Wednesday, December 12, 2012

அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா





அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2012 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.   அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருகுறள் நாவை சிவம், புலவர் தமிழாளன்,திருச்சி நாகராசன்,இதழ்மாமணி பட்டாபிராமன்,செந்தமிழ்விரும்பி பார்த்தசாரதி செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம்  குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது. திரு பால் செந்தில்  அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட  ஏற்பாடு செய்திருந்தார்.

           05=11-2012 அன்று மாலை ஆண்டநாயகபுரம் முத்து இராமயி இல்லத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது.

           11-11-2012 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் அவ்வை நடராசன் தலைமையேற்று கவிச்சிங்கம் கண்மதியன், செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி ஆகியோர்க்கு தலா ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.செம்மொழி மத்திய நிறுன இராமசாம், முனைவர் மறைமலை இலக்குவனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன், வாழ்த்த்ரை வழங்கினர்.

        தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார். அனைவருக்கும் சரவண்பவண் உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது.

தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் "யாதும் ஊரே" நூல் வெளியீட்டு விழா !

"யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா ! 
தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு ,அவர் எழுதிய "யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா கல்லூரி விடுதி மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் திருக்குறள் பேரவை சார்பிலும் நடைபெற்றது .கவிபாரதி அசோக்ராசு வரவேற்றார் , கவிஞர் மார்சல் முருகன் அறிமுக உரையாற்றினார் .முனைவர் இ.கி.இராமசாமி தலைமை  வகித்து   நூலை வெளியிட்டார்  .பேராசிரியர் ஞா .விக்டர் ,ஆசிரியர் கல்யாணி இருவரும் பெற்றுக்  கொண்டனர் .கவிஞர்கள் வீரபாண்டியத்  தென்னவன் ,கா .கருப்பையா ,இளங்கவின், அருட் தந்தை ஆனந்தராசு வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர் இரா .இரவி நூல் ஆசிரியருக்கு பொன்னாடைப் போர்த்தி நூலினைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார் .நூல் ஆசிரியர் வா .மு .சே .திருவள்ளுவர்  ஏற்புரையாற்றினார் .கவிஞர் இராம பாண்டியன் நன்றி கூறினார். தேசியவலிமை வே .சுவாமிநாதன் ,திருமதி பரிமளா திருவள்ளுவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !


   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம்முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  கவிமுரசு வா . மு .சே. திருவள்ளுவர் அவர்கள் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .ஆசிரியர்கள் பீட்டர் ,ரூபி பீட்டர் ஆகியோர் தன்னம்பிக்கை கருத்துக் கூறினார்கள் .
திரு.ஜோ .சம்பத்   நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

--

யாதும் ஊரே !



நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5. 
  விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை .பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .

வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு  ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை  41 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு . 

திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை விரைவில்    கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல் வென்றார் .குதிரை   மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார் பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .பல சிற்றிதழ்கள் மாதம் தோறும் சில ஆயிரங்களை இழந்துதான் வெளிவருகின்றன. இப்படி ஒரு இதழுக்கு ஆசிரிராக இருந்துக் கொண்டு கவிதை, கட்டுரை எழுதி நூலும் வெளியிட்டு வருகிறார் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .தந்தையின் வழியில் மகன் நடக்க வில்லை என்பதுதான் இன்றைய குற்றச்சாட்டு .னால் தந்தையின் வழியில் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர்நடப்பது பெருமை .
இந்த நூல் பயண இலக்கிய நூல் .முத்திரை பதித்துள்ள அற்புத நூல் .நூல்ஆசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தது .
" ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்கு இ
ந்நூற்றாண்டில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பொறுப்பானவர்கள்தான் .அவர்கள் இந்தியாவின் வஞ்சத்தால் இன்றும் தொப்பூழ்க் கொடி உறவுகள் ஈழத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்றவர்களை  முள்வேலிகளில் முடங்கி விட்டனர் .கொடூரம் என் நெஞ்சைப்  பிழிகிறது .   .நூல்ஆசிரியர்  நெஞ்சை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களின் நெஞ்சையும் பிழிகிறது . ஈழத் தமிழர்கள் இன்னல்கள் நூலில் பதிவாகி உள்ளது .ஆனால் தனி ஈழத்தை என்றும் ஆதரிக்காத பேராயக் கட்சியை இன்று வரை தன் சுய நலத்திற்காக ஆதரிக்கும் கலைஞரை  நூல் ஆசிரியர் ஆதரித்து எழுதி உள்ள கருத்து மட்டும் முரண் பாடாக உள்ளது .

புலம் பெயர்ந்து வாழும் வலி மிகுந்த அகதி வாழ்விலும் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழுக்கும் ,  தமிழருக்கும் செலவு செய்து தமிழ் வளர்க்கும் உயர்ந்த உள்ளங்களின் அன்பை நன்கு ஆவணப் படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள்
.
குறிப்பாக இணையராக இருந்து விருந்தோம்பல் செய்து தமிழ்ப் பண்பாடு காத்து வருவதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .
வெளி நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையை ஒப்பீடு செய்துள்ளார் .இன்றும் சென்னை தொடர் வண்டிகளில் வ
ண்டிக்குள் எந்த நிலையத்தில் நிற்கிறது என்ற  ஒலி வருவதில்லை .ஆனால் அயல் நாடுகளில் எந்த நிலையம் என்பதை ஒலியால் வண்டியின் உள்  உணர்த்துகின்றனர் .தேம்சு நதி போல சென்னை   கூவமும் மாற வேண்டும் என்ற ஆசையை எழுதி உள்ளார் .

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்களில் பலர் நான் அறிந்தவர்கள் .என் படைப்புக்களைப் பாராட்டியவர்கள் .லண்டன்  நல்ல மனிதர்கள் சம்பந்தன் ,பொன் பாலசுந்தரம் போன்றவர்கள் பற்றியும் எழுதி உள்ளார் .அய்யா பொன் பாலசுந்தரம் அவர்கள் அவராகவே சமைத்து மீன் குழம்பு வைத்து விருந்து  வைத்ததை எழுதி உள்ளார் .

" சொல்லொணாத் துயரைத்   தாங்கி வாடும் ஈழத்து மக்களின் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்பதை உலகமே உணர முடிகின்றது "

இந்த வைர வரிகளை உலகம் உணர வேண்டும் .

லண்டன் ,கனடா ,பாரீசு ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆய்ந்து அறிந்து நூல் எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் கவிஞர் என்பதால் சில இடங்களில் கவிதையாக நன்கு பதிவு செய்துள்ளார். பயணித்த வானுர்தி தடங்களின் விபரத்தை ஆங்கிலத்தில் நூலின் இறுதியில் எழுதி உள்ளார் .இனி பயணம் செய்ய இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் பற்றிய குறிப்பு விரிவாக உள்ளது .பல பரிசுகளும் விருதுகளும் பெற்று, புலிக்குப் பிறந்தது பூனையாகாது  என்ற பொன் மொழியை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் .பாராட்டுக்கள் .

இலக்கிய சுற்றுலா செல்லும்போது தான் மட்டும் செல்லாமல் தன் மனைவி பரிமளா அவர்களையும் உடன் அழைத்து சென்றது சிறப்பு .

தன் மனைவி பரிமளா பற்றி ஒரு கவிதையும் எழுதி உள்ளார் .

நங்கை பரிமளா நல்லாள்
நதியின் கரைபோல் இல்லாள்
மங்கையர் உலகம் போற்றும்
மகுடப் பொறுமையைச் சொல்லாள்
பொங்கும் வெள்ளம் தாங்கும்
புனித நதியின் பாதை
தங்கும் இன்பம் தவழ
தேம்சில் நடந்து சென்றோம் !
பயண இலக்கிய நூல்களில் சிறப்பிடம்  பெறும் நூலாக வந்துள்ளது .இந்த நூலிற்கு விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும்

தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ கச் காசிம் மண்டபத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


(31-7-2012 அன்று தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய  உரை)

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே எந்தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
    வீரரின் வீரமும் வெற்றியும் நீயே
முந்தைய நாளினில் அறிவும் இலாது
    மொய்த்தநல் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாம ரைக்காடு பூத்தது போல
    செழித்த எம்தமிழே ஒளியே வாழி!

    என்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்  பாடலைக் கூறித் தொடங்குகின்றேன்.

தமிழர் முன்னேற்றக் கழகத்தின்  சார்பில் நடைபெறும் நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் மன்றத்தின் தலைவர் சுப்பையா  அவர்களே. ஆலோசகர் தண்ணீர்மலை பொருளாலர் முனுசாமி அவர்களே. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் பெரியவர் காப்பளர் ஐயா முத்துசாமி அவர்களே  நிகழ்ச்சியை அரும் பாடுபட்டு நடத்தி வரும் எழுத்தாளர் திருஞானசம்பந்தம் இராணி அவர்களே, கடவுள் வாழ்த்துப் பாடிய கனகரத்தினம் அவர்களே திரளாகப் பங்கேற்றிருக்கும் தைப்பீங் நகரத்துப் பெருமக்ககளே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்

    யான் மலேசியா புறப்பட்டு வரும்போது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் திரு திருஞானசம்பந்தம் அவர்களைத் தொடர்பு கொள்ளூம்படி கூறினார். கோலாலம்பூர் வந்தவுடன் நண்பரிடம் தொடர்புகொண்டேன். நான் கேஎல் சென்றல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கிறேன் சந்தியுங்கள் இங்கு வந்து விடுங்கள் என்றேன். யான் தொடர்வண்டி நிலையத்தின் பேரழகை எப்போது சென்றாலும் காண்பேன். நாளுக்கு  நாள் அதனுடைய அழகை வசதிகளை அரசாங்கம் உயர்த்திக் கொண்டே இருக்கும். நம் ஊரில் தில்லியாக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும் தொடர்வண்டி நிலையம் வளர்ச்சி என்பதே இல்லாமல் பராமரிப்புக்கூட பொறுப்புணர்வோடு செய்யாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துவேன். நண்பர் எனக்குத் தொடர்பு கொண்டார் நான் வாயிலில் இருக்கிறேன் என்றேன். சந்தித்து பெருமகிழ்ச்சியடைந்தோம்.

எனக்கு நீங்கள் சென்னையில் பாராட்டு விழார நடத்தினீர்கள். சென்னையில் நான் மனைவியோடு வந்தபோது தங்களிடம் தொடர்பு கொண்டேன் அப்போது தந்தையார் ஊரில் இல்லை. தாங்கள் உணவகத்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எழுத்தாளர்கள் நண்பர்களை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினீர்கள் என்றார். உண்மையிலெயே எனக்கு பெருமகிழ்சிச்யாக இருந்தது. தந்தையார் 1977 ஆம் ஆண்டு  வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வெளிநாட்டுப் பெருமக்களும் வரவேற்பு அளிப்பது என்பது பன்னாடுத்தமிழுறவு மன்றக் குறிக்கோள்களில் ஒன்று. எனக்கே நினைவில் இல்லை நினைவோடு திருஞாசம்பந்தம் கூறியது மன நிறைவைத் தந்தது. திருஞானசம்பந்தம் நிகழ்வையெல்லாம் யான் தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளதையும் கூறினேன்.

    அப்பொது நான் உங்களுக்கு மலேசியாவில் வரவேற்பு வழங்க வேண்டும் எனக் கூறினார் அதனையுடைய முயற்சிதான் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,.

    நான் தைப்பிங் நகருக்கு சனவரி மாதம் பேச வந்திருந்தபோது அருமைப் பெரியார் முத்துசாமி ஒரு மலரை வழங்கினார்கள். அந்த மலரில் தோட்டப்புறப் பள்ளிகளுக்கு அவர் வழங்கிய அர்பணிப்பான சேவைகளைக் கூறியுள்ளார்கள். இந்தக் கட்டுரை முழுமையையும் தமிழ்ப்பணி மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளேன். இவரைப் போன்ற பெருமக்களால்தான் மலேசியாவில் தமிழ் வாழ்கிறது. இவர்ளுடைய ஈகமான பணிகள்தான் இன்றும் மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் செழித்து ஒங்குகின. ஆனால் தற்போது தமிழ்ப்பள்ளிகள் குறைந்து வருகின்றன.

    ஐயா முத்துசாமி அவர்கள் துன் சம்பந்தன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார்கள். துன் சம்பந்தம் என்ற மாபெரும் தலைவர் இலலையென்றால் மலேசியாவில் தமிழர்களுக்கு வாழ்க்கை இல்லை. தம் வாழ்நாளையே ஒப்படைத்து இன்று தமிழ்ச்சமுதாயத்தை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    ஐயா முத்துசாமி அவகள் துன் சம்பந்தம் அவர்களோடு இணைந்து தொண்டாற்றிய பெருமகன். அவர்கள் இங்கு வந்து என்னை வாழ்த்துவதென்பது துன் சம்பந்தம் வந்து வாழ்த்துவதாகவே கருதுகிறேன். துன் அவர்களோடு ஐயா அவர்கள்  தொண்டு வாழ்வைக் குறிப்பிட்டபோது கண்கள் கலங்கின. இன்றைக்கு வானளாவ இருக்கும் தேசிய நல கூட்டுறவு சங்கம் மலேசிய மண்ணில் விரிந்து பரந்து இருப்பதற்கு வித்திட்டவர். துன் சம்பந்தம் அவர்கள். மலேசியாவில் ஒவ்வொரு தோட்டப் புறங்களுக்கும் சென்று பங்குத் தொகையைப் பெற்று மலேசியாவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய மிகப் பெரிய திட்டத்தை வகுத்த தீர்க்கதரிசி.

    மலேசியாவின்  தோட்டப்புறங்களிளெல்லாம் இன்று தமிழ்ப்பள்ளிகள் தளிர்த்ததினால்தான். இன்றைக்கு சம்பந்தம் இராணி போன்ற பெருமக்களெல்லாம் படித்துப் பணியில் உள்ளனர். பள்ளிகள் இல்லையென்றால் நம் மக்கள் மேல்நிலையை அடைய முடியாது.

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். தமிழர்கள் ஆங்காங்கே தமிழையும் தமிழரையும்  பேணிப் பாதுகாக்கின்றனர். மியான்மரில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருக்குறளிலேயே ஒதி திருவள்ளுவரை வணங்குகின்றனர்.

    அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச்சங்கங்கள் நிறுவி அனைத்துத் கூட்டுத் தமிழ்ச்ச்ங்கங்களையும் ஒன்றினைத்து ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய மாநாடு நடத்துகின்றனர்.

    ஐரோப்பிய நாடுகளில் ஈழ த்தமிழர்களின் புலம் பெயர்வால். தமிழுக்கு மாநாடுகளும் விழாக்களும் ஏராளம். யான் யாதும் ஊரே என்ற நூலில் அனைத்து நாடுகளிலுள்ள தமிழர்களைப் பற்றியும்  குறிப்பிட்டுள்ளேன்.
    கனடாவில் இது தமிழகமோ என வியக்கும் வண்ணம் தமிழ் இதழ்களும் தொலைக்காட்சிகளும், நடன அரங்கேற்றங்களும், மாநாடுகளும், தமிழ்க் கல்லூரிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    பெருமக்களே கற்றனைத்து ஊறும் என்ற நூலில் மலேசியாவின் சிறப்புகளையும் நான் கண்ட அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளேன். உலக நாடுகளில் கண்ட அனுபவங்களையும் தமிழ் தமிழர் சிந்தனைகளையும் எழுதியுள்ளேன்.

    தமிழினம் உலக இனம், ஆனால் அதற்கென நாடு இல்லாதது ஒரு பேரிழப்பே. ஈழம் கிடத்திருக்கும் ஆனால்  துரோகிகளின் வஞ்சகத்தல் அந்த வாய்ப்பை இழந்தொம். ஆனால் ஈழ மக்கள் பெற்றே தீருவார்கள் என்பதில் ஐயமில்லை.

    ஐயா முத்துசாமி அவர்கள் இல்லத்தில் அம்மா அவர்கள் இல்லாமை கண்டு வருந்தினேன். அம்மாவோடு  ஐயா அவர்கள் தமிழகம் வந்துள்ளார்கள், திருஞானசம்பந்தம் இராணி அவர்களும் வந்துள்ளார்கள். வருகை தந்திருக்கும் பெருமக்களே தாங்களும் தமிழகத்திற்கு வாருங்கள் வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறேன். பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் தங்களை வரவேற்க உள்ளது எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.
       
 

Monday, December 10, 2012

மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை



 (30-7-2912 அன்று மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் டத்தின் தாமரைச்செல்வி தலைமையில் முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியம் முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

மலேசியாவின் கெடா மாநில சுங்கை பட்டானியில் தமிழர் சங்கத்தில் பங்கேற்று உரையாற்றுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். மிகக் கூறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த டத்தோ சுப்பிரமணியம் அவர்களையும் டத்தின் தாமரைச்செல்வி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். டத்தின் அவர்களின் அன்னைக்கு நூலை டத்தின் அவர்களின் அண்ணன் எழுத்தாளர் மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள். நூல் முழுமையும் படித்து வியந்தேன். டத்தின் அவர்களின் பெற்றோர் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றி திராவிட உணர்வை வளர்த்ததையும் அவர்கள் சிறை சென்று தமிழுணர்வு நிலை நாட்டியதையும் படித்தபோது கண்கள் குளமாகின. தன் அண்ணன் சமரசம் அச்கத்தில் பணியாற்றியபோது விரல்கள் பாதிக்கப் பட்டதையும் குடும்பப் பொறுப்பைச் சுமந்து  அனைவரையும் உருவாக்கியதையும் நன்றியுணர்ச்சியோடு பதிவு செய்துள்ளார்கள்.

    திருவள்ளுவர் இல்லத்திற்கு திருவள்ளுவர் வருகிறார் என டத்தின் எழுதி வைத்துள்ளார்கள். வள்ளுவப் பெருமான் கூறிய அறக் கருத்துகளையும் தந்தை பெரியாரின் வழி தொடர்ந்து டத்தின்  அவர்கள் மலேசியாவில் ஆற்றும் பணி அரும் பணியாகும். முன்னாள் அமைச்சர் என்ற செருக்கே இல்லாமல் மக்களோடு மக்களாக தொண்டாற்றும் டத்தோ அவர்களயும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    மலேசியாவின்  அருகிலுள்ள பினாங்கு மாநிலம் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலா மாநிலமாகும்.சுங்கைப் பட்டாணிக்கு அருகில் உள்ள  பினாங்கில் சுவாமி இராமதாசர் என்ற பேரறிவாளி வாழ்ந்த பகுதியாகும். ஆய கலைகள் அறுபத்தி நான்களிலும் பயிற்சி பெற்ற பேரறிஞர். மலேசியா முழுமையும் மாணாக்கர்ளை உருவாக்கி மருத்துவம் கவிதை என அனைதுத் துறையிலும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழிற்கு இன்றும் பெரும் அரணாக உள்ளனர்.

    சுவாமி இராமதாசர் அவர்கள் தம் மணிவிழாவிற்கு தமிழகத்தில் தம் மாணவரான என் தந்தை பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்திருந்தார்கள் ஒரு குரு தம் மாணவரை சிறப்பு விருந்தினராக அழைத்து மணிவிழா நடத்தியதென்பது வரலாற்றுப் பதிவாகும். என்றும் இலக்கிய உல்கில் மலேசியாவிற்கு நிலையான பெருமையாகும்.

    இன்று உலகம் முழுமையும் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிறோமே அதற்கும் வித்திட்டது மலேசிய மண்ணே. மலேயாப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறையிலிருந்த தனிநாயக அடிகளாரே அந்தப் பெருமைக்குரிய பெருமகன். இவ்வாண்டு அப் பெருமகனாருக்கு நூற்றாண்டு விழா உலக்த் தமிழர்கள் அனைவரும் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டிய பேராசியப் பெருமகன். இன்றைக்கு நாம் உலகம் முழுமையும் மாநாடு நடத்திகிறோமென்றால் தனிநாயக அடிகளின் அப்பலுக்கற்ற் தூய தமிழ்ப்பணிதான் அந்தப் பெருமகனை பணியாற்றிய மலேயா பல்க்லைகழம்தான். அந்தப் பல்கலைக் கழத்தில்தான் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம்.டத்தோ டத்தின் அவர்க்ளையும் கேட்டுக்கொள்கிறேன்
தனிநாயக அடிகளாருக்கு நூற்றாண்டு விழா நடத்துங்கள்.

    மலேசியா மண்ணை தமிழர்களுக்கும் முழு உரிமைகளையும் பெற்றுத் தந்த துன் சமந்தன் அவர்கள். மாணிக்கவாசகம் அவர்கள் ஈகங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்வேண்டியவை.

    அவர்கள் வழியிலே மாலேசியத் திருநாட்டில் பெரும்பணியாற்றி தமிழர்களின் ஆளுமைக்கு சான்றாக வாழும் டத்தோசிறி சாமிவேலு அவர்கள்.. அவர்கள் வழி ம.இ.கா. வை வழிநட்த்தும் நம் டத்தோ டத்தின் உள்ளிட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

    டத்தின் அவர்கள் என்னை இங்கு ஒரு பொது நிகழ்சிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ம.இ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பெருமக்களும் வருகைதந்து வாழ்த்தினர். எனக்கு மகிழ்ச்சியாக் இருந்தது சனநாயகத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு எந்த சக்தியாலும்  பிரிக்கா வண்ணம் நிலைநாட்ட வேண்டும்.

       இலக்கிய உலகில்  மலேசியாவில் மணிமன்றம் அருந்தமிழ்த் தொண்டாற்றிய ஐயா அன்பானந்தம் அவர்களை எண்ணிப் போற்றவேண்டும் .அவர்வழி இன்றும் தமிழ்த் தொண்டு செழித்தோங்குகிறது.

    இன்றும் தோட்ப்புறத் தொழிலாளர்களுக்கு மிகப் பெரும் கொடையாக இருப்பது தேசிய நல கூட்டுறவுச் சங்கம். கோலாலம்பூரில் விசுமா துன்சம்பந்தன் மாளிகை தமிழர்களின் பெருமையை செப்பும். அதைத் தலைமைதாங்கி நடத்தும் டான்சிறி சோமசுந்தரம் அவர்களை தமிழ் உலகம் என்றும் மறக்காது. அவர் வழியில் அரும்பணியாற்றும் டத்தோ  சகாதேவன் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பெருமக்கள் மலேசியத் தமிழர்களின் வளர்ச்சித் தூண்கள்.

    உலகத் தமிழர் இயக்கம் நடத்திய அமரர் டேவிட் அவர்கள். அவரது இறப்பின் போது நான் இங்கிருந்தேன். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரி பணி மகத்தானது.

    மலேசியாவில் மிகச்சிறந்த கவிஞர் பெருமக்கள் அளப்பரிய பணியாற்றியுள்ளார்கள். அமரர் பெருமக்கள் செந்தமிழ்க் கவிமணி வி.கே.சுப்பிரமணியம், செந்தமிழ்க் கவிமணி இரா.பாண்டியன், கவிஞர் முத்துவேல்,  தமிழ்க்குயில் கலியபெருமாள் போன்ற பெருமக்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

    இன்றும் கவிதைத் தொண்டாற்றும் தீப்பொறி பொன்னுசாமி, கவிஞர் காரைக் கிழார், கவிஞர் தமிழ்மணி வடிவேலு போன்ற எண்ணற்ற பெருமக்கள் அரிய இலக்கியத் தொண்டாற்றுகின்றனர். மலேசியக் கவிஞர்களின் ஆய்வுக் களஞ்சியம் பெருந்தொகுப்பு ஒன்றை முனைவர் முரசு நெடுமாறன் தொகுத்துள்ளார். திருக்குறள் பாடல்கள் என் மிகப் பெரிய சிறந்த தொகுப்பை தந்துள்ளார். அனைத்தும் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பதிவுகளாகும்.

    தமிழ் இணையத் துறைக்கு மலேசிய முரசு முத்தெழிலன் பங்களிப்பு அளப்பரிய பங்களிப்பாகும்.

    யாங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு நடத்தும்போது மாநாட்டை முன்னின்று நடத்திய விக்டர் சுப்பைய, டாக்டர் தர்மலிங்கம், முனைவர் குமரன், ஆசீயமணி மாணிக்கம், பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    பெருமக்களே மலேசியாவின் அருமைப் பெருமக்களை உங்கள் முன் நினைவு கூறுவதற்கு காரணம். எங்களின் மலேசியத் தொடர்பு 77ஆம் ஆண்டு முதல் இன்று வரை பூத்துக் குலுங்குகிறது. அவர்களை நினை வு படுத்த வாய்ப்பளித்த டத்தோ அவர்களுக்கும் டத்தின் அவர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

Sunday, December 9, 2012

மலேசியா சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை




(29-7-2012 அன்று சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில் செயளாலர்  கவிஞர்  தமிழ்மணி வடிவேலு முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை)

                தமிழர் சங்கத் தலைவர் வெற்றி நிச்சயம் நூலின் ஆசிரியர் வேணுகோபால் அவர்களே, மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கருத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் சோகூர் மாநிலத்தில் தமிழ் பயிற்றுவித்து தமிழ்ப் பட்டாதாரிகளை உருவாக்கும் அருமைக் கவிஞர் பெருமகன் தமிழ்மணி வடிவேலு அவர்களே. என் உரையைக் கேட்க வந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களே, சான்றோர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
     தலைவர் வேணுகோபால் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலை அனைவரும் படித்திருப்பீர்கள். உண்மையிலேயெ தமிழ் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். அவரது தந்தையார் அவர்கள் சப்பான் போரின் போது அனைவரும் உடைமைகளை விற்றுக், கொண்டிருந்த நேரத்தில் தாம் சேர்த்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் பரன்மேல் பாதுகாப்பாக வைத்துவிட்டு வந்தார்களாம். போருக்குப் பிறகு ஊர் திரும்பி மிகச் சிறந்த தொழில் அதிபராக மிளிர்ந்தார். என்பதை நன்றிப் பெருக்கோடு கூறியுள்ளார். தந்தையார் வழியில் மலேசியாவின் தொழில் அதிபராக, திருகோயிலின் தலைவராக, சிறந்த எழுத்தாளராக இன்றும் தளராது நடைபோடுகிறார்.
     நமது செயலாளர் தமிழ்மணி வடிவேலு அவர்கள் மலேசியா சிங்கை நாடுகளை இணைத்து மாநாட்டு மலரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். மிகச் சிறந்த கவிதை. மலேசிய சிங்கை ஒப்புறவுக் கவிதையாகக் கூறலாம் அந்தக் கவிதையை நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன் உலகத்தமிழர்களின் பாரட்டுதலைப் பெற்ற கவிதை. மேலும் தொண்டின் சிகரமாக சோகூர் மாநிலத்தில் தமிழ்ப் பட்டப் படிப்பை பயிற்றுவிக்கும் அமைப்பை நிறுவி தமிழகத்திலிருந்து நூல்களையெல்லாம் வரவழைத்து இம்மாநில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரிய தமிழ்த் தொண்டாற்றுகிறார். பேராசிரியரிடம் கல்வி பயிலும் பெருமக்கள் பலரைக்  இங்கு காணும்போது பெருமகிழ்ச்சியாக உள்ளது. பெரு முயற்சி எடுத்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள  இரு பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
     நண்பர்களே தமிழர்கள் உலகம் முழுமையும் வாழக்கூடிய இனம். தமிழ் அன்றும் இன்றும் என்றும் உலக நீதியை வழங்கக் கூடிய மொழி. நாமெல்லாம் தமிழர்கள் என்பதில் பெருமையோடு நெஞ்சுயர்த்தி வாழாலாம். நம்மையும் மொழியையும் அழித்துவிடலாம் என நம் எதிரிகள் எண்ணுவர், சங்க காலம் முதல் இன்று  வரை போராடி போராடித்தான் தமிழ் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
      நம் இலக்கியங்கள் என்றும் நமக்கு பேரரணாகப் இருப்பவை. இதொ ஒரு பாடலைக் கேளுங்கள்.
     எற்றென்றும் இல்லாவிடத் தும்குடிப் பிறந்தார் 
     அற்றுத்தற் சேர்ந்தார்க்குஅசைவிடத்து ஊற்றாவார் 
     அற்றக் கடைத்தும் அகல்யா(று) அகழ்ந்தக்கால் 
     தெற்றெனத் தெண்ணீர் படும்
     பாடலின் பொருளைப் பாருங்கள். ஆற்றில் நீர்ப் பெருக்கு அற்றுப்பொய் நடப்பவர்கள் அடியைச் சுடும் கொடும் வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் தன் பால் ஊறிவரும் நீரால் உலகை ஊட்டுகின்றது, அவ்வாறு நற்குடியில் பிறந்தவர்கள் தம்மிடம் இல்லையென்றாலும் ஏற்றவர்க்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ஈதலின்  வலிமையை உலகிற்கே நம் இலக்கியங்கள் பகர்கின்றன.
ஒரு பழம் பாடல் கூறும் அறத்தை நோக்குங்கள்.

ஈயெனஇரத்தல்இழிந்தன்றுஅதனெதிர் 
                                   ஈயேன்என்றல்அதனினும்இழிந்தன்று 
                                   
கொள்ளெனக்கொடுத்தல்உயர்ந்தன்றுஅதனெதிர் 

 கொள்ளேன் என்றல் அதனினும்  உயர்ந்தன்று 
பிறரை நாடி இரங்குதல் இழிவு அதைவிட இழிவு கேடபவர்க்கு இல்லை என்று கூறுதல் அதைவிட இழிவான செயல் என்று கூறுகிறது.
நம் இலக்கியங்கள் உலக நீதியையும் அறத்தையும் உலகிற்கு வழங்கியுள்ளன. உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவர் கூறும் அறத்தைப் பாருங்கள்.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அஃது
ஈதல் இயையாக் கடை                (குறள்-230).
நம்மிடம் இருக்கும் பொருளை உலகில் நம்மோடு இருக்கும் மக்கட்கு கொடுத்து உதவும் ஈகைக் குணம் இல்லை என்றால்  அவன் சாவதே மேல் எனக் கூறுகிறார். இதை விடக் கடுமையாகக் கூற முடியாது.
நக்கீரரின் பழம் பாடல்  ஒன்று கேளுங்கள் மானிட வாழ்வியலைப்
படம் பிடித்துக் காட்டுகிறது.

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
ஒருநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கருமாப் பாக்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது தாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்தும் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே

செல்வர் என்பதன் பொருளே ஈதலே என்பதை அழகாக செறிவாக உணர்த்திகிறது. உண்பதும் உடுப்பதும் அனைவருக்கும் ஒன்றே என்று நயம் பட உணத்தியுள்ளதை அறியலாம்
பெருமக்களே நம்மிடம் ஏற்படும் தோல்விக்கு காரணமே பொதுமை இல்லாததுதான். அது உணர்வாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் வலியோர் எளியோரை எண்ணாமையே ஆகும்.
     வளம் மிக்கமலேசிய மக்களே என்றும்போல் மொழிக்கும் இனத்திற்கும் வழிகாட்டுங்கள். எம்முடைய 42 ஆண்டுகால தமிழ்ப்பணியை தங்களின் உறவுப் பாலமாக பயன்படுத்துங்கள் எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி. வணக்கம்.