழைத்த செல்வங்களை எல்லாம் அளித்து போராட்டத் தளபதிகளாக வாழ்ந்துள்ளனர். காலம் கருதி ஒரே ஒரு அனுபவத்தை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யான் இலண்டனை விட்டு புறப்படும்போது திருமதி தயாபரி கருணானந்த ராசா அவர்கள் பணிக்குச் செல்வதால் டேவிட் என்ற வாடகை ஊர்தி ஓட்டுநர் எண்ணைக் கொடுத்து அவர் வழி வானூர்திநிலையம் செல்லப் பணித்தார்.டே விட்டுடன் தொடர்ப்பு கொண்டுஇலண்டனில் வானூர்தி நிலையம் செல்வதற்கு ஒரு வாடகை ஊர்தியில் பயணித்தேன். டேவிட் என்ற ஈழ ஒட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.யான் தமிழராய் உள்ளதால் பேச்சைத் தொடங்கினேன். அவர்கோபத்துடன் என்னுடன் பேசுவதற்கு விருப்பிமின்மையாக இருந்தார். மிகவும் முயன்று பேச்சுக் கொடுத்து வந்தேன். அவர் கூறினார் இந்தியத் தமிழர்களே மோசம் எனக் கூறினார். நான் அப்படிக் கூறக் கூடாது அங்கு தங்களுக்காக போராடுபவர்கள் பலர் உள்ளனர். ஈழத் தமிழர்க்காக நாம் நடத்திய போராட்டங்களைக் கூறினேன். அவர் தன்னுடைய ஈழ மண்ணில் இந்திய அமைதிப் படை சென்றபோது ஒருதமிழ்வீரர் தம்மை வேகமாக திட்டி அடித்ததில் மயக்கமடைந்ததாகவும் பின் அதே வீரர் இல்லம் வந்து நான் அடிக்காமல் இருந்தால் உன்னை சுட்டிருப்பார்கள் என்னை மண்ணித்துவிடு என்று கூறியதைக் கூறினார். அன்று தப்பித்து இன்று இங்கு உள்ளேன் என்றார். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு இராணுவ வீரருக்கு உள்ள தமிழ் உணர்வைப் பார்த்தீர்களா டேவிட் என்று கூறினேன்.எங்கிருந்தாலும் தமிழர்கள் உணர்வுகள் உங்களைச் சுற்றியே இருக்கும் எனக் கூறினேன்.வானூர்தி நிலையம் வந்தது கட்டணம் வாங்க மறுத்து என் பெட்டிகளை அவரே கொண்டு வந்து வழியணுப்பினார். ஆனால் இன்று ஏற்பட்ட கோடுரங்களையும்க ண்டு இந்திய அரசின் பாரா முகமும் அவரது கோபம் நியாயாமனதுதான் என்று எண்ணி இன்று நோகிறேன். ஈழ மக்களுக்கு நாம் ஒரு நிலையான தீர்வைக் காணவேண்டும்
.
நிகழ்ச்சியை நடத்திய பெருமக்களுக்கும் வருகைதந்த பெருமக்களுக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்,
Friday, December 28, 2012
மலேசியா கோலாலம்பூரில் மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய கற்றனைத்து ஊறும் நூல் அறிமுக விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை
(1-8-2012 அன்றுமலேசியா கோலாலம்பூரில் செந்தூல் கறி உணவகத்தில் மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய கற்றனைத்து ஊறும் நூல் அறிமுக விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)
நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியம் அவர்களே எங்களின் அன்புச் சகோதரர் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை சிறப்புடன் நடத்திய மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியச் செயலாளர் டாக்டர் சி. தருமலிங்கம் அவர்களே. பொருளாலர் திருக்குறள் பெருமாள் அவர்களே கெடா மாநிலத்தில் சோழன் கால் பதித்த வரலாற்றை உலகெங்கும் உணர்த்திய அருமை எழுத்தாளார் பெருந்தகை சந்திரகாந்தன் அவர்களே, கற்றனைத்து ஊறும் நூலை மிகச் சிறப்பாக ஆய்வு செய்த புலவர் பெருந்தகை தொல்காப்பியத்திற்கு அகராதி வழங்கிய ஐயா புலவர் முருகையன் அவர்களே, அருமை நண்பர் பாரதிதான் அவர்களே இளங்கோ அவர்களே எங்களின் தமிழ்த் தொண்டிற்கு என்றும் எம்மைத் தாங்கும் மலேசியத் தமிழ் நெஞசங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவையின் சார்பில் இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளீர்கள். மலேசியாவிலுள்ள அமைப்புகளெல்லம் இணைந்த ஒருங்கிணைப்பு அவசியமான ஒன்றாகும். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் வேட்கையும் இதுவே
என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்
இறுது எமக்கு வாராது
என்றன் மொழி உலகாள வைக்காமல்
என்றன் உயிரோ போகாது
என்று பாடிய பாடிய பாடலே
எங்களது வாழ்க்கையாக உள்ளது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டை அருமை அண்ணன் தருமலிங்கம் அவர்கள் போறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்கள். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரையும் கெடா மாநிலத்திலுள்ள பூசாங்க் பள்ளத்தாகிற்கு அழைத்துச் சென்றோம். சோழன் காலடி பதித்த லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதசச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
நான் இப்போது குறிப்பிட்ட செய்திகளையெல்லாம் இந்த உலகுக்கு உணர்த்திய பெருமை இதோ நம் எதிரில் அடக்கத்தின் உருவமாக அமர்ந்துள்ளாரே எழுர்தாளர் சந்திரகாந்தம் அவர்களையே சாரும்
.
இந்தப் பெருமைக்குரிய தமிழினம், ஒருன்கிணைவு இல்லாத காரணத்தாலேயே மிகப் பெரும் வீழ்ச்சிகளைக் கண்டோம். இதைஎல்லாம் போக்கும் வண்ணம் இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை செயல்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
மலேசிய நாடு செழிப்பான நாடு. மலேசியத் தமிழர்கள் உள்ளத்தால் உயர்ந்த பெருமக்கள். அறிஞர் அண்ணா அவர்கள் மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறி மலேசியத் தமிழர்களின் பெருமையை அன்றே நிலைநாட்டியுள்ளார்.
மலேசியா இயக்கங்கள் மட்டுமல்ல உலகத் தமிழ் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று கூடி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வெற்றிபெறுவோம்
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் வருகைதந்துள்ள மகளிர் மாமணி பொன். இலட்சுமி அவர்கட்கும் மற்றும் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். நன்றி. வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)




